Feb 22, 2018

மறு பிறவி

கவுசிகாவின் கதையை உங்களிடம் சொல்ல வேண்டும் என முன்பே முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் நவீன் அனுமதிக்கவில்லை. அவர் கவுசியின் கணவர். கதையின் முதல் பகுதியை அவர்தான் எனக்குச் சொன்னார். 'இதை எழுதிடாதீங்க' என்ற உறுதியையும் வாங்கி இருந்தார். இரண்டாம் பகுதி எனக்கே தெரியும். எனக்கு மட்டுமில்லை. என்னைப் போலவே இன்னும் பலருக்கும் தெரியும். ஆனால் முதல் பகுதியைச் சொல்லாமல் இரண்டாம் பகுதியைச் சொல்வது சரியாக இருக்காது.

கவுசிக்கும் எனக்கும் ஒரே வயதுதான். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அவள் அறிமுகம். அறிமுகம் என்றால் பேசியது இல்லை. 'அந்தப் பொண்ணு  எவ்வளவு அழகு' என்று சித்தி பேசிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக அவளைப் பார்த்ததோடு சரி. சித்தி வீட்டுக்குப் பின்னால் புதிதாகக் குடி வந்திருந்தார்கள். 

'டாக்டருக்கு படிக்கப் போறாளாம்' என்றார் சித்தி. தேர்வில் அவள் என்னைவிடவும் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். ஆனால் மருத்துவப் படிப்பில் சேர்கிற அளவுக்கு இல்லை. பொறியியல் படிப்பில் சேர்ந்தாள். அவளும் நானும் வெவ்வேறு கல்லூரிகள். அதன் பிறகு அவளை  மறந்து போனேன்- நவீனைச் சந்திக்கும் வரையிலும்.  

கவுசியின் முதல் திருமணம்தான் கதையின் முதல் பகுதி. 

எங்கேயோ வெளிநாட்டில் பணியாற்றிய மாப்பிள்ளை ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். வீடு வாசல் பார்த்து அக்கம் பக்கம் விசாரித்துச் செய்து வைத்த திருமணம்தான். ஆனால் நிலைக்கவில்லை. பதினைந்து நாட்களில் அங்கேயொரு ஏரியில் குதிக்கப் போனவளை யாரோ ஒரு  நல்ல மனுஷன் தடுத்துக் காப்பாற்றி விமானம் ஏற்றி வைக்க இந்தியா வந்து சேர்ந்திருக்கிறாள். அங்கே என்ன நடந்தது என்பதைத்தான் நவீன் சொல்லி இருந்தார். ஆயிரம் கனவுகளுடன் திருமணம் முடித்து விமானம் ஏறியவள் பதினைந்து நாட்களில் ஏரியில் விழப் போனாள் என்றால் வீரியத்தை கற்பனை செய்து கொள்ளலாம். இப்போதைக்கு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எப்பொழுதாவது நவீன் அனுமதித்தால் அதை உங்களுக்குச் சொல்கிறேன். 

'கவுசிக்கு அப்புறம்தான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்துச்சு' என்றார் நவீன். 

'ரெண்டு வருஷம் வரைக்கும் அங்க என்ன நடந்துச்சுன்னு அவ யார்கிட்டயும் சொல்லல'. அவள் இதையெல்லாம் சொல்லுகிற பெண் இல்லை. வலி தமக்குள்ளாகவே இருக்கட்டும் என நினைத்திருக்கக் கூடும்.  'என்கிட்ட எதையும் கேக்காதீங்க' என வீட்டில் சொல்லிவிடடாளாம். வேலை ஒன்றைத் தேடிக் கொண்டு  அதில் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். இரண்டு வருடங்களுக்குப் பிறகாக நவீன் வீட்டிலிருந்து அணுகி இருக்கிறார்கள். 

'அவங்க அம்மா அப்பாவுக்கு சம்மதம்தான். ஆனா அவ சம்மதிக்கலை...இப்படியே இருந்துக்கிறேன்னு சொல்லிட்டா' . நவீன் இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது அவர் பக்குவப்பட்ட மனிதராகத் தெரிந்தார். ஒரு பெண்ணை அவளது உணர்வுகளைச் சிதைக்காமல் எதிர்கொள்ளும் ஆண்கள் அரிது. ஆண்கள் என்ன ஆண்கள்? பெண்களே கூட அப்படி இன்னொரு பெண்ணை அணுகுவதில்லை. 

'நான் உங்க கூட பேசணும்' என்று அவர் அனுமதி கேட்ட போது சலனமில்லாமல் தலையை ஆட்டியிருக்கிறாள். அழுது நீர் வற்றிக் காய்ந்து கிடந்த மண் அவள். 

'உனக்கு வாழ்க்கை கொடுக்கறதா சொல்லிட்டு நான் வரல...உம்மேல சிம்பதியும் இல்ல...'

'ம்ம்ம்'

'யாருக்குத்தான் பிரச்சினை இல்ல? இதை இவன் தாங்குவான்னு  எங்கேயோ எழுதி இருக்கு...உன்னால தாங்க முடிஞ்சு இருக்குல்ல' 

அவள் எதுவும் பேசவில்லை.

'எங்க அம்மா அப்பாவுக்கும் சம்மதம்தான். நீ யோசிச்சு முடிவு சொல்லு'. 
   
                                                                        ***

நவீன்-கவுசிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்பொழுது இரண்டாவதாகப் பையன். முதல் குழந்தை பிறந்த அதே மருத்துவமனையில்தான் இரண்டாம் பிரசவத்தையும் பார்த்தார்கள். 'சென்டிமெண்டா இருக்கட்டும்' என கவுசி சொன்னாளாம். மருத்துவமனை அதேதான் என்றாலும் மருத்துவர்கள் மாறிவிட்டார்கள். கோயமுத்தூரில் மருத்துவமனைகள் கார்பொரேட்மயமாகி வெகு காலமாகிவிட்டது. அவைகளுக்கிடையில் இப்பொழுதெல்லாம் கடும் போட்டி. ஒரு பெரு மருத்துவமனையின் நிர்வாகம் கவுசி பிரசவம் பார்த்த மருத்துவமனையை விலைக்கு வாங்கி பெயர்ப்பலகையை மாற்றி மருத்துவர்களையும் மாற்றிவிட்டது.

'நான் நல்லா இருக்கேன். கொஞ்சம் வலி இருக்கு..நீங்க வர்றதுக்குள்ள ஆபரேஷன் பண்ணிடுவாங்கன்னு நினைக்கறேன். குட்டிப்பையனோ, குட்டிப் பொண்ணோ...உங்களுக்காக காத்திருக்கிறோம். சீக்கிரம் வந்து சேருங்க' என்று கவுசி சொன்னவுடன் நவீன் கிளம்பி பேருந்து ஏறியிருக்கிறார். பிரசவத்துக்காக குறிக்கப்பட்டிருந்த நாளை விடவும் ஒரு வாரம் முன்பாகவே வலி வந்துவிட்டது. 

சமீபமாக நவீனுக்கு மைசூரில் பணி. மலைப் பாதையில் பேருந்து மெல்ல இறங்கி கொண்டிருந்தது. 'பையன் பொறந்து இருக்கான் மாப்பிள்ளை' என்று திம்பம் தாண்டுவதற்குள் மாமனார் அழைத்துச் சொன்னார். படபடப்பு தணிந்து குளிர் கற்று நவீனின் முகத்தில் சிலுசிலுத்தது.

கவுசியை அறுவை அரங்கிலிருந்து வெளியே அழைத்து வந்தார்கள். 

நவீனை அழைத்துப் பேசினாள். 'சத்தி தாண்டிடீங்களா? சரி வாங்க'. அவளது குரலில் களைப்பு இருந்தது. அரை மயக்கத்தில் பேசினாள். 

கவுசியின் அம்மாவுக்குத்தான் என்னவோ வித்தியாசமாகப் பட்டது. 'என்னங்க பொண்ணு வெளுத்து இருக்கா' - அவரது குரலில் பதற்றம். கவுசியின் விரல்கள் கறுத்திருந்தன. அறுவையின் போது ரத்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இயல்பாக ஏற்படக் கூடிய இழப்புதான். ஆனால் அது நிற்கவே இல்லை. கவுசியின் முகம் வெளுக்க வெளுக்க மருத்துவமனை பதறத் தொடங்கியது.

அறுவை அரங்குக்குள் விவாதித்தார்கள். 'பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிடலாம்' என்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் சொல்லவும் அவசர ஊர்தி தயாரானது.

'நான் அவர் கூட பேசணும்' என்றாள் கவுசி.

'ஒன்னும் பிரச்சினை இல்லைங்க....நான் நல்லா இருக்கேன்...ஐசியுவுக்கு கொண்டு போறாங்க..நீங்க வந்துடுங்க'

'இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன் கவுசி..தைரியமா இரு' என்று நவீன் சொன்ன போது இருவருக்குமே கண்கள் கசிந்தது.

'நம்ம பையனைக் காட்டினாங்க...அப்படியே உங்கள மாதிரி இருக்கான்' இதைச் சொன்ன போது அவளது உதடுகள் உலர்ந்திருந்தன.

அவசர ஊர்தி விரைந்தது. 

                                                                    ***

நவீன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். கண்கள் வீங்கி இருந்தன.

'ஆயிரத்தில் ஒன்னு இப்படி ஏமாறும்ன்னு சொல்லுறாங்க..அந்த ஒன்னு கவுசி'. என்னிடம் ஆறுதல் சொல்ல சொற்கள் எதுவுமில்லை. அவளது முதல் திருமணம் குறித்து முன்பு நவீன் சொன்னதெல்லாம் நினைவில் வந்தன. 

'குழந்தையை இன்னும் ஆஸ்பத்திரியில்தான் வெச்சு இருக்காங்க...' என்றார். பால் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அங்கே செய்திருந்தார்கள். 

'இதை இவன் தாங்குவான்னு  எங்கேயோ எழுதி இருக்கு. இல்லீங்களா?' என்றார். தன்னைச் சொல்கிறாரா தமது குழந்தையைச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தேன்.

மரண வீட்டின் ஓலம் மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. கவுசியின் முதல் குழந்தை எதையும் உணராமல் வெறுமனே அழுது கொண்டிருந்தது.

உலக வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை ஏதோ அடித்து நொறுக்கிக் கொண்டிருப்பது போல இருந்தது. இந்தக் கதையை உங்களிடம் சொல்வது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. அடுத்த வாரம் உங்களை வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

இருள் மெல்லக் கவ்விக் கொண்டிருந்தது. அவள் முகம் தாங்கிய பதாகை ஒன்று காற்றில் அசைந்து கொண்டிருந்தது.

(உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் புனைவாக்கப்பட்டது.)

Feb 24, 2015

பச்சைக் காதலன்

ராமு தாத்தாவுக்கு உடம்பு சரியில்லையாம். எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார். வயதாகிவிட்டது. சொன்னாலும் கேட்பதில்லை. மங்களூரில் மழைக் காலம். வெளியில் சுற்றி இருக்கிறார். உடல் தாங்கவில்லை. சளியும் காய்ச்சலும் தொடங்கி இப்பொழுது வாட்டிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. வழக்கமாக இப்படியெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பமாட்டார். அவரே சமாளித்துக் கொள்கிற மனிதர்தான். இன்றைக்கு அனுப்பியிருக்கிறார். ரொம்பவும் முடியவில்லை போலிருக்கிறது. மனசு கேட்கவில்லை. ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்றிருக்கிறது. மங்களூர் செல்வது பிரச்சினையில்லை. ஆனால் அலுவலகத்தில் விடுப்பு கேட்க வேண்டும். 

பாவம். இந்நேரம் தனியாக தவித்துக் கொண்டிருப்பார். தனிக்கட்டை. ராமு தாத்தாவுக்கு வயது எழுபதைத் தாண்டியிருக்கும். சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஆளைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ‘உங்களுக்கு எவ்வளவு வயசு?’ என்று கேட்டிருக்கிறேன். ‘ஏன் பொண்ணு பார்க்க போறியா?’ என்று கேட்டு வாயை அடைத்துவிட்டார். மனைவி இல்லை. குடும்பம் இல்லை. சொந்த பந்தம் எதுவும் அருகில் இல்லை. 

இப்பொழுதெல்லாம் விடுப்பு கேட்டால் ஏதாவது காரணத்தைச் சொல்லி அலுவலகத்தில் பிரச்சினை செய்கிறார்கள். சில காலமாக என்.ஜி.ஓ ஒன்றுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அது அவர்களை உறுத்துகிறது. அலுவலக வேலைகளில் கோட்டைவிட்டுவிடுவேன் என்று மேனேஜர் நினைக்கிறார். ஆனால் அதை நேரடியாகச் சொல்லாமல் வெவ்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த என்.ஜி.ஓவில் நானாகச் சேரவில்லை. சீமாதான் சேர்த்துவிட்டாள். சீமா விஸ்வநாத். மைசூர் பெண். அம்சமான பெண் என்ற வர்ணிப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு எப்படித் தவிர்க்க முடியும்? இதைச் சாக்காக வைத்துக் கொண்டு அடிக்கடி அவளோடு பேசலாம் என்றுதான் சேர்ந்திருந்தேன். அவள் வேறொரு நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாள் என்றாலும் நாங்கள் ஒரே அபார்ட்மெண்ட். அவள் முதல் தளத்தில் இருக்கிறாள். ப்ளாட் நெம்பர் 103. நண்பர்களோடு நான் மூன்றாவது தளத்தில் இருக்கிறேன். 

அப்படித்தான் ராமு தாத்தாவும் அறிமுகம். அப்படித்தான் என்றால் அந்த என்.ஜி.ஓ வழியாக. அந்த ஞாயிற்றுக்கிழமையன்று கப்பன் பூங்கா வரச் சொல்லியிருந்தார்கள். ஏழு மணிக்கெல்லாம் நானும் சீமாவும் கிளம்பிவிட்டோம். ‘மரங்களைக் கட்டிப்பிடிப்போம்’ என்று அந்த நிகழ்வுக்கு பெயர். மரங்கள் நம் நண்பர்கள் என்ற விழிப்புணர்வை உருவாக்குவதற்காக நடத்துவார்கள். அன்றைய தினம் பூங்காவுக்கு வருகிறவர்கள் மரங்களைக் கட்டிப்பிடிக்க வேண்டும். சீமா கத்தரிப்பூ நிற பனியனும் ஜீன்ஸூம் அணிந்திருந்தாள். ‘பைக்கிலேயே வந்துவிடட்டுமா?’ என்று அவள் கேட்டபோது நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன என்று சொன்னால் க்ளிஷேவாகத்தான் இருக்கும். ஆனால் அப்படித்தான் இருந்தது. அவளுடைய அமெரிக்க உச்சரிப்பிலான ஆங்கிலத்தோடு கொஞ்சம் மாரடிக்க வேண்டியிருக்கும் என்பதுதான் ஒரே பிரச்சினை. ஆனால் சமாளித்துக் கொள்ளலாம்.

பூங்காவில் சீமாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களைச் சந்தித்தவுடன் அவள் என்னை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அது பரவாயில்லை. என்னோடு வண்டியில் வந்தவரைக்கும் போதும் என்று நினைத்துக் கொண்டேன். அதுவே ஆயிரத்தெட்டு பொன் பெறும். அன்றைய தினம் ராமு தாத்தாவும் அங்கு வந்திருந்தார். நெற்றி சுருங்கியிருந்தது. சற்றே கூன் விழுந்த முதுகு. இன்னமும் ஊன்றுகோல் வைத்துக் கொள்ளவில்லை- அருகில் தடி எதுவும் கண்ணில்படவில்லை. தலையும் வெளுத்துவிட்டது. கசங்கிய சட்டையும் பழைய பேண்ட்டும் அணிந்திருந்த அவர் அருகிலேயே ஒரு துணிப்பையும் கிடந்தது. கிடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மீது எந்த கவனமும் இல்லாமல் மரங்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இதற்கெல்லாம் அசாத்திய துணிச்சல் வேண்டும். இந்த ஊரில் தினமும் ஏதாவது தில்லாலங்கடி வேலைகளை கேள்விப்பட வேண்டியிருக்கிறது. ஏடிஎம்மில் ஒரு பெண்ணை வெட்டிவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு போன செய்தியை நீங்கள் வாசித்திருக்கக் கூடும். காலை எட்டரை மணிக்கு அந்தச் சம்பவம் நடந்தது. வெளியில் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய எந்த பயமுமில்லாமல் ஷட்டரை மூடிவிட்டு வெட்டியிருக்கிறான். வெறும் இரண்டாயிரத்து சொச்ச ரூபாய்க்காக ஒரு கொலை. அப்பேற்பட்ட ஊரில் இந்த மனிதன் ஏதோவொரு தைரியத்தில் பையைக் கீழே போட்டுவிட்டு அமர்ந்திருக்கிறார்.

