Mar 31, 2017

எழுத்து வழி பிம்பம்

மணி, உங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. உங்களை சரியாக புரிந்து கொள்ளாத யாராவது ‘அவரா? அவர் தப்பா சாட் பண்ணுவாரே, அவரே அதை எழுதியிருக்கிறார். அவர் கிட்டவா உதவி கேட்கப் போறேன்னு’ சொல்லி விடப் போகிறார்கள்- குறிப்பாக உதவி கேட்க நினைக்கும் பெண்களிடம். [அவரா = அவனா என்று கூட மாறலாம்]. உங்களுக்கு வெளியே இருந்து யாரும் முயற்சி செய்யாமலே சொந்த செலவில் நீங்களே சூனியம் வெச்சுக்கிறீங்களே. Beyond Right or Wrong it may spoil your image and reputation. Please don't say I got No Image.

அகிலா அலெக்ஸாண்டர்.

அகிலாவுக்கு,

வணக்கம்.

நமக்கென்று உருவாக்கப்படும்/உருவாகும் பிம்பத்திற்குள் சிக்குண்டு கொள்வதைப் போன்ற துக்கம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதுவொரு சிறை. நீங்கள் குறிப்பிடுகிற எனக்கான பிம்பம் என்பது எழுத்து, சமூகப்பணிகள் சார்ந்து உருவாகி வருவது. உருவானால் உருவாகிவிட்டுப் போகட்டும். அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. எந்தவொரு தருணத்திலும் நான் நானாகவே இருப்பதுதான் பலம். எப்பொழுது இமேஜூக்கு பயந்து நடிக்கவும், உண்மைகளை மறைக்கவும் ஆரம்பிக்கிறேனோ அப்பொழுதிலிருந்து என்னுடைய சரிவு ஆரம்பமாகும். 

பிம்பம் உருவாகிக் கொண்டேயிருக்கட்டும். அதைக் கலைத்துக் கொண்டேயிருப்போம். அதில்தானே சுவாரசியமிருக்கிறது? பிம்பத்தை வைத்து சினிமா நடிகர்களும் அரசியல்வாதிகளும் வயிறு வளர்க்கலாம். நமக்கு அப்படியொரு அவசியமில்லை.

நீங்கள் குறிப்பிடுவது போல ‘அவன் பெண்களுடன் சாட்டிங் செய்வதாக எழுதியிருந்தான். எதற்கும் ஜாக்கிரதையாக இரு’ என்று யாராவது யாரிடமாவது சொல்லக் கூடும். இதையெல்லாம் எழுதாவிட்டாலும் கூட  அப்படியான எதிர்மறையான விஷயங்களைச் சொல்வதற்கு ஆட்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இனம்புரியாத வன்மத்துடன் தாக்கி எழுதப்பட்ட பதிவுகள் அவ்வப்பொழுது கண்களில் படுவதுண்டு. யார் திட்டியிருக்கிறார்கள் என்று பார்த்தால் எங்களுக்கிடையில் ஒரு சொல் கூட பரிமாறப்பட்டிருக்காது. அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் கபடி ஆடியிருப்பார்.

வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும்.

அவர்கள் அப்படி நினைத்துக் கொள்வார்கள். இவர்கள் இப்படி கருதுவார்கள் என்று யாரையோ மனதில் வைத்துக் கொண்டு நம்மை அடக்கிக் கொண்டு செயல்பட்டால் எந்தக் காலத்திலும் நம் வட்டத்தைத் தாண்டி வெளியில் வர முடியாது அல்லது அவர்களும் இவர்களும் நம்மைப் பற்றி ‘அப்படி நினைக்க வேண்டும்’ ‘இப்படி நினைக்க வேண்டும்’ என்பதற்காக செயல்பட்டாலும் சரிப்பட்டு வராது.  அடுத்தவர்களுக்காகவே நாம் வாழ்வது போல ஆகிவிடும். நாம் நமக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்வதுதான் சரி.

பெரும்பாலானவற்றை மறைக்காமல் வெளிப்படையாக பேசி எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்- அதை மனசாட்சிக்கும், குடும்பத்துக்கும் துரோகமில்லாமல் செய்து கொண்டிருக்க வேண்டும்.

பிம்பச் சிறை, அடையாளச் சிக்கல்  போன்றவை எதுவுமே தேவையில்லை. நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் நம்மை நிரூபித்துக் கொண்டேயிருக்கவும் வேண்டியதில்லை. பெரிய எழுத்தாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் கூட தம்மை இந்தச் சமூகத்தின் உரையாடலில் தொடர்ந்து தக்க வைப்பதற்காக எதையாவது கிளறி விட்டுக் கொண்டேயிருப்பதைப் பார்க்கும் போது ஆயாசமாக இருக்கிறது. இப்படியான பிம்ப உருவாக்கம், இருத்தலியல் என்பதெல்லாம் நம்மை போலியாக உருமாற்றிவிடும். போலியாக இருப்பதைவிடவும் பிம்பமற்றவனாக இருப்பது எவ்வளவோ தேவலாம்.

உள்ளக்கிடக்கைகளை, மனதில் தோன்றுவனவற்றை பேசிக் கொண்டேயிருப்பது என்பது மிகப் பெரிய சுதந்திரம். கட்டற்ற வெளி. ‘இவன் இப்படித்தான்’ என்று புரிந்து கொள்கிறவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதுதான் சந்தோஷமும் திருப்தியும் கூட. எழுத்திலும் செயல்பாடுகளிலும் அத்தகைய திருப்தியைத்தான் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
மணிகண்டன்

Mar 27, 2017

எழுத்தாளன் - சமூகம்

வணக்கம்,

கலைஞனை இந்தச் சமூகம் கண்டு கொள்வதில்லையென்றும் வறுமையை பரிசளிக்கிறது என்றும் நடைபெறுகிற விவாதங்களில் உங்களின் நிலைப்பாடு என்ன? பதில் சொல்லியே தீர வேண்டும் என்கிற அவசியமில்லை. கேட்க வேண்டும் என்று தோன்றியது.

செந்தில்.


வணக்கம்.

கருத்துச் சொல்லி என்னவாகப் போகிறது? 

இவையெல்லாம் எந்தவிதமான மாறுதலையும் எந்தக் காலத்திலும் உண்டாக்காத புலம்பல்கள் என்று உறுதியாக நம்புகிறேன். எழுத்தாளனை மட்டுமில்லை - இந்தச் சமூகம் யாரையுமே தாங்கிப் பிடிக்காது. கொடி கட்டிய சினிமா நடிகர்களில் எத்தனை பேர் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள்? எத்தனை நாட்டுப்புறக் கலைஞர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்? இசைக்கலைஞர்கள் எல்லோருமே கோடிகளில் புரள்கிறார்களா? லட்சங்களில் கொழித்த தொழிலதிபர்களில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்? இதுதான் நிதர்சனம். எழுத்தாளன் என்றில்லை- யாரையும் யாரும் தாங்கிப் பிடிக்க மாட்டார்கள். அவனவனின் விவரம்தான் அவனவனைக் காக்கும்.

வாழும் போதே விவரமாகச் சம்பாதித்து குடும்பத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டால் பலவான். இல்லையென்றால் நாய் பிழைப்புதான்.

எல்லாக்காலத்திலும் தம்மை சரியான இடத்தில் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்கிறவர்கள் வக்கனையாக பேசிக் கொண்டிருக்கலாம். இதையெல்லாம் வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிற இனாவானாக்கள் நாசமாகப் போக வேண்டியதுதான்.

நம்மை, நம் குடும்பத்தை, நம் பிள்ளைகளை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்- அது எந்தத் துறையாக இருந்தாலும் இதுதான் அடிப்படையான நியதி.

செந்தில்,

இவற்றையெல்லாம் பேசியும் விவாதித்தும் எந்தப் பலனுமில்லை. பேசிவிட்டுச் சென்று இன்னொரு எழுத்தாளனைத் தாங்கிப் பிடிக்கவா போகிறார்கள்? அதெல்லாம் நடக்காது. நாளை இன்னொரு கலைஞன் செத்தாலும் இம்மி பிசகாமல் இப்படியேதான் பேசிக் கொண்டிருப்போம். இதைப் போன்ற விவாதங்கள் நேரத்தை ஓட்டுவதற்கான நல்ல உபாயம். ஒரு சொல்வழக்கு உண்டு- கை நிறைய வேலையை வைத்துக் கொண்டால் வாய் நிறைய சொற்களை மென்று துப்பிக் கொண்டிருப்பவர்களைக் கண்டுகொள்ள நேரமிருக்காது என்று.

பேசுகிறவர்கள் பேசட்டும். ஒதுங்கிக் கொள்வதில் தவறேதுமில்லையே!

May 14, 2015

மலையகத் தமிழர்கள்- கடிதங்கள்

மலையகத் தமிழர்கள் பற்றிய அட்டைப்பூச்சிகள் உறிஞ்சு வாழ்க்கை கட்டுரை குறித்து சில கடிதங்கள் வந்திருந்தன. அதில் இவை இரண்டும் சில முக்கியமான விஷயங்களைத் தொடுகின்றன. 

                                                                       ****
                                                                         (1)

நான் அறிஞ்ச வரைக்கும் மலையகத்தில உள்ள தமிழர்களை பற்றி  உங்கட கூட்டத்தில் சொன்னது எல்லாமே உண்மை தான், எங்களுடன் 2 தம்பிமார் கொழும்பில வேலை செய்யுறாங்க, அதில ஒராள் வீட்டுக்கு இப்போ 2 வருஷத்துக்கு முன்னால தான் மின்சாரம்  வந்தது என்று சொன்னார். அவ்வளவு  கஷ்டத்திலயும் பல்கலைக்கழகம் முடிச்சிருக்கார். சரியான கவலையாய் இருந்தது. ஏன் எண்டால் அதே ஹட்டனில தான் எங்க அக்கா ஓராளும் இருந்தாங்க, அவங்க வீட்டுக்கு 20-25 வருஷத்துக்கு முன்னால இருந்தே மின்சாரம்   இருந்தது. தோட்டத்தில இருக்கிறவங்களுக்கு நிறைய அடிப்படை வசதிகள் கிடைக்கிறதில்லை என்பது உண்மை தான். இன்னொன்று  கொழும்பில இருக்கிற நிறைய ஹய் பை  சிங்கள வீடுகளில மலையக தமிழ்ப் பெண்கள்  வீட்டு வேலை செய்யுறாங்க. 

இதில இன்னொரு கவலை என்ன எண்டா  நான் எல்லாரையும் 'வாங்க போங்க அவங்க இவங்க' என்று மரியாதையாய் கதைச்சால், கனடாவில இருக்கிற ஒரு ஒண்டு விட்ட அண்ணா என்னைப் பார்த்து ‘என்ன தோட்டக்காட்டான் மாதிரி வந்தாங்க போனாங்க என்று கதைக்கிறாய்’ என்று திட்டுறார். உண்மையிலேயே யாழ்பாணத்து ஆக்கள் மலையக ஆக்களை மதிக்கிறதில்லை. 

என்னோட வேலை பாக்கிற தம்பிட்ட நான் இத பத்தி கேட்டப்போ அவரும் சில விடயங்கள் சொன்னார்,   

மலையகத்தில  பிரதானமான  பிரச்சினை கல்வி தான். இலங்கையில தனியார் பாடசாலைகள் குறைவு. அரசாங்க பாடசாலைகளில தான் பெரும்பாலானவர்கள் படிப்பார்கள். அரசாங்க பாடசாலைகளில ஒன்று முதல் உயர் தரம் வரைக்கும் கல்வி இலவசம். பாடசாலையில சேர்க்கும் போது மட்டும்தான்  அட்மிசன் பீஸ் கட்டணும். பிறகு இல்லை. அப்பிடியிருந்தும் அங்க நிறைய பேர் கல்வியை இடைநிறுத்தி வேலைக்காக வெளி மாவட்டங்களுக்கு போறாங்க. இல்லை அங்கேயே வேறு வேலை செய்கிறாங்க. அதுக்கு முக்கிய காரணம் என்று அந்த தம்பி குறிப்பிட்டது -மலையகப் பாடசாலைகளில கற்பிக்கும் ஆசிரியர்களின் தரம் குறைவு, பட்டதாரி ஆசிரியர் வீதம் குறைவு, அர்ப்பணிப்போட செயற்படுவதும் இல்லை. இதனாலேயே மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கல்வியில் அவ்வளவு அக்கறை இல்லை எண்டு. அந்த தம்பி இப்போ கொழும்பில வேலை செய்றார். அவர் அங்க போய் மாணவர்களுக்கு கருத்தரங்குகள் வகுப்புகள் வைத்து சொல்லி குடுத்திருக்கார். அதே மாதிரி நிறைய பேர் செய்தால் மாணவர்களின் எதிர்காலம் நல்லா இருக்கும் என்று நினைக்கிறார். 

அதோட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற மலையகக் கட்சிகள் இவர்களை இப்பிடியே வைத்திருக்க தான் விரும்புகிறார்கள். அப்பிடி என்றால்தானே அவர்கள் சொல்பவருக்கு வாக்கு போடுவினம். தாங்களாக யோசிக்க  தொடங்கினால்   இவங்களுக்கு வேலை இல்லாம போயிடுமே, அதான்.  ஆனால் இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம் படிப்பிச்சிட்டாங்க. தாங்களே நல்லது கெட்டது யோசிச்சு வாக்கு போட்டிருக்காங்க. வடகிழக்குக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மாதிரி மலையக கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களின் பிரச்சினையை அரசுக்கு தெரிவித்து தீர்வு எடுக்க வேணும் என்று தான் அந்த தம்பி சொன்னார்.  

அனுஷியா நடராஜன்

*அனுஷியா கொழும்பு நகரில் வசிக்கும் தமிழ்ப் பெண்.

                                                                       *****
                                                                          (2)

இந்தக் கட்டுரையில் சென்ஸிடிவான விஷயங்கள் தொடப்பட்டிருக்கின்றன. வாழ்த்துக்கள். 

