Sep 24, 2013

மைனர் கவுண்டன் கதை

ரத்தினசாமி கவுண்டரிடம் விதி விளையாடி இந்த புரட்டாசி சனிக்கிழமை வந்தால் ஒரு வருடம் முடிகிறது. விளையாடியது விதி இல்லை. உள்ளூர் சக்கிலி பையனும் ஒரு மூப்பனும்தான்.  அதுவரைக்கும்- அதாவது, சென்ற வருடம் வரைக்கும் ஊருக்குள் கவுண்டரின் மிரட்டல் என்ன?பன்னாட்டு என்ன? ம்ஹூம். அத்தனையும் முடிந்து விட்டது. ஆடிய ஆட்டத்தையெல்லாம்முப்பத்தி ஐந்து வயதில் மூட்டை கட்டியாகிவிட்டது. இப்பொழுது பாருங்கள்.சுருண்டு விழுந்து கிடக்கிறார். ஆள் மட்டுமா சுருண்டு கிடக்கிறார்? எல்லாமும் சுருண்டாகிவிட்டது.

அந்தக் காலத்திலிருந்தே சுற்றுவட்டாரத்தில் பெரிய பண்ணையம் என்றால் அது கவுண்டர் வீடுதான். மஞ்சக்காடு மட்டும் முப்பது ஏக்கர் தேறும். அது போக வயல் பதினாறு ஏக்கரும் மேட்டாங்காடு இருபது ஏக்கரும் சேர்த்தினால் போட்டிக்கு பக்கத்தில் ஒருத்தனும் வர முடியாது. அத்தனை சொத்து. மல்லு வேட்டியும், ரேக்ளா வண்டியும், வெற்றிலையுமாக சுற்றும் அளவிற்கு கவுண்டரின் தாத்தா காலத்திலேயே சம்பாதித்த சொத்துக்கள் இவை. சேர்த்த சொத்துபத்தில் தாத்தாவே பாதியை தொலைத்துவிட்டாராம். கூத்தியா வீட்டிலேயே குடியாகக் கிடந்து தொலைத்தார் என்பார்கள். உள்ளூரிலேயே ஒன்றுக்கு மூன்றாக வைத்திருந்தாராம். அது போக பக்கத்து பட்டணத்தில் ஒன்று. ரத்தினத்தின் பாட்டியை உட்கார வைத்து கேட்டால் ஒவ்வொரு கதையும் விடிய விடிய கேட்கலாம். அத்தனை கதை இருக்கிறது. அப்படியிருந்தும் நஞ்சை புஞ்சையைக் காப்பாற்றிவிட்டான் அந்தக் கிழவன். 

ஆனால் ரத்தினத்தின் அப்பா மோசமில்லை. சொத்து சேர்க்கவும் இல்லை, தொலைக்கவும் இல்லை. அந்த மனுஷன் ஒரு மதுக்கான். சீட்டாடவும் தெரியாது பொம்பளை பொறுக்கவும் தெரியாது. அதுவும் இல்லாமல் வீட்டில் பொண்டாட்டி பன்னாட்டுதான். வெளியே தொடுப்பு ஏதாவது இருக்கிறது என்று தெரிந்தால் கூட ‘அறுத்து’ வீசிவிடுவாள். என்னதான் புருஷனை கட்டுக்குள் வைத்திருந்தாலும் புள்ளை வளர்க்கத் தெரியாமல் ஏமாந்துவிட்டாள். 

தாத்தன் புத்தி அப்படியே ரத்தினசாமி கவுண்டருக்கு வந்துவிட்டது. ஊரில் ஒரு பெண்ணை விட்டுவைக்காமல் மேய்ந்து கொண்டிருப்பதாக அவரின் அம்மா திட்டுவதுண்டு. ஆனால் பதினேழு வயதிலேயே தினவெடுத்து திரிந்த கவுண்டனுக்கு இதெல்லாம் காதிலேயே விழுந்ததில்லை. ஆரம்பத்தில் பக்கத்து தோட்டத்து கவுண்டச்சி, மூப்பன் பெண்டாட்டி என்றுதான் திரிந்தார். ஆனால் அந்தக் கவுண்டனும், மூப்பனும் சாடைமாடையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். பேச ஆரம்பிப்பது என்றால்  ‘பள்ளத்தில் வைத்துக் கொன்று போட்டுவிடுவோம்’ என்கிற ரீதியில். அப்படியும் எச்சில் வட்டலில் வாய் வைக்கும் நாயாகத்தான் திரிந்தார். ஒரு பெளர்ணமியும் அதுவுமாக மூப்பன் கள்ளை குடித்துவிட்டு கத்தியைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டான். இதுவே வேறு காரணமாக இருந்தால் ரத்தினக் கவுண்டரின் அம்மா மூப்பனை உண்டு இல்லை என்றாக்கியிருப்பாள். ஆனால் மிகுந்த துக்கத்துடன் ‘எம் பெண்டாட்டியை உடச் சொல்லுங்க’ என்று கேட்கிறான். எப்படி சண்டைக்கு போவது? ‘காலையில் பேசிக்கலாம் போய் தூங்குடா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி துரத்திவிட்டாள்.