சீமா தனது நண்பர்களோடு விளையாடத் தொடங்கியிருந்தாள். மஞ்சள் நிற சட்டையணிந்திருந்த பெங்காலிக்காரன் - அவன் பெயர் செளனக். முன்பொருமுறை அவனை அறிமுகப்படுத்தியிருக்கிறாள், அவளிடம் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வான். சென்ற முறை அவன் பேண்ட்டை மிகக் கீழாக இறங்கி அணிந்திருந்தான். சீமா அதனை விளையாட்டாகச் சுட்டிக்காட்டிய போது ‘exposing is a status symbol' என்றான். பதிலுக்கு சீமா இரட்டை அர்த்தச் சொல் ஒன்றை உதிர்த்தாள். அதைவிட வீரியமான ஒரு சொல்லை அவன் பிரயோகிக்க இருவரும் சிரித்துக் கொண்டார்கள். சுற்றியிருந்தவர்களும் சேர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து செளனக் இருந்தால் அந்த இடத்திலிருந்து நான் ஒதுங்கிக் கொள்வேன். பொஸஸிவ்னெஸ் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் பைசா பிரையோஜனமில்லாத பொஸஸிவ்னெஸ். அவளுக்கு என் மீது எந்த ப்ரியமும் இல்லை. எனக்கே அது தெரியும். ஆனாலும் ஒரு ஆசை இருக்கும் அல்லவா? அப்படியொரு ஆசை. களங்கமில்லாமல்.

அன்றும் செளனக் இருந்தான். அதனால் அப்பொழுதும் ஒதுங்கிக் கொண்டேன். தாத்தாவின் பையை அவர் அருகில் நகர்த்தி வைத்துவிட்டு அமர்ந்து கொண்டேன். பார்த்துச் சிரித்தார். சிரித்தவர் கீழே குனிந்து பொறுக்கத் துவங்கினார். ச்சே...பையை நகர்த்திய போது கீழே விழுந்திருக்கும் போல. என் தவறுதான். பையை நகர்த்தும் போது கவனிக்கவில்லை. மன்னிப்புக் கோரிவிட்டு அவரோடு சேர்ந்து பொறுக்கத் துவங்கினேன். அத்தனையும் மண் உருண்டைகள். அந்தப் பை முழுக்கவே அவைதான் இருந்தன. எண்ணிப்பார்த்தால் ஆயிரக்கணக்கில் தேறும். ஒருவேளை பைத்தியமாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. முக்கால் இஞ்ச் தள்ளி அமர்ந்து கொண்டேன். அவர் மீண்டும் ஒரு முறை சிரித்தபோது எனக்கு சிரிப்பு வரவில்லை. அவ்வளவு எச்சரிக்கையுணர்வு என்னிடம்.

அன்றைய தினம் ராமு தாத்தாவை நிகழ்வில் கெளரவிக்க அழைத்த போது ‘பையை பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிட்டு மேடைக்குச் சென்றார். இந்தக் கிழவனை எதற்காக அழைக்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. ஒரு நினைவுப்பரிசைக் கொடுத்து அவரிடம் ஒரு காகித உறையைக் கொடுத்தார்கள். அதில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலை இருப்பதாகவும் அறிவித்தார்கள். கூச்சப்பட்டுக் கொண்டே வாங்கிக் கொண்டார். அவரை பேச அழைத்தார்கள். அவர் பேசுவதற்கு முன்பாக அவரைப் பற்றி தொகுப்பாளினி கொடுத்த அறிமுகம் மூச்சடைக்கச் செய்திருந்தது.

மாலையிலும் சீமா என்னோடு பைக்கிலேயேதான் வந்தாள். இந்த முறை பட்டாம்பூச்சி எதுவும் பறக்கவில்லை. அதற்கு காரணமிருக்கிறது- ராமு தாத்தாவைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். சீமா என்னனென்னவோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். எதற்குமே பதில் சொன்னதாக ஞாபகமில்லை. அடுத்த நாள் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு மங்களூர் கிளம்பியிருந்தேன். விடுப்பு கேட்பதற்காக பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னதாக ஞாபகம். 

ராமு தாத்தாவிடம் முகவரி வாங்கியிருந்தேன். அரைகுறையாக எனக்கு கன்னடம் கொத்து என்பதால் ஊரைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. அது மங்களூருக்கும் உடுப்பிக்கும் இடையிலான கிராமம். நாய்கள் நசுங்கிக் கிடந்த தேசிய நெடுஞ்சாலையிலிருந்து உள்வாங்கி மூங்கில் மரங்களால் சூழ்ந்து கிடந்தது. ராமு தாத்தாவின் வீட்டை அங்கு எல்லோருக்குமே தெரிந்திருந்தது. ஆனால் தாத்தா வீட்டில் இல்லை. 

‘உடுப்பி போயிட்டாரே’ அருகிலிருந்த டீக்கடை மாஸ்டர் முகத்தையே பார்க்காமல் சொன்னார்.  

நேற்றிரவுதான் பெங்களூரிலிருந்து வந்திருக்கிறார். இன்று காலையிலேயே கிளம்பி உடுப்பி சென்றிருக்கிறார். டீக்கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. தாத்தாவுக்கு ஊருக்குள் மரியாதை அதிகம் போலத் தெரிந்தது.  ‘வாழ்நாள் முழுக்க மரங்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார்....நல்ல மனுஷன்’ என்றார்கள்.

‘தாத்தாவுக்கு திருமணம் ஆகியிருந்தது. டீச்சர் பொம்பளை. இந்த ஆள் வீட்டிலேயே தங்குவதில்லை என்று பிரிந்துவிட்டார்’

‘தாத்தா கர்நாடக அரசில் பணிபுரிந்தவர். பச்சை இங்க்கில் கையெழுத்து போடும் க்ரேடு. இருபத்தேழு வயதிலேயே மரம் வைப்பதில் நாட்டம் வந்துவிட்டது. வாங்குகிற சம்பளம் எல்லாம் மரங்களுக்குத்தான். இவர் வைத்து வளர்த்துவிட்டு வந்த மரங்களையெல்லாம் அரசாங்கமும் மரம் திருடிகளும் பின்னாலேயே வெட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் தாத்தா சலித்ததில்லை. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பாக வேலையை உதறிவிட்டு இந்த கசங்கிய சட்டை பேண்ட்டுக்கு மாறிவிட்டார். அப்பொழுதிருந்தே இப்படித்தான்’

‘கல்யாணத்துக்கு முன்னாடியே அவருக்கு வேறொரு பெண்ணுடன் காதல் இருந்தது. அந்தப் பெண்ணை ஏதோ கொள்ளை நோய் அள்ளிக் கொண்டது. அவள் நினைவாகவேதான் மரங்களைக் காதலிக்கத் துவங்கினார்’ - ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவரிடமும் தாத்தா பற்றிச் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. 

தாத்தாவுக்கு சொற்பமான பென்ஷன் வந்து கொண்டிருந்தது. அந்த வருமானமும் நாற்று வாங்கவும் குழி தோண்டும் ஆட்களுக்குக் கொடுக்கவும் தண்ணீர் இல்லாத இடங்களில் வண்டியில் வாங்கி ஊற்றுவதற்கும் சரியாகப் போய்விடுகிறது. அப்படியானால் ‘சாப்பாட்டுக்கு என்ன செய்வார்?’ இந்தக் கேள்வி எனக்கும் உங்களுக்கும்தான் முக்கியமான கேள்வி. ராமு தாத்தாவுக்கு அது பிரச்சினையே இல்லை. திருமண மண்டபத்திலும் விஷேச வீடுகளிலும் கை நனைத்துக் கொள்வார். எதுவுமே சிக்காத போது எது கிடைத்தாலும் சரி. அவரைப் பிச்சைக்காரனாகக் கருதிக் கொடுத்தாலும் முகம் சுளித்துக் கொள்ளாதவர். 

தாத்தா வரட்டும் என மாலை வரை சுற்றிக் கொண்டிருந்தேன். உடுப்பியிலிருந்து மாலையில் வந்து சேர்ந்தார். கப்பன் பூங்காவில் சந்தித்ததை நினைவுபடுத்தினேன். வாயெல்லாம் பற்களாக சிரித்தார்.  கண் பார்வை மங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னவர் தடுமாறிக் கொண்டே வந்து சேர்ந்திருக்கிறார். அன்றைய இரவில் தன்னோடு தங்கிக் கொள்ளச் சொன்னபோது எனக்கு இரட்டைச் சந்தோஷம். அந்த வீடு அவருடைய பூர்விகச் சொத்து. அது மட்டும்தான் சொத்து. விடிய விடிய பேசிக் கொண்டிருந்தோம். 

‘ஐயாயிரம் வருஷமா வாழ்ந்து முடிச்ச மரங்கள் இன்னமும் இருக்கு தெரியுமா? கலிபோர்னியால...மெதுசெலான்னு பேரு...ரொம்ப சீக்ரெட்டா வெச்சிருக்காங்க...அதை பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. முடியல...ஆனா அதே கலிபோர்னியால த ப்ரெசிடெண்ட்ன்னு ஒரு மரம் இருக்கு...மூவாயிரத்து இருநூறு வருஷம் ஆச்சு.....நேரில் பார்த்தேன்..அழுதுட்டேன் தம்பி...என் பாட்டிக்கு முப்பாட்டிக்கு முப்பாட்டி. கட்டிப்புடிச்சுட்டு அங்கேயே நின்னுட்டேன்...முட்டாபசங்க..இவனுக அறுபது வயசு வாழுறதே பெரிசு..ஆனா எந்த யோசனையும் இல்லாம அறுத்துத் தள்ளுறாங்க....’பேசிக் கொண்டேயிருந்தார். தொண்டை கமறிவிட்டது.

அதன் பிறகு தாத்தாவும் நானும் நண்பர்களாகி விட்டோம். அவர் பெங்களூர் வரும் போதெல்லாம் என்னோடு தங்கத் துவங்கினார். இப்படியேதான் பேசிக் கொண்டிருப்போம் என்று சொன்னால் அது துல்லியமாக இருக்காது. அவர் பேசிக் கொண்டிருப்பார். நான் கேட்டுக் கொண்டிருப்பேன். ‘சஹாரா பாலைவனத்தில ரொம்ப வருஷமா ஒரேயொரு மரம் மட்டும் இருந்துச்சு...மொத்த பாலைவனத்துக்கும் காவல் தெய்வம் மாதிரி...விட மாட்டாங்களே...1973ல அழிச்சுட்டாங்க...அம்மாவை அழிக்கிற மாதிரி...இல்ல இல்ல... குழந்தையைக் கொல்லுற மாதிரி..இல்லையா?’தாத்தாவுக்கு மரம்தான் எல்லாமும். எதைப் பற்றி பேச்சைத் தொடங்கினாலும் மரத்தில் முடிப்பார். 

இப்பொழுதெல்லாம் சீமாவுடனான தொடர்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. தாத்தாவுடன் பேசுவதற்குத்தான் நிறைய இருக்கின்றன. 

‘ஏன் அரசாங்க வேலையை விட்டீங்க?’ என்றபோது ‘காசு கொடுத்தான்...வாங்கி நாற்பது ஊரில் மரங்களை நட்டேன்’ என்ற தாத்தாவைவிடவும் சீமா சுவாரசியமாகத் தெரியவில்லை. 

அதன்பிறகு எனக்கு வட கர்நாடகத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பாதையும் அத்துப்படியாகியிருந்தது. ஒவ்வொரு ஊராகச் சுற்றினோம். அதுதான் மேனேஜருக்கு உறுத்தத் துவங்கியிருந்தது. இப்படித்தான் கடந்த ஆறு மாதங்களாக திரிந்து கொண்டிருக்கிறோம்- இன்றைய குறுஞ்செய்தி வந்து சேர்ந்த வரைக்கும். அலுவலகத்தில் சொல்லாமலேயே கிளம்பியிருந்தேன். சீமாவும் ஒட்டிக் கொண்டாள். ஆனால் பேருந்தில் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அப்படியே பேசினாலும் தாத்தா பற்றித்தான் பேசிக் கொண்டோம். 

‘எப்படி ஒரு மனுஷன் காலம் பூராவும் இப்படியே இருக்க முடியும்?’ சீமாவின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

எப்படி இருந்திருக்க முடியும்? மரங்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார். பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லை. ஆனால் அதையெல்லாம் அவர் எதிர்பார்க்கவே இல்லை. குழந்தைகளை அழைத்து மரங்களைப் பற்றிய கதைகளைச் சொல்கிறார். மூங்கில் விதைகளை ஈரமண்ணுக்குள் திணித்து அதை காய வைத்து போகிற  இடங்களில் எல்லாம் கொடுக்கிறார். மழைக் காலத்தில் அவற்றை நிலத்தில் போட்டுவிட்டால் போதும். மேலே இருக்கும் மண் கரைந்து மூங்கில் முளைக்கத் துவங்கும். அந்தக் குழந்தைகள்- மரங்களை குழந்தைகள் என்றுதான் சொல்வார்- வளர்வதைப் பார்ப்பதை மட்டுமே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டிருந்தவர். எந்த தனிப்பட்ட அபிலாஷைகளும் இல்லாத அந்த மனிதன் ஒருவிதத்தில் கடவுள்.

மங்களூரை நோக்கிச் சென்ற சாலையெங்கும் தென்மேற்கு பருவமழையின் சாரல் சிலுசிலுத்துக் கொண்டிருந்தது. சீமாவின் அருகாமை எனக்குத் தேவையாக இருந்தது. சீமாவும் இல்லையென்றால் இந்தப் பயணம் இன்னமும் வெறுமையானதாக இருந்திருக்கும். தாத்தாவின் காதல் கதையை யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் எனத் தோன்றியது. அதை ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். நிலவும் நட்சத்திரங்களும் மேகங்களுக்குள் புதைந்து போயிருந்த ஓரிரவில் மொட்டை மாடியில் அமர்ந்தபடி அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 

தாத்தாவுக்கு பதினேழு வயதாகியிருந்த போது மைசூருக்கு படிக்கச் சென்றிருந்தார். அப்பொழுது அது உடையார்களின் சாம்ராஜ்யம். ஹைதர் அலி, திப்புசுல்தானின் பொம்மைகளாக இருந்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். அங்குதான் ராமு தாத்தா அவளைச் சந்தித்திருக்கிறார். பசவம்மா. கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் காதல் பிரவாகமெடுத்திருக்கிறது. அந்தக் காலத்துக் காதல். வெவ்வேறு சாதி. விடுவார்களா? துரத்தியிருக்கிறார்கள். 

உடையார்களின் ஆட்கள்தான் துரத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பசவம்மாவின் அப்பா உடையார்களின் அரண்மனையில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அதனால் அவர்களின் மூர்க்கம் அதிகமாக இருந்தது. இதையெல்லாம் தெரிந்து கொண்ட ராமு தாத்தாவின் மாமா கதறியிருக்கிறார். அவர்தான் பெற்றோர்களை இழந்துவிட்ட ராமு தாத்தாவை படிக்க வைத்தவர். ஆனால் தாத்தா தம் காதலில் உறுதியாக இருந்திருக்கிறார். பசவம்மாவை அழைத்துக் கொண்டு இருவருமாக குதிரைமுக்குக்கு ஓடியிருக்கிறார்கள். அது ஒரு மலைப்பகுதி. குதிரையின் மூக்கு வடிவில் இருக்கும் என்பதால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. அப்பொழுது அந்த மலையில் கால்நடை மேய்ப்பவர்களைத் தவிர யாருமே இல்லை. ஓடிவந்தவர்கள் ஒரு குகையில்தான் தங்கியிருந்தார்களாம். அந்த குகையைச் சுத்தம் செய்யவே பல நாட்கள் ஆனதாகச் சொன்னார். பழங்களும் காய்களும்தான் உணவு. ஆறு மாதங்களுக்குப் பிறகு ஊருக்குள் செல்வதாக திட்டமிட்டிருக்கிறார்கள். கிழமைகள் தெரியாத நாட்கள், நேரம் குறித்த கவலையில்லாத வாழ்க்கை,  பணத்துக்கு அவசியமில்லாத தினங்கள், நம்மை நோக்கிய கேள்விகள் இல்லாத உலகம். இப்படியான அந்த உலகில் நமக்குப் பிடித்த பெண்ணுடனான வாழ்க்கை என்பது சொர்க்கம். இல்லையா? அப்படித்தான் தாத்தாவும் சொன்னார்.

ஆனால் அந்த சொர்க்கத்துக்கு ஆயுள் குறைவு. மூன்று மாதங்கள்தான். அந்த கருப்பு தினத்தின் அதிகாலையில் இருவரும் உறக்கத்திலிருந்து எழுவதற்கு முன்பாகவே ஆட்கள் வந்துவிட்டார்கள். எப்படி மோப்பம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. தங்களை அரண்மனையின் ஆட்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். உங்களைப் போலவேதான் நானும் குதிரையில் வாளேந்திய வீரர்களாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. வெகு இயல்பான மனிதர்கள் நான்கைந்து பேர்கள். நடந்துதான் வந்திருந்தார்களாம். இருவரையும் அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னமும் முழுமையாக விடிந்திருக்கவில்லை. வெளிச்சம் வருவதற்கு இன்னமும் வெகுநேரம் இருந்தது. பசவம்மா ராமு தாத்தாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டார். ‘அங்கே வந்தால் வாழ விடமாட்டார்கள்’ என்று அழத் தொடங்கியிருக்கிறார். தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நின்றவர்கள் அவசரப்படுத்துகிறார்கள். அடுத்த கணத்தில் தாத்தாவை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்குகிறாள். தாத்தாவுக்கு எங்கே போகிறோம் என்பது  கூடத் தெரியவில்லை. சிறுத்தையின் வாலைப் பிடித்துக் கொண்டு அதன் வேகத்துக்கு ஓடுவது போல இருக்கிறது தாத்தாவுக்கு. அரண்மனை ஆட்களும் பின்னாலேயே ஓடி வருகிறார்கள். குதிரை முக்கின் உச்சியை அடைவதற்கும் ராமு தாத்தாவை அரண்மனையின் ஆட்கள் எட்டிப்பிடிப்பதற்கும் சரியாக இருக்கிறது.