பிரச்சினை ஸ்ரீமாவோ/சாஸ்திரியின் ஒப்பந்தத்தில் தொடங்கியது. 1964 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட ஒன்பதே முக்கால் லட்சம் தமிழர்கள் இலங்கையில் குடியுரிமை இல்லாமல் இருந்தார்கள். அவர்களில் ஐந்தேகால் லட்சம் பேரை இந்தியா திருப்பி அழைத்துக் கொள்ளும் என்றும் மூன்று லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் என்று ஒப்பந்தமிட்டார்கள். மீதமிருக்கும் ஒன்றரை லட்சம் பேரின் நிலைமை குறித்து பிற்காலத்தில் விவாதித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். சாஸ்திரியின் இந்த ஒற்றைக் கையொப்பத்தினால் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்களின் உரிமைகளை இழந்தார்கள். தங்கள் நிலம் என்று நம்பிக் கொண்டிருந்த இடங்களிலிருந்து விரட்டியடிப்பட்டார்கள். அவமானப்படுத்தப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் அமைதியாக மட்டுமில்லாமல் அந்த ஒப்பந்தத்தை வரவேற்றார்கள் என்பதுதான் உண்மை. மலையகத் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அநீதி இது. அந்தச் சமயத்தில் இலங்கையைவிடவும் இந்தியா மிக வலுவானதாக இருந்தது. இந்தியா நினைத்திருந்தால் வேறு மாதிரியான தீர்வுகளை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. 

“ஈழத்தில் தமிழன் சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் கூட விட்டுவிடுவார்கள். ஆனால் மலையகப் பெண்ணைத் திருமணம் செய்தால் தொலைந்தான். கழட்டிவிட்டுவிடுவார்களாம்”- இதைவிடத் தெளிவாக மலையகத் தமிழர்கள் மீது ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் வெறுப்பை வெளிப்படுத்திவிட முடியாது. மிகச் சரியான கூற்று இது.

இன்னமும் மலையகத்தில் சரியான சாலை வசதிகளோ, பள்ளிகளோ கிடையாது. நிறைய ஈழத் தமிழர்கள் ஐரோப்பாவிலும் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். இப்பொழுது நிலைமை ஓரளவு சீரடைந்திருக்கிறது. ஆனாலும் தாயகத்துக்குத் திரும்பி வரத் தயங்குகிறார்கள். அங்கிருந்தாலும் கூட மலையகத் தமிழர்களின் நலவாழ்வுக்காக அவர்கள் எந்தப் பங்களிப்பையும் செய்வதில்லை. நாமும் செய்வதில்லை. அப்புறம் என்ன தொப்புள்கொடி உறவு?

மலையகத் தமிழர்களின் வாழ்க்கை உண்மையிலேயே வெகு துக்ககரமானது. அவர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் தனித் தேசம் கேட்கிறார்கள். ஆனால் மலையகத் தமிழர்கள் மரியாதையைத்தான் கேட்கிறார்கள். ஏதாவது செய்தாக வேண்டும்.

நாகேஸ்வரன்

Apr 8, 2015

கலந்துரையாடல் நிகழ்வு - கடிதங்கள்.

கடிதம் எழுதும்போது இந்த விஷயம் குறித்த பிரக்ஞைதான் இருந்துகொண்டே இருந்தது. விவாதிக்கிறேன் என்ற பெயரில் தங்கள் எழுத்து முறையை மாற்ற எங்காவது வலியுறுத்துகிறேனா என்ற பயம். அப்படி எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற கவனம் இருந்தது. நீங்கள் குறிப்பிட்டது போல தங்களை துன்புறுத்திக் கொண்டு எழுதும் எதையும் நான் விரும்பவில்லை. 

ஆரம்ப காலத்தில் 'நீங்கள் இன்னும் கொஞ்சம் intellectual ஆக எழுதலாமே? ஏன் எல்லாவற்றையும் சாமானியனின் பார்வையிலேயே எழுதுகிறார் என்ற எண்ணம் இருந்தது உண்மைதான். நண்பர்களுடன் விவாதிக்கையில் அவர் வாசகர்களுக்காக சமரசம் செய்து கொள்கிறார் என்கிற கோணத்தில் விமர்சிப்பார்கள். ஆனால் தங்களை தொடர்ந்து கவனித்து வருவதிலும் கூட்டத்தில் தாங்கள் பேசியதிலுமிருந்து ஒரு புரிதல் ஏற்படுகிறது. சமரசம் செய்து கொள்கிறீர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. இதுதான் இயல்பாக இருக்கிறது. தாங்களும் இப்படி எழுதுவதை comfort ஆக உணரும் போது எதற்காக மாற்றிக் கொள்ள வேண்டும்? தங்கள் எழுத்து கோராத வரையில் இப்படியே தொடர்ந்து கொண்டிருப்பதுதான் சரி. இதில் முழுமையாக உடன்படுகிறேன். 

யோசித்து பார்க்கையில் நீங்கள் சொன்னது போல இந்த பிரிவுகள் உண்டாவது, சித்திரம் உருவாவது, இவையெல்லாம் காலம்காலமாக இருந்து வருவதும் நம் கைக்கு அப்பாற்பட்டதுமாகும் என உணர்கிறேன். நாம் எதுவும் செய்வதற்கில்லை. ஆனால், உங்கள்மீது எந்த முத்திரையும் விழுவதை விரும்பவில்லை என்ற காரணத்திற்காகவும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவுமே அந்த கடிதம் எழுதினேன்.

சரி, தவறு என்று எதுவும் சொல்லத் தெரியவில்லை. தங்கள் நிலைப்பாட்டில் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. பதிலுக்கு நன்றி. ஆமென்.

அன்புடன்,
தே.அ.பாரி. 
                                                                            (2)

எழுத்தாளர்கள் என்றாலே ஏதோ வேற்றுகிரகவாசிகள் போலவும் அதிமேதாவிகள் போலவும் அவர்களின் எழுத்தைப் படிப்பதற்கே நமக்கு தனிப்பட்ட அறிவு தேவை என்பது போலவும் தோற்றமளித்த எனக்கு, அட நம்மைப்போல ஒருவன்(ர்) என்ற சாமான்ய நடைதான் நிசப்தத்தை வாசிக்கக் காரணியாக அமைந்தது. சராசரி மனிதனான நமது எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே உணர்வதும் மற்றொரு காரணம். போர்த்திக்கொள்ளாமல் இருப்பதும் திணிக்காமல் இருப்பதுவும் சிறப்பு. இது ரொம்ப பிடிச்சிருக்கு. 4 பேருக்குத் தெரிவதை விட 400 பேருக்குத் தெரிந்திருப்பதில் தவறொன்றும் இல்லையே. இப்போதைக்கு இந்த நடை நல்லாவே இருக்குதுங்க.
        
அறக்கட்டளைப் பணி அற்புதம். கற்க ஆசைப்பட்ட போது ஒரு சொந்தக்காரனாவது உதவியிருந்தால் வாழ்கையே மாறியிருக்கும். பழக்க வழக்கமெல்லாம் காசுன்னு வந்துட்டா பத்தோட பதினொன்று. முகம் தெரியாதவர்களின் உதவி நமக்கு கிடைப்பதென்பது பெரும்பாக்கியம்.

என்னோட சாய்ஸ் மருத்துவ உதவி. எப்பாடியாவது சரி பண்ணிடவிடலாம் என போராடி வைத்தியம் பார்க்கும் போது காசில்லை என்கிற ஒரே காரணத்திற்காக மருத்துவம் பார்க்க முடியாம ஏங்கும் ஒருவருக்கு தங்களால் கிடைக்கப்பெறும் உதவியென்பது சாதாரணமானதல்ல. அதுவும் வலியச்சென்று. அனுபவப்பட்டவனுக்குத் தான் தெரியும், அதன் வலி(மை). அந்தத் தருணம் கடவுளை நேரில் கண்ட அற்புத தருணம். கட்டை காடு போகிற வரைக்கும் மறக்காது.

இது எழுத்தால் மட்டுமே சாத்தியமானது. அதற்காகவே நான் நிசப்தத்தின் கட்டாய வாசகனாக இருக்கிறேன். வரும் காலங்களில் அறக்கட்டளைக்கு சிறு அளவிலேனும் என்னாலான பங்களிப்பு கட்டாயம் இருக்கும்.

செந்தில்.
                                                                    (3)


வினோத் எழுதிக் கொள்வது. 

திருப்பதி மகேஷூடன் டிஸ்கவரி புக் பேலஸூக்கு வந்திருந்தேன். அது நல்ல கூட்டம். உங்களைச் சந்தித்ததில் மிகுந்த சந்தோஷமாகவும் உண்ர்ந்தேன். திரும்பிச் செல்லும் போது நீங்கள் மகேஷை அழைத்த போது நானும் அவரோடு பேருந்தில் இருந்தேன். தனியாக உரையாட இயலவில்லை என்பதற்காக நீங்கள் மன்னிப்புக் கோரியதாக மகேஷ் தெரிவித்தார். ஒரு பிரச்சினையும் இல்லை. உங்களை வாழ்க்கையில் சந்தித்ததற்காக தனிப்பட்ட முறையில் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். கடந்த பல மாதங்களாக உங்கள் பதிவுகள் வாயிலாக நிறையக் கற்றிருக்கிறேன். ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சியை அந்த கற்றலில் மிகச் சிறந்தது என்பேன். எப்படி ‘இருக்க’ வேண்டும் என்று கற்றுக் கொடுத்த உதாரணபுருஷர்களை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள்தான் எப்படி ‘வாழ’ வேண்டும் என்று கற்றுத் தரும் உத்வேகம்.

வினோத்சுப்ரமணியன்

                                                                   ***

கூட்டத்துக்காக திருப்பதியிலிருந்து மகேஷ் வந்திருந்தார். அவரைப் போலவே வினோத்துக்கும் கண் பார்வை இல்லை. இரண்டு பேரும் நண்பர்கள்.  நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். கூட்டம் முடிந்தவுடன் மகேஷை அலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தேன். அவ்வளவு தூரத்திலிருந்து சிரமப்பட்டு வந்தவருடன் தனியாகப் பேச முடியவில்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டதற்குத்தான் வினோத் இந்த மின்னஞ்சலை எழுதியிருக்கிறார்.

ஏன் எழுத வேண்டும்? எழுதுவது சரியாக இருக்கின்றனவா? இது சரியான பாதைதானா உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்தக் கடிதங்கள் பதில் சொல்லிவிடுகின்றன.

இது போன்ற கடிதங்களைப் பிரசுரிப்பது பெருமையடித்துக் கொள்வது போன்ற பிம்பத்தை உருவாக்கினாலும் எங்கேயாவது இருந்த படி அவ்வப்போது சீண்டிக் கொண்டிருக்கும் சிலருக்காகவாவது இத்தகைய கடிதங்களைப் பிரசுரிக்க வேண்டியதாக இருக்கிறது.  

Apr 6, 2015

பீடாதிபதிகள்

அன்புள்ள வா.ம. அண்ணனுக்கு,

கூட்டம் நிறைவாக இருந்தது. புகைப்படங்களில் பார்த்தது போலவே நீங்கள் இருந்ததும், வேட்டியில் வந்திருந்ததும் திருப்தியாக இருந்தது.

தன் எழுத்தாளனை கொண்டாடும் இத்தனை வாசகர்களை ஒரு இலக்கிய கூட்டத்தில் நான் பார்ப்பது இதுவே முதன்முறை. எத்தனை அன்பு. எத்தனை நெகிழ்ச்சி! நீங்கள் என்னதான் மறுத்தாலும் உங்கள் நேர்மைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும் தொடர்ந்த உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியே இது. சிறப்பு விருந்தினர்களின் பேச்சைக் காட்டிலும் வாசகர்களான நாகேஸ்வரன் ஐயாவின் பேச்சும், சைதை புகழேந்தி அண்ணனின் பேச்சும் சிறப்பாக அமைந்ததை கூட்டத்தின் சிறப்பம்சமாக நான் பார்க்கிறேன்.

கவிதா பாரதி அவர்களின் பேச்சின் போதுதான் எனக்கு சில கேள்விகளும் குழப்பமும் உண்டாயின. அவர் மட்டுமல்ல கூட்டத்தில் பெரும்பாலானோர் பேச்சில் இந்த ‘அப்பாடக்கர்’ எழுத்தாளர்கள் மீதான எரிச்சலை காண முடிந்தது. ‘அப்பாடக்கர்’ என்கிறார்கள், ‘பீடாதிபதிகள்’ என்கிறார்கள். இவர்கள் குறிப்பிட்டு யாரை சொல்கிறார்கள் என புரியவில்லை. (அப்படி குறிப்பிட்டு யாரையும் சொல்லிவிடக் கூடாது என்றும் பயந்து கொண்டிருந்தேன்.) தீவிரமாக எழுதக்கூடிய (தங்களைபோன்ற எளிமையான எழுத்துநடை இல்லாமல்) அனைவரையுமே இவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்களா அல்லது தீவிரமான எழுத்து என்ற பாவனையில் எழுதப்படும் போலிகளையா? பின்னதை விமர்சிப்பதை பற்றி கவலையில்லை. ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக முன்னதையும் சேர்த்து நிராகரிக்கிறார்களோ என்ற எண்ணம்தான் வருத்தமளிக்கிறது.

