ரங்குல ராட்டினம் என்றொரு தெலுங்கு படம். படத்தை இயக்கியவர் ஸ்ரீரஞ்சனி. செல்வராகவனின் அசிஸ்டெண்ட்டாம். காதல் கதைதான். காதல் முளைத்த பிறகு காதலி மிகுந்த அக்கறை காட்டுவார். அக்கறையென்றால் அக்கறை அப்படியொரு அக்கறை. ‘பிஸ்கட்டில் எக்ஸ்பையரி தேதி பார்த்துட்டு சாப்பிடு’ என்பது மாதிரியான அக்கறை. எந்தப் பையன்தான் பொறுத்துக் கொள்வான்? செமயாகக் கடுப்பாகி விலகிவிடுவான். ஆனால் அப்படியே விட்டுவிட முடியுமா? மீண்டும் காதல் எப்படி துளிர்க்கிறது என்பதுதான் படம். காதலிக்கு பெற்றவர்கள் இல்லை; காதலனுக்கு அம்மா பாதியிலேயே இறந்துவிடுவார். வெறும் காதலர்கள் மட்டும்தான். சலிப்பில்லாமல் இருக்கும். படம் ஓடியதா என்று தெரியவில்லை. சித்ரா சுக்லாதான் நாயகி. நாயகன் பெயர் மறந்துவிட்டது. நாயகன் பெயர் நமக்கு எதற்கு?
சித்ரா சுக்லாவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். படம் நன்றாக இருக்கிறது; தொடர்ந்து நடிக்க வாழ்த்துகள் என்பதுதான் சாராம்சம். நன்றி என்றொரு பதில் அனுப்புகிறார். தெலுங்கு சூழ் மக்கள் இன்னமும் இந்த நடிகையை கவனிக்கவில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் நம்மைவிட கன வேகம். நடிகர் நடிகையரை திக்குமுக்காட வைத்துவிடுவார்கள். இந்த அம்மிணிக்கும் நம் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப நேரம் இருந்திருக்காது.
தமிழில் சசிகுமாரும், சரத்குமாரும் நடிக்க நானா என்றொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் முழுக்கதையும் தெரியும். வேறொரு நடிகரை மனதில் வைத்து அந்தக் கதையைச் சொல்லியிருந்தார். அவர் சொன்ன கதையை எழுத்து வடிவத்துக்கு மாற்றித்தர இயக்குநர் நிர்மல்குமார் அழைத்திருந்தார். அன்றைய இரவில் அறையில் தங்கி எழுத வேண்டியதுதான் பாக்கி. வசனம் என்ற இடத்தில் என் பெயர் வராது போலத் தெரிந்தது. அதனால் ஓடி வந்துவிட்டேன். அந்தப் படத்தில் சித்ராதான் நடிக்கிறார் என்றொரு செய்தியை பார்த்தேன். விதி எப்படி வலியது பாருங்கள். அவருடன் பேசுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் தடுத்திருக்கிறது.
பல நாள் கழித்து எழுத வந்திருக்கிறான். சினிமாக்காரியிடமிருந்தா ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றுமே!
நேற்றொரு மனநல ஆலோசனை செய்யும் நண்பரைச் சந்தித்தேன். பெங்களூரில் இருக்கும் போது அறிமுகம். அவர் அடிப்படையில் மருத்துவர் இல்லை. ஆர்வத்தின் காரணமாக சில பட்டங்களைப் பெற்று வெறும் ஆலோசனை மட்டும் சொல்கிறவராக இருக்கிறார். சற்றே பிசகினாலும் மனம் ஒரு சிக்கல் விழுந்த நூல்கண்டாகிவிடுகிறது. அவசரப்பட்டு எதையாவது செய்யப் போக சிக்கல் இன்னமும் கடினமானதாக மாறுகிறதே தவிர எளிதாவதில்லை. இன்றைக்கு பலருக்கும் ஆலோசனை தேவைப்படுகிறது. நம்முடைய சூழல் உருவாக்கித் தரும் வாய்ப்புகளின் காரணமாக ஏதோவொரு வகையில் முடிச்சுகளை போட்டுக் கொள்கிறோம். நம் குடும்பம், பிள்ளைகள் எல்லாவற்றையும் தாண்டி அந்த முடிச்சுதான் மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது.