இரண்டே வினாடிகள்தான். சப்தமே இல்லை. தாத்தாவின் கைகளை விடுவித்துவிட்டு பசவம்மா எட்டிக் குதித்துவிட்டாள். தாத்தாவின் கண்கள் இருண்டு போகின்றன. என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. மயங்கி விழிக்கும் போது எங்கேயோ கிடக்கிறார். யாருமே இல்லாத வனாந்திரம் அது. வந்தவர்கள் அரண்மனை ஆட்கள்தானா? எதற்காக இங்கே கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் எதுவுமே தெரியவில்லை. யோசிக்கவும் விரும்பவில்லை. குதிரை முக்குக்கு ஓடியிருக்கிறார். தனது எதிர்காலம் இந்த மலையுச்சியிலிருந்து விழுந்து சிதறியதை எண்ணியபடியே தேடியதில் சிதறிய உடல்தான் கிடைத்திருக்கிறது. முகம் சிதைந்து அடையாளமே தெரியவில்லை. அவளது புன்னகை, கன்னத்தோரமாக இருந்த மச்சம் என்று எல்லாவற்றையும் அந்த முகம் தொலைத்திருந்தது. ‘என் குழந்தையை கொன்னுட்டீங்களேடா’என்கிற அவரது அழுகை மட்டும் குதிரைமுக்கில் எதிரொலித்திருக்கிறது. யாருமே பதில் சொல்லாத அழுகை அது. கண்ணீரைத் துடைப்பதற்கு எந்த விரல்களும் நீளாத தருணம் அது. தனித்து அழுது கொண்டிருக்கிறார். தனக்கென யாருமே இல்லாத அந்த உலகத்தில் பறவைகள் கூடடையும் நேரத்தில் அதே இடத்தில் அடக்கம் செய்துவிட்டு மண்மேட்டின் மீது ஒரு விதையை ஊன்றினார். இனி அதுதான் உலகம் என்று தோன்றியிருக்கிறது.  தனது பயணத்தை அப்பொழுது தொடங்கியவர்தான். யாருமே இல்லாத தனிமையில் நிற்காமல் நடந்து கொண்டேயிருக்கிறார். 

தனது கையில் ‘ப’ என்ற கன்னட எழுத்தை பச்சை குத்தியிருப்பார். அந்த ‘ப’ வேறொன்றுமில்லை என் பசவம்மா என்று சொல்லிவிட்டு கண்களை ஊடுருவினார். ‘இங்க யாருமே தனியா இல்ல..யாராவது நம்ம கூடவேதான் இருப்பாங்க..எனக்கு பசவம்மா இருக்கா...எனக்கும் அவளுக்கும் பிறந்த இந்த புள்ளைக இருக்காங்க’ என்று சொல்லியபோது தாத்தாவின் கண்கள் பனித்ததை பார்த்தேன். சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்து தனது அழுகையை மறைக்க முயன்றார். அவருக்கு சங்கடம் தரக் கூடாது என வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

‘அதன் பிறகு வேறு திருமணம் செய்து கொண்டீர்களா?’ எனக் கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவேயில்லை. தாத்தாவின் கதையைச் சொல்லி முடித்த போது சீமாவும் அதே கேள்வியை என்னிடம் கேட்டாள். 

நாங்கள் சென்றிருந்த போது கண்களை மூடிக் கிடந்தார். நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. மரணப்படுக்கை. முகத்தில் ஈயாடிக் கொண்டிருந்தது. சுற்றிலும் நான்கைந்து பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள். தாத்தாவின் உறவினர்கள் போலிருக்கிறது. முகங்களை இறுக்கமாக வைத்திருந்தார்கள். ‘பூர்வீக வீட்டுக்காக காத்திருப்பவர்கள்’என்று முன்பொருமுறை தாத்தா சொன்னது ஞாபகம் வந்தது. காதருகில் சென்று தாத்தா என்றேன். அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை. டீக்கடைக்காரர் அருகில் வந்து தோளில் கை வைத்து அழுத்தினார். தனியே அழைப்பதற்கான சமிக்ஞை அது.

‘இங்கே நிற்க வேண்டாம்’ 

‘ஏன்?’ சீமாவுக்கு அவசரம். கேட்டுவிட்டாள்.

‘இங்க ரிலேட்டிவ்ஸ் சரி இல்லை...நீங்க கிளம்புங்க’

‘அப்படின்னா?’

‘அவங்க சொத்துக்காக நிக்கிறாங்க...உயில் எழுதி ரேகை உருட்டிட்டாங்க...தாத்தா சாகலைன்னா கூட இன்னைக்கு தூக்கிடுவாங்க’ கேட்க அதிர்ச்சியாக இருந்தது. 

‘அப்படி கூட செய்ய முடியுமா? அந்த மனுஷன் வாழ்நாள் பூராவும் மரம் மரம்ன்னு அலைஞ்சாரு...ஒருவேளை நல்ல சாப்பாடு சாப்பிட்டே கூட பல வருஷம் ஆகியிருக்கு...சாகும் போதாவது நல்லபடியா சாகட்டும்..நாங்க போக முடியாது..இங்கேயே இருக்கோம்...வேணும்ன்னா போலீஸைக் கூப்பிடலாம்’- எங்கள் பதில் டீக்கடைக்காரருக்கு திருப்தியளிக்கவில்லை.

‘இல்ல அவங்க லோக்கல்ஸ்...தாத்தாவுக்காக நீங்க நிக்கிறது சரிதான்..ஆனா பிரச்சினை பெரிசாகும் போலிருக்கு...காலாகாலத்துக்கும் தாத்தாவைவிட இந்த சண்டைதான் உங்க மனசுலேயே நிக்கும்’ அந்த பதில் எங்களை சமாதானப்படுத்தவில்லை. வீட்டைவிட்டு வெளியே செல்லப் போவதில்லை என்று முடிவு செய்து வைத்திருந்தோம். அந்த மனிதனுக்கு எங்களால் முடிந்த ஒரே உதவி அதுதான். எங்கள் முடிவு அங்கிருந்தவர்களை சலனப்படுத்தியிருக்கக் கூடும். இறுக்கம் கூடியிருந்தது.

‘நீங்க கிளம்புங்க’ என்றார் அந்த கூட்டத்திலிருந்த நீலச்சட்டைக்காரர்.

அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் இந்த முறை தாத்தாவின் அருகில் சென்று அவரது வலது கரத்தை அழுந்தப் பிடித்தேன். சீமாவும் அருகில் அமர்ந்து கொண்டாள். இருவரும் ‘ப’ வைத் தேடினோம். மூடிய கண்களுக்குள் விழிகள் அசைந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு ஆன்மாவைத் தேடித் தேடி தன் காலங்களை தீர்த்த விழிகள் அவை. அந்த விழிகளைப் பொறுத்தவரையில் மரங்கள் மட்டும்தான் உயிர். பிற அனைத்துமே-மனிதன் உட்பட- மரங்கள்தான். மரங்களை புரிந்து கொள்ளும் மனிதனுக்கு மனிதர்களை புரிந்து கொள்ள முடியாதா என்ன? மூடிய விழிகளிலிருந்து நீர் கசிந்தது. ஒரு துளிதான். அடுத்த கணமே பெருமூச்சொன்று எழும்பி அடங்கியது. அதற்கு மேல் அங்கு ஒன்றுமில்லை. வெளியில் மழைக்காற்று வீசிக் கொண்டிருந்தது. தாத்தாவின் பெருமூச்சு மூங்கில் மரங்களுக்குள் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தது. சீமாவும் நானும் மழையிலேயே பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் துவங்கியிருந்தோம்.

Feb 3, 2015

சிடுக்கு

"என்னாச்சுங்க?"  தீபிகா இரண்டு முறை கேட்டாள். 

செல்போனின் அடுத்த முனையில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அருகிலிருந்து பார்த்திருந்தால் அவளது கேள்வியிலிருந்த பதற்றத்தை உணர்ந்திருக்க முடியும். அருகில் யாரும் இல்லை. இணைப்பைத் துண்டித்த போது அவளது விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. 

அது மிகச் சிறிய வீடுதான். சிறிய வரவேற்பறை, கட்டிலைத் தவிர வேறு எதற்கும் இடமில்லாத படுக்கையறையும் அதனுடன் சேர்த்த ஒரு சமையலறை. அவ்வளவுதான். எட்டு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் குழந்தை வந்தனா மட்டும் வரவேற்பறையில் விளையாடிக் கொண்டிருந்தாள். தீபிகாவுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. சித்தார்த்துடனான திருமணத்திற்கு பிறகு தீபிகாவையும் இந்த நகரம் இழுத்துக் கொண்டது. இன்றிலிருந்து கணக்குப் போட்டால் நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்ய இன்னமும் இரண்டு மாதங்கள் பாக்கியிருக்கின்றன. அவன் சாப்ட்வேர் மாப்பிள்ளை. சினிமாவில் காட்டப்படுகிற சாப்ட்வேர்காரன் இல்லை. வாங்குகிற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை வாடகையாகக் கொடுத்துவிட்டு மிச்சமிருப்பதை குழந்தைக்கும், லூயி பிலிப் சட்டைக்கும், வுட்லேண்ட்ஸ் ஷூவுக்குமாக செலவழித்துக் கொண்டு வெளியில் ராஜாவும் உள்ளே ஓட்டாண்டியாகவும் திரியும் வகையறா. இருந்தாலும் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். மாதத்தில் இரண்டு சினிமா உண்டு. தமிழ் படங்கள்தான். எப்பவாவது இலியானாவுக்காகவோ அல்லது மகேஷ்பாபுவுக்காகவோ தெலுங்குப் படத்திற்குச் செல்வார்கள். தீபிகாவுக்கு மகேஷ்பாபுவைப் பிடிக்கும். மாதத்தில் ஒரு ரெஸ்டாரண்ட் செலவு உண்டு. அது போக எப்பவாவது சிமோகாவோ கூர்க்கோ சென்றுவருவார்கள். கடைசியாகச் சென்றிருந்தபோது கூர்க்கில் கடும் மழை. வந்தனாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் கடந்த ஆறேழு மாதங்களாக வெளியூருக்குச் செல்லவில்லை என்பதைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை.

அவ்வப்போது சிறு சச்சரவுகளும் உண்டு. யார் வீட்டில்தான் இல்லை? வீட்டுக்கு வீடு வாசப்படி. அதுவும் அலுவலகத்தில் இருந்து சித்தார்த் வரும் போது வீட்டில் விளக்கு எரியவில்லை என்றாலோ தீபிகா தாலியைக் கழட்டி வைத்திருந்தாலோ டென்ஷன் ஆகிவிடுவான். இதெல்லாம் ஒரு பிரச்சினையா? பிரச்சினையில்லைதான். அவனுக்கும் அது தெரியும். ஆனால் பசியோடு இருப்பான் அல்லவா? கண்ணை மறைத்துவிடும். பொங்கல் வைத்துவிடுவான். அந்தச் சமயங்களில் தீபிகாவும் அமைதியாக இருப்பதில்லை. எதையாவது பேசிவிடுகிறாள். போன சண்டையின் போது ‘என் கழுத்து...எனக்கில்லாத உரிமையா? நான் தாலி போட்டிருந்தா என்ன போடாட்டி என்ன’ என்று கத்திவிட்டாள். உச்சந்தலையில் நான்கு முடி நட்டுக் கொள்ள சித்துவும் எகிறி தீர்த்துவிட்டான். இப்படி ஆளாளுக்கு பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்க வந்தனா பெரும்பாலும் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் விளையாடிக் கொண்டிருப்பாள். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு புரியாத சமாச்சாரம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? அவளுக்கு அரைகுறையாகப் புரிந்து அழத் துவங்கும்போது அடங்கிக் கொள்வார்கள். 

தீபிகாவின் அப்பாவுக்கு கஷ்டமான ஜீவனம்தான். சேலம் பேருந்து நிலையத்தில் இரவில் பத்து மணிக்கு மேலாக ஆம்னி பேருந்துகளுக்கான டிக்கெட் விற்பார். பயணிகள் எங்கேயோ பார்த்தபடி நின்று கொண்டிருக்கும் போது ‘புதுக்கோட்டையா சார்? ஏசி ஸ்லீப்பர் இருக்கு’ என்றோ ‘கோயமுத்தூர் நான்-ஸ்டாப் ஏசி சார்’ என்றோ சொல்லி ஆளைப் பிடித்துவிடுவார். ஒரு டிக்கெட்டுக்கு இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயம். ஒவ்வொரு நாளும் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி வரைக்கும் அலைய வேண்டும். அந்த ஜீவனத்திலும் தீபிகாவை பொறியியல் படிக்க வைத்திருந்தார். இப்பொழுது பொறியியல் படிப்பது பெரிய விஷயம் இல்லைதான். ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் நான் இஞ்சினியர் நீ சுக்குனியர் அவன் மிளகுனியர் என்று திரிகிறார்கள். ஆனால் செலவு செய்ய வேண்டும். லட்சக்கணக்கில் கட்ட வேண்டும். தீபிகாவின் அப்பா கடன் வாங்கிக் கட்டினார். வங்கிக் கடன். 

தனது தொழிலின் காரணமாகவோ என்னவோ முகத்தை வைத்தே ஆளை எடைப் போட்டுவிடுவார். அவர் கணிப்பது அவ்வளவு துல்லியமாக இருக்கும். தீபிகாவை பெண் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு சித்தார்த்தைப் பற்றி அவர் சொன்னது தீபிகாவுக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. ‘பையனைப் பார்த்தால் நல்ல மாதிரியாத்தான் தெரியுதும்மா...கொஞ்சம் கோபம் வரும் போல’ என்றார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். அன்றைக்கு கோபம் என்பது அவளுக்கு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள். நம்பினாள் என்று என்று சொன்னால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். அதன்பிறகு ஒவ்வொரு முறையும் சண்டை வரும் போது அப்பா சொன்னதுதான் ஞாபகத்துக்கு வரும். கோபம் என்றால் சாதாரணக் கோபம் இல்லை. கண்டபடி திட்டிவிடுவான். தீபிகாவை நோக்கி கை நீட்டியதில்லை. ஆனால் தனது கையை கிழித்திருக்கிறான். ஓங்கி நிலத்தில் குத்தி வெகுநாட்களுக்கு சுண்டுவிரலில் கட்டோடு சுற்றினான். பல கெட்டவார்த்தைகளும் வந்துவிழும். ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தவள் போகப் போக பழகிக் கொண்டாள். ‘திட்டுங்க...நல்லா திட்டுங்க’ என்று அவனை வெறுப்பேற்றி பழகிக் கொண்டாள்.

செல்போன் அழைப்பு வந்த அடுத்த நிமிடத்தில் ராதிகாவின் வீட்டுக்குத்தான் ஓடினாள்.  வீட்டில் ராதிகா மட்டும்தான் இருந்தாள். அவர்கள் அதே அபார்ட்மெண்ட்டின் இரண்டாவது தளத்தில் இருக்கிறார்கள். ராதிகாவும் அவளது கணவனும் வேலைக்குச் செல்கிறார்கள். இருவருமே ஐடி துறை. இன்னமும் ராதிகாவின் கணவன் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. எப்பவாவது குழந்தையைப் பற்றிக் கேட்டால் ‘இன்னும் டைம் இருக்கு..அவர் எப்போ காண்டம் வாங்கிட்டு வர மறந்துட்டு வர்றாரோ அப்போ பார்த்துக்கலாம்’ என்று கண்ணடிப்பாள். கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு தீபிகா இப்படி வெளிப்படையாக யாருடனும் பேசுவதில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைத்ததில்லை. ராதிகாவுடன் மட்டும் அவ்வப்பொழுது பேசிக் கொள்கிறாள்.

சித்தார்த்தின் ஃபோனிலிருந்துதான் யாரோ தீபிகாவை அழைத்திருந்தார்கள். அவனுடைய செல்போனில் கடைசி அழைப்பு தீபிகாவுடையதுதான். அதனால் ஃபோனை எடுத்தவர்கள் இவளைத்தான் அழைத்திருந்தார்கள். இவளது பெயரை குட்டி என்று சேமித்து வைத்திருந்தான். 

‘இந்த ஃபோன் வைத்திருப்பவரை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கன்னடத்தில் கேட்டது அந்த ஆண் குரல்.

‘கொத்து’ என்றாள். அவளுக்கு கன்னடத்தில் தெரிந்த மூன்றே முக்கால் வார்த்தைகளில் அதுவும் ஒன்று.

அவர் கன்னடத்தில் சொல்வதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. எலெக்ட்ரானிக் சிட்டி பாலத்தின் கீழாக விபத்து நடந்திருக்கிறது. தலையில் அடிபட்டிருக்கிறது. விழுந்த வேகத்தில் ஞாபகம் தவறிவிட்டது. இப்பொழுது 108ல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தகவலைத்தான் மறுமுனையில் இருந்தவர் சொன்னார். தீபிகாவுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதறியடித்து ஓடி வந்தவள் இம்மிபிசகாமல் ராதிகாவிடம் ஒப்பித்தாள். ராதிகாவுக்கு வண்டி ஓட்டத் தெரியும். அலுவலகத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில்தான் செல்வாள். குழந்தையை என்ன செய்வது? நகரங்களில் இது பெரிய பிரச்சினை. ஆத்திர அவசரத்துக்குக் கூட யாரிடமும் விட்டுச் செல்ல முடிவதில்லை. எடுத்து மடியில் அமர வைத்துக் கொண்டாள். ராதிகா அருகில் இருந்தது எவ்வளவோ பரவாயில்லை. அவளும் இல்லையென்றால் என்ன செய்திருப்பாள்? வீட்டை பூட்டியதாகக் கூட ஞாபகம் இல்லை. அது தொலையட்டும். சித்தார்த்தைவிடவுமா வீடும் அந்தச் சாமான்களும் முக்கியம்?