கவிதா பாரதி அவர்கள் பீடாதிபதிகள் என ஆரம்பித்ததும் எனக்கு ஜெமோ ஞாபகம்தான் வந்தது. அவர் ஆரம்பத்தில் பொதுவுடைமை இயக்கத்தில் வேறு இருந்ததாக சொன்னாரே? ஆம் ஜெமோவைதான் சொல்கிறார் என மனம் கணக்கு போட ஆரம்பிதது. கூட்டத்தில் யாரோ ‘விருதெல்லாம் தருவார்கள்’ என ஏற்றி விட்டது என் எண்ணத்தை உறுதிபடுத்தியது. ஜெமோ பெயரை மட்டும் அவர் சொல்லிவிடக் கூடாது எனப் பிரார்தித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக அவர் எந்த பெயரையும் கடைசிவரை குறிப்பிடவில்லை. தன்னை பார்க்க வருபவர்களை மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் சரக்கு வாங்கி வரச்சொல்வார் என ஒருவரை குறிப்பிட்டாரே? அவர் யார்..? சாருவா?.. பிறகு சேவகம் செய்தால் பதிப்பகத்தில் புத்தகம் போட்டுவிடலாம் எனக் குறிப்பிடப்பட்டவர்…. மனுஷ்யபுத்திரன்? அல்லது அது பதிப்பகங்கள் குறித்த பொதுவான விமர்சனமா? அப்படியென்றால் அது உயிர்மையா? காலச்சுவடா? என ஏகப்பட்ட கேள்விகள். இல்லை இப்படியெல்லம் யோசிக்க கூடாது. அவர் குறிப்பிட்ட பீடாதிபதிகள் மேலே சொன்ன எவரும் அல்ல. அவர்கள் வேறு யாரோ என்றே எண்ணிக் கொள்கிறேன். ஆனால் தமிழிலக்கியம் அறிமுகம் ஆனதிலிருந்தே எனக்கு இந்த பூசல்களும் விடுகதைகளும் சோர்வையே அளிக்கின்றன.

சரி விடுகதைகளை விட்டுவிடுவோம். எனக்கு இந்த மனநிலைதான் பயமாக இருக்கிறது. எளிமையான எழுத்து, புரிகிற மாதிரியான எழுத்து- இதுவே போதும் என்ற மனநிலை. இவர்கள் இப்படி தீவிரமான எழுத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் போது எளிமையான எழுத்துக்கு பிரதிநிதியாக உங்களை முன்வைப்பதுதான் எனக்கு சங்கடமாக இருக்கிறது. அண்ணன் கரிகாலன் சொன்னது போல அப்படி யாரையும் எளிதில் விட்டுகொடுத்துவிட முடியாது. இது ஒரு ஒட்டுமொத்த சங்கிலி. இங்கு அனைத்து வகையான எழுத்துக்கும் சமமான தேவை இருக்கிறது என்றே நினைக்கிறேன். எளிமையான எழுத்து இங்கில்லையேல் வாசிப்பே அறுபட்டுவிடக் கூடும். தீவிரமான எழுத்து இல்லாமல் போவது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பேரிழப்பே. எவ்வளவு கட்டியமைக்கபட்டதாக தோன்றினாலும் சாருவின் துள்ளலும் கொண்டாட்டமுமான எழுத்து நமக்குத் தேவை. எவ்வளவு ஆயாசமூட்டக்கூடியதாய் இருந்தாலும் ஜெமோவின் நீண்ட கட்டுரைகள் நம் சிந்தனைக்கு கண்டிப்பாகத் தேவை. இவர்களை ஏற்கலாம், மறுக்கலாம். ஆனால் பெருமொத்தமாக ‘புரியாத எழுத்து’ என்ற ஒற்றை வரியில் நிராகரிப்பது எப்படி அறிவுடைமை ஆகும்?

கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக நிசப்தம் தளம் வாசிப்பவர்கள். அப்படியெனில் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள். இவர்களே தீவிரமான எழுத்தை இப்படி பொத்தாம்பொதுவாக நிராகரித்தால் சராசரித் தமிழனுக்கு எப்படி தமிழிலிக்கியம் என ‘ஒன்று’ இருக்கிறது என்கிற சேதியை கொண்டு சேர்த்துவது? இத்தனைக்கும் நீங்கள் நல்ல கவிதைகள் குறித்தும், புத்தகங்கள் குறித்தும் அவ்வபோது அறிமுகம் தருகிறீர்கள். தீவிரமான எழுத்துக்கு நீங்கள் எதிரி என்றும் காட்டிக் கொண்டதில்லை. நீங்கள் அப்படி நினைப்பவரும் அல்ல என்பதை தங்கள் எழுத்தில் அறிகிறேன். ஆனால் வாசகர்கள் இந்த மனநிலைக்கு எப்படி வந்து சேர்கிறார்கள் என்றுதான் குழப்பமாய் இருக்கிறது.

அதேசமயம் ‘தினசரி மாதிரி எழுதுறான், இலக்கியத் தரம் இல்லாம எழுதுறான்’ போன்ற பொறுப்பற்ற எதிர்வினைகளை கண்டு நீங்கள் கோபப்படுவதோ, எரிச்சலடைவதோ, கண்டுகொள்ளாமல் விடுவதும் மிகவும் சரியே. அது உங்கள் உரிமையும் கூட. என் கவலையெல்லாம் உங்களை defend செய்கிறேன் என்ற பெயரில் வாசகர்கள் தீவிர எழுத்துமுறைக்கு எதிரியாக மாறிவிடுவார்களோ என்பதுதான்.

கண்முன்னே இரு பிரிவுகள் உண்டாவதை கான்கிறேன். எளிமையான எழுத்து vs தீவிரமான எழுத்து. இந்த பக்கம் இருப்பவன் அவனை பார்த்து ‘நீளமான எழுத்து, புரியாத எழுத்து’ என இடதுகையால் தள்ளிவிடலாம். அவன் இவனை பார்த்து ‘சாரமில்லாத எழுத்து, ஒரு தரிசனமே இல்ல’ எனக் கைகொட்டலாம். இருதரப்பினரும் மறுதரப்பினரை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கலாம்.

இவ்வாறு ஒரு மனச்சித்திரம் எழுகிறது. ‘எனக்கு உங்க விளக்கமெல்லாம் வேணாம்யா. இங்க பாரு.. வா.ம.ன்னு ஒருத்தர் எழுதுறார்.. எல்லார்க்கும் புரியற மாதிரி எழுதுறார்.. தினமும் எழுதுறார்... இந்த மாதிரி எழுத்துதான் ‘சமூகத்துக்கு தேவை’ மத்ததெல்லாம் எழுத்தாளனின் வெறும் மேதாவித்தனங்கள்! முடிஞ்சா இவர மாதிரி எழுதுங்கய்யா..!’. இப்படி ஒரு சித்திரம் மட்டும் எழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்.
தே.அ.பாரி.

                                                                     ***

சென்னையில் நடைபெற்ற நிகழ்வு குறித்து கணிசமான எதிர்வினைகள் வந்திருந்தன. அவற்றுள் நீண்டதும் முக்கியமானதுமாக இந்த மின்னஞ்சலைக் கருதுகிறேன். 

பாரி குறிப்பிடுவது போன்ற இரு பிரிவுகள் காலங்காலமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ‘நீ எழுதுவது இலக்கியமா?’ என்று ஒரு தரப்பு சொல்வதும் ‘இவன் எழுதுவது புரிகிறதா?’ என்று இன்னொரு தரப்பு கேட்பதும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் விவகாரம்தான். ஆனால் எழுதிக் கொண்டிருப்பவன் இதைப் பெரிதாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியதில்லை. மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை. நான் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். 

எழுத்தின் படிநிலைகளைப் பற்றிப் பேசத் துவங்கினால் எந்த எழுத்தையுமே நிராகரிக்க வேண்டியதில்லை என்கிற முடிவுக்குத்தான் வருவோம்.  ஆய்வியல் மாணவனுக்கு எட்டாம் வகுப்புப் பாடத்தைப் படிப்பதில் சிரத்தை இல்லாமல் இருக்கலாம். அது அவனுக்கு மிக எளிதான ஒன்றாக இருக்கக் கூடும். அதே போல பத்தாம் வகுப்பு மாணவன் ‘இதோடு படிப்பை நிறுத்திக் கொள்கிறேன்’ என்று திருப்திப் பட்டுக் கொள்ளலாம். ஆனால் அத்தனை பாடங்களும் தொடர்ந்து evolve ஆகிக் கொண்டேதான் இருக்கும். எதை வாசிக்கிறோம் அல்லது எதை நிராகரிக்கிறோம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம்.

ஒரு காலத்தில் தனிமையும் துக்கமும் அழுத்திக் கொண்டிருந்த போது கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். ஒருவிதத்தில் அவை stress busters. இப்பொழுதிருக்கும் வாழ்க்கை முறைக்கு இன்றைக்கு எப்படி எழுதிக் கொண்டிருக்கிறேனோ அது இதமானதாக இருக்கிறது. நாளைக்கு வாழ்க்கை எப்படியிருக்கும் என்று தெரியாது. அந்தச் சமயத்திற்குத் தகுந்தபடி அப்பொழுது எழுதிக் கொள்ளலாம். இதைத்தான் எழுத வேண்டும் என்று மற்றவர்களுக்காக வருத்திக் கொள்ளப் போவதில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்னைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொள்வதிலும் விருப்பம் இல்லை. அதன் போக்கில் செல்லட்டும். 

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல என்னைப் பற்றி எந்தச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவும் விருப்பம் இல்லை. அது எந்தவிதமான சித்திரமாக இருந்தாலும் சரி. ஆனால் நம்மை மீறி உருவாகும் சித்திரங்களை நம்மால் எப்படி கலைக்க முடியும் என்றும் தெரியவில்லை. ஏதாவதொருவிதத்தில் கலைக்க முடியுமானால் கலைத்துவிட எல்லாவிதமான பிரயத்தனங்களையும் செய்து பார்க்கவே விரும்புகிறேன்.

Mar 13, 2015

நியுட்ரினோ- விவாதங்கள்

சாக்லேட் வேண்டுமா எனும் பதிவில், அறிவியல் ஆராய்ச்சிகளும் சூழல் விழிப்புணர்வும் பொதுமக்களின் பயன்களும் மோதிக்கொள்ளும் புள்ளியை கோடி காட்டியிருக்கிறீர்கள்.

இந்த ஆராய்ச்சிகள் மூலமாக காடுகள் அழியும், மண்ணை கண்ட இடத்தில் கொட்டுவார்கள், பயன்படுத்தும் வாயு கசியலாம் எனும் சூழல் பிரச்சனைகள் குறிப்பாக பல சட்ட ஓட்டைகள் உள்ள இந்தியாவில் ஏற்படும் வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும், இதே பிரச்சனைகள் கார்பொரேட் கம்பனிகளாலும், சாதாரண மக்களின் பொறுப்பற்ற செயல்களாலும் இதைவிட பலமடங்கு விஸ்தீரணத்தில் தினமும் நிகழ்ந்து வருவதைப்பற்றி நீங்களே நிறைய எழுதியிருக்கிறீர்கள். 

 சூழல் மாசடைவதற்கான கார்பொரேட் மற்றும் மக்களின் பொறுப்பற்றதனம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி எனும் இரண்டு காரணங்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். கார்பொரேட்டும் பொதுமக்களும் பொருளாதார காரணங்களுக்காக சரியான பல மாற்று வழிகளை தவிர்த்துவிட்டு குறுகிய நோக்குடன், சுயநலமாக சிந்தித்து மாபெரும் அளவில் சூழலை அழித்துவரும் வேளையில் அறிவியல், வேறு வழியின்றி ஆகக் குறைந்தளவு மாசுபாட்டுடன் தன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முனைகின்றது. எனவே, சூழலை காப்பாற்ற வேண்டுமானால், அரசாங்கம் முதலில் மக்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் விழிப்புணர்வை ஆரம்பிக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு பொய்யான வதந்திகள் மூலம் மக்களை பயப்படுத்தி அறிவியலை தடை செய்வது சரியான வழியாகாது.

அடுத்து, தமக்கு புரியாத அறிவியல் ஆராய்ச்சிகள் மீது பொதுமக்களுக்கு இயல்பாகவே ஒருவித பயமும் சந்தேகமும் இருந்து வருகின்றது. இதற்கு மேலும் தூபம் போடும் வகையில் மீடியாவும் பரபரப்புக்காக விஷயங்களை ஊதிப்பெருக்கி வருகிறார்கள். அறிவியல் படிக்காத மக்களுக்கு, "விஞ்ஞானிகள் " என்றதும் காமிக்ஸ்களில் பயங்கர மிருகங்களை ரகசியமாக உருவாக்கும் விஞ்ஞானி வில்லன்கள் தான் நினைவுக்கு வருவார்கள். Higgs Boson க்கு கடவுள் துகள் எனும் பிழையான பெயரை வைத்ததும் அல்லாமல், அது தொடர்பான அதீத பயத்தையும், Higgs-ஐ கண்டுபிடிப்பது தொடர்பாக மத நிறுவனங்களிடமிருந்து கடும் எதிர்ப்பையும் மீடியாக்காரர்கள் வாங்கித் தந்திருக்கிறார்கள். 

ஒரு காரின் உதிரிப் பாகங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஒன்று அதைக் கவனமாக அக்குவேறு ஆணிவேறாக கழற்றி ஆராயலாம். அல்லது (ஆளில்லாத) இரண்டு கார்களை (ஆளில்லாத பாலைவனத்தில் வைத்து) ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு, அவை உடைந்து சிதறிய துண்டுகளை ஆராயலாம். மிகமிகச் சிறியதான ப்ரோட்டானையும் எலக்ட்ரானையும் கழற்றிப் பார்ப்பதற்கு வேண்டிய நுண்ணிய கருவிகளை நம்மால் உருவாக்கவே முடியாது. அதனால், இரண்டாவது வழிமுறைப்படி அவற்றை மோதவிட்டு ஆராய்கிறோம்.

இதனால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. இப்படிச் செய்யும்போது நுண்ணிய கருந்துளைகள் உருவாகலாம், ஆனால் அப்படி உருவாகும் கருந்துளைகளுக்கு போதிய நிறை இல்லாமையால் அவை ஆவியாகிவிடும் என்று சில விஞ்ஞானிகள் சொன்னார்கள். உடனே மீடியா இதன் முதல் பகுதியை பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டது. "பென்னாம்பெரிய நட்சத்திரங்களையே உறிஞ்சி விழுங்கவல்ல ராட்சதர்களான கருந்துளைகளை பூமியில் உருவாக்கப் போகிறார்கள்" என கதற ஆரம்பித்தார்கள். அதேபோல ஹாக்கிங்கும் தன்னுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார். இருந்தும் பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்து இதற்கு எதிராகவே இருக்கிறது. அது மட்டுமல்லாமல், LHC பரிசோதனையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்த பலநாட்டு விஞ்ஞானிகளின் குழுக்களும் தத்தமது அறிக்கைகளை ஆராய்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கின்றன.