மூப்பன் புலம்பிக் கொண்டே போன பிறகு ‘சாணாத்தி கூட படுக்கிறானே மானமே போகுது’ என்று ஒப்பாரி வைத்து ஊரையே கூட்டிவிட்டாள். மூப்பனை விட அம்மாதான் அதிகமாக மானத்தை வாங்கிவிட்டாள். அதன் பிறகு ஊருக்குள் சாடை பேசத் தொடங்கிவிட்டார்கள். முளைச்சு மூணு இலை விடாத பிஞ்சுகள் கூட ‘உங்களுக்கு என்னண்ணா கள்ளு சும்மாவே கிடைக்கும்’ என்று வாரத் தொடங்கிவிடார்கள். அதனால் கொஞ்ச நாளைக்கு மூப்பச்சியை பார்க்காமல் இருந்தார். கூளை வண்ணாத்தி, சரசா கொசத்தி என்று யாரிடம் போனாலும் பிரச்சினை வந்த போதுதான் இதெல்லாம் வேலைக்கு ஆவதில்லை என்று மாரியாத்தா கோவிலில் குத்த வைத்து யோசித்துவிட்டு கவுண்டச்சிகளும், இன்னபிற பலவற்றை சாதிகளும் வேலைக்கு ஆவாது என்று முடிவு செய்த பிறகுதான் சக்கிலிப் பெண்களைத் தேடத் துவங்கினார். 

உண்மையில் அந்தப் பெண்கள் பாவம். நாய் மாதிரி பாடுபட்டாலும் ஐந்து ரூபாயை தாண்டி கூலி வாங்க முடிந்ததில்லை. நோவு நொடியென்றாலும் கூட உள்ளூர் வைத்தியன் கொடுக்கும் மருந்துதான். பிழைத்து வந்தால் மூன்றாம் நாள் வேலைக்கு போக வேண்டும். இல்லையென்றால் சாக வேண்டியதுதான். அவர்களது புருஷன்களும் கடும் உழைப்பாளிகள். ஆனால் கிட்டத்தட்ட அடிமைகள் மாதிரிதான். நானூறு அல்லது ஐந்நூறு ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு கவுண்டர்கள் வருடக் கணக்கில் பண்ணையத்தில் வைத்துக் கொள்வார்கள். விடிந்தும் விடியாமலும் வந்து சாணம் வழித்துப் போட்டு, ஆடு மாடுகளை பிடித்துக்கட்டி, கட்டுத்தறியை சுத்தம் செய்து, தோட்டத்தில் களை எடுத்து, தென்னம்பிள்ளைகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, பண்டம் பாடிகளுக்கு தீவனம் அறுத்து வந்து போட்டு நிமிர்ந்து பார்த்தால் பொழுது சாய்ந்திருக்கும். மனசு வந்தால் பழைய சோற்றை கவுண்டச்சிகள் ஊற்றுவார்கள். இல்லையென்றால் அதுவும் இல்லை. இந்த அடிமை வாழ்க்கைதான் ரத்தினசாமி கவுண்டருக்கு வசதியாகப் போய்விட்டது. 

படிந்த பெண்களுக்கு இரண்டு வல்ல நெல் அல்லது கூலியில் ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுத்துவிடுவார். இந்த நெல்லுக்கும் ஒத்த ரூபாய்க்குமாகவெல்லாம் அந்தப் பெண்கள் வந்ததில்லை. பெரும்பாலும் மிரட்டலிலேயேதான் காரியம் சாதித்தார். ‘உஞ் சக்கிலியை வேலையைவிட்டுத் துரத்திவிடுவேன்’ ‘ஊரை விட்டு துரத்திவிடுவேன்’ இப்படி ஏதாச்சும் நொட்டை காரணமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த நொட்டைக் காரணங்களுக்கே பெரும்பாலும் அந்தப் பெண்கள் பயந்துவிடுவார்கள். சில பெண்களை கத்தியை காட்டிக் கூட கதறடித்திருக்கிறார். 