தீபிகாவுக்கு என்னென்னவோ மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அத்தனையும் துண்டிக்கப்பட்ட காட்சிகளாகத் தெரிந்தன. ராதிகாவும் பதறியிருந்தாள். இன்று காலையில் வண்டியை எடுக்கும் போது கூட மெலிதாக புன்னகைத்துச் சென்றிருந்தான். அந்த அபார்ட்மெண்டிலேயே இவர்கள் மட்டும்தான் தமிழர்கள். அந்த நேசம்தான். 

கூட்லு கேட் சிக்னலில் வண்டிகளின் நெரிசலில் சிக்கிக் கொண்டார்கள். சித்தார்த்தின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தாள். எந்த மருத்துவமனைக்குச் செல்கிறார்கள் என்று தீபிகாவிடம் ராதிகா கேட்ட போதுதான் அந்த விவரத்தை கேட்காமல் விட்டிருந்தது புரிந்தது. சித்தார்த்தின் எண்ணைத் திரும்ப அழைத்தபோது யாரும் எடுக்கவேயில்லை. நேராக ப்ளாஸம் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று ராதிகாவே சொன்னாள். எலெக்ட்ரானிக் சிட்டியில் நிகழும் விபத்துகளில் சிக்குபவர்கள் பெரும்பாலானோரை அங்குதான் எடுத்து வருவார்கள். ராதிகா அலுவலகம் முடித்து வரும் போது கவனித்திருக்கிறாள்- அந்த மருத்துவமனை இருக்கும் சாலையிலேயே ஆம்புலன்ஸை நிறுத்தி அடிபட்டவர்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள். அந்த சில நிமிடங்களில் ட்ராபிக் ஸ்தம்பிக்கும்.

இன்னமும் சித்தார்த்தின் அம்மாவுக்கும் தீபிகாவின் அப்பாவுக்கும் தகவல் சொல்லவில்லை. என்ன பிரச்சினையென்றே தெரியாமல் அவர்களையும் குழப்ப வேண்டியதில்லை என நினைத்திருந்தாள். ஏதாவது பெரிய பிரச்சினை என்றால் செலவுக்கு என்ன செய்வது என்பதுதான் பெரிய யோசனையாக இருந்தது. தாலியை விற்றுவிடலாம். அவளிடமிருக்கும் அதிகபட்ச ஆபரணம் அதுதான். வளையல்களை அடமானம் வைத்துத்தான் எல்.ஈ.டி டிவி வாங்கியிருந்தார்கள். அவனது நிறுவனத்தில் Mediclaim மூன்று லட்ச ரூபாய் வரைக்கும் கிடைக்கும். மனது கண்டதையும் யோசித்துக் கொண்டிருந்தது. திடீரென்று ‘ச்சே பணமா முக்கியம்?’ என்று அவளை அவளே உள்ளுக்குள் திட்டிக் கொண்டாள். முக்கியமில்லைதான். ஆனால் அதுதானே நிதர்சனம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பணத்தை கட்டச் சொன்னால் வேறு என்ன வழியிருக்கிறது? ஒன்றுமில்லை. சித்தார்த்துக்கும் அப்பா இல்லை. இவளது அப்பாவையும் கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும் அந்த மனுஷன் என்னதான் செய்வார்? பாவம். 

ஜி.நாகராஜனின் கதை திடீரென்று ஞாபகத்துக்கு வந்தது. அதில் கணவன் நோய்வாய்ப்பட்டுக் கிடப்பான். கிட்டத்தட்ட மரணப்படுக்கை. அவன் ஏதோ தின்பதற்கு வேண்டுமென ஆசையாகக் கேட்பான். மனைவியின் கையில் காசு இருக்காது. எவனோ ஒருவனுடன் ஒதுங்கி காசு வாங்கிக் கொண்டு வருவாள். இதெல்லாம் ஏன் ஞாபகத்திற்கு வருகிறதென்று தெரியவில்லை. சிந்தனையை மாற்ற வேண்டும் என்று நினைத்தாள். வண்டிகளின் நெருக்கத்தில் புழுக்கம் தாங்காமல் வந்தனா அழுது கொண்டிருந்தாள். வந்தனா இன்னமும் சாப்பிட்டிருக்கவில்லை. வழக்கமாக இந்நேரம் தீபிகா ஏதாவது ஊட்டி விட்டிருப்பாள். களோபரத்தில் அதையெல்லாம் செய்ய முடியவில்லை. ராதிகா வாகன நெரிசலில் வண்டியை ஓட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். தீபிகாவுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

இன்றைய சண்டையும் வழக்கம் போலத்தான் ஆரம்பித்தது. பழைய சண்டை ஒன்றை சித்து ஞாபகப்படுத்தினான். கடைக்குச் செல்ல வேண்டும் என்பதான சண்டை அது. ராதிகாவுடன் கடைக்குச் செல்ல வேண்டும் என்று தீபிகா சொல்லிக் கொண்டிருந்தாள். அது சித்தார்த்துக்கு பிடிக்கவில்லை. ‘எனக்கு இந்தச் சுதந்திரம் கூட இல்லையா?’ என்று இவள் தொடங்க ‘எப்படியோ தொலைஞ்சு போ’ என்று அவன் எரிந்து விழுந்திருந்தான். இந்தச் சண்டையை அவன் ஞாபகப்படுத்திய போது அலுவலகத்தின் பார்க்கிங்கில் வண்டியை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே இப்படித்தான். வண்டி ஓட்டும் போதுதான் செல்போனில் பேசுவான். இன்று கொஞ்ச நேரத்திலேயே ரத்த அழுத்தம் எகிறிவிட்டது. அலுவலகத்தின் அத்தனை பிரச்சினைகளையும் இறக்கி வைக்க ஒரு ஜீவன் தேவை. தீபிகாவிடம் இறக்கி வைக்கிறான். பசி வேறு சேர்ந்து கொண்டது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான். தீபிகாவும் பதிலுக்கு பேச அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. ‘இப்பவே ஏதாச்சும் லாரிச்சக்கரத்தில் விழுகிறேன்’ என்று இணைப்பைத் துண்டித்தான். வழக்கமாக இப்படிச் சொல்வான். ஆனால் பிரச்சினை எதுவும் இருக்காது. அவன் வந்து சேர்வதற்குள் ஏதாவது சட்னி வேலையை முடித்துவிட வேண்டும். பசியோடு வந்து மீண்டும் சண்டையைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்று தக்காளியை அரிந்து கொண்டிருக்கும் போதுதான் செல்போன் சிணுங்கியது. அவனாகத்தான் இருக்கும் என்றுதான் அருகில் சென்றாள். ‘ஸாரிடா குட்டி’ என்று சமாதானம் சொல்வானாக இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் ‘இவரை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கன்னடத்தில் அந்தக் குரல் கேட்டது.

இனி அவனால் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்விக்கு பதில் தேடத் துவங்கினாள். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிமையான கேள்வியாக இல்லை. இந்த நகரத்தில் என்ன செய்ய முடியும்? வாடகையும் செலவுகளும் ஆளை அரித்துவிடும். தான் ஆரம்பத்திலேயே ஏதாவதொரு வேலையில் சேர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. திருமணமான சில மாதங்களிலேயே வந்தனா கருவாகிவிட்டாள். பிறகு குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேலைக்குச் செல்லவில்லை. சித்தார்த்தின் அம்மாவை பெங்களூருக்கு அழைத்தார்கள். தனது ஊரை விட்டுவிட்டு வர முடியாது என்று சொல்லிவிட்டார். அவரவருக்கு அவரவர் விருப்பங்கள். இப்பொழுது என்ன செய்வது? மாமியார் மீது  கோபம் வந்தது. தன்னை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள் என்று உதடுகளைக் கடித்துக் கொண்ட போது ஃபோனில் சித்தார்த்தின் பெயர் சிணுங்கியது. மீண்டும் கன்னடக் குரல்தான். வாகனங்களின் சப்தத்தில் தெளிவாகப் புரியவில்லை. திரும்பத் திரும்ப கத்தினாள். ப்ளாஸம் மருத்துவமனை என்று சொன்னான். அரைகுறையாகக் காதில் விழுந்தது. ‘என்னாச்சுங்க...ஏனாயித்து?’ என்று ஏதேதோ கேட்டாள். ‘சொல்ப சீரியஸ்...நுவ்வு பன்னி’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டான்.

‘சீரியஸ்ன்னு சொல்லுறாங்க’ என்று ராதிகாவின் ஹெல்மெட் வழியாக அவளது காதுக்குள் சொன்ன போது ராதிகாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ‘பயப்படாத’ என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னாள். எப்படி பயப்படாமல் இருப்பது? எந்த நிறுவனத்தில் பி.ஈ முடித்தவளுக்கு வேலையை எடுத்துக் கொண்டு நிற்கிறார்கள்? அப்பாவும் திறனில்லை. மாமனாரும் உயிரோடில்லை. மாமியார் ஒண்டிக்கட்டைத்தான். சொந்தமாக ஒரு வீடு கூட இந்த நகரத்தில் இல்லை. குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் இந்த பயமெல்லாம் வராமல் இருக்குமா? இப்படியான பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்தான் என்றாலும் தனக்கு மட்டும் ஏன் ஒரு பிடிப்புமே இல்லை என்று யோசிக்கத்தானே தோன்றும்?

மங்கமன்பாளையா வந்துவிட்டார்கள். அந்தச் சாலையைத் தாண்டிவிட்டால் மருத்துவமனை வந்துவிடும். எவ்வளவுதான் சண்டை வந்தாலும் இப்படியா தற்கொலைக்கு முயற்சிப்பான்? குழந்தைக்காகவாவது யோசித்திருக்கலாம். இப்படியொரு கோழையுடன் வாழ்ந்திருக்கிறோமே என்று கோபம் வந்தது. ஆனால் தன்னிடமும் தவறு இருக்கிறதல்லவா? கொஞ்சம் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்திருக்கலாம் அல்லது அவன் துண்டித்தவுடனே திரும்ப அழைத்திருக்கலாம். பைத்தியகாரி. நான் மட்டுமா? அவனும்தான். பைத்தியகாரன்.  ‘இது வாழ்நாள் தண்டனையாக இருக்கக் கூடாது கடவுளே’. சில்க்கூர் பாலாஜியை மனதில் நினைத்துக் கொண்டாள். எதுவும் ஆகாதிருந்தால் சில்க்கூர் வந்து நூற்றியெட்டு சுற்று சுற்றுவதாக வேண்டிக் கொண்டாள். வந்தனாவின் அழுகை அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையைப் பார்க்கும் போது இன்னமும் பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள் தனக்குள் இருப்பதாக தீபிகாவுக்குத் தோன்றியது. 

எதிரில் பைக்கில் வருபவர்களில் யாராவது சித்தார்த்தாக இருந்துவிடக் கூடாதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள். கோவிலில் செருப்பைத் தொலைத்துவிட்டு ஒவ்வொரு காலாக பார்த்தது சட்டென்று மனதில் வந்து போனது. அவள் எதிர்பார்ப்பு பொய்த்துக் கொண்டேயிருந்தது. எந்த முகமும் சித்துவினுடையதாக இல்லை. மருத்துவமனையை நெருங்கும் போது பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவ்வப்போது தனது செல்போனைப் பார்த்துக் கொண்டாள். இன்னும் ஐந்து நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்துவிடக் கூடும். அப்பொழுது ராதிகாவின் கணவர் அழைத்திருந்தார். அவருக்கு அலுவலகத்திலிருந்து மருத்துவமனை பக்கம்தான். வீட்டிலிருந்து வண்டியை எடுக்கும் போதே அவரை மருத்துவமனைக்கு வந்துவிடச் சொல்லி ராதிகா சொல்லியிருந்தாள். மருத்துவமனையிலிருந்துதான் பேசினார். இன்னமும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்திருக்கவில்லை என்றார். 

அடுத்த சில நிமிடங்களில் ராதிகாவும் தீபிகாவும் மருத்துவமனையை அடைந்துவிட்டார்கள். அப்பொழுதும் ஆம்புலன்ஸ் வந்திருக்கவில்லை. குழப்பமாகத்தான் இருந்தது என்றாலும் இந்த நகரத்தின் வாகன நெரிசல் அப்படி. ஆம்புலன்ஸ் என்றாலும் கூட வழி கொடுக்காத ஜென்மங்களை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். சித்தார்த்தின் எண்ணுக்கு மீண்டும் அழைத்துப் பார்த்தார்கள். அணைக்கப்பட்டிருந்தது. குழப்பம் அதிகரித்தது. மருத்துவமனையில் விசாரித்தார்கள். வரவேற்பறையில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அவள் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் பதில் சொன்னாள். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பெரும்பாலான சமயங்களில் இந்த மருத்துவமனைக்கு வருவார்கள் என்றும் சில சமயங்களில் வேறு மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றாள். அவளே 108 ஐ அழைத்து விசாரித்தாள்.  அவளது முகம் தெளிவற்றதாக மாறிக் கொண்டிருந்தது. எலெக்ட்ரானிக் சிட்டி பாலத்தின் கீழ் எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது போலச் சொல்கிறார்களே என்றாள். இதற்காக சந்தோஷப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தீபிகா குழம்பினாள். அப்படியானால் சித்தார்த்தின் ஃபோனிலிருந்து எப்படி அழைப்பு வந்தது? உண்மையிலேயே விபத்து நடந்ததா அல்லது விளையாட்டுக்குச் செய்திருக்கிறார்களா? ஒருவேளை சித்து தன் செல்போனைத் தொலைத்திருப்பானோ? அப்படியே இருந்தாலும் ஃபோனை எடுத்தவர்கள் இதில் எல்லாம் விளையாட்டு காட்டுவார்களா என்ன? 

விளையாட்டாகவே இருக்கட்டும் என தீபிகாவின் மனம் விரும்பியது. ராதிகாவின் கணவருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. சித்தார்த் வந்துவிட்டானா என்று வீட்டில் சென்று பார்த்தால் குழப்பம் தீர்ந்துவிடும் என நினைத்தார். ‘நீங்க போய் பார்த்துட்டு ஃபோன் செய்யுங்க...நாங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்து பார்க்கிறோம்’ என்று ராதிகா சொன்னாள். 

‘அவரை இங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு நாம் போகலாமா?’ என்று தீபிகா கேட்டாள். குழந்தை ஏற்கனவே கசங்கியிருக்கிறாள். அவளை மேலும் அலைகழிப்பதாக இருக்கும் என்றும் தோன்றியது. 

ராதிகாவின் கணவர் கிளம்பினார். குழந்தைக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார். தீபிகாவுக்கு மனதின் ஓரத்தில் நம்பிக்கை துளிர்த்திருந்தது. எதுவும் ஆகியிருக்காது என்று ராதிகாவும் நம்பத் தொடங்கியிருந்தாள். ராதிகாவின் கணவர் வீடு சேர்வதற்கு இன்னமும் அரை மணி நேரம் ஆகிவிடும். ஆனால் இந்த அரை மணி நேரத்தை கடத்துவது பெரிய சோதனையாக இருக்கும் என்று நினைத்தார்கள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் நின்றிருந்தார்கள். குழந்தை அங்கிருந்த மீன் தொட்டியின் மீன்களை அழைத்துக் கொண்டிருந்தது.  அப்பொழுது ரிஷப்ஷனில் வேறொரு மனிதர் வந்திருந்தார். அவருக்கு நைட் ஷிஃப்ட். மருத்துவமனையில் நடமாட்டம் குறைவாக இருந்தது. இவர்களிடம் என்ன வேண்டுமென்று விசாரித்தார். ராதிகாதான் பிரச்சினையை விவரித்தாள். ‘அப்படியா...ஒருவேளை டெத்தா இருந்தா நேரா ஜி.ஹெச்சுக்கு எடுத்துட்டு போயிருப்பாங்களே’ என்று எந்த நாசூக்கும் இல்லாமல் சொன்னார். ‘ஜி.ஹெச்சில் கேட்கட்டுமா?’ என்று ஃபோனில் எண்களை பிசையத் தொடங்கினார். தீபிகாவும் ராதிகாவும் இந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. தீபிகாவுக்கு மூச்சடைத்தது. தலையைச் சுற்றிக் கொண்டு வருவது போலிருந்தது. கண்களில் இருள் பாய்ந்து கால்கள் தடுமாறின. யாரோ தரையை இழுப்பது போல இருந்தது. கீழே விழும் போது வந்தனாவை மட்டும் ராதிகா பிடித்துக் கொண்டாள். ராதிகா உளறத் தொடங்கினாள். நர்ஸ் ஒருத்தி வேகமாக ஓடி வந்தாள். முகம் தெரியாத ஒருவர் தனது பையில் இருந்த தண்ணீரை எடுத்து தீபிகாவின் முகத்தில் தெளித்தார். தீபிகாவைச் சுற்றிலும் பேச்சுச் சத்தம் கேட்கத் துவங்கியது. அப்பொழுது தொட்டியை நெருங்கியிருந்த வந்தனா தனக்கு வண்ண மீன்கள் வேண்டும் என்று அழத் தொடங்கியிருந்தாள். மீன்களை அழைத்தபடியே அழுது கொண்டிருந்தாள்.யாருமே செவிமடுக்காத அந்த அழுகை இந்நகரத்தின் வாகன இரைச்சலில் கரைந்து கொண்டிருந்தது.