இந்த அறிக்கைகளை வேலிக்கு ஓணான் சாட்சி மாதிரி விஞ்ஞானிக்கு விஞ்ஞானி சாட்சி என தட்டிக்கழிக்க முடியாது. குழுவாக ஆராய்ச்சி செய்பவர்களைத் தவிர மற்ற விஞ்ஞானிகள், ஒரு காலை ஒருவர் வாரிவிடும் நண்டுகள் என்பதை கவனிக்க வேண்டும். இவர்களே மனமொத்து அறிக்கைகள் வெளியிடுகிறார்கள் என்றால் அது சரியாக இருக்கும் என நம்பலாம்.

ஹிக்ஸ் ஆராய்ச்சி இப்படி என்றால், நியூட்ரினோ ஆராய்ச்சியில் குத்துமதிப்பாகக்கூட பாதகங்கள் எதிர்வுகூறப்படவில்லை. நியூட்ரினோ என்பது கதிரியக்கம் என அழைக்கப்பட்டாலும், மற்ற கொலைகார கதிர்கள் போல இல்லாமல் இது எதனோடும் உறவாடாத, யாரோடும் சேராத, சூதுவாது அறியாத ஒரு அம்மாஞ்சி. அதனால்தான் அதைக் கண்டறிய இவ்வளவு மெனக்கட வேண்டியிருக்கிறது.

உலகின் பல இடங்களில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடங்கள் இது மாதிரியே ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகச் சரியாக Safety Regulations-ஐ பின்பற்றி செய்தால், கட்டுமானத்தால் வரும் சூழல் மாசுபாடுகளை பெருமளவு குறைக்கலாம். ஆனால், எல்லாவற்றிலும் ஊழலும் குறுக்கு வழிகளும் ஓட்டைகள் இருக்கும் ஒரு நாட்டு இந்தியா என்பதும் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம். 

எனவே, இந்த ஆராய்ச்சிக்கூடத்தை regulations-ஐ கறாராக பின்பற்றி கட்டிமுடித்து பராமரிப்பதற்கு இந்தியர்களுக்கு திராணி இருக்கிறதா எனும் பெரிய கேள்விக்குறிதான் இங்கே முட்டுக்கட்டையாக இருக்கிறதே தவிர நியூட்ரினோ தமிழ்நாட்டை அழித்துவிடுமா இல்லையா எனும் அபத்தமான பயம் இல்லை.

- அபராஜிதன்

                                                                       ***
                                                                     (2)

இந்தக் கட்டுரை நியுட்ரினோ பற்றிய புரிதலுக்கு வித்திடுகிறது. நன்றி.

என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். மண்ணையும், மரத்தையும், நீரையும் அழித்துத்தான் ஒரு துகளைக் கண்டுபிடிக்க வேண்டுமா? பத்தாயிரம் வருஷங்களாக இந்த பூமி ரொம்பவும் மெதுவாகத்தான் மாறி வந்திருக்கிறது. ஆனால் கிபி 1800 களின் பின்னாலான வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும். ஓசோன் வளி மண்டலத்தில் துளை உருவாக்கியதிலிருந்து இத்தனை வியாதிகளை உருவாக்கியது வரை அனைத்தும் நீங்கள் மெச்சுகிற அறிவியல்தான் கொண்டு வந்திருக்கிறது. கேன்சர் வியாதிக்காரர்கள் லட்சக்கணக்கில் பெருகியிருக்கிறார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட தப்பிப்பதில்லை அய்யா. ஆஸ்துமா, சிறுநீரக பாதிப்பு என்று திரும்பிய பக்கமெல்லாம் வியாதிகள்தான்.  இந்த அறிவியல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் சீரழிக்கிறது. உங்கள் வயது பிள்ளைகள் காலையில் எழுந்தால் ஒருவேளை சாப்பாட்டை ஒழுங்காக சாப்பிடுறீங்களா? எதுக்கெடுத்தாலும் ஓட்டம்தான். 

எதுக்கு ஓடுறோம் என்று ஒரு நிமிஷம் யோசிக்கறீர்களா? மூன்று வேளை சாப்பாட்டுக்குத்தான் இவ்வளவு போராட்டமும். அப்புறம் எதுக்கு இவ்வளவு அவசரம்?

ஒரு பக்கம் வசதிகள். இன்னொருபக்கம் மரணங்கள். இவ்வளவு அவரசத்தையும் அறிவியல்தான் உண்டு பண்ணியிருக்கிறது. 

அவசரகதி ஆராய்ச்சிகளைச் செய்து என்ன பலன்? எதுக்கு என்றே தெரியாமல் கண்டுபிடிக்கிறார்களாம்.

எங்கள் காலத்தில் ப்ளேக் நோய் வந்தால் ஊரே காலியாகிவிடும். காலரா வந்தாலும் அப்படித்தான். தகழி சிவசங்கரப்பிள்ளையின் நாவல் ஒன்றில் வாசித்திருப்பீர்களே. போலியோ வரும். அம்மை வரும். அதையெல்லாம் ஒழித்துவிட்டோம் என்று பெருமை பேசிய போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது?

பேர் தெரியாத நோவுகள் ஆட்களை கொல்லுகின்றன. மருத்துவமனைப் பக்கம் போகவே பயமாக இருக்கிறது. அந்தக் குழந்தைகள் அழுவதைப் பார்க்கவே முடிவதில்லை. பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட பேர் தெரியாத நோய். இதுதான் இந்த அவசர அறிவியலின் விளைவு. எப்பவோ நியுட்ரினோ ஆராய்ச்சிக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்கிறார்கள். அதை இந்தியாக்காரனும் வாங்கியாக வேண்டும். அதற்குத்தான் 1500 கோடி. 

எனக்கு 75 வயதாகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியன். இத்தனை வருஷங்களாக இந்த பூமி சிதைவதை பார்த்துட்டு இருக்கேன். இது ரொம்ப வேகம். ரொம்ப ஆபத்து.

- ராதாகிருஷ்ணன்.

Feb 27, 2015

சாதிக்குள்ள ஒற்றுமையே இல்லை

அன்பு மணி,

நீங்கள் கூறியதுபோல புலியூர் முருகேசன் செய்தது தேவை இல்லாதது என்றே நானும் எண்ணுகிறேன். ஆனால் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.

கி.ரா கூட அதிகமாக தெரிந்தவர்களின் கதையை எழுதி இருக்கிறார், முறை தவறிய உறவைக் கூட  எழுதி இருக்கிறார், ஒரு கட்டுரையில் (நண்பனின் கதை -பெருமாள்) ஆனால் வக்கிரமாக அல்ல. எல்லையை எங்கே வரையறுப்பது? இதை ஏன் சட்ட பூர்வமாக அணுக மறுக்கிறார்கள்? இப்படி வன்முறை என்று ஆரம்பித்தால் வேளாளர், தேவர், வன்னியர் என்று குறிப்பிடாமல் எவ்வாறு கூளமாதாரி போன்ற நாவல்களை எழுதுவது? ஆச்சரியமாக இருக்கிறது. யார் இவர்களுக்கு சிறுபத்திரிகை தொடர்பாக தகவல் அளிப்பது?

ஏனைய சாதிக் கட்சித் தலைவர்களோடு  ஒப்பிடும்போது ஈஸ்வரன், தனியரசுக்கு மட்டும் ஏன் ஊடகங்களில் மிகுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? கொங்கு வேளாளர்கள் ஏன் இப்படி ஆரம்பித்து விட்டார்கள்? புரியவில்லை. 

இந்தளவுக்கு எப்போதும் சாதி வீரியமாக தமிழ்நாட்டில் இருந்ததில்லை.

எளிமை, வெள்ளந்தி, அன்பு, விருந்தோம்பல் என்றெல்லாம் நான் பார்த்த ஒரு முகம்தானோ? அந்த கொங்கு மக்கள் எங்கே? ஒரே குழப்பம். 

அன்புடன்,
மணிமொழி ரத்தினம்

கொங்கு வேளாளர்களை பெருமொத்தமாகவெல்லாம் வகைப்படுத்த முடியாது. சகலவிதமான குணங்களும் நிறைந்த ஒரு ஆதிக்க சாதியினர்தான் அவர்களும். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் நீங்கள் குறிப்பிடும் விருந்தோம்பலில் பல்லடத்து கவுண்டனுக்கும் ஈரோடு கவுண்டனுக்கும் கூட ஏகப்பட்ட வேற்றுமைகள் உண்டு. எனவே பொதுமைப்படுத்துதல் எதுவும் வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள், மில்கள், தொழிற்சாலைகள், விவசாயம், நிதிவளம் என்று அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வலுவான சாதியினராக இருக்கிறார்கள். அதிமுக அரசு அமைந்தாலும் சரி, திமுக அரசு அமைந்தாலும் சரி- குறைந்தபட்சம் ஆறேழு அமைச்சர்கள் இந்தச் சாதியிலிருந்து இருப்பார்கள். எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். கொங்குப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் அரசு அலுவலர்களில் அவர்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள். ஆசிரியர்களில் அதிகம் அவர்கள்தான் இருப்பார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்கள்தான். இப்படி சகலவிதமான செல்வாக்குடனும் இருக்கும் சாதி அது.

இன்னொரு முக்கியமான அம்சமும் இருக்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகளை கவனித்தால் அந்தப் பகுதியின் பெரும்பான்மையாக இருக்கும் ஆதிக்க சாதியை எதிர்க்கும் அளவுக்கு வலுவான வேறு சாதிகள் இருக்கும். ஆனால் கொங்குப்பகுதியில் கவுண்டர்களை எதிர்க்கும் அளவுக்கு வலுவான சாதியென்று எதுவும் இல்லை. வேட்டுவக்கவுண்டர்கள், தலித்துகள் என ஆங்காங்கே சிலர் எதிர்த்தாலும் பெரிய அளவில் எதிர்க்க முடியாத சூழல்தான். எதிர்ப்பது என்றால் அரிவாளைத் தூக்கிக் கொண்டு எதிர்ப்பதைச் சொல்லவில்லை. பொருளாதாரம், விவசாயம், தொழில் போன்றவற்றில் கவுண்டர்களுக்கு போட்டியாக நிற்கும் வலுவுள்ள சாதி என்று எதையும் சுட்டிக்காட்ட முடிவதில்லை.

சமீபகாலத்தில் கவுண்டர்கள்  வெளியில் தெரியாத சாதிய மோதல்களில் ஈடுபடாத சாதியினர் என்பது உண்மைதான் என்றாலும் மிகத் தீவிரமான சாதிவெறியுடையவர்கள் என்பதை எந்தவிதத்திலும் மறுக்க முடியாது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் பிரச்சினை எழுவதற்கு சில ஆண்டுகாலம் முன்பாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தலித்துகள் தங்களுக்குத் திருமண மண்டபத்தை வாடகைக்கு விட வேண்டும் என்று கோரிய போது பிரச்சினை எவ்வளவு தீவிரமானது என்பது அந்தப் பகுதியினருக்குத் தெரிந்திருக்கும். தலித்துகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆன வரைக்கும் முயன்று பார்த்தார்கள். ஆனால் சகல திசைகளிலுமிருந்து களமிறக்கப்பட்ட கவுண்டர்களின் பலத்தின் முன்பாக தலித்துகள் அடங்கிப் போனார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இயல்பாகப் பேசும் போது கொங்குவேளாளர்கள் ‘சாதிக்குள்ள ஒற்றுமையே இல்லை’ என்பார்கள். கவுண்டர்கள் வீரத்தைக் காட்ட வேண்டும் என்றும் எதற்கும் துணிய வேண்டும் என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்வதை நேர்பேச்சில் கேட்க முடியும். இத்தகைய உள்மன ஆசைகள்தான் சாதி சார்ந்த பிரச்சினைகளின் போது தீவிரமாக வெளிப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.

கொங்குப்பகுதியில் இந்தச் சாதியின் பலம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் தனியரசு, ஈஸ்வரன் போன்றவர்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். ஒரு அணி அதிமுக பக்கம் நிற்கும் போது இன்னொரு அணி திமுக பக்கம் நிற்கிறது. 

பிற சாதிகளில் கலப்புத் திருமணம் அனுமதிக்கப்படும் அளவுக்கு கொங்கு வேளாளர்களில் சாதியக் கலப்பு நிகழ்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். சாதியத் தூய்மை, தங்களின் சாதி புனிதமானது போன்ற பிம்பங்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மீது அடி விழுவதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. 

இத்தகைய பொருளாதார, சாதிய மற்றும் எண்ணிக்கை சார்ந்த சூழலில்தான் இந்தப் பிரச்சினைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தங்களின் சாதி சீண்டப்படுவதை ஜீரணித்துக் கொள்வதில்லை. காலங்காலமாக கோலோச்சிக் கொண்டு வந்த தங்களின் மரியாதை கீழே விழும் துண்டு போல ஆகிவிடும் என்று பயப்படுகிறார்கள். அதை தங்களின் அரசியல் மற்றும் அரசு சார்ந்த செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் வழியாக தடுப்பதற்கான வழிகளை நாடுகிறார்கள். அதன் வழியாக பிரச்சினையை முன்னெடுப்பவர்கள் தங்களின் சொந்த செல்வாக்கையும் ஸ்திரப்படுத்திக் கொள்ள முனைகிறார்கள். சாதிய வெறியுடன், வாக்கு வங்கி அரசியலும் சேர்ந்து கொள்கிறது. நிலைமையும் சூழலும் வேறு மாதிரியாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தகவல் தொடர்பு மிகச் சாதாரணமாகிவிட்ட இந்தக் காலத்தில் ‘இதையெல்லாம் யார் சொல்லித் தருகிறார்கள்’ என்கிற கேள்வி வலுவில்லாததாகத்தான் தெரிகிறது. ‘ம்ம்’ என்றால் கூட தகவல் சென்றுவிடும். 