எத்தனை நாளைக்குத்தான் பூசணியை சோத்து வட்டலில் மறைப்பது? இந்த விவகாரமும் வெளியே தெரிய ஆரம்பித்த போது ஒரு கவுண்டச்சியை பிடித்து வந்து கட்டி வைத்து விட்டால் காளை ஊர் மேய போகாமல் கட்டுத்தறியிலேயே கிடக்கும் என்று வீட்டில் பெண் தேடத் துவங்கினார்கள். இந்த ஆளின் பூலவாக்கு அக்கம் பக்கமெல்லாம் பரவிக் கிடக்கிறது. எவன் பெண்ணை கூட்டி கொண்டு நிற்கிறான்? ஒன்றும் அமையவில்லை.

ஆனால் திருமணம் ஆகவில்லை என்றெல்லாம் கவுண்டனுக்கு எந்தக் கவலையுமில்லை. யாரோ ஒருத்தியை கிணற்று மேட்டுக்கும், மூங்கில் கொட்டாய்க்கும் தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறார். மூங்கில் கொட்டாய் பற்றி இந்த இடத்தில் சொல்லிவிட வேண்டும். தோட்டத்தில் பதினைந்து அடி உயரத்தில் மூங்கில் குச்சிகளால் மேடை அமைத்து படுகிடையாக சருகு போட்டு வைத்திருப்பார்கள். இந்த உயரத்தில் இருந்து பார்த்தால் தோட்டத்தில் நடமாட்டம் இருந்தால் தெரியும் என்று செய்து வைத்திருக்கிறார்கள். கவுண்டர் எப்பொழுதிருந்து ஊர்மேயத் துவங்கினாரோ அப்பொழுதிருந்தே இங்குதான் படுக்கை. ராத்திரி காவலுக்கும் வசதி, சேட்டைக்கும் அதுதான் வசதி.

இப்படியே பத்து பன்னிரெண்டு வருடமாகத் திரிந்த ரத்தினக்கவுண்டருக்கு வீரய்யன் பெண்டாட்டி மூலமாகத்தான் சனி வந்து சேர்ந்தது. அவள் கொஞ்சம் முரண்டுதான். ஆனால் எத்தனையோ சிட்டுக்களை பார்த்த கவுண்டர் இவளையும் மிரட்டித்தான் வழிக்குக் கொண்டு வந்தார். வந்தவள்  ‘காரியத்தை’ புருஷனிடம் சொல்லிவிட்டாள். அவனுக்கு கோபம் என்றால் கோபம் படு கோபம். ஆனால் என்ன செய்ய முடியும்? மேல் சாதிக்காரனாக போய்விட்டான். பணம் காசும் வைத்திருக்கிறான். ஊரை விட்டு போய்விடலாம் என்றால் இந்தக் காலம் மாதிரியா? அந்தக் காலத்தில் எந்த ஊருக்கு தப்பிப் போனாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். புலம்பியும் மருவியும் கிடந்தான்.

அந்த நாளிலும் அவளைக் கவுண்டன் இழுத்துக் கொண்டு போய்விட்டான். வீரய்யனுக்கு குழந்தை குட்டியும் இல்லை. எத்தனை நேரம்தான் பாயைச் சுரண்டிக் கொண்டு கிடப்பது? மூப்பனைப் பார்த்து பேசிவிடலாம் என்று கிளம்பிப் போனான். பனங்காடு சலசலத்துக் கிடந்தது. எங்கோ மழை சாரலடிக்கும் மண் வாசனை அந்த இரவுக்கு இதமாக இருந்தது. மூப்பன் ஒவ்வொரு மரமாக ஏறி இறங்கும் வரைக்கும் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான். முப்பத்தியிரண்டு பனை மரங்களில் பானை இறக்கிய போது நடுச்சாமத்தைத் தாண்டியிருந்தது.

மூப்பன் கள்ளுக் குடிக்கும் வரைக்கும் காத்திருந்தான். மூப்பன் குடித்துவிட்டு வீரய்யனுக்கும் ஊற்றினான். ஊற்றிய கள்ளை வெறுங்கையை வாயில் ஒட்டி வைத்து ஒரே முசுவாக குடித்து முடித்த போது போதை உச்சந் தலையில் ஏறத் துவங்கியிருந்தது. 