Sep 24, 2013

மைனர் கவுண்டன் கதை

ரத்தினசாமி கவுண்டரிடம் விதி விளையாடி இந்த புரட்டாசி சனிக்கிழமை வந்தால் ஒரு வருடம் முடிகிறது. விளையாடியது விதி இல்லை. உள்ளூர் சக்கிலி பையனும் ஒரு மூப்பனும்தான்.  அதுவரைக்கும்- அதாவது, சென்ற வருடம் வரைக்கும் ஊருக்குள் கவுண்டரின் மிரட்டல் என்ன?பன்னாட்டு என்ன? ம்ஹூம். அத்தனையும் முடிந்து விட்டது. ஆடிய ஆட்டத்தையெல்லாம்முப்பத்தி ஐந்து வயதில் மூட்டை கட்டியாகிவிட்டது. இப்பொழுது பாருங்கள்.சுருண்டு விழுந்து கிடக்கிறார். ஆள் மட்டுமா சுருண்டு கிடக்கிறார்? எல்லாமும் சுருண்டாகிவிட்டது.

அந்தக் காலத்திலிருந்தே சுற்றுவட்டாரத்தில் பெரிய பண்ணையம் என்றால் அது கவுண்டர் வீடுதான். மஞ்சக்காடு மட்டும் முப்பது ஏக்கர் தேறும். அது போக வயல் பதினாறு ஏக்கரும் மேட்டாங்காடு இருபது ஏக்கரும் சேர்த்தினால் போட்டிக்கு பக்கத்தில் ஒருத்தனும் வர முடியாது. அத்தனை சொத்து. மல்லு வேட்டியும், ரேக்ளா வண்டியும், வெற்றிலையுமாக சுற்றும் அளவிற்கு கவுண்டரின் தாத்தா காலத்திலேயே சம்பாதித்த சொத்துக்கள் இவை. சேர்த்த சொத்துபத்தில் தாத்தாவே பாதியை தொலைத்துவிட்டாராம். கூத்தியா வீட்டிலேயே குடியாகக் கிடந்து தொலைத்தார் என்பார்கள். உள்ளூரிலேயே ஒன்றுக்கு மூன்றாக வைத்திருந்தாராம். அது போக பக்கத்து பட்டணத்தில் ஒன்று. ரத்தினத்தின் பாட்டியை உட்கார வைத்து கேட்டால் ஒவ்வொரு கதையும் விடிய விடிய கேட்கலாம். அத்தனை கதை இருக்கிறது. அப்படியிருந்தும் நஞ்சை புஞ்சையைக் காப்பாற்றிவிட்டான் அந்தக் கிழவன். 

ஆனால் ரத்தினத்தின் அப்பா மோசமில்லை. சொத்து சேர்க்கவும் இல்லை, தொலைக்கவும் இல்லை. அந்த மனுஷன் ஒரு மதுக்கான். சீட்டாடவும் தெரியாது பொம்பளை பொறுக்கவும் தெரியாது. அதுவும் இல்லாமல் வீட்டில் பொண்டாட்டி பன்னாட்டுதான். வெளியே தொடுப்பு ஏதாவது இருக்கிறது என்று தெரிந்தால் கூட ‘அறுத்து’ வீசிவிடுவாள். என்னதான் புருஷனை கட்டுக்குள் வைத்திருந்தாலும் புள்ளை வளர்க்கத் தெரியாமல் ஏமாந்துவிட்டாள். 

தாத்தன் புத்தி அப்படியே ரத்தினசாமி கவுண்டருக்கு வந்துவிட்டது. ஊரில் ஒரு பெண்ணை விட்டுவைக்காமல் மேய்ந்து கொண்டிருப்பதாக அவரின் அம்மா திட்டுவதுண்டு. ஆனால் பதினேழு வயதிலேயே தினவெடுத்து திரிந்த கவுண்டனுக்கு இதெல்லாம் காதிலேயே விழுந்ததில்லை. ஆரம்பத்தில் பக்கத்து தோட்டத்து கவுண்டச்சி, மூப்பன் பெண்டாட்டி என்றுதான் திரிந்தார். ஆனால் அந்தக் கவுண்டனும், மூப்பனும் சாடைமாடையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். பேச ஆரம்பிப்பது என்றால்  ‘பள்ளத்தில் வைத்துக் கொன்று போட்டுவிடுவோம்’ என்கிற ரீதியில். அப்படியும் எச்சில் வட்டலில் வாய் வைக்கும் நாயாகத்தான் திரிந்தார். ஒரு பெளர்ணமியும் அதுவுமாக மூப்பன் கள்ளை குடித்துவிட்டு கத்தியைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டான். இதுவே வேறு காரணமாக இருந்தால் ரத்தினக் கவுண்டரின் அம்மா மூப்பனை உண்டு இல்லை என்றாக்கியிருப்பாள். ஆனால் மிகுந்த துக்கத்துடன் ‘எம் பெண்டாட்டியை உடச் சொல்லுங்க’ என்று கேட்கிறான். எப்படி சண்டைக்கு போவது? ‘காலையில் பேசிக்கலாம் போய் தூங்குடா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி துரத்திவிட்டாள்.

மூப்பன் புலம்பிக் கொண்டே போன பிறகு ‘சாணாத்தி கூட படுக்கிறானே மானமே போகுது’ என்று ஒப்பாரி வைத்து ஊரையே கூட்டிவிட்டாள். மூப்பனை விட அம்மாதான் அதிகமாக மானத்தை வாங்கிவிட்டாள். அதன் பிறகு ஊருக்குள் சாடை பேசத் தொடங்கிவிட்டார்கள். முளைச்சு மூணு இலை விடாத பிஞ்சுகள் கூட ‘உங்களுக்கு என்னண்ணா கள்ளு சும்மாவே கிடைக்கும்’ என்று வாரத் தொடங்கிவிடார்கள். அதனால் கொஞ்ச நாளைக்கு மூப்பச்சியை பார்க்காமல் இருந்தார். கூளை வண்ணாத்தி, சரசா கொசத்தி என்று யாரிடம் போனாலும் பிரச்சினை வந்த போதுதான் இதெல்லாம் வேலைக்கு ஆவதில்லை என்று மாரியாத்தா கோவிலில் குத்த வைத்து யோசித்துவிட்டு கவுண்டச்சிகளும், இன்னபிற பலவற்றை சாதிகளும் வேலைக்கு ஆவாது என்று முடிவு செய்த பிறகுதான் சக்கிலிப் பெண்களைத் தேடத் துவங்கினார். 

உண்மையில் அந்தப் பெண்கள் பாவம். நாய் மாதிரி பாடுபட்டாலும் ஐந்து ரூபாயை தாண்டி கூலி வாங்க முடிந்ததில்லை. நோவு நொடியென்றாலும் கூட உள்ளூர் வைத்தியன் கொடுக்கும் மருந்துதான். பிழைத்து வந்தால் மூன்றாம் நாள் வேலைக்கு போக வேண்டும். இல்லையென்றால் சாக வேண்டியதுதான். அவர்களது புருஷன்களும் கடும் உழைப்பாளிகள். ஆனால் கிட்டத்தட்ட அடிமைகள் மாதிரிதான். நானூறு அல்லது ஐந்நூறு ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு கவுண்டர்கள் வருடக் கணக்கில் பண்ணையத்தில் வைத்துக் கொள்வார்கள். விடிந்தும் விடியாமலும் வந்து சாணம் வழித்துப் போட்டு, ஆடு மாடுகளை பிடித்துக்கட்டி, கட்டுத்தறியை சுத்தம் செய்து, தோட்டத்தில் களை எடுத்து, தென்னம்பிள்ளைகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, பண்டம் பாடிகளுக்கு தீவனம் அறுத்து வந்து போட்டு நிமிர்ந்து பார்த்தால் பொழுது சாய்ந்திருக்கும். மனசு வந்தால் பழைய சோற்றை கவுண்டச்சிகள் ஊற்றுவார்கள். இல்லையென்றால் அதுவும் இல்லை. இந்த அடிமை வாழ்க்கைதான் ரத்தினசாமி கவுண்டருக்கு வசதியாகப் போய்விட்டது. 

படிந்த பெண்களுக்கு இரண்டு வல்ல நெல் அல்லது கூலியில் ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுத்துவிடுவார். இந்த நெல்லுக்கும் ஒத்த ரூபாய்க்குமாகவெல்லாம் அந்தப் பெண்கள் வந்ததில்லை. பெரும்பாலும் மிரட்டலிலேயேதான் காரியம் சாதித்தார். ‘உஞ் சக்கிலியை வேலையைவிட்டுத் துரத்திவிடுவேன்’ ‘ஊரை விட்டு துரத்திவிடுவேன்’ இப்படி ஏதாச்சும் நொட்டை காரணமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த நொட்டைக் காரணங்களுக்கே பெரும்பாலும் அந்தப் பெண்கள் பயந்துவிடுவார்கள். சில பெண்களை கத்தியை காட்டிக் கூட கதறடித்திருக்கிறார். 

எத்தனை நாளைக்குத்தான் பூசணியை சோத்து வட்டலில் மறைப்பது? இந்த விவகாரமும் வெளியே தெரிய ஆரம்பித்த போது ஒரு கவுண்டச்சியை பிடித்து வந்து கட்டி வைத்து விட்டால் காளை ஊர் மேய போகாமல் கட்டுத்தறியிலேயே கிடக்கும் என்று வீட்டில் பெண் தேடத் துவங்கினார்கள். இந்த ஆளின் பூலவாக்கு அக்கம் பக்கமெல்லாம் பரவிக் கிடக்கிறது. எவன் பெண்ணை கூட்டி கொண்டு நிற்கிறான்? ஒன்றும் அமையவில்லை.

ஆனால் திருமணம் ஆகவில்லை என்றெல்லாம் கவுண்டனுக்கு எந்தக் கவலையுமில்லை. யாரோ ஒருத்தியை கிணற்று மேட்டுக்கும், மூங்கில் கொட்டாய்க்கும் தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறார். மூங்கில் கொட்டாய் பற்றி இந்த இடத்தில் சொல்லிவிட வேண்டும். தோட்டத்தில் பதினைந்து அடி உயரத்தில் மூங்கில் குச்சிகளால் மேடை அமைத்து படுகிடையாக சருகு போட்டு வைத்திருப்பார்கள். இந்த உயரத்தில் இருந்து பார்த்தால் தோட்டத்தில் நடமாட்டம் இருந்தால் தெரியும் என்று செய்து வைத்திருக்கிறார்கள். கவுண்டர் எப்பொழுதிருந்து ஊர்மேயத் துவங்கினாரோ அப்பொழுதிருந்தே இங்குதான் படுக்கை. ராத்திரி காவலுக்கும் வசதி, சேட்டைக்கும் அதுதான் வசதி.

இப்படியே பத்து பன்னிரெண்டு வருடமாகத் திரிந்த ரத்தினக்கவுண்டருக்கு வீரய்யன் பெண்டாட்டி மூலமாகத்தான் சனி வந்து சேர்ந்தது. அவள் கொஞ்சம் முரண்டுதான். ஆனால் எத்தனையோ சிட்டுக்களை பார்த்த கவுண்டர் இவளையும் மிரட்டித்தான் வழிக்குக் கொண்டு வந்தார். வந்தவள்  ‘காரியத்தை’ புருஷனிடம் சொல்லிவிட்டாள். அவனுக்கு கோபம் என்றால் கோபம் படு கோபம். ஆனால் என்ன செய்ய முடியும்? மேல் சாதிக்காரனாக போய்விட்டான். பணம் காசும் வைத்திருக்கிறான். ஊரை விட்டு போய்விடலாம் என்றால் இந்தக் காலம் மாதிரியா? அந்தக் காலத்தில் எந்த ஊருக்கு தப்பிப் போனாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். புலம்பியும் மருவியும் கிடந்தான்.

அந்த நாளிலும் அவளைக் கவுண்டன் இழுத்துக் கொண்டு போய்விட்டான். வீரய்யனுக்கு குழந்தை குட்டியும் இல்லை. எத்தனை நேரம்தான் பாயைச் சுரண்டிக் கொண்டு கிடப்பது? மூப்பனைப் பார்த்து பேசிவிடலாம் என்று கிளம்பிப் போனான். பனங்காடு சலசலத்துக் கிடந்தது. எங்கோ மழை சாரலடிக்கும் மண் வாசனை அந்த இரவுக்கு இதமாக இருந்தது. மூப்பன் ஒவ்வொரு மரமாக ஏறி இறங்கும் வரைக்கும் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான். முப்பத்தியிரண்டு பனை மரங்களில் பானை இறக்கிய போது நடுச்சாமத்தைத் தாண்டியிருந்தது.

மூப்பன் கள்ளுக் குடிக்கும் வரைக்கும் காத்திருந்தான். மூப்பன் குடித்துவிட்டு வீரய்யனுக்கும் ஊற்றினான். ஊற்றிய கள்ளை வெறுங்கையை வாயில் ஒட்டி வைத்து ஒரே முசுவாக குடித்து முடித்த போது போதை உச்சந் தலையில் ஏறத் துவங்கியிருந்தது. 

‘என்னடா வீரய்யா குசுவ புடிச்சுட்டே பொறவாலயே திரியுற?’ என்று மூப்பன்தான் ஆரம்பித்தான்.

எப்படித் துவங்குவது என்று தெரியாமல் தயக்கமாக ஆரம்பித்து ஆனால் வேகமாக மொத்தக் கதையும் விலாவாரியாக சொல்லி முடித்த போது வீரய்யன் கண்களில் துளி நீர் துளிர்த்துவிட்டது. மூப்பன் எக்காளமிட்டுச் சிரித்தான். அந்தப் பனங்காடே அதிர்ந்தது. 

‘அது என்ற காதுக்கு எப்பவோ வந்திருச்சு...அந்த வக்காரோளிய என்னதான் பண்ணுறது சொல்லு? எம் பொண்டாட்டியைமில்ல கூட்டிட்டுத் திரிஞ்சான். கொன்னு போடலாமா?’ என்று மூப்பன் கேட்ட போது வீரய்யனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.

‘அந்தக் கவுண்டச்சி ஒத்தப் புள்ளைய பெத்து வெச்சிருக்குதுங்க சாமீ...நமக்கு எதுக்கு பொல்லாப்பு..வேற ஏதாச்சும் சொல்லுங்க’ என்று வீரய்யன் சொன்னதிலிருந்து அடுத்த அரை மணி நேரத்துக்கு அதுவும் இதுவுமாக யோசித்தார்கள். கடைசியில் முடிவானதுதான் கவுண்டரின் மொத்த ஆட்டத்துக்கும் ஆப்படித்தது.

அது புரட்டாசி அமாவாசை. அதுக்கு முன்பாகவிருந்தே பத்து நாட்களாக மூப்பனும், வீரய்யனும் கவுண்டனிடன் நைச்சியமாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். ‘காசுக்கு வேண்டித்தான் காலைக் கட்டுறானுக’ என்றுதான் கவுண்டர் நினைத்திருந்தார். ஆனால் அவர்களின் திட்டம் வேறாக இருந்தது. அமாவாசையன்று புது மரக் கள்ளு இறக்குவதாகச் சொல்லி மூப்பன் அந்த ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் கவுண்டனை பனங்காட்டுக்கு அழைத்துப் போய்விட்டான். 

போனதிலிருந்தே ஊற்றிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டான். ஒரு மணி நேரத்துக்கு பிறகாக கவுண்டன் உளற ஆரம்பித்திருந்தான். மூப்பன் மனைவியைப் பற்றி அவனிடமே பேசிய போது கல்லைத் தாங்கி தலையில் போட்டுவிடலாமா என்று கூட யோசித்தான். ஆனால் வம்பாகிவிடும் என்று மேலும் மேலும் ஊற்றிக் கொண்டிருந்தான். கவுண்டனின் வயிறு புடைத்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசி இருந்து குத்தினால் நீர் நிரப்பிய பலூனிலிருந்து பீய்ச்சுவது போல வெளியேறக் கூடும்.

தூரத்திலிருந்து வந்த ஆந்தை ஒன்று இவர்களின் அருகாக வந்து போனது. இப்பொழுதும் மூப்பன் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தள்ளாடிய கவுண்டன் பாறையிலேயே சாய்ந்துவிட்டான். அவன் சாயவும் வீரய்யன் வரவும் சரியாக இருந்தது. அவர்களின் கணக்குப்படி மூங்கில் கொட்டாயில் தங்களின் திட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை வீரய்யன் செய்து முடித்துவிட்டான். வேறொன்றுமில்லை. கொட்டாயின் மேற்புறமாக நான்கைந்து மூங்கிலை உருவிவிட்டு அதன் மீது சருகை போட்டுவிட வேண்டியதுதான். கொஞ்சம் கால் பிசகினாலும் மேலே இருந்து கவுண்டன் கீழே விழுவான். இதுதான் திட்டம். என்ன இது மொக்கைத் திட்டமாக இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்? பொறுங்கள்.