Feb 19, 2015

வரையறை

என் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. இரண்டு வருடங்கள் பெங்களூரில் பணி புரிந்தேன். கடந்த 7 வருடங்களாக கலிபோர்னியாவில் இருக்கிறேன். 

சமீபத்தில் நீங்கள் எழுதி இருந்த ஒரு விஷயம் பற்றி கேட்க விரும்பி இந்த email அனுப்புகிறேன். நீங்கள் திரு. ஞானி அவர்களுக்கு நன்கொடை அளித்ததை பற்றி படித்தேன். அவரை பற்றி சமீபத்தில் நடிகர் திரு. சிவகுமார் அவர்களுடைய ஒரு பேச்சில் கேட்டேன். பின் நானாக தேடி அவரை பற்றி படித்தேன். நீங்கள் எழுதி இருந்ததை படித்தத்தில் இருந்து ஒரு விஷயம் என்னை மிகவும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. திரு. ஞானி அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அவர்கள் இவரின் தேவைகளுக்கும், இவரை நன்றாக கவனித்துக் கொள்ளவும் ஒன்றும் செய்வதில்லையா? இதை ஏதோ curiosityக்காக கேட்கவில்லை. வாழ்வில் சில எதார்த்தங்களை புரிந்து கொள்ள விரும்பி தான் இதை கேட்கிறேன். 

நன்றி..
குமரசேன் ரங்கசாமி

அன்புள்ள திரு.குமரேசன்,

கோவை ஞானி அவர்களுடன் எனக்கு நீண்ட பரிச்சயம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கலாப்ரியாவின் கவிதைகள் குறித்துப் பேசும் வாய்ப்பை விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் எனக்குத் தந்திருந்தார்கள். அது மிகுந்த உற்சாகமளித்த அழைப்பு. அந்தக் கூட்டத்தில் பேசி முடித்தவுடன் ஞானி அவர்கள் எழுந்து எதிர்மறையான கருத்து ஒன்றைச் சொன்னார். என்ன சொன்னார் என்று தெளிவாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் அது என்னை மிகவும் வருந்தச் செய்தது. அதன் பிறகு ஞானி பற்றிய எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டேன். ஆனால் மெதுவாக ஒன்றைப் புரிந்து கொள்ள முடிந்தது- ஞானி போன்ற ஆளுமையை நிராகரிப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. யாராவது எங்கேயாவது அவரது செயல்பாடுகள் குறித்துப் பேசிக் கொண்டேதான் இருந்தார்கள். உள்ளுக்குள் எவ்வளவுதான் வெறுப்பு இருந்தாலும் எதிர்கொண்டே தீர வேண்டியிருந்தது. அவரது செயல்பாடுகள் அவ்வளவு விரிவான தளத்தில் பரந்துபட்டது.

அதன் பிறகுதான் ஞானியின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். ஞானியின் எழுத்துக்கள் மற்றும் அவரது சிற்றிதழ் தொகுப்புகளின் வழியாக தமிழ் இலக்கியத்திற்கு ஞானியின் பங்களிப்பு என்ன என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. கருத்தியல்கள் வழியாகவும், எழுத்து வழியாகவும் தொடர்ச்சியாக தமிழுக்கு பங்களிப்பு செய்திருக்கும் ஞானி அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவு செய்த போது இரண்டு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. முதல் கேள்வி நீங்கள் கேட்டதுதான். ‘ஞானிக்கு வாரிசுகள் இருக்கிறார்களே’ என்பது ஒன்று. ‘நடிகர் சிவக்குமார் போன்றவர்கள் உதவுகிறார்களே’ என்பது இரண்டாவது.

இரண்டும் எவ்வளவு தூரம் அவருக்கு பயன்படுகின்றன என்றெல்லாம் தெரியாது. ‘உங்களுக்கு வாரிசுகள் இருக்கிறார்களே...அவர்கள் உதவுவதில்லையா’ என்றோ ‘வேறு என்ன உதவிகள் வந்திருக்கின்றன’ என்றோ கேட்பது எந்தவிதத்திலும் சரியான கேள்விகளாக இருக்க முடியாது. இதுகாறும் தான் சேர்த்து வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை பள்ளிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தவர் சிலரிடம் உதவி கோரியிருக்கிறார் என்பதும் உண்மைதான். 

இவையெல்லாம் ஒரு பக்கமாக இருக்கட்டும். அவருக்கு வழங்கப்பட்ட பணம் என்பது தமிழுக்கான அவரது பங்களிப்பிற்கான மரியாதைதானே தவிர அதை உதவி என்று சுருக்கிவிட முடியாது. அவரது பங்களிப்போடு ஒப்பிட்டால் இந்தத் தொகை மிக மிகச் சொற்பம்.

இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது- ஏற்கனவே அறக்கட்டளையில் சேர்ந்திருந்த பணத்தில் இருந்து ஞானிக்குத் தரவில்லை. அறக்கட்டளையில் உள்ள பணம் வேறு வாய்ப்புகளில்லாத எளிய மனிதர்களின் மருத்துவ உதவிகளுக்காகவும், கல்வி சார்ந்த உதவிகளுக்காகவும்தான் பயன்படுத்தப்படும் என்பதால் ஞானி அவர்களுக்கு உதவும் திட்டமிருப்பதாக தனியாக அறிவிக்கப்பட்டது. மூன்று நான்கு நண்பர்கள் அளித்த தொகையைத் திரட்டித்தான் காசோலை வழங்கப்பட்டது. கடைசி இரண்டு நாட்கள் வரைக்கும் நாற்பதாயிரம்தான் சேர்ந்திருந்தது. கத்தாரில் வசிக்கும் நண்பர் ஐம்பதாயிரமாகத் தந்துவிடுங்கள் என்று சொல்லி தனது பங்களிப்பாக பத்தாயிரம் வழங்கினார். ஆக ஐம்பதாயிரம் ரூபாய்.

ஒன்றை நீங்கள் உறுதியாக நம்பலாம். எந்தெந்த காரியங்களுக்கு என்று சொல்லி வாங்கப்படுகிறதோ அந்தந்த காரியங்களுக்காக மட்டும்தான் அந்த நிதி ஒதுக்கப்படுகிறது. அதே போல ஒரு ரூபாய் கூட வீணாக்கப் பட்டுவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன். இதுவரைக்கும் அப்படித்தான் நடந்திருக்கிறது.

இந்த பதிலில் யதார்த்தத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். 

இது குறித்து மேலும் கேள்விகள் இருந்தாலும் அனுப்பி வையுங்கள். பொதுவெளியிலேயே பதில் சொல்லிவிடலாம். அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கட்டும்.

நன்றி.

அன்புடன்,
மணிகண்டன்

Feb 6, 2015

ஜோர்டான் கொலை

நீங்கள்தானே பொதுத்தேர்தலில் மோடியை ஆதரித்து எழுதினீர்கள்? குஜராத் கலவரம் எதுவும் கண்களுக்குத் தெரியாமலே எழுதினீர்களா? ஜோர்டான் பைலட் எரியூட்டப்பட்டது மட்டும் தங்களுக்குத் தெரிகிறதே என்பதற்காக இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேனே தவிர ஐஎஸ்ஸின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவில்லை.
                                                                                                               - சர்புதீன்

இதே மணிகண்டன் தான் மோடியை ஆதரித்து எழுதினான்.  

உண்மையைச் சொன்னால் மோடியை ஆதரித்ததால் எனக்கு பத்து பைசா பிரயோஜனம் கிடையாது. மாறாக ஒன்றிரண்டு இழப்புகள் உண்டு. ஒரு விருதுக்கான இறுதிக்கட்ட பரிந்துரையில்- தமிழகத்தில் பரவலாக கவனம் பெற்ற விருது அது- கடைசி கட்டத்தில் என் பெயர் இருந்திருக்கிறது. எழுத்து, அறக்கட்டளை வழியாகச் செய்யும் சில காரியங்கள் போன்றவற்றின் காரணமாக எனது பெயரைச் சேர்த்திருந்தார்களாம். ஆனால் இறுதிக்கட்டத்தில் நிராகரித்துவிட்டார்கள். நிராகரிப்பதற்காக இரண்டு பேர்கள் சொன்ன காரணம் ‘அவன் மோடியை ஆதரித்தான்’. நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் இது நடந்த சம்பவம்தான். அது பற்றிய வருத்தம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால் இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் இப்பொழுதாவது மோடியை எதிர்க்கிறேன் என்று சொல்லிவிடலாம் அல்லவா? ஆனால் இன்னமும் மோடியை ஆதரிப்பதற்காக முன்வைத்த காரணங்கள் அப்படியே இருப்பதாகத்தான் நம்புகிறேன். 

அந்தச் சமயத்தில் மோடிக்கு மாற்றாக ‘இவர்தான் பிரதமர்’ என்று எந்தக் கட்சியினாலும் சுட்டிக்காட்ட முடியவில்லை. ஏற்கனவே பத்தாண்டு ஊழல் கறைபடிந்திருந்த காங்கிரஸ் ஆட்சியையும் பல்லாண்டுகளாக முழு மெஜாரிட்டி இல்லாத ஆட்சிகளையும் பார்த்துச் சலித்துப் போயிருந்த சூழலில் மோடி போன்ற ஒருவரால்தான் உறுதியான முடிவுகளை எடுக்க முடியும் என நம்பினேன். இதை மறுக்கவில்லை.

எனக்கு எந்த அஜெண்டாவும் கிடையாது சர்புதீன். 

கட்சி, அமைப்பு, மதம், சாதி அல்லது கொள்கை என்ற எந்தச் சார்புகளின் அடிப்படையிலும் யாரையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ தேவையில்லை என்பதுதான் என் நிலை. உதிரியாகத் திரிகிறேன். இதே மனநிலையில்தான் எனக்கான கருத்துக்களை முன் வைக்கிறேன். அதே சமயம் ஒரு மனிதன் எந்தவிதத்திலும் முழுமையான நடுநிலைவாதியாக இருக்க முடியாது என்று தெரியும். ஆனால் நேர்மையாக இருக்க முடியும். 

என்னைச் சுற்றிலும் நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலானவற்றில் எனக்கான சில புரிதல்கள் உண்டு. அது வாசிப்பின் வழியாகவோ அல்லது உரையாடல்களின் வழியாகவோ உருவான புரிதல்கள். ஆனால் ஒரு விஷயத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறேனோ அதை அப்படியே வெளிப்படுத்திவிடுகிறேன். ‘இதைச் சொன்னால் அவர்கள் தவறாக நினைப்பார்களோ’ அல்லது ‘அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டுமோ’ என்று யோசிப்பதில்லை. நகாசு பூச வேண்டும் என்றோ அல்லது பாசாங்கு செய்ய வேண்டும் என்றோ மெனக்கெடுவதில்லை. இதைத்தான் நேர்மை என்று நம்புகிறேன்.

ஆனால் ஒன்று- நான் நினைப்பதுதான் சரியென்றும் அதுதான் இறுதியானது என்றும் எந்தக் காலத்திலும் சொல்லிக் கொண்டதில்லை. பேசுவதும் எழுதுவதும் தவறு என்றால் திருத்திக் கொள்வதிலும் சங்கடம் இல்லை. இத்தகைய ஒரு மனநிலைதான் எனக்கான பலத்தைக் கொடுக்கிறது என்ற நம்பிக்கையிருக்கிறது. இப்படியேதான் தொடர்ந்து இயங்கப் போகிறேன்.

இந்த ஒரு விளக்கத்துடன் உங்கள் கேள்வியை அணுகுகிறேன். குஜராத் படுகொலைகளையும் ஐ.எஸ் தீவிரவாதத்தையும் எப்படி ஒப்பிட முடியும் என்று புரியவில்லை. ஐஎஸ் தீவிரவாதிகள் ‘நாங்கள்தான் செய்கிறோம்’ என்று வீடியோ எடுத்துக் காட்டுகிறார்கள். தெனாவெட்டாகச் சொல்கிறார்கள். குஜராத் சம்பவம் அப்படியானதா என்ன? 

தொடர்ந்து வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். உங்களுக்கு சந்தேகமிருப்பின் விவாதத்திற்கு தயாராகவே இருக்கிறேன். இந்தச் சம்பவம் மட்டுமில்லை- எதைப் பற்றி வேண்டுமானாலும் விரிவாக பேசுவோம் சர்புதீன்.

Dec 1, 2012

இலக்கியப் பித்து


அன்பின் மணிகண்டன்,

வணக்கம். வண்ணதாசனைப் போல் எனக்கு கடிதத்தைக் கவிதையாய் எழுத வராது. சொல்ல வந்ததைச் சொல்லிப் புரிய வைத்துவிட்டாலே பேரதிசயம்.

கவிதை, கதை என்று இலக்கியம் பேச, வாசித்த ஒரு கவிதையை, எழுதிய ஒரு பத்தியைப் பற்றி விவாதிக்க யாருமின்றித் தனியனாய் உணர்கிறேன். நேற்று சுப்ரபாரதி மணியனின் "ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் .. " சிறுகதையை வாசித்துவிட்டு அதை யாரிடம் பகிர்வது, பாராட்டுவது என்பது கூட புரியாமல் இருளில் படுத்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்தேன். 

இதோ அதைப் போலவே சட்டென்று தோன்றிய கவிதையை பகிர்ந்து கொள்ள, பாராட்ட, குறைந்த பட்சம் தலையில் குட்டுவதற்குக் கூட ஆளில்லாமல் விழி பிதுங்கி நிற்கிறேன் நண்ப (இப்படி விளிப்பது இன்னும் பிடித்திருக்கிறது :) ). 

சுருங்கச் சொன்னால் இலக்கியப்பித்து சற்று முற்றிவிட்டது போலும். இதற்கு என்ன செய்தால் தகும்??

நீங்கா அன்புடன்,
கார்த்திக் பாலசுப்பிரமணியன்.


************

அன்புள்ள கார்த்திக்,

வணக்கம்.