‘என்னடா வீரய்யா குசுவ புடிச்சுட்டே பொறவாலயே திரியுற?’ என்று மூப்பன்தான் ஆரம்பித்தான்.

எப்படித் துவங்குவது என்று தெரியாமல் தயக்கமாக ஆரம்பித்து ஆனால் வேகமாக மொத்தக் கதையும் விலாவாரியாக சொல்லி முடித்த போது வீரய்யன் கண்களில் துளி நீர் துளிர்த்துவிட்டது. மூப்பன் எக்காளமிட்டுச் சிரித்தான். அந்தப் பனங்காடே அதிர்ந்தது. 

‘அது என்ற காதுக்கு எப்பவோ வந்திருச்சு...அந்த வக்காரோளிய என்னதான் பண்ணுறது சொல்லு? எம் பொண்டாட்டியைமில்ல கூட்டிட்டுத் திரிஞ்சான். கொன்னு போடலாமா?’ என்று மூப்பன் கேட்ட போது வீரய்யனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.

‘அந்தக் கவுண்டச்சி ஒத்தப் புள்ளைய பெத்து வெச்சிருக்குதுங்க சாமீ...நமக்கு எதுக்கு பொல்லாப்பு..வேற ஏதாச்சும் சொல்லுங்க’ என்று வீரய்யன் சொன்னதிலிருந்து அடுத்த அரை மணி நேரத்துக்கு அதுவும் இதுவுமாக யோசித்தார்கள். கடைசியில் முடிவானதுதான் கவுண்டரின் மொத்த ஆட்டத்துக்கும் ஆப்படித்தது.

அது புரட்டாசி அமாவாசை. அதுக்கு முன்பாகவிருந்தே பத்து நாட்களாக மூப்பனும், வீரய்யனும் கவுண்டனிடன் நைச்சியமாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். ‘காசுக்கு வேண்டித்தான் காலைக் கட்டுறானுக’ என்றுதான் கவுண்டர் நினைத்திருந்தார். ஆனால் அவர்களின் திட்டம் வேறாக இருந்தது. அமாவாசையன்று புது மரக் கள்ளு இறக்குவதாகச் சொல்லி மூப்பன் அந்த ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் கவுண்டனை பனங்காட்டுக்கு அழைத்துப் போய்விட்டான். 

போனதிலிருந்தே ஊற்றிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டான். ஒரு மணி நேரத்துக்கு பிறகாக கவுண்டன் உளற ஆரம்பித்திருந்தான். மூப்பன் மனைவியைப் பற்றி அவனிடமே பேசிய போது கல்லைத் தாங்கி தலையில் போட்டுவிடலாமா என்று கூட யோசித்தான். ஆனால் வம்பாகிவிடும் என்று மேலும் மேலும் ஊற்றிக் கொண்டிருந்தான். கவுண்டனின் வயிறு புடைத்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசி இருந்து குத்தினால் நீர் நிரப்பிய பலூனிலிருந்து பீய்ச்சுவது போல வெளியேறக் கூடும்.

தூரத்திலிருந்து வந்த ஆந்தை ஒன்று இவர்களின் அருகாக வந்து போனது. இப்பொழுதும் மூப்பன் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தள்ளாடிய கவுண்டன் பாறையிலேயே சாய்ந்துவிட்டான். அவன் சாயவும் வீரய்யன் வரவும் சரியாக இருந்தது. அவர்களின் கணக்குப்படி மூங்கில் கொட்டாயில் தங்களின் திட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை வீரய்யன் செய்து முடித்துவிட்டான். வேறொன்றுமில்லை. கொட்டாயின் மேற்புறமாக நான்கைந்து மூங்கிலை உருவிவிட்டு அதன் மீது சருகை போட்டுவிட வேண்டியதுதான். கொஞ்சம் கால் பிசகினாலும் மேலே இருந்து கவுண்டன் கீழே விழுவான். இதுதான் திட்டம். என்ன இது மொக்கைத் திட்டமாக இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்? பொறுங்கள்.