வீரய்யனும் மூப்பனும் கைத்தாங்கலாக மூங்கில் கொட்டாய் வரைக்கும் கவுண்டனை அழைத்துச் சென்றுவிட்டார்கள். அதற்கு மேல் ஏற்றுவதுதான் பெரிய சிரமமாக இருந்தது. ஆனால் திட்டத்தோடு ஒப்பிடும் போது இது பெரிய சிரமம் இல்லை. திக்கித் திணறி ஏற்றிவிட்டார்கள். மேலே ஏற்றி மூங்கில் உருவாத இடமாக கவுண்டனை படுக்க வைத்துவிட்டார்கள். இனிமேல்தான் க்ளைமேக்ஸ். ஏற்கனவே கொண்டு வந்திருந்த தாம்புக்கயிறை கவுண்டனிம் கோவணத்தை விலக்கிவிட்டு ‘அதில்’ உருவாஞ்சுருக்கு போட்டு கயிற்றின் இன்னொரு முனையை மூங்கில் கொட்டாயில் மூலையில் கட்டி வைத்துவிட்டார்கள். அவ்வளவுதான். வேலை முடிந்தது.

இப்பொழுது மூப்பனும், வீரய்யனும் சற்று தள்ளி யார் கண்ணிலும் படாமல் படுத்துக் கொண்டார்கள். கவுண்டன் புரண்டு உருளுவதை பார்க்க வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் கவுண்டன் அசையாமல் செத்த பிணம் போலக் கிடந்தான். தூக்கம் கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது. இவர்களும் தூங்கிப் போனார்கள். இரண்டு மூன்று மணி நேரம் ஆகியிருக்கக் கூடும். பயங்கரமான அலறல் சத்தம். வீரய்யனும் மூப்பனும் விழித்துக் கொண்டார்கள். கவுண்டன் மூங்கில் கொட்டாயில் தொங்கிக் கொண்டிருக்கிறான். அசைந்திருப்பான் போலிருக்கிறது மூங்கில் உருவிய இடத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறான். அவனது மொத்த எடையையும் குஞ்சாமணி தாங்கிப் பிடித்திருக்கிறது. உடலைவிட்டு பிய்ந்துவிடும் போல அலறல் சத்தம். இறுகிய கயிறு வேறு வலியைக் கூட்டுகிறது. விழுந்த வேகத்தில் நரம்பெல்லாம் அறுந்திருக்கக் கூடும். ஆனால் கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக துண்டாகவில்லை. ரத்தம் கசியத் துவங்கியிருந்தது. சில கணங்களில் சுதாரித்துக் கொண்ட கவுண்டன் கயிறை பிடித்து உடல் எடையை கைகளில் தாங்கிக் கொண்டான். ஆனாலும் உருவாஞ்சுருக்கை கழட்ட முடியவில்லை. எத்தனை நேரம்தான் தொங்குவது? கையை சிறிது இளக்கினாலும் மொத்த குஞ்சாமணி கதறத் துவங்கியது. 

வீரய்யனும் மூப்பனும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிரிப்பில் பெரும் கொண்டாட்டம் இருந்தது. வீரய்யன் சிரித்த சிரிப்பில் நிற்க மாட்டாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. தாறுமாறாக கெட்டவார்த்தையில் கவுண்டனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவனை அவிழ்த்துவிடவே கூடாது என்று நினைத்துக் கொண்டார்கள்.

விடியும்போது தோட்டத்து வேலைக்கு வந்த ஆட்கள்தான் ஓடிவந்து முடிச்சை அவிழ்த்துவிட்டார்கள். அந்தப் பெண்களுக்கு சிரிப்பும் வெட்கமும் தாங்க முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு சிரிப்பை அடக்கினார்கள். அவர்கள் கவுண்டனை கீழே இறக்கிய போது கிட்டத்தட்ட மயங்கியிருந்தான். தூக்கிக் கொண்டு நாட்டு வைத்தியரிடம் போனார்கள். நாடி பிடித்து பார்த்தவர் ‘உசுருக்கு ஒண்ணுமில்ல’ என்றுவிட்டார். ஆனால் மற்றது எல்லாம் முடிந்து போனது போனதுதான். வீங்கிக்கிடந்ததை தூக்கிப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கிவிட்டார்.  ‘நாடி நரம்பெல்லாம் கத்திரிச்சு போய்டுச்சு போங்க...உசுர் பொழச்சதே பெருசு’ என்றார்.

‘இதுக்கு பொழைக்காமலே இருந்திருக்கலாம்’ என்றுதான் கவுண்டன் நினைத்திருக்கக் கூடும். ஆனால் எதுவும் பேசாமல் கிடந்தான். அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டுப் போட்டு பச்சிலை சாறு ஊற்றினார்கள். சுருண்டது சுருண்டதுதான். ஒரு வருடம் ஆகிவிட்டது. மைனர் ஷோக்கும் போயாச்சு, மல்லிப்பூவும் காஞ்சாச்சு!

Jul 3, 2013

அவர் சம்சாரத்தைக் காணோம்

தன் மனைவியைக் காணவில்லை என்று பரமசிவம் சொல்ல ஆரம்பித்து இந்த ஆடி முடிந்தால் ஒரு வருடம் ஆகிறது. சென்ற வருடம் ஆடிபெருக்குக்கு தூரி ஆடிவிட்டு பூப்பறிக்க போனவளை அதற்கு பிறகு பார்க்கவே இல்லை என்று சொல்லி வருகிறார். அவர் மட்டும் இல்லை, ஊர்க்காரர்களும் அன்றுதான் அவளை கடைசியாக பார்த்தார்கள். பச்சை நிறச் சேலையில் அத்தனை உற்சாகமாகத் திரிந்தாள். அடுத்தநாளே ஊர் பூராவும் தேடிப்பார்த்தாகிவிட்டது. ஊருக்கு அந்தப்பக்கமும் தேடிவிட்டார்கள். குளம், குட்டை, வாய்க்கால், வரப்பு என்று சுற்றுவட்டாரத்தில் ஒரு இடம் பாக்கியில்லை. துளி அடையாளம் கூட கிடைக்கவில்லை. புரட்டாசி வரைக்கும் பரமசிவம் முகம் இருண்டுதான் கிடந்தார். அதன் பிறகு பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அவ்வப்போது ‘ப்ச்’ என்பார். அது மனைவிக்கான ‘ப்ச்’ என்று மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பார். அதோடு சரி.

பரமசிவத்தை உங்களுக்கு தெரியாதல்லவா? உள்ளூர் பண்ணாடி. பரம்பரை பரம்பரையாக ஊருக்குள் நல்ல மரியாதை உண்டு. வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் சுற்றுவார். ஆனால் வெளிச்சோலிக்காரர். வீடு தங்கமாட்டார். குளத்து பிரச்சினை, வாய்க்கால் பிரச்சினை, புருஷன் - பெண்டாட்டி தகராறு என்று ஒரு இடம் கொள்ளாமல் சுற்றிக் கொண்டே இருப்பார்.  அதுதான்  சுந்தராயாளுக்கு வருத்தம். இந்த சுந்தாராயாள் வேறு யாருமில்லை- பரமசிவத்தின் காணாமல் போன மனைவிதான். அட்டகாசமான அழகுக்காரி. தெருவில் நடந்து போனால் கிழம் கட்டையிலிருந்து அத்தனை ஆம்பளைக் கண்களும் அவளைத்தான் பார்க்கும். பார்க்கும் என்ன பார்க்கும்- மொய்க்கும் என்று வைத்துக் கொள்ளலாம். கால் கிலோ கொத்துச் சாவியை இடுப்பில் சொருகியிருப்பாள். சொருகிய சாவி புடவையை கீழே இழுக்கும் லாவகத்தில் விடலைகளின் கண்கள் செருகும். ஆனால் ஒரு பயலோடு பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளமாட்டாள். யாராவது அண்ணி முறை வைத்தோ, அத்தை முறை வைத்தோ கிண்டலடித்தால் வெடுக்கென வெட்டிக் கொண்டு வந்துவிடுவாள்.

அதனால் அவளை பார்ப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். பரமசிவம் இல்லாத நேரமாக பார்த்து சில தலைகள் வீட்டுக்குள் எட்டிப்பார்க்கும். தூண்டில் போடத்தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் பூட்டிய கதவுக்குள் இருந்தபடியே பதில் சொல்லி அனுப்பிவிடுவாள். வாயைத் திறந்து கேட்டாலும் கூட ஒரு சொம்பு தண்ணீர் கிடைக்காது. என்னதான் பொத்திப் பொத்திக் கிடந்தாலும் சுந்தாராயாள் காணமல் போனதிலிருந்து ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு.  ராமசாமிதான் அவளைக் கூட்டிப் போய் எங்கோ தங்க வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அவளுக்கும் அவருக்கும் தொடுப்பு உண்டு என்கிறார்கள். கிருஷ்ணமணியின் மளிகைக் கடைக்கு இடுப்பை ஆட்டிக் கொண்டு நடக்கும் போது எதிர்படும் எல்லோரையும் முறைத்தபடியே நடப்பவள், ராமசாமியை பார்த்தால் மட்டும் அருகம்புல் அளவுக்கு சிரித்து வைப்பாள். பக்கத்துத் தோட்டத்துக்காரன் என்று சிரிக்கிறாள் என்றுதான் கொஞ்சம் பேர் நினைத்தார்கள். ஆனால் நாட்கள் நகர நகர ஊருக்குள் பேச்சு வேறு மாதிரி ஆகிவிட்டது. ஆனால் இதை பரமசிவம் காதுபடும்படி யாரும் பேச மாட்டார்கள்.

விவகாரத்தை விலாவரியாக சொல்வதற்கு முன் -

ராமசாமியைத் உங்களுக்கு தெரியுமா என்றே ஆரம்பிக்கலாம்தான். ஆனால் கொஞ்சம் பேர் ‘சோ’ராமசாமியாக இருக்குமோ என்று நினைக்கக் கூடும். வேறு சிலர் ஈ.வே.ராமசாமியை யோசிக்கக் கூடும். ஒரே பெயர்தான். ஆனால் எதற்கு வம்பும் குழப்பமும்? இரண்டு ராமசாமியுமே இல்லை. நான் கேட்டது சில்லாங்காட்டு ராமசாமியை. உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. நானே சொல்லிவிடுகிறேன். நாற்பது வயதைத் தாண்டிவிட்டார். பெற்றவர்கள் எப்பவோ போய்ச் சேர்ந்துவிட்டார்கள். கூடப் பிறந்தவர்களிலும் ஒன்றும் தேறவில்லை. அவரவர் வழியை பார்த்துக் கொண்டார்கள். எளந்தாரியாக சுற்றித்திரிந்த ராமசாமிக்கு கல்யாணமும் ஆகவில்லை. இப்பொழுதும் தனிக்கட்டைதான். கேரளாப்பக்கமாக போனால ‘செவச் செவ’ன்னு ஒரு புள்ளையைக் கட்டிக் கொண்டு வந்துவிடலாம் என்று சில புரோக்கர்கள் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் ராமசாமிதான் ஒத்துக் கொள்ளவில்லை. கருப்போ, வெளுப்போ எஞ்சாதியில்தான் கட்டுவேன் என்று சொல்லிவிட்டார். ஆனவரைக்கும் சொல்லிப் பார்த்தார்கள். மனுஷன் அசரவில்லை. எத்தனை நாளுக்குத்தான் தொங்குவார்கள்? இப்பொழுதெல்லா அவர் திருமணம் பற்றி யாரும் பேசுவதில்லை.

ராமசாமி சட்டை போடாமல்தான் பாதி நாள் திரிவார். திளைத்த வேப்பமரத்தை குறுக்கே அறுத்தது மாதிரியான நெஞ்சு. களை வெட்டுவதிலிருந்து பாத்தி கட்டுவது வரை அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்ததில் எக்குத்தப்பாக வளர்ந்து கிடக்கிறது. கொழுந்தியா முறைப் பெண்கள் தெருவில் பார்க்கும் போதெல்லாம் எதையாவது சொல்லிச் செல்வார்கள். “துணி தப்பற கல்லக் காணோம்; மச்சானைக் மல்லாக்க போட்டு நாலு தப்பு தப்போணும்”

“மச்சா..யார மடக்க இப்படித் திரியறீங்க” என்றெல்லாம் பேசுவார்கள்.

 ராமசாமி அசரக் கூடிய ஆள் இல்லை. “ஊட்டைத் தெறந்து வை வந்து மல்லாக்க படுத்துக்கிறேன்..பொறவு __________” என்பார் - இந்த 'டேஷ்’ சபை நாகரீகம் கருதி சென்சார் செய்யப்பட்டிருக்கிறது- அல்லது  “உன்னைய மடக்கத்தான் இப்படித் திரியறேன்...ஊட்டுக்காரன் போனதுக்கப்புறம் சொல்லி உடு, வேட்டியை இளக்கிக்கட்டிட்டு வர்றேன்” என்று கவுண்ட்டர் அட்டாக் கொடுப்பார்.  கொழுந்தியாக்கள் கூட்டத்தோடு வந்திருந்தால் கெக்கபிக்கே என்று சிரித்தபடியே வெட்கம் வந்தது போல காட்டிக் கொண்டு ஓடிப்போவார்கள். தனியாக வந்திருந்தால் இன்னும் சில வார்த்தைகள் அவரோடு பேசுவார்கள். ராமசாமியோடு பேசுவது பழைய சோற்றுக்கு பச்சைமிளகாயைக் கடித்தது போல அத்தனை ருசியாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வார்கள். 

ராமசாமியின் இந்த கேரக்டரும், அவரைப் பார்க்கும் போது சுந்தாராயாளின் அருகம்புல் சிரிப்பும் ஊருக்குள் சுற்றிய வதந்திக்கு பெட்ரோல் ஊற்றியது. இந்த வதந்தியில் எத்தனை தூரம் உண்மை இருக்கிறது என்பது இதுவரைக்கும் தெரியவில்லை. பொறாமைக்காரர்கள் கூட கிளப்பிவிட்டிருக்கலாம். ‘நெருப்பில்லாமல் புகையுமா?’ என்று நீங்கள் எதிர்கேள்வி கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.

இந்தச் செய்தி பரமசிவம் காதுகளுக்கு போனதாகத் தெரியவில்லை- அப்படித்தான் மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவர் அவ்வளவு சாதாரணமாக நடந்து கொண்டார். விவகாரம் இப்படி போய்க் கொண்டிருந்த போதுதான் சுந்தாராயாள் காணமல் போனதும் நடந்தது. அடுத்தடுத்த நாட்களில் பரமசிவத்திடம் துக்கம் விசாரிக்க வந்தவர்களோடு சேர்ந்து ராமசாமியும் வந்திருந்தார். மற்றபடி ராமசாமி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

சுந்தராயாள் குன்னத்தூரில் காரை வீட்டில் குடி இருக்கிறாள் என்றும், அந்தியூரில் செங்கல் சூளையொன்றில் இருக்கிறாள் என்றும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் யாரும் பார்க்கவில்லை. இதெல்லாம் காற்றுவாக்கில் வந்த செய்திதான். 

ஊருக்குள் செய்திகள் தாறுமாறான வேகத்தில் பரவுகின்றன. அதற்கு காரணமிருக்கிறது. சென்ற வருடம்தான் மழை பொய்த்துவிட்டதே! அதனால் ஊருக்குள் ஒரு வருடம் விவசாயமே இல்லை.  வறண்டு கிடந்த வாய்களுக்கு சுந்தராயாள் விவகாரம்தான் வெற்றிலை பாக்காக மாறியிருந்தது. என்னதான் வறட்சி வந்தாலும் சில்லாங்காட்டு கிணற்றில் மட்டும் தண்ணீர் வற்றியதே இல்லை. அது பாழுங்கிணறு. நூறடி ஆழம் இருக்கும். எட்டிப்பார்க்கக் கூட பயப்படுவார்கள். சென்ற வருடமும் அப்படித்தான். கிணற்றில் தண்ணீர் இருந்தது. ஆனால் பரமசிவம் விவசாயம் செய்யவில்லை. பொண்டாட்டி போன துக்கம் ஒரு பக்கம் என்றால்  ‘ஊரே காஞ்சு கெடக்குது, எனக்கு மட்டும் என்ன வெள்ளாமை வேண்டுது’ என்று சொல்லிவிட்டார். அதனால் அவர் தோட்டமும் குறையாகத்தான் கிடந்தது.

ஆனால் இந்த வருடம் நிலைமை மாறிவிட்டது. நல்ல மழை. பவானிசாகர் அணையிலும் நீர்மட்டம் ஐம்பது அடியைத் தாண்டிவிட்டதாம். தடப்பள்ளியில் பாசனத்திற்கென தண்ணீர் திறந்துவிட்டார்கள். ஊருக்குள் எல்லோருக்கும் சந்தோஷம். ராமசாமிதான் முதல் ஆளாக விவசாயம் செய்வார் என்று நினைத்தார்கள். அதுதான் வழக்கமும் கூட. விடிந்தும் விடியாமலும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு சேறாடுவதற்கு வயலில் இறங்குவார். ஆனால் இந்த முறை ஆளைக் காணவில்லை. ஒரு நாள், இரண்டு நாள் ஆனது. அவர் வயல் மட்டும் காய்ந்து கிடந்தது. முடிவு செய்துவிட்டார்கள். சுந்தாராயாளோடு சேர்ந்து கம்பி நீட்டிவிட்டார் என்று வெளிப்படையாக பேசிக் கொண்டார்கள். 