உங்களின் கடிதம் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் அதே சமயம் சந்தேகமாகவும் இருந்தது. வேறு யாருக்காவது அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை எனக்கு அனுப்பி வைத்துவிட்டாரோ என முதல் வரியை திரும்ப திரும்ப வாசித்துப்பார்த்தேன். எத்தனை முறை வாசித்தாலும் ‘மணிகண்டன்’ என்றே இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டே அடுத்த வரிகளை வாசிக்கிறேன். கடிதம் அனுப்பியதற்கு நன்றிகள். ஜீப்பில் ஏறிவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்திருக்கிறது.

முதலில் உங்களுக்கு கவிதையாய் கடிதம் எழுத வராது என்பதற்காக சந்தோஷப்படுகிறேன். உங்களுக்கு கவிதையாகத்தான் எழுதத் தெரியாது. எனக்கு கடிதமே எழுதத் தெரியாது. கடிதமே எழுதத் தெரியாதவன் தெரிந்தவரைப் பார்த்து சந்தோஷப்படத்தானே முடியும்?  அல்லது பொறாமைப்படலாம்.

“அன்புள்ள அம்மா அப்பாவுக்கு” என்று ஆரம்பிக்கும் ஒரு கடிதத்தைத் கூட எழுத வேண்டிய அவசியம் வரவில்லை. பிறந்த ஊரை விட்டு படிப்பிற்காகவும் பிழைப்பிற்காகவும் வெளியேறிய போது கைகளுக்குள் செல்போன் இடம் பிடித்துக் கொண்டது.  “ஹலோ” என்ற வார்த்தை போஸ்ட் கார்டை விட எளிதானதாகிவிட்டது. கவிதையோ,விமர்சனமோ அல்லது நண்பனுக்கு எதையாவது எழுத வேண்டிய அவசியம் வந்தபோது கீ போர்டில் வேகமாக தட்டிப்பழகிக் கொண்டேன். அதன்பிறகு இன்லேண்ட் கவர் எப்படியிருக்கும் என்பதே மறந்து போய்விட்டது. வெளியில் சொன்னால் வெட்கக் கேடுதான் - இப்பொழுதெல்லாம் என் எழுத்தைப் பார்க்க எனக்கே பிடிப்பதில்லை. இங்க் பேனாவைப் பிடித்து எழுதி பல வருடங்கள் ஓடிவிட்டன. பள்ளிப்பருவத்தில் வைத்திருந்த பேனாவுக்கு ஐந்து பைசா கொடுத்து இங்க் ஊற்றிக் கொண்ட சரஸ்வதி புக் ஸ்டோர்சை எதேச்சையாகத் தாண்டும் போதெல்லாம்  ‘லீக்’ ஆவதை நிறுத்துவதற்கு வெள்ளைத்தாள் சுற்றி வைத்திருந்த பேனா பூதாகரமாக நினைவில் வந்து போகிறது. 

எழுதுவதை மறந்துவிட்டு, கடிதத்தையும் மறந்துவிட்ட ஒரு சமயத்தில் மின்னல் கீற்று போல உங்கள் கடிதம். 

கடிதம் இருக்கட்டும். வாசிப்பதற்கு வருகிறேன். வாசிப்பதை பகிர்ந்துகொள்ள ஆட்கள் தேவை என ஒரு போதும் நினைத்ததில்லை. வாசிப்பது சுயபுரிதலுக்கான கருவி. நல்ல படைப்புகள் மனதுக்குள் நொதித்து, நம்மை அலைகழித்து, கொந்தளிக்கச் செய்து என எதை வேண்டுமானாலும் செய்யட்டும். அதற்கான அத்தனை உரிமையையும், சுதந்திரத்தையும் படைப்புக்கு கொடுத்துவிடுவதுதான் படைப்புக்கு வாசகன் செய்யும் மரியாதை. மிகப் பெரிய அதிர்வை உருவாக்கும் எந்த ஒரு படைப்பும் ஒரு கட்டத்தில் தெளிந்த நீரோடையென அமைதியடைகிறது. அந்த அமைதிநிலையில் அந்தப்படைப்பைப் பற்றிய சிந்தனையோ அல்லது அதைப் பற்றிய ஒரு குறிப்பை எழுதுவதன் மூலமோ படைப்பு குறித்தான ஒரு தொன்மத்தை அழுத்தமாக மனதிற்குள் பதிவு செய்து கொள்ள முடிகிறது. இப்போதைக்கு இதுதான் என்னளவில் வாசிப்பு முறை.

உங்களின் கேள்விக்கு இது நேரடியான பதிலாக இருக்காவிட்டாலும் சுற்றி வளைத்து மூக்கைத்தொட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். 

அன்புடன்,
வா.மணிகண்டன்.

Jul 20, 2012

பெரியாரியத்தின் சரிவுக் காலம்.




                                                                   (1)

அன்பின் மணி,

அருமையாக போகிறது கதையின் நடை. மிக நன்றாக இருக்கிறது.

சமீபத்திய கதைகளின் ஜாதிய, மத உரையாடல்கள் சற்றே மனதை என்னவோ செய்தது..அவை உண்மையாக நடக்கும் பட்சத்தில் கூட.எனது மனதில் பட்டது.சொல்லி விட்டேன்..தவறு இருந்தால் மன்னிக்கவும். 

தொடர்ந்து கதைகள் எழுதுவது தொடரட்டும்.தங்களின் திறன் மிக அற்புதமாக வெளிப்படுகிறது.

நன்றி,

அன்புடன், 
Swami
மலேசியா.
                
                                                                         (2)


அன்புள்ள மணிகண்டன்,

உங்கள் மின்னல் கதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வாசிக்க வைத்துவிடுகிறீர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அத்தனை சுவாரசியம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளம். 

ஜாதீயம் கலந்த சில கதைகளை வாசித்த போது எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

பெரியாரியம் என்ற கோட்பாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? தற்காலத்தில் அதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

தொடர்ந்து எழுதுங்கள். என் நண்பர்களும் உங்களுக்கு வாசகர்கள் ஆகியிருக்கிறார்கள்.

நட்புடன்,
ரவீந்திரன்
அகமதாபாத்.


                                                             ****** 

வணக்கம்.

1) சாதீயக் கதைகளை எழுதியே தீர வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. சுவாரசியம் என்பதனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுதான்  மின்னல்கதைகளை எழுத ஆரம்பித்தேன் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

கதைககளின் வழியாக கிடைக்கப்பெற்ற புதிய வாசகர்களும், கதைகளுக்கான எதிர்வினைகளும் மற்றும் விமர்சனங்களும் சுவாரசியம் என்ற ஒற்றை அம்சம் மட்டுமே கதைகளை நகர்த்த போதுமானதில்லை என்பதை உணர்த்தின. இந்த ஒற்றை அம்சத்தைத் தாண்டி வேறு எதையாவது பற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. பால்யத்தில் கேட்ட கதைகளும், அப்பொழுது எதிர்கொண்ட சம்பவங்களும் கை கொடுக்கத் துவங்கின. அப்படியாகத்தான் கொங்குப்பகுதியில் நிலவும் வெளித் தெரியாத ஜாதீய அடக்குமுறைகளை கதைகளாக்க முயற்சித்தேன்.

2) பெரியாரியம் என்ற கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை உண்டு. தமிழகத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை முற்றிலுமாக நீக்கவில்லையென்றாலும், அந்தக் குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஓரளவுக்கு மரியாதையான இடத்தை சமூகத்தில் பெறுவதற்கும் பெரியார் பெரும் காரணமாக இருந்திருக்கிறார் என நம்புகிறேன். 

பெரும் இயக்கமாக எழும்பிய பெரியாரியம் தொடர்ந்து காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை என்று சொல்வதைவிடவும், பெரியாரியம் தொடர்ந்து சமூக இயக்கமாக நிலைபெறுவதை பிற இயக்கங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன என்பது பொருத்தமாக இருக்கக் கூடும்.

1970களுக்கு பிறகாக சமூகத்தின் சீரமைப்பு என்பதனையும் விடவும் தங்களின் பிழைப்புவாதமே அரசியல்கட்சிகளுக்கு அவசியமானதாகிப்போனதன் பிறகாக பெரியாரிய கோட்பாடுகள் இயக்கமாக பரவுவது தடுத்து நிறுத்தப்பட்டது. கடவுள் மறுப்பை வெளிப்படுத்தவும், ஆதிக்கசாதியினரின் எதிர்ப்புணர்வை எதிர்கொள்ளவும் அரசியல் தலைவர்கள் தயங்கினார்கள். 

பகுத்தறிவு பேசிய அரசியல்வாதிகள் பெரியாரியத்தை மெல்லக் கைவிடத் துவங்கினார்கள். இந்தக் காலகட்டத்திலேயே பெரியாரியம் வழிபாட்டுக்குரியதாகவும் மாற்றப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுகிறார்களோ இல்லையோ தங்களின் போஸ்டர்களில் பெரியாரின் படத்தை பயன்படுத்தத் துவங்கினார்கள். இத்தகைய போலி ‘பெரியாரிஸ்ட்’கள் பெரியாரின் கோட்பாடுகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். 

எந்த ஒரு தத்துவக் கோட்பாடும் தொடர்ச்சியான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். எதிர்மறையான விமர்சனங்களுக்கான இடம் அனுமதிக்கப்பட்டு விவாதம் நிகழும் போதுதான் கோட்பாடுகள் தம் இருப்பை மேலும் நிலைப்படுத்திக்  கொள்ள முடியும். ஆனால் இங்கு பெரியாரியத்தை வழிபாட்டுக்குரியதாக மாற்றி அதனைச் சுற்றிலும் இரும்பு வேலியும் அமைத்துவிட்டார்கள். 

எப்பொழுது ஒரு கோட்பாடு வழிபாடுக்குரியதாக மாறிப்போகிறதோ அப்பொழுது ’நமக்கேன் வம்பு’ என அதனை விமர்சிப்பதும் குறைந்து போகிறது. விமர்சிக்கப்படாத கோட்பாடுகள் அதன் பிறகாக உருவாகும் தலைமுறையினரிடத்தில் பெரும் தாக்கம் எதையும் உருவாக்குவதில்லை. அந்தக் கணத்திலிருந்து கோட்பாடு தனக்கான சரிவான பாதையை எடுத்துக் கொள்கிறது. 

பெரியாரியத்தை முன்வைத்து சமூக அளவிலான எந்தப் பெரிய விவாதமும் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை என்பதும், மீறி பெரியாரை விவாதித்தாலும் கூட பின்னணியில் அரசியல் சுயநலம் பல்லிளிக்கிறது என்பதும்தான் நிதர்சனம்.

இன்னமும் மேட்டூரிலும், சத்தியமங்கலத்திலும், கோயமுத்தூரிலும்   இன்னும் பல ஊர்களிலும் பெரியாரியத்தைக் கைக்கொண்டிருக்கும் மரியாதைக்குரிய களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் கார்பொரேட் சாமியார்களையும் பார்ப்பனீய ஊடகத்தையும் எந்தவிதத்திலும் எதிர்க்க முடியாது. 

3) ’பெரியாரிஸ்ட்’ ஆக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியிருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் இறையுணர்வு இல்லாதவனாக இருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் சாதீய உணர்வுகள் மனதிற்குள் இருந்தன. பிறகு சாதீயம் பற்றிய தெளிவு பிறந்த போது கடவுள் நம்பிக்கை உள்ளவனாக மாறியிருந்தேன். பெண்ணிய சுதந்திரத்தில் மற்றவர்களுக்கு நான் காட்டிக் கொண்டிருக்கும் எனது முகம் நேர்மையானதுதானா என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே எந்தக் காலத்திலும் ’பெரியாரிஸ்ட்’ என்று என்னை நான் சொல்லிக் கொண்டதில்லை.

                                                                  ***
மின்னல்கதைகளை வாசிப்பதற்கும் சிரத்தையெடுத்து மின்னஞ்சல் அனுப்பியமைக்கும் எனது நன்றிகள். இத்தகைய கடிதங்கள் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தை அளிக்கின்றன.

Jun 20, 2012

மின்னல் கதைகள்- கடிதங்கள்


அன்புள்ள மணிகண்டன்,

உங்களுடைய தூங்கான் (எ) சொக்கநாதன் கதையை வாசித்தேன். தூங்கி வழியும் ஒருவனின் வாழ்க்கைப் போக்கைப் பற்றின கதையில் கந்தசாமி வாத்தியார் வந்து நொந்து சென்று பிறகு அவனைத் தொடையில் கிள்ளி எழுப்ப ஒரு சிறுவன் நியமிக்கப்படும் இடம் வரை கதை சுவாரசியத்தைப் பெறுகிறது. மேலும் கல்யாணத்திற்குப் பிறகான குழந்தை பெற்ற தகவல் "வேறு எபிசோடு" என்று சொல்லிய இடத்தில் சிறிய புன்னகையுடன் எண்ண ஓட்டம் தனக்கேயான இயல்புடன் அதற்கான இடத்தினை கப்பென்று பிடித்துக்கொண்டுவிடும்.

ஆனால் அவன் நோயினால் அகப்பட்ட பின் கதை தனக்கான தடத்தை விட்டு விலக ஆரம்பித்தது கவனிக்கப்படவேண்டியது. இதுதான் கதையின் முக்கியமான இடம் என்று நினைக்கிறேன். அதி சுவாரஸ்யம் அடைந்து இதுவரையில் ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் பயணித்த கதை வாசகனை உள்ளிழுக்க ஆரம்பிக்கிறது. மேலும் இறுதி பத்தி அதற்கு முன்னர் வரை அவன் சலனமில்லாமல் படித்ததை அவனுடைய புருவம் சுருங்க சிந்தனைக்கு உள்ளாக்குகிறது. சொக்கநாதன் இறக்கவில்லை என்பதை உறுதிபடுத்தக்கூடிய இடத்தில் விவேகம் பேச வேண்டும் என சொல்ல வருகிறது. அதற்கு முந்தைய பத்திகளுக்கும் இதற்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டதே கதையில் தேக்க நிலையில்லாமல் இருப்பதற்கு செய்துவிட்டது. முழுவதும் ஒரு பயணம் இறுதியில் ஒரு முரண் தன்மையற்ற இணைப்பு.