வீரய்யனும் மூப்பனும் கைத்தாங்கலாக மூங்கில் கொட்டாய் வரைக்கும் கவுண்டனை அழைத்துச் சென்றுவிட்டார்கள். அதற்கு மேல் ஏற்றுவதுதான் பெரிய சிரமமாக இருந்தது. ஆனால் திட்டத்தோடு ஒப்பிடும் போது இது பெரிய சிரமம் இல்லை. திக்கித் திணறி ஏற்றிவிட்டார்கள். மேலே ஏற்றி மூங்கில் உருவாத இடமாக கவுண்டனை படுக்க வைத்துவிட்டார்கள். இனிமேல்தான் க்ளைமேக்ஸ். ஏற்கனவே கொண்டு வந்திருந்த தாம்புக்கயிறை கவுண்டனிம் கோவணத்தை விலக்கிவிட்டு ‘அதில்’ உருவாஞ்சுருக்கு போட்டு கயிற்றின் இன்னொரு முனையை மூங்கில் கொட்டாயில் மூலையில் கட்டி வைத்துவிட்டார்கள். அவ்வளவுதான். வேலை முடிந்தது.

இப்பொழுது மூப்பனும், வீரய்யனும் சற்று தள்ளி யார் கண்ணிலும் படாமல் படுத்துக் கொண்டார்கள். கவுண்டன் புரண்டு உருளுவதை பார்க்க வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் கவுண்டன் அசையாமல் செத்த பிணம் போலக் கிடந்தான். தூக்கம் கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது. இவர்களும் தூங்கிப் போனார்கள். இரண்டு மூன்று மணி நேரம் ஆகியிருக்கக் கூடும். பயங்கரமான அலறல் சத்தம். வீரய்யனும் மூப்பனும் விழித்துக் கொண்டார்கள். கவுண்டன் மூங்கில் கொட்டாயில் தொங்கிக் கொண்டிருக்கிறான். அசைந்திருப்பான் போலிருக்கிறது மூங்கில் உருவிய இடத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறான். அவனது மொத்த எடையையும் குஞ்சாமணி தாங்கிப் பிடித்திருக்கிறது. உடலைவிட்டு பிய்ந்துவிடும் போல அலறல் சத்தம். இறுகிய கயிறு வேறு வலியைக் கூட்டுகிறது. விழுந்த வேகத்தில் நரம்பெல்லாம் அறுந்திருக்கக் கூடும். ஆனால் கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக துண்டாகவில்லை. ரத்தம் கசியத் துவங்கியிருந்தது. சில கணங்களில் சுதாரித்துக் கொண்ட கவுண்டன் கயிறை பிடித்து உடல் எடையை கைகளில் தாங்கிக் கொண்டான். ஆனாலும் உருவாஞ்சுருக்கை கழட்ட முடியவில்லை. எத்தனை நேரம்தான் தொங்குவது? கையை சிறிது இளக்கினாலும் மொத்த குஞ்சாமணி கதறத் துவங்கியது. 

வீரய்யனும் மூப்பனும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிரிப்பில் பெரும் கொண்டாட்டம் இருந்தது. வீரய்யன் சிரித்த சிரிப்பில் நிற்க மாட்டாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. தாறுமாறாக கெட்டவார்த்தையில் கவுண்டனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவனை அவிழ்த்துவிடவே கூடாது என்று நினைத்துக் கொண்டார்கள்.

விடியும்போது தோட்டத்து வேலைக்கு வந்த ஆட்கள்தான் ஓடிவந்து முடிச்சை அவிழ்த்துவிட்டார்கள். அந்தப் பெண்களுக்கு சிரிப்பும் வெட்கமும் தாங்க முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு சிரிப்பை அடக்கினார்கள். அவர்கள் கவுண்டனை கீழே இறக்கிய போது கிட்டத்தட்ட மயங்கியிருந்தான். தூக்கிக் கொண்டு நாட்டு வைத்தியரிடம் போனார்கள். நாடி பிடித்து பார்த்தவர் ‘உசுருக்கு ஒண்ணுமில்ல’ என்றுவிட்டார். ஆனால் மற்றது எல்லாம் முடிந்து போனது போனதுதான். வீங்கிக்கிடந்ததை தூக்கிப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கிவிட்டார்.  ‘நாடி நரம்பெல்லாம் கத்திரிச்சு போய்டுச்சு போங்க...உசுர் பொழச்சதே பெருசு’ என்றார்.

‘இதுக்கு பொழைக்காமலே இருந்திருக்கலாம்’ என்றுதான் கவுண்டன் நினைத்திருக்கக் கூடும். ஆனால் எதுவும் பேசாமல் கிடந்தான். அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டுப் போட்டு பச்சிலை சாறு ஊற்றினார்கள். சுருண்டது சுருண்டதுதான். ஒரு வருடம் ஆகிவிட்டது. மைனர் ஷோக்கும் போயாச்சு, மல்லிப்பூவும் காஞ்சாச்சு!