பரமசிவம் வழக்கம் போல வெள்ளையும் சுள்ளையுமாக வயலில் வந்து நின்றார். 
                                                               *******

சுந்தாராயாள் காணாமல் போனதற்கு முந்தின வாரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பரமசிவம் வீட்டிற்குள் சுந்தாராயாள் இல்லாததை கவனித்துவிட்டார். வழக்கமாக பரமசிவத்திற்கு அத்தனை எளிதில் தூக்கம் கலையாது. இடியே இறங்கினாலும் அசையாமல் கிடப்பார். அதுதான் சுந்தாராயாளுக்கு வசதியாகப் போய்விட்டது. ராமசாமியை தொண்டுபட்டிக்கு வரச் சொல்லிவிடுவாள். காரியம் முடிந்த பிறகு பூனைக்குட்டி கணக்காக உள்ளே வந்து படுத்துக் கொள்வாள். அன்றுதான்  ஒருநாளும் இல்லாத திருநாளாக பரமசிவம் எதற்கோ எழுந்துவிட்டார். சுந்தாராயாளைக் காணாமல் வீட்டிற்குள் தேடியவர் சமையல் அறை ஜன்னலில் இருந்து பார்த்த போது தொண்டுப்பட்டியில் படல் அசைந்து கொண்டிருந்தது. ஏதோ நடக்கிறது என்று மோப்பம் பிடித்த போதுதான் ‘அது’ நடந்து கொண்டிருந்தது. கால் மணி நேரத்துக்கு பிறகு ராமசாமி நிதானமாக வேட்டியை சரி செய்தவாறே நடந்து போனான். தொண்டுபட்டிக்கு வெளியே வந்தவன் சுந்தாராயாளை இழுத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போனான். பரமசிவத்துக்கு கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. விலகிய மாராப்பை சுருட்டி எடுத்துக் கொண்டு சுந்தாராயாள் வாய் நிறைய சிரிப்பும் வெட்கமுமாக வீட்டிற்குள் வந்த போது எதுவும் தெரியாதது போல பரமசிவம் படுத்துக் கொண்டார். 

இதன் பிறகுதான் காணாமல் போனது நடந்தது. காணாமல் எல்லாம் போகவில்லை. ஆடிப்பெருக்கன்று பூப்பறிக்க போய்விட்டு தனியாகத்தான் வந்தாள்.  ‘ஊரே ஒண்ணா வரும் போது இவ மட்டும் தனியா வர்றா பாரு தேவிடியா முண்டை’ என்று கருவிக் கொண்டிருந்தார் பரமசிவம். ராமசாமியுடன் சுற்றிவிட்டு வருகிறாள் என்றும் நினைத்தார். அன்றிரவு பாயில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவளின் குரல்வளை மீது காலை வைத்து மிதித்துக் கொன்றதே பரமசிவம்தான். அவர் மிதித்த மிதியில் அவளால் பெரிதாக கத்த முடியவில்லை. அப்படியே கத்தினாலும் தோட்டத்திற்குள் வீடு இருப்பதால் வெளியாட்களுக்குத் காதில் விழ வாய்ப்பே இல்லை. பரமசிவத்தின் மிதியில் அவள் இறந்தது முடிவானவுடன் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக்கி கிணற்றுக்குத் தூக்கிப் போனார். பெருங்கல்லோடு அவளைச் சேர்த்து நைலான் கயிற்றால் கட்டி உள்ளே தள்ளியபோது அவரையும் மீறி கொஞ்சம் அழுகை வந்தது. வேட்டி நுனியில் கண்களைத் துடைத்துக் கொண்டு வேகமாக வந்து படுத்துக் கொண்டார். அதன் பிறகு நடந்ததெல்லாம்தான் உங்களுக்குத் தெரியுமே.

இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. ராமசாமியும் அதே கிணற்றுக்குள்தான் இரண்டு நாட்களாகக் கிடக்கிறார் என்று எனக்கும், பரமசிவத்துக்கு மட்டும்தான் தெரியும். இப்பொழுது உங்களுக்கும் சொல்லியாகிவிட்டது. ஆனால் எப்படிக் கொன்றார் என்று எனக்கும் தெரியவில்லை. ஆசுவாசமாக ஒரு நாள் அவரிடம் கேட்டுவிட்டு உங்களுக்குச் சொல்கிறேன். அதுவரை வெளியில் சொல்லாமல் வைத்துக் கொள்ளுங்கள்.

May 3, 2013

தலைவா...


ஐம்பத்தியேழு வயது. கறுப்பும் வெள்ளையும் கலந்த தாடி. குல்லா, பழைய லுங்கி, வெள்ளை நிற பைஜாமா.... இது ஒரு நார்மலான இஸ்லாமிய பெரியவரின் கெட்டப்தானே?...கெட்டப் சாதாரணம்தான்...ஆனால் இந்த பெரியவரின் கதை சற்று வித்தியாசமானது....

இஸ்மாயில் எப்பொழுதும் இந்த கெட்டப்பில்தான் இருப்பார். இப்பொழுது முன்பு இருப்பதைவிடவும் தேஜஸூடன் இருந்தார். முன்பு என்றால் மூன்று வருடங்களுக்கு முன்புவரை. துல்லியமாகச் சொன்னால் மூன்று வருடங்கள் ஐந்து மாதங்களுக்கு முன்பு வரை. அப்பொழுதுதான் மும்தாஜ் படுக்கையில் விழுந்தாள். மும்தாஜ் யாரென்று சொல்லவில்லை அல்லவா? சொல்லாவிட்டால் என்ன? உங்களால் யூகம் செய்ய முடியும். இஸ்மாயிலின் மனைவிதான். 

சிறுவயதில் இஸ்மாயிலும் மும்தாஜூம் ஒரே வீதியில்தான் குடியிருந்தார்கள். இரண்டு பேரின் அப்பாவும் மார்க்கெட்டில் கடை போட்டிருந்தார்கள். ஒருவர் பூக்கடை இன்னொருவர் காய்கறிக்கடை. யார் எந்தக் கடை வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் அத்தனை முக்கியமான சமாச்சாரம் இல்லை. இஸ்மாயிலுக்கும் மும்தாஜூக்கும் பரஸ்பரம் இருவரையும் பிடித்தது. ஆனால் வெளிப்படையாக யாரிடமும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன், அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டதில்லை. அல்லாஹ்வின் கருணையாலோ என்னவோ அவர்களது பெற்றோர்களே சம்பந்தம் பேசி திருமணத்தை முடித்து வைத்துவிட்டார்கள். 

முதல் மூன்று வருடங்களுக்கு மும்தாஜின் வயிற்றில் புழுவும் வளரவில்லை பிள்ளையும் வளரவில்லை. அலோபதியிலிருந்து யுனானி மருத்துவம் வரை எந்த வைத்தியமும் கை கொடுக்கவில்லை. “வீட்டில் விசேஷம் இல்லையா?” என்று நச்சரிக்கத் துவங்கியிருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்வது பெரிய எரிச்சலாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. எதையாவது சொல்லித்தான் ஆக வேண்டும். ஒரு கட்டத்தில் மும்தாஜ் மனம் தளர்ந்திருந்தாள். இஸ்மாயிலும்தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காதவிதமாக மூன்றாம் வருடத்தில் கருத்தரித்துவிட்டாள். அப்படிப் பிறந்தவள்தான் அஸ்மா. அதன் பிறகு ஒவ்வொரு ஒன்றரை வருட இடைவெளியிலும் மும்தாஜ் ஒரு குழந்தையைப் பெற்றாள். மூன்றுமே பெண்ணாக போக, “இத்தோடு போதும்” என்று நிறுத்திக் கொண்டார்கள். அஸ்மாவுக்கு பிறகு ஹசீனா அவளுக்கு அடுத்தவளின் பெயர் ஷாஹினா.

இதன் பிறகு இஸ்மாயிலின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. ஆரம்பத்தில் லாரியில் க்ளீனராக இருந்தவர் பிறகு மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு செல்லும் ஆட்டோ ஓட்டத் துவங்கினார். தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வளர்ச்சியயைக் காட்டிக் கொண்டிருந்தார். சொந்த ஆட்டோ, சொந்த வேன், வீடு, குடும்பத்தோடு ஹஜ் பயணம் என அக்கம்பக்கத்தினருக்கு வயிறெரியும்படியான வளர்ச்சி அது. அவர் கடத்தல் செய்வதாகவும், கள்ள நோட்டுக்கு ஏஜெண்ட்டாக இருப்பதாகவும் இன்னும் என்னனவோ எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மும்தாஜூம் அவளது பிள்ளைகளும் பூரித்துக் கிடந்தார்கள். 

மூன்று பெண்களும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். ஆனால் ஹசீனா மட்டும்தான் கல்லூரி வரைக்கும் சென்றாள். மற்ற இரண்டு பேரும் பள்ளி தாண்டியதே பெரும்பாடாக இருந்தது. மும்தாஜூம், இஸ்மாயிலும் ஓவராக செல்லம் கொடுப்பதாக அந்த பள்ளியின் தலைமையாசிரியர் இருவரையும் அழைத்து கண்டித்தார். ஆனால் இருவரும் அது பற்றி சிரத்தை காட்டவில்லை.  “படிச்சவரைக்கும் போதும்” என பெண்களும் வீட்டிலேயே அம்மாவுக்கு ஒத்தாசையாக இருந்து கொண்டார்கள். இப்படி ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில்தான் அந்தப் புயல் அடித்தது. மூன்று வருடம் ஐந்து மாதங்களுக்கு முன்பான புயல். 

வீட்டிற்கு முன்பாக ஏதோ ஒரு வேலையாக நடந்து போனவளை குடித்துவிட்டு கார் ஓட்டி வந்த ‘அடையாளம்’ தெரியாத நபர் அடித்து வீசிவிட்டார். வெளியேறிய ரத்தத்தை பார்த்தவர்கள் அப்பொழுதே அவள் முடிந்து போனதாக நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் ஆகியிருக்கவில்லை. தூக்கிக் கொண்டு பக்கத்து மருத்துவமனைக்கு ஓடிய போது அவர்கள் உடனடியாக பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்பி வைத்தார்கள். ப்ளட் டெஸ்ட்டில் ஆரம்பித்து ஸ்கேன் வரைக்கும் அத்தனையும் முடித்து பார்த்த போது தண்டுவடத்தில் அடிபட்டிருப்பதாகவும் இடுப்புக் கீழே இனி இயங்காது என்றும் சொல்லிவிட்டார்கள்.

இஸ்மாயில் தன் வாழ்நாளின் மிகப்பெரியதான அதிர்ச்சிக்கு ஆளானார். அதே மருத்துவமனையில் மூன்று பெண்களும் கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருந்தார்கள். இஸ்மாயில் இன்னொரு பக்கம் அழுது கொண்டிருந்தார். அந்த இடத்தில் யாரும் யாரையும் சமாதானம் படுத்துவதாக இல்லை. ஆறு மாதங்களுக்கு சென்னையில் ஒரு பெரிய மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்தார்கள். முன்னேற்றம் எதுவும் இல்லை. இஸ்மாயில் இந்தச் சமயத்தில் தனது சொந்த வேன்கள் மூன்றையும் டிரைவர்களை நம்பி விட்டிருந்தார். அவர்கள் ஐந்நூறு ரூபாய்க்கு டீசல் அடித்துவிட்டு ஆயிரம் ரூபாய் கணக்கு காட்டிக் கொண்டும், சரக்குகளின் வாடகையில் ‘நியூட்டர்’விட்டுக் கொண்டும் இருந்தார்கள். இஸ்மாயிலுக்கு அப்பொழுது அது பற்றிய எந்தக் கவலையும் இல்லை- மும்தாஜ் நடமாடினால் போதும் என்று மட்டும்தான் நினைத்தார்.  

சிங்கப்பூர் அழைத்துச் சென்றால் வாய்ப்பிருக்கிறது என்று யாரோ சொன்னதால் அதையும் முயன்று பார்த்துவிட முடிவு செய்தார்கள். வீடு அடமானத்திற்கு போனது. கட்டுபடியாகவில்லை என்று விற்பனையும் ஆனது. ஆனாலும் மும்தாஜ் அப்படியேதான் இருந்தார். மும்தாஜூக்கு நன்றாக பேச்சு வந்தது. “நம் ஊருக்கே போய்விடலாம்” என்பதில் பிடிவாதமாக இருந்தார். திரும்பி வந்த போது வாடகை வீட்டில்தான் குடியேறினார்கள். அதன் பிறகு சிறுநீர்ப்பாதையில் தொற்று, சிறுநீரக செயலிழப்பு என மும்தாஜின் பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டே போனால் வெறும் சோகக் கதையாக முடிந்துவிடும் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

இப்படியான பல பிரச்சினைகளுக்கு பிறகு அடுத்த சில மாதங்களில் மும்தாஜ் அவர்களை விட்டு நீங்கிவிட்டார். இடைப்பட்ட காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தனது மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க மும்தாஜ் விரும்பியதால் அஸ்மாவுக்கு சொந்தக்காரப் பையனை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். திருமணச் செலவுகளுக்காக ஓடிக் கொண்டிருந்த மூன்று வேன்களில் இரண்டை விற்க வேண்டியிருந்தது. அடுத்த சில மாதங்களில் இரண்டாவது மகள் ஹசீனாவுக்கும் திருமணம் நிச்சயமானது. மாப்பிள்ளை துபாய் வாசம். ஹசீனா படித்திருந்ததால் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ‘வாழ்ந்து நொடிந்த’குடும்பம் என்று மாப்பிள்ளை வீட்டாரே செலவுகளைச் செய்து திருமணத்தை முடித்துக் கொண்டார்கள்.

மனைவி மறைந்த பிறகு இப்பொழுது கொஞ்ச நாட்களாக இஸ்மாயில் தானே வேன் ஓட்டுகிறார். ஓசூருக்கும் சேலத்திற்கும் ரெகுலர் சர்வீஸ் அடிக்கிறார். வண்டி ஓட்டுவது அவருக்கு பெரிய சிரமமாக இல்லை. முன்பெல்லாம் லாரிகளுக்கும்,வேன்களுக்கும் க்ளீனர்கள் உண்டு. இஸ்மாயிலே கூட க்ளீனராக வாழ்க்கையை ஆரம்பித்தவர்தான். ஆனால் இப்பொழுதெல்லாம் யாரும் க்ளீனராக வருவதில்லை. தானே வலம் இடம் பார்த்து, ரிவர்ஸ் பார்த்து திருப்புவதுதான் இஸ்மாயிலுக்கு சிரமம். மற்றபடி இரவில் வண்டி ஓட்ட வேண்டியிருந்தால் பெரும்பாலும் பி.பி.ஸ்ரீனிவாஸோ, நாகூர் அனீபாவோ துணை இருப்பார்கள்.

இந்த காலகட்டத்தில் மூன்றாவது பெண்ணுக்கும் திருமணத்தை முடித்துவிட்டால் தனது கடமைகள் முடிந்துவிடும் என இஸ்மாயில் நம்பத் துவங்கியிருந்தார். ஷாஹினாவுக்கு அப்பாவை விட்டு பிரிவதில் அத்தனை விருப்பமில்லாமல் இருந்தது. ஆனால் எதிர்த்து எதுவும் பேசாமல் இருந்தாள். 

சில நாட்களுக்கு முன்பாக இஸ்மாயில் தனது பால்ய நண்பரான அபிபுல்லாவை சந்தித்தார். அவர் தனக்குத் தெரிந்த பையன் ஒருவனை ஷாஹினாவுக்கு முடித்துவிடலாம் என்றார். பையனுக்கு வேலையும் இல்லை, குடும்பமும் இல்லை. ஒழுக்கமான பையன் என்பது மட்டும்தான் தகுதி. பிழைப்புக்கு என்ன செய்வது என்று யோசித்த போது தனது வேனையே மாப்பிள்ளைக்கு கொடுத்துவிடலாம் என்று இஸ்மாயில் முடிவு செய்தார். பையனுக்கும் சம்மதம்தான். சாஹினாவும் தலையாட்டிவிட்டாள்.

நேற்றிரவு தனது வேனில் கடைசி ட்ரிப்பை ஓட்டிக் கொண்டிருந்தார். பெங்களூரிலிருந்து சென்னைக்கு. இந்த ட்ரிப்புக்கு பிறகு திருமண வேலைகளைத் தொடங்க வேண்டும். இரவு பன்னிரெண்டு மணி ஆகிக் கொண்டிருக்கிறது. “இறைவனிடம் கையேந்துங்கள்..அவன் இல்லையென்று சொல்லுவதில்லை” என்று ஹனீபா பாடிக் கொண்டிருக்கிறார். ஆம்பூர் தாண்டிய பிறகு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் பாரம் சுமந்த வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வண்டியிலிருந்து முப்பது அடிக்கு முன்பாக சாலையின் குறுக்காக பெரிய மரம் போல ஒன்று கிடக்கிறது. இஸ்மாயில் லைட்டை அணைத்து ப்ரைட் ஆக்கினார். மரமேதான். ஏதோ விபரீதம் நடக்கிறது என இஸ்மாயில் யூகம் செய்து கொண்டார். அத்தனை எடையோடு வண்டியை வேகமாக ‘யூ டர்ன்’ அடிக்க முடியாது. வண்டியை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. 