அவனது முழுமையான புற அக தோற்றத்தைப் பற்றின தகவல்களை கதையின் மூல மத்திய பத்திகளில் தெரிவித்ததிலிருந்து சொக்கநாதன் பணத்தின் மேல் ஈடுபாடற்றவன் என்பது தெளிவு. எனவே அவனது இடையூறுகளிலிருந்து மற்றவர்களை விடுவிக்க அவன் விரக்தி ஏற்பட்டு தற்கொலை என்கிற முடிவை எடுத்ததாகத் தெரியவில்லை. அவன் பைக்கை எடுத்ததே அவனுக்கு கிடைக்காத சுதந்திரத்தை சிறிதேனும் அனுபவிக்கவே. அதே போல வண்டி ஓட்டும்போது தூங்கி வழிந்து வண்டியை ரயில்வே ட்ராக்கில் விட்டுவிட்டதாக ஒரு சந்தேகம் வந்தாலும் , ஒரு வட்டத்தில் அடைபட்ட போது அவன் உணர்ந்த மன நிலையில் அந்த தூங்கும் வியாதியிலிருந்து குணமடைந்ததை அவன் மனம் அவனுக்குரிய வெளிப்புறத்தை அணுக துடிக்கிறது என்பதனால் இந்த முடிவையும் சொல்ல முடியாது. இத்தகைய விரிவுபடுத்துதலை வாசகனிடத்தில் படைப்பானது அப்படைப்பாளியின் சாயலின்றி அளிக்கிறது.

ஒரு வகையில் வசனங்கள் தேவையற்ற காட்சிப்படமாகவும்  இக்கதையை சொல்லலாம். இதற்கு முன்னர் நீங்கள் எழுதிய "அசைவுறாக் காலம்" , "மழையில் முளைத்த காமம்" போன்ற கதைகளும் முழுமையான விரிவாகத்துக்குரியதே. வாசகன் அடைய வேண்டிய தேர்ந்த இடத்துக்கு இத்தகைய படைப்புகள் முதல் உதாரணம்.
                                                       
அன்புடன்,
சிவகுரு.
                                                                   ***

அன்புள்ள சிவகுரு,

வணக்கம்.

இந்தக் கதை இத்தனை விரிவான கடிதத்திற்கு தகுதியானதா என்று கூட சந்தேகமாக இருக்கிறது என்றாலும் உங்களின் மின்னஞ்சல் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. கதைகளை எனது எழுத்துப்பயிற்சிக்கான கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். சுவாரசியம் மட்டுமே அதில் அடிப்படையாக இருக்கட்டும் என்பதை நான் விரும்பியே செய்கிறேன்.

இது போன்ற விரிவான மின்னஞ்சல்களைத் தவிர்த்து ஒரு வரி அல்லது இருவரிகளில் நிறைய மின்னஞ்சல்களை மின்னல்கதைகள் பெற்றுத்தருகின்றன.

“இப்போ என்ன சொல்ல வர்ற? முழுமையா சொல்லு” “தீரன் சின்னமலையை வம்பிக்கிழுப்பதை நிறுத்திக் கொள். விளைவுகள் விபரீதமாக இருக்கும்” “கதை அருமை. தொடர்ந்து எழுதுங்க” என்பதெல்லாம் சில உதாரணங்கள்.

இந்த மின்னஞ்சல்கள் நான் எதிர்பார்த்ததைவிடவும் கதைகள் வேறொரு திசையில் வேறொரு வாசகர்களை நோக்கி நகர்கிறது என்பதை உணர்த்துகிறது.

தொடர்ந்து வாசியுங்கள்.

உணவு விடுதிகளில் எழுதி வைத்திருப்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது - குறைகளை என்னிடமும் நிறைகளை நண்பர்களிடமும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி.

மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்

Jun 2, 2012

மின்னல் கதைகள் குறித்து- கடிதம்

அன்புள்ள மணி,

மின்னல் கதைகளின் வரிசையைப்பற்றி என் அபிப்பிராயத்தை சொல்வதானால் அது படைப்புத்திறமையின் மற்றுமொரு பிம்பம். மொத்தமாக கதைத் தொகுப்புகளுக்கு வேறு பெயர் கொடுத்துவிட்டதால் அது சிறுகதை என்கிற வடிவத்திலிருந்து மாறுப்பட்ட மற்றொரு வடிவம் என்று ஆகிவிடுகிறது. நவீனக் கவிதைகள் எழுதும் ஒருவர் வெகுஜன கதைகளைக் கையாள்வது என்பது அக்குறிப்பிட்டவரின் பன்முக மன அமைப்பைப்  பற்றியது. அதில் சுஜாதா தெரிகிறார் இதில் பாலகுமாரன் தெரிகிறார் என்பது வாசிப்பைப் பொருத்தது.

இப்படி எடுத்துக்கொண்டால் சுஜாதா கூட 'நகரம்','ஆட்டக்காரன்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளில் மற்ற சிறுகதைத் தொகுப்புகளைப் பார்க்கும்போது தனது பிரதியின்மையைக் காட்டினார். நாஞ்சில் நாடன் 'கும்பமுனிக் கதைகள்','கல்யாணக்கதைகள்' என்று வேறு சில பெயர்களில் சிறுகதைகள் அல்லாத கதைகளை எழுதினார். அது அவரது யதார்த்த எழுத்திலிருந்து வேறுபட்டிருந்தது.

உங்களின் கவிதைகள் மூலம் நீங்கள் வெளிப்பட்டதை பரந்த உலகுக்கு சென்றுசேரும் கதைகள் மூலம் வெளிப்படுவது வாசகர்களுக்கு சற்று நெருடலாக இருப்பதுபோல் தோன்றுமே தவிர இது போன்று முயற்சிப்பது என்பது எத்தனை பேர் செய்வார்கள் என்ற வினாவிற்கு உரியதே. 

பொதுவாகவே ஆங்கிலத்திலிருந்து நம்மவர்கள் கறந்து இந்திய தமிழக கலாச்சாரத்தின் சாயம் கலந்து படங்களை எடுப்பதும் அதற்கு ஆதாரமாக ஒரு ஒப்பீட்டுப் பட்டியல் மின்னஞ்சல்களிலும் வார இதழ்களிலும் உலாவுவதும் அனைவரும் அறிந்தது. அப்படி சில வருடங்களுக்கு முன் "The Life of The David Gale" என்ற ஆங்கிலத் திரைப்படம் பார்த்தேன். அது நமது விருமாண்டியை நினைவூட்டினாலும் அதில் நம்மவர் எடுத்துக்கொண்ட ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா பாணியும் கதையின் தெளிவும் குறிப்பிடத்தக்கதாகவும் நான் கண்ட படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும் இருந்தது. உலக முயற்சிகளிலேயே இது போன்ற பின்பற்றுதல்,சாயல்தன்மை இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் சரக்கு எப்போதும் நம்முடையதாக இருக்கிறது.

நவீன இலக்கியத்தை அடைவதற்கு இத்தகைய முயற்சிகள் ஒரு படிக்கட்டாக அமையும்போது மற்ற சிலரும் மணிகண்டனின் சாயலையொத்த கதையினை எழுத ஆரம்பிப்பார்கள் என்பதே என் கருத்து. 


அன்புடன்
ஆ. கிருஷ்ணகுமார்
                                                        ***

அன்புள்ள கிருஷ்ணகுமார்,

வணக்கம்.

முதலில் இந்தக் கடிதத்தை என்னால் பாராட்டுக்கடிதமா அல்லது வசவுக்கடிதமா என்று தரம் பிரிக்க முடியவில்லை. அது அவ்வளவு முக்கியமுமில்லை. ஒருவர் மெனக்கெட்டு மற்றவரின் படைப்பு குறித்து சில
வரிகளை எழுதுகிறார் என்பதே மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிகழ்வு. அதுவே அந்த எழுத்திற்கான அங்கீகாரமும் கூட.

கவிதையோ, கதையோ, விமர்சனமோ- ஏதோ ஒன்றை எழுதி முடித்த இரவு மகிழ்ச்சியாக உறங்க முடிந்தால் அதுவே என்னளவில் திருப்தியான தருணம். 
அதைத்தான் சமீப காலங்களில் மின்னல்கதைகள் எனக்குத் தந்து கொண்டிருக்கின்றன. க்ளிஷேவாகச் சொன்னால் ஆத்மதிருப்தி. இந்தக் கதைகளை என் உரைநடை எழுத்தை கூர் தீட்டிக் கொள்வதற்காகவே எழுதத் துவங்கினேன்.

ஆனால் இந்தச் சின்னஞ்சிறு கதைகள் பெற்றுத்தந்து கொண்டிருக்கும் எதிர்வினைகள் தொடர்ந்து எழுதச் செய்வதற்கான உத்வேகத்தைத் தருகின்றன. இவை எதிர்பாராத மனிதர்களிடமிருந்து கிடைக்கும் எதிர்பாராத பாராட்டுகளாகவோ அல்லது குட்டுக்களாகவோ இருக்கின்றன.

“சுவாரசியம்” என்ற ஒரு அம்சத்தைத் தவிர தற்சமயத்தில் வேறு எந்த நோக்கமும் இந்தக் கதைகளில் இல்லை. நகர்ந்து கொண்டிருக்கும் போது அவை தமக்கான சரியான திசையைக் கண்டறிந்துவிட முடியும் என நம்புகிறேன்.

உங்களின் மின்னஞ்சலுக்கு உளப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து வாசித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்.
மணிகண்டன்
01-06-2012 11.24 pm

Mar 5, 2012

18வது அட்சக்கோடு- முன்னுரையும் துளி சந்தோஷமும்

காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் செவ்வியல் பதிப்பாக வெளிவந்திருக்கும் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை பல பாராட்டுகளை பெற்றுத் தந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர்கிறேன்.


பின்வரும் கடிதம் இன்று கிடைத்தது. இன்னுமொரு துளி மகிழ்ச்சி. 

                                          **** 

அன்பின் மணிகண்டன்,

புத்தத்திற்கு தங்கள் முன்னுரை அருமை. புத்தகம் இரண்டாம் முறை தற்போது படித்தேன். மிக சுவாரசியமாக இருந்தது. முதல் முறை சற்று போரடித்த கிரிக்கட் வர்ணனைகள்(நான் கிரிக்கட் ரசிகனல்ல)கூட இம்முறை  ஒரு சிறுவனுடைய பார்வையில் மிக நன்றாக இருந்தது. அதுதான் அசோக மித்திரன் ஞானி கூறுவதுபோல் படிக்கப் படிக்கத்தான் சுவைகூடும் ரகுமான் ம்யூசிக் போல.

உங்கள்  எழுத்துக்களை எங்கு படிக்கலாம்? எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது.ஒரு நல்ல எழுத்துக்கும் ஒரு தேர்ந்த ரசிகன்  அறிமுகமோ, விமரிசனமோ(?) தேவைப்படுகிறது. உங்கள் முன்னுரைஅதைச் செய்கிறது. மிக அருமை

உங்களைப்பற்றி விவரம் தரமுடியுமா? 

நான் ராதாகிருஷ்ணன். ரிடையர்டு எஞ்சினியர் மதுரை நகரில் வசிக்கிறேன். புத்தகங்கள் படிப்பதும், வலைத்தளங்கள் மேய்வதுமே பொழுது போக்கு. பிடித்த எழுத்துக்கள் தேவன், தி.ஜா,அ. மோ.,லா.ச.ரா., மற்றும் பலர்.

அன்பின் திரு.ராதாகிருஷ்ணன் அய்யா,

வணக்கம்.

தங்களின் மின்னஞ்சலுக்கு நன்றி. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

நாவல் உட்பட எந்த இலக்கியப்பிரதியும் மறுவாசிப்பின் போது வேறொரு பரிமாணத்தை வாசகனுக்கு கொடுக்கிறது.

இதுவரை ஒருமுறையேனும் கூட வாசித்திராத எழுத்துக்களின் எண்ணிக்கை குவியல் மலைப்பைத் தந்துகொண்டேயிருக்கிறது. இந்த மலைப்பை மீறி மறுவாசிப்பு செய்வதற்கான சாத்தியம் குறைவாகவே இருக்கிறது. மறுவாசிப்பு செய்யத்தூண்டும் எந்த படைப்பும் அந்த குறிப்பிட்ட வாசகனளவில் வெற்றிபெற்ற படைப்பாகிவிடுகிறது. எழுப்பட்ட அத்தனை எதிர்மறை விமர்சனங்களை மீறி வெற்றியடைந்த 18வது அட்சக்கோடு நாவல் தன் வாசகனை தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டேயிருப்பதாக உணர்கிறேன்.

இந்த நாவல் எழுதப்பட்ட காலத்திலும், பிரசுரிக்கப்பட்ட காலத்திலும் நான் பிறந்திருக்கவில்லை. செவ்வியல் பதிப்பாக வெளிவரும் சமயத்தில், அசோகமித்திரன் என்ற ஆளுமையின் நாவலுக்கு முன்னுரை எழுத எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பினை அங்கீகாரமாக கருதிக் கொண்டாலும் எனது தகுதியின் மீது எப்பொழுதும் ஒரு சந்தேகப்பார்வையை வைத்துக் கொள்வதற்கான சாத்தியத்தையும் இந்த வாய்ப்பு உருவாக்கியிருக்கிறது.

18வது அட்சக்கோடு நாவலுக்கு எழுதிய முன்னுரை எதிர்பாராத திசைகளிலிருந்து முகம் தெரியாதவர்களிடமிருந்து பாராட்டுக்களை பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது. அதற்கான நன்றி காலச்சுவடுக்கும் உரித்தானது.

எழுத்து சார்ந்த என் பங்களிப்புகளின் விவரத்தை www.nisaptham.com என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தங்களின் அன்பிற்கும் நேரம் ஒதுக்கி பாராட்டியமைக்கும் நன்றி.