வண்டியை நிறுத்தியவுடன் ‘திபுதிபுவென’ நான்கைந்து பேர் ஓடி வந்தார்கள். இஸ்மாயில் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயந்து கொண்டிருந்தார். வந்தவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. இஸ்மாயிலை வண்டியை விட்டு இறங்கச் சொன்னார்கள். ஆனால் எதுவும் பேச அனுமதிக்கவில்லை. “பாய், உசுரு வேணும்ன்னா இடத்தை காலி பண்ணிடுங்க” என்றார்கள்.  தன் கதைகளைச் சொல்ல முயற்சித்தார். அதில் ஒருவன் “தலைவர் ஜெயிலில் இருக்காரு...பேசாம போயிடுங்க” என்றான். இஸ்மாயில் சொல்வதை கேட்க அவர்கள் தயாராக இல்லை. இஸ்மாயிலுக்கு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவதுதான் நல்லது என்று தோன்றியது.

மனமே இல்லாமல் நகர்ந்தார். அவரது கால்கள் பாரமாக இருப்பது போலத் தோன்றியது. தனது மகளின் வாழ்க்கையை கைவிடுவதாக தயங்கினார். முரட்டு ஆசாமிகள் தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். போலீஸ் வந்துவிட வேண்டும் என இஸ்மாயில் எதிர்பார்த்தார். ஆனால் யாரும் வரவில்லை. நூறு மீட்டர் தாண்டியிருப்பார். இப்பொழுது வேன் எரியத் துவங்கியிருந்தது. திரும்பிப்பார்க்கத் தோன்றவில்லை. நெருப்புச் சத்தம் காதில் கேட்கத் ஆரம்பித்திருந்தது. அந்தச் சத்தம் ஏனோ மும்தாஜ் அழுவது போலவோ ஷாஹினா சிரிப்பது போலவோ இருந்தது. 

Mar 21, 2013

புதுமாப்பிள்ளையின் முதல் சில நாட்கள்


கல்யாணம் முடிந்து பன்னிரெண்டு நாட்கள்தான் ஆகியிருக்கிறது. எனக்கு இல்லை- ரவிக்கு. அவனுக்கு கல்யாணம் ஆனாலும் ஆனது பன்னிரெண்டு நாட்களாகவே மாமனார் வீட்டில்தான் சுகவாசம். பெயரளவில்தான் சுகவாசம் உண்மையில் ரவி டார்ச்சராகிக் கிடக்கிறான். வீட்டை விட்டு அவனை தனியாக வெளியே விடுவதில்லை. கவிதாவுடன் வேண்டுமானால் வெளியே செல்லலாமாம் ஆனால் ஆறு மணிக்குள் வீட்டிற்கு திரும்பிவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். சினிமாவுக்கு போவதென்றாலும் கூட ‘மேட்னி ஷோ’போகச் சொல்லி சாவடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியே போக வேண்டாம் என்று சொன்னால் கூட ரவி ஏற்றுக் கொள்வான். ஆனால் அதற்கு ஒரு டப்பா காரணம் சொல்கிறார்கள். புதுமாப்பிள்ளையிடம் மாலை வாசம் அடிக்குமாம்- கல்யாணத்தின் போது அணிந்திருந்த பூமாலையின் வாசம்தான். பொழுது சாய்ந்த பிறகு இந்த வாசத்தோடு வெளியே சென்றால் காத்து கருப்பு பிடித்துக் கொள்ளும் என்று சொல்லி கடுப்பேற்றுகிறார்கள். பதினைந்து நாட்களுக்கு பிறகு வேண்டுமானால் வெளியே செல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். அப்பொழுது வாசம் போய்விடும் போலிருக்கிறது. மாமியார் ரவியிடம் பேச்சுக் கொடுத்துக் கூட பேசுவதில்லை. மாமனார்தான் இந்த அழிச்சாட்டியத்தை செய்து கொண்டிருக்கிறார். இந்த ரூல்ஸையெல்லாம் கவிதாவிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிடுகிறார். ரவிக்கு கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட் மாதிரிதான்.

பன்னிரெண்டு நாளும் இரவில் என்ன செய்கிறான் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் பகலில் நடக்கும் ஒரே உருப்படியான காரியம் சோறு தின்பதுதான். மூன்று வேளையும் விதவிதமான சோறாக்கி போடுகிறார்கள். அதில் நிறைய ஐட்டங்களை ரவி இப்பொழுதுதான் முதன்முதலாக கண்ணிலேயே பார்க்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சோறு மட்டும்  இல்லை நேராநேரத்துக்கு காபி, டீ, மிக்சர், போண்டா என்று மாமியார் வீட்டில் படம் காட்டுகிறார்கள். 

முதலில் ரவியிடம் பேசுவதற்கே வெட்கப்பட்ட கவிதா கடந்த ஐந்தாறு நாட்களாக அவனுக்காக உருகுகிறாள். அவனது இலையை பதார்த்தங்களால் நிரப்புவதிலிருந்தே அவன் மீதான பிரியத்தை புரிந்து கொள்ள முடியும். ரவியின் அருகாமையும் அரவணைப்பும் அவளுக்கு வேறொரு உலகத்தை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தது. ரவியும் ஒன்றும் சும்மா இல்லை. மினுமினுக்கும் ப்ரேஸ்லெட்டும், மைனர் செயினும், மோதிரமுமாக சுற்றுகிறான். எல்லாமே கல்யாணத்திற்கு மாமனார் வீட்டில் செய்து கொடுத்திருக்கிறார்கள். மடமடப்பான புது லுங்கி, வெளுப்பான பனியன், மழித்த முகம் என்று ஆளே கிட்டத்தட்ட மாறிவிட்டான். வெளியில் போகாமல் இருப்பதைக் கூட சமாளித்துவிடலாம். மச்சினிச்சிகளைத்தான் சமாளிக்க முடிவதில்லை. வெயிட்...வெயிட்..குண்டக்க மண்டக்க நினைக்காதீர்கள்.

மச்சினிகள் செய்யும் அட்டகாசங்களை ரவியால் அடக்க முடிவதில்லை என்றுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேற்றிரவு கவிதாவின் சித்தி மகள் வந்திருந்தாள். அவள் பெயர் ரவிக்கு ஞாபகத்தில் இல்லை. கல்லூரியில் படிக்கிறாளாம். நேற்று ஏதோ பேசிக் கொண்டிருந்தவள் “மச்சான் முகம் இப்படி உப்பிக் கெடக்கு, ராத்திரியில தூக்கமில்லையோ” என்று கிண்டலடிக்க ரவிக்கு தூக்கி வாரிப்போட்டது. இப்படி கிண்டலை எதிர்கொள்வது ரவிக்கு புதிது. அதுவும் பெண்களிடமிருந்து தாக்குதல் என்பதால் திகிலடித்துக் கிடந்தான். கவிதாவை அழைத்தான். தனது தங்கைகளிடமிருந்து அவனை காப்பாற்றிவிடுவாள் என்று நம்பித்தான் அழைத்தாள். அவளிடமும் “அக்கா, மச்சானுக்கு பாதாமும் முந்திரியும் கொடு. உனக்குத்தான் பிரையோஜனப்படும்” என்றாள்.  ஷாக் ஆன கவிதா அந்த இடத்திலிருந்து வெட்கப்பட்டவளாக ஓடிவிட்டாள். இப்படித்தான் ரவி திணறிக் கொண்டிருக்கிறான்.

பன்னிரெண்டு நாட்கள் முடிந்துவிட்டது. இதற்கு மேல் தாங்க முடியாது என இன்று காலையில்தான் மாமனார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு மனைவியோடு கிளம்புவதாக முடிவு செய்துவிட்டான். இன்னும் மூன்று நாட்கள் ஆகட்டும் என்ற பேச்சுகளை நாசூக்காக தவிர்த்தான். ரவியின் ஊருக்கும் மாமனார் ஊருக்கும் அதிகம் தொலைவு இல்லை. ரவியின் மாமனார் எந்த ஊர் என்றே சொல்லவில்லை பார்த்தீர்களா? புளியம்பட்டி தெரியுமா?. அன்னூருக்கும் அவினாசிக்கும் இடையில் இருக்கும் அதே புன்செய் புளியம்பட்டிதான். அந்த ஊருக்கு பக்கத்திலிருக்கும் கவுண்டம்பாளையம்தான் ரவிக்கு சொந்த ஊர். இந்த ஊர் ரொம்ப ஃபேமஸ். நடிகர் சிவக்குமார் இருக்கிறாரல்லவா? அவரின் மனைவி இந்த ஊர்க்காரர்தான். சூர்யாவின் அமத்தா, அப்பிச்சியெல்லாம் இன்னமும் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. சூர்யா முன்னொரு காலத்தில் சரவணனாக ட்ரவுசர் போட்டு திரிந்த கதைகளை ரவியின் அம்மா சொல்லியிருக்கிறார். ஒரு காலத்தில் இந்த ஊரில் புகையிலை வியாபாரம் கொடிகட்டிக் கொண்டிருந்தது. ரவியின் அப்பா கூட புகையிலை வியாபாரிதான். இப்பொழுதெல்லாம் மழையும் இல்லை தண்ணியும் இல்லை. அந்த ஊரில் இருந்துதான் ரவி தினமும் புளியம்பட்டி மில்லுக்கு வேலைக்கு போய்வருகிறான். 

ரவியின் மாமனார் கொஞ்சம் வசதியானவர். புளியம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஹோட்டல் வைத்திருக்கிறார். ரவி அவ்வப்போது இந்த ஹோட்டலுக்கு சாப்பிட வருவதுண்டு. தனது சாதிக்காரன் என்று தெரிந்து கொண்ட பிறகு மாமனாருக்கு ரவி மீது சற்று கவனம் அதிகம். கெட்டபழக்கம் இல்லாத பையன் என்பதால் வசதி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று ரவிக்கு தன் மகளை கட்டி வைத்துவிட்டார். ரவியின் மாமியாருக்கு இந்த சம்பந்தத்தில் ஆரம்பத்தில் விருப்பமில்லைதான். ஆனால் ரவிக்கு கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை. அப்பாவும் எப்பவோ போய் சேர்ந்துவிட்டார். அம்மா மட்டும்தான். பிக்கல் பிடுங்கலில்லாத குடும்பம் என்று அவரும் சம்மதித்துவிட்டார்.

கல்யாணத்திற்கு பிறகு மாப்பிள்ளையையும் கூடவே வைத்துக் கொண்டு ஹோட்டல் பொறுப்புகளை ரவியிடம் கொடுத்துவிட விட வேண்டும் என்று மாமனார் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் திருமணம் ஆனதும் ஆகாததுமாகச் சொன்னால் மாப்பிள்ளை வேறு மாதிரி எடுத்துக் கொள்ளக் கூடும் என்று அமைதியாக இருந்துவிட்டார். கொஞ்ச நாட்களுக்கு அதே மில் வேலைக்கு போய் வந்தால் தப்பில்லை என்று நினைத்திருந்தார். ஆனால் ரவியின் பைக்தான் மாமனாரின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. அரதப்பழசான அதை தனது மருமகன் ஓட்டுவதில் அவருக்கு விருப்பமில்லை. மாற்றிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

ரவியும், கவிதாவும் கவுண்டம்பாளையத்திற்கு கிளம்பினார்கள். கவிதா அடக்கமாட்டாமல் அழுதாள். அவளது அம்மாதான் சமாதானப்படுத்தினார். ரவியின் மாமனாருக்கும் மகளை பிரிவது குறித்து வருத்தம்தான். தனது கவனத்தை சிதறடிக்கும் விதமாக ரவியிடம் பேச்சுக் கொடுத்தார். “ஊருக்கு போயிட்டு ஒரு நாள் சாயந்திரமா புளியம்பட்டி வாங்க மாப்ள. ஒரு பைக் புக் பண்ணிடலாம்” என்றார். ரவி தலையாட்டிக் கொண்டான். ரவிக்கு அந்த வார்த்தைகள் உற்சாகமானதாக இருந்தன. தனது செகண்ட் ஹேண்ட் பைக்கை இனிமேல் ஓட்ட வேண்டியதில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது.

பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும்போதே கவிதாவிடம் “இன்னைக்கு சாயந்திரமே புளியம்பட்டி போய்ட்டு வரட்டுமா?” என்றான். கவிதாவுக்கு அதில் மறுப்பு சொல்ல எதுவுமில்லை. வீட்டில் ரவியின்  அம்மாதான் இரண்டொரு நாள் கழித்து போகலாம் என்றார். ஆனால் ரவிக்கு இருப்பு கொள்ளவில்லை.  தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அடுத்த அரை மணி நேரத்தில் மாமனாரின் ஹோட்டலில் இருந்தான். அந்தச் சமயத்தில் மாமனார் வெளியே சென்றிருந்தார். அவர் வரும் வரைக்கும் தந்தி பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தான். கள்ளக்காதல் செய்திகளால் பக்கங்கள் நிரம்பியிருந்தன. அரை மணி நேரம் இருக்கும். மாமனார் வந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டான். அவரும் தூரத்திலேயே இவனது பைக் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டார்.

இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். “போய் பைக் புக் பண்ணிடலாங்களா?” என்றார். 

ஃபார்மாலிட்டிக்காக “இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்றான். ஆனால் இன்றே செய்துவிட வேண்டும் என்று உள்ளூர ஆசைப்பட்டான்.

“வந்ததது வந்துட்டீங்க. அப்புறம் எதுக்கு தவணை” என்று சொல்லி அழைத்துச் சென்றார்.

ஏற்கனவே பைக் பற்றியெல்லாம் முடிவு செய்து வைத்திருந்தான். நீல நிற சூப்பர் ஸ்பெண்டர் புக் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். ஹீரோ ஷோரூமுக்கு வெளியிலேயே பூக்கடை இருந்தது. தனது மகளுக்கு ஒரு முழம் மல்லிகைப்பூவை வாங்கி ரவியிடம் கொடுத்துவிட்டு சிரித்தார். அதை சிரிப்பு என்று சொல்ல முடியாது. முறுவல் எனலாம்.

“கவிதாவ பார்த்துக்குங்க மாப்ள. பொசுக்குன்னு ஏதாச்சும் பேசிப் போடாதீங்க” என்ற போது ரவியின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். அது ஒருவித கெஞ்சலான தொனி. அவரது கைகளில் ஈரப்பதம் இருந்தது. ஈரப்பதத்தையும் மிஞ்சிய கதகதப்பும் இருந்தது. ரவிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பூவை பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துவிட்டு “கவலைப்படாதீங்க மாமா” என்றான். அவருக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது. பேச்சை மாற்ற விரும்பியிருப்பார் போலிருக்கிறது.

“டீ குடிக்கலாங்களா?” என்றார்.

“வேண்டாங்க மாமா. இப்பவே லேட்டாகிடுச்சு” என்றான். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். சாயுங்காலத்தில் அவன் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறான் என்ற பிரக்ஞை வந்தவராய் அவனை வீட்டிற்கு போகச் சொல்லி அறிவுறுத்தினார். மாமனாரை அவரது ஹோட்டலில் விட்டுவிட்டு ரவி உடனே கிளம்பிவிட்டான். இன்னும் இருபது நிமிடங்களுக்குள் ஊருக்கு போய்விடுவான். மல்லிகைப்பூ வாசனை அவனது முகத்தில் வீசிக் கொண்டிருந்தது.

புளியம்பட்டியிலிருந்து கவுண்டம்பாளையம் செல்வதற்கு நால்ரோடு தாண்டித்தான் போக வேண்டும். ரவி இடது பக்கம் திரும்ப வேண்டும். திரும்பவதற்கு பதிலாக கோயமுத்தூர் சாலையில் நேராக போய்க் கொண்டிருந்தான். காரணமாகத்தான். அந்தப்பக்கம் ரங்கநாதன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்தே பல காலம் ஆகிவிட்டது. பேசிவிட்டு போய்விடலாம் என்றுதான் நினைத்தான். ரங்கநாதனும் இவனை பார்த்துவிட்டு கையசைத்தான். ரவி நால்ரோட்டிலிருந்து ஐம்பது மீட்டர் கூட தாண்டியிருக்க மாட்டான். அவிநாசியிலிருந்து பால் வேன் ஒன்று படு வேகமாக வந்து கொண்டிருந்தது. சாலையில் இருக்கும் தடுப்பரண்களை மோதவிருக்கும் சமயத்தில்தான் அதை தவிர்ப்பதற்காக டிரைவர் ப்ரேக்கை அழுத்தினார். அது எந்த பலனையும் தரவில்லை. இழுத்துக் கொண்டு சென்ற வேன் ரவியின் பைக் மீது மோதியது. அடித்த வேகத்தில் இரண்டு அடி உயரத்துக்கு வண்டியிலிருந்து மேலெழும்பிய ரவி கீழெ விழுந்தான். ரங்கநாதன் ஓடி வந்தான். ரவி பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான். காதில் ரத்தம் வரத் துவங்கியது. ரங்கநாதன் பதறிக் கொண்டிருந்தான். பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த பூ சிதறிக்கிடந்தது என்று சொன்னால் ‘க்ளிஷே’வாகத்தான் இருக்கும். ஆனால் அப்படித்தான் கிடந்தது. 

கவுண்டம்பாளையத்திற்கு தகவல் போவதற்கு இன்னும் சில நிமிடங்களாவது ஆகும். ரவியின் அம்மா சாமி படங்களுக்கு முன்பு விளக்கு பற்ற வைத்துக் கொண்டிருந்தார். கவிதா சட்னி அரைப்பதற்கு அம்மிக்கல்லைக் கழுவிக் கொண்டிருந்தாள்.
                                            *************

பிற கதைகளை வாசிக்க: மின்னல் கதைகள்