அன்புடன்,
வா.மணிகண்டன்.

Feb 17, 2012

தூத்துக்குடி,படிமம்,குறியீடு


நாளை (பிப்ரவரி 18) தூத்துக்குடியில் நடைபெறும் தேரி கவிதையுரையாடல் நிகழ்ச்சிகான தயாரிப்புகளில் இருக்கிறேன். கறுத்தடையானின் “ஊட்டு” கவிதைத் தொகுப்பு(மணல்வீடு வெளியீடு) குறித்தான கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்திருக்கிறார்கள். இப்படியான நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைப்பது சந்தோஷமாக இருக்கிறது. 

கவிதை விமர்சனம் என்பது அதிகபட்ச உழைப்பை கோரக் கூடியதாகத் தோன்றுகிறது. சற்றேறக்குறைய இருபது நாட்கள் ஒரு கட்டுரையை முடிக்க தேவைப்படுகிறது. இந்தச் சமயத்தில் வேறு எதுவும் எழுதும் மனநிலை அமைவதில்லை. தொகுப்பின் கவிதைகளை திரும்ப திரும்ப வாசிப்பதும் ஒன்று அல்லது இரண்டு பத்தி எழுதுவதுமாக நேரம் தீர்கிறது. ”கவிஞன் கவிதை விமர்சனம் எழுதுவது என்பது தற்கொலை முயற்சிக்கு சமம்” என்று ஒரு கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்திய கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிட்டார். அதில் உண்மையும் இருக்கிறது. பிற கவிதைகளில் இருக்கும் குறைகளை பற்றி அதிகமும் யோசிக்கும் போது நாம் கண்டறிந்த குறைகள் இல்லாமல் ஒரு கவிதையை எழுதிவிடவே மனம் விரும்புகிறது. ஆனால் எழுத முடிவதில்லை. கவிதையின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவாகிவிட்ட போதிலும் பிறரின் கவிதைகளைப் பேசுவதும், நாம் முன்வைக்கும் விமர்சனங்களை கவிதையை வாசிப்பவர்கள் பொருட்டாக எடுத்துக் கொள்வதும் தொடர்ந்து விமர்சனங்களை எழுதுவதற்கான உத்வேகம் அளிக்கக்கூடியவை.

தொடர்ச்சியாக அடுத்த மாதம் சபரிநாதனின் “களம் காலம் ஆட்டம்” (புது எழுத்து வெளியீடு), அய்யப்ப மாதவனின் “ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்” (உயிர்மை வெளியீடு) ஆகிய தொகுப்புகளுக்கான விமர்சனக்கட்டுரை எழுத வேண்டியிருக்கிறது.

கவிதை விமர்சனக்கட்டுரையை கவிதையை வாசிக்காதவர்கள் வாசிக்கும் போது எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்ற வினா எழுகிறது. விமர்சனக் கட்டுரைகள் கவிதை வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களையும் கவிதையை திரும்பிப்பார்க்கச் செய்பவனாக இருக்க வேண்டும் என்றும், கவிதைகளை மட்டும் இல்லாது “கவிதையியல்” குறித்து அதிகம் பேச வேண்டும் என்றும் விரும்புகிறேன். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தால் விமர்சகனாக இருக்கலாம். இயலாதபட்சத்தில் நானும் எழுதுகிறேன் என்று இல்லாமல் வேறு பக்கம் கவனம் செலுத்தலாம்.

                                  ***

வணக்கம்

இணையத்தில் தேடிக்கொண்டிருக்கும் பொலுது உங்களின் தளத்தை கண்டேன். சில இலக்கிய நாவல்களை படிக்கும் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை காரணம் தேடிய போது அவை குறியீட்டு மொழியில் எழுதப்பட்டதாகவும், படிமங்களின் வடிவில் எழுதப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த குறியீடு, படிமம்... போன்றவற்றை எப்படி அறிந்து/புரிந்துகொள்வது என்று விளக்க முடியுமா

நன்றி

பா.பூபதி


அன்புள்ள பூபதிக்கு,

வணக்கம்.

இது பொதுவான குற்றச்சாட்டு. எந்த நாவலை நீங்கள் வாசிக்க முயற்சித்தீர்கள் என்றும், அதில் புரியாத அம்சம் எது என்றும் குறிப்பிட்டீர்களேயானால் நாம் விரிவாக விவாதிக்கலாம். 

குறியீடு, படிமம் என்பவை வாசகர்களுக்கு புரியாமல் போக வேண்டும் என்பதற்காக படைப்பாளிகள் பயன்படுத்துவதில்லை. அவை படைப்பு மொழியின் கருவிகள். தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாகவும், விவாதத்தின் மூலமாகவும் அவற்றை நெருங்க முடியும். வாசிப்பு என்பது பல படிநிலைகளைக் கொண்டது, அதில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை பதிலளிப்பதற்கு முன்பாக நான் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

நன்றி.

அன்புடன்,
வா.மணிகண்டன்.



Feb 6, 2012

கவிதைxதகுதி


ஆ.கிருஷ்ணகுமாரின் கடிதம்:

வணக்கம் மணி,

தாங்கள் தெரிவித்த கவிதை நூல்களை வாங்கி விட்டேன். இன்னமும் அதை படித்துத் தெரிந்துகொள்வதற்கான கட்டத்திற்கு நான் தகுதி அடையவில்லை. ஏதோ ஆர்வத்தின் காரணம் எனலாம். இருந்தாலும் முயற்சிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

புதுக்கவிதைகள் பெரும்பான்மையினருக்கு சென்றுசேரும்.ஏனென்றால் அதில் காதலர்கள் காதலிகளை வர்ணனம் செய்ய இயற்கையை கையிலெடுத்துக்கொண்டு பூவே, கனியே, மலரே, நதியே, கடலே, நிலவே, இதயமே,... என்று கன்னா பின்னா-வென எழுதி வைப்பார்கள்.இத்தகைய நுட்பமான கவிதை வரிகளே(?) நம்மவர்களுக்கு அதிகம் பிடிக்கும். ஏனென்றால் அது நமது உள்ளூர் தனியார் பேருந்துகளில் ஒலிபரப்பப்படும் சினிமாப்பாடல் போன்றது. அதை சீக்கிரம் மனம் பெற்றுக்கொள்ளும். (நானும் இதுபோன்று கிறுக்கியிருக்கிறேன், மன்னித்துக்கொள்ளவும்)

என்னைப் பொருத்தவரை கவிதைகள் என்பது மேலே குறிப்பிட்ட வரையரைகளுக்குள் மட்டுமே இருந்தது.

தங்களுடைய வலைதளம் எனக்கு அறிமுகமான பின் கிட்டத்தட்ட இந்த இரண்டு வருடங்களில் பற்பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். ஏறக்குறைய அனைத்து கவிதைகளையும் வாசித்திருக்கிறேன். (குறிப்பாக "இந்த நூற்றாண்டின் முதல் தற்கொலை" என்கிற கவிதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று)

சமீபத்தில் தங்களுடைய "நவீன கவிதையும் புதுக்கவிதையும் ஒன்றா?" என்கிற விளக்கக்கட்டுரையை படித்தேன்.மிகவும் முக்கியமான ஒரு பதிவென்று தோன்றுகிறது.

இதற்கு முன்பாக நவீன கவிதை பற்றிய தங்களது கட்டுரைகளையும்,பிறருடைய கவிதைகளைப் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். இருந்தாலும் இந்த கட்டுரை சற்று எளிமையாக இருப்பதாக நினைக்கிறேன்.

நவீன கவிதையைப் படிக்க ஆரம்பிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இக்கட்டுரை அக்கவிதைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இப்பதிப்பினை முகப்புத்தகத்தில் வலையேற்ற தாங்கள் அனுமதியை நாடுகிறேன்.

அக்கட்டுரையில் எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள்:

"புதுக்கவிதை என்ற சொல் வாரமலரின் கடைசிப்பக்கத்தில் வரும் கவிதைக்கும், திரைக்கவிஞர்களின் கவிதைகளுக்கும், மேடைக் கவிதைகளுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன".

"நவீன கவிதைகளில் கவிஞன் துருத்திக் கொண்டிருப்பதில்லை. பிரச்சார நோக்கத்திற்காகவும் கவிதை பயன்படுவதில்லை.இங்கு கவிதை வாசகனுடன் நேரடியாக உரையாடுகிறது. நவீன கவிதையில் வாசகனுக்கும் கவிதைக்கும் இடையில் கவிஞன் என்பவன் வெறும் கருவி மட்டுமே".

"இவை மனித மனதின் மேல்மட்ட உணர்ச்சிகளை எளிதில் தூண்டக்கூடியவை. ஆனால் ஆழ்மனதில் உருவாக்கும் சலனம் என்பது எதுவுமில்லை".

பற்பல நூல்களை எனக்கு அறிமுகம் செய்தமைக்கும்,பரிந்துரை செய்தமைக்கும் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
ஆ.கிருஷ்ணகுமார்.

    ***
அன்புள்ள கிருஷ்ணகுமார்,

வணக்கம்.

கவிதை நூல்களை வாசிப்பதற்கான ’தகுதி’ என்பது தொடர்ச்சியான வாசிப்பினால் வாசகன் தனக்குத் தானே உருவாக்கிக் கொள்வதுதான். இதற்கு ஆர்வம்தான் அடிப்படை.உங்களிடம் ஆர்வம் இருக்கும்பட்சத்தில் வாசிக்கத் தொடங்குவதே நல்லதுதான். கடினமான கவிதைகளை எதிர்கொள்ள நேர்ந்தால் அவற்றை ஒரு முறை வாசித்துவிட்டு சிறிது நேரம் கழித்தோ அல்லது மறுநாளோ இன்னொரு முறை வாசிக்கலாம். திரும்பத் திரும்ப கவிதையை வாசிப்பது என்பது கவிதையை அணுகுவதற்கு எளிமையான வழிமுறை.  இதை அறிவுரை என எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- கவிதையோடான என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது.

தொடர்ந்து கவிதைகளை வாசிப்பதும் அவற்றைப் பற்றி விவாதிப்பதும் கவிதையின் புரிதலையும், வாசிப்பின் அடுத்த கட்ட நகர்வையும் வாசகருக்கு துரிதப்படுத்தும். வாசிப்பின் அடுத்த கட்டம் என்பதை இன்னும் சற்று தெளிவாகவே பேசலாம்.

கவிதை எப்பொழுதும் ஒரே பரிமாணத்தைக் கொண்டிருப்பதில்லை- உங்களால் புரிந்துகொள்ள முடியும் அதே கவிதையை நான் இன்னொரு பரிமாணத்தில் புரிந்துகொண்டிருக்கக் கூடும். நீங்களும் நானும் குறிப்பிட்ட கவிதையைப் பற்றி உரையாடும் போது நம் இருவருக்குமே அந்தக் கவிதையின் வேறொரு புதிய பரிமாணம் கிடைக்கிறது. பிறகு இன்னொரு கவிதையை வாசிக்கும் போது முதல் வாசிப்பில் புரிந்து கொள்ளும் பரிமாணத்தோடு அந்தக் கவிதையின் வேறு பரிமாணங்கள் குறித்து யோசிக்கத் துவங்குகிறோம். 

புரிதல் என்பது கவிதை வாசித்தலின் மிக அடிப்படையான கூறு. இதுதான் சற்று கடினமான படி. பெரும்பாலான வாசகர்கள் கவிதை தமக்கு புரிவதில்லை என்று கவிதையை விட்டு நகர்ந்துவிடுவதும் கூட இந்தச் சிக்கலால்தான் என்று நம்புகிறேன். இந்தப்படியை(புரிந்துகொள்ளுதல்) தாண்டிவிடும்பட்சத்தில் கவிதையின் இன்னபிற கூறுகளை - உதாரணமாக: கவிதை மொழி, அதன் கட்டமைப்பு, ஒப்பீடுகள் போன்றவற்றை நோக்கி கவிதை வாசகனால் நகரமுடியும். இது போன்ற கூறுகளை Elements of Poetics எனக் குறிப்பிடுகிறார்கள். கவிதைக் கூறுகளை அறிந்துகொள்ளுதலும் கண்டறியாத புதிய கூறுகளை நோக்கி நகர்தலுமே கவிதை வாசித்தலின் அடுத்த கட்ட நகர்வுகள் என்று குறிப்பிடுகிறேன்.

கவிதைகளை கூர்ந்து கவனித்தால் அவை தம்மை தொடர்ந்து புதுப்பித்தும் உருமாறியும் வருவதை புரிந்துகொள்ள முடியும். இந்த புதுப்பித்தலும் உருமாற்றமும் இனியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதால் தன்னை ’கவிதையியலின் பண்டிதன்’ என உளமார ஒருவராலும் சொல்லிக் கொள்ள முடியாது. இப்படி இலக்கிய ஆணவத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்வதே கூட கவிதையின் தனிச்சிறப்புதான். யாராவது கவிதையை முன்னிறுத்தி பிறரை ‘பயமுறுத்தினால்’ கவிதை அவர்களைப் பார்த்து ‘ஈ’ என பல்லிளித்து ஏளனம் செய்துவிடும்.

கவிதையை வாசித்தல் ஒரு சூத்திரம். வாசிப்பின் பலனாக வாசகன் கண்டறியும் சூத்திரம். சூத்திரத்தைத் தெரிந்துகொண்டால் கவிதையின் சிண்டுகளை அவிழ்ப்பது மிக எளிது.

கவிதை வாசிப்பதில் விருப்பமுடைய ஒருவருக்கு எனக்கு முக்கியமான புத்தகங்களாகத் தோன்றுவதை சுட்டிக் காட்டுவது என்பது மகிழ்ச்சியான செயல்பாடுதான். அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு பரிந்துரைத்ததன் மூலம் பெற்றுக் கொண்டேன். நீங்கள் முகநூலில் எனது கட்டுரையை பகிர்ந்துகொள்வதில் எனக்கு எந்த நஷ்டமும் வரப்போவதில்லை :)

நன்றி,

அன்புடன்,
வா.மணிகண்டன்