மனநல ஆலோசனை என்று தினசரிகளின் வாரப்பத்திரிக்கைள் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் வெறுமனே கட்டுக்கதைகள் என்றுதான் தோன்றும். அவையெல்லாம் உண்மையில் சிக்கலே இல்லை. அவிழ்க்கவே முடியாத சிக்கல்களை பெரும்பாலானவர்கள் பொதுவெளியில் சொல்வதில்லை. ஒன்றிரண்டு வருடங்கள் இருக்கும். ஒரு ஐடி நிறுவனத்து நண்பர் வந்திருந்தார். முப்பதுகளைத் தொடாத வயது. ‘எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமே இல்லை. ஆனால் வீட்டில் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள்’ என்றார். பிரச்சினை என்னவென்றால் அவருக்கு வேறு சில அழகான பெண்களுடன் தொடர்புண்டு. பேரழகிகளாகத் தேடித் தேடி நட்பு பாராட்டி வைத்திருக்கிறார். அவர்களோடு ஒப்பிடும் போது எந்தப் பெண்ணும் அழகாகவே இல்லை. சுமாரான பெண்ணை எப்படித் திருமணம் செய்து கொள்வது என்பதுதான் அவருடைய பிரச்சினை.
நம்மால் தீர்வே சொல்ல முடியாத சில பிரச்சினைகள் என்று உண்டு. அப்படியான பிரச்சினையாக இருந்தது. ‘கண்ணா...கல்யாணம்கிறது வாழ்க்கையில் முக்கியமான அங்கம். அழகை விட அறிவைப் பாரு. உனக்கு ஏத்த பொண்ணான்னு பாரு’ என்றெல்லாம் உருகி நீட்டி முழக்கிக் கொண்டிருந்த போது ‘இதெல்லாம் ஏற்கனவே யோசிச்சுட்டேன் அண்ணா...வேற சொல்லுங்க’ என்றான். என்னடா நம் அறிவுக்கு வந்த சோதனை என்று யோசித்துவிட்டு, நண்பர்கள் வழியாக விசாரித்து மேற்சொன்ன மனநல ஆலோசனை நண்பரைப் பற்றி விசாரித்து அந்தப் பையனும் நானும் சென்றோம். அப்படித்தான் அறிமுகம். பிறகு நண்பர்களாகிவிட்டோம்.
கோவையில் ஒரு கருத்தரங்குக்காக வந்திருந்தார். அவரைப் பற்றி முன்பு சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். வெகு இயல்பாக பேசுவார். கோவை சரவணம்பட்டியில் நற்றிணை என்று ஒரு கடை இருக்கிறது. இயற்கை பொருட்களை விற்கும் அந்தக் கடையில் கொள்ளு சூப் கிடைக்கும். எனக்கு கொஞ்சம் கொழுப்பு அதிகம் என்பதால் அவ்வப்பொழுது அங்கே போய் ஒரு சூப் குடித்து கொழுப்பை கரைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கொமுப்பைக் கொல்லும் கொள்ளாம்.
கொள்ளு சூப்பை முதல் மிடறு உறிஞ்சும் போது ‘உங்களுக்கு வயசாகிடுச்சா?’என்றார். புரையேறிவிட்டது. இளைஞன் என்று நினைத்துக் கொண்டுதான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
‘எதுக்கு கேட்டீங்க’ என்றேன்.
‘கேட்டதுக்கு பதில் சொல்லுங்க’ என்றார். அப்படியெல்லாம் எனக்கு நினைப்பே வரவில்லை என்றேன். நீங்களும் நான் சொன்னதை நம்பமாட்டீர்கள் என்பதால்தான் சித்ரா சுக்லாவின் கதையில் ஆரம்பித்தேன்.
‘சாலையில் போகும் போது, பேருந்துப் பயணத்தில் எத்தனை பெண்கள் உங்கள் கண்களை கவனிக்கிறார்கள்?’ என்றார். கடுப்பாகிவிட்டது.
‘சார், தலையில் எல்லாம் கொட்டிடுச்சு...அதனால பார்க்க மாட்டாங்க’ என்றேன்.
‘அரவிந்த்சாமியோட இப்பத்த படத்தை பார்த்திருக்கீங்களா? அவர் சொட்டையா ரோட்டில் போனால் கண்டுக்கமாட்டாங்கன்னு நினைக்குறீங்களா?’ என்றார்.
ஒரு வழி செய்வதற்காகவே வந்திருக்கிறார். நானாகத்தான் நற்றிணைக்கு அழைத்து வந்து வம்பை விலைக்கு வாங்கிவிட்டேன். அரவிந்தசாமியும் அடுப்புல வெந்தசாமியும் ஒண்ணா?
எவ்வளவு நேரம்தான் பொறுத்துக் கொள்வது என்று ‘எதுக்கு கேட்குறீங்க’ என்றேன்.
பெங்களூரில் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் என்ன வித்தியாசம் அடைந்திருக்கிறேன் என்று பரிசோதனை செய்வதற்காக என்றார். இப்படியே விதவிதமான கேள்விகள்.
ஒரு கட்டத்தில் ‘ஆமாங்க வயசாகிடுச்சுன்னு தோணுது’ என்றேன்.
‘இதை முதலில் ஒத்துக்குங்க. எல்லாமே ஃப்ரெஷ்ஷா தெரியும்’ என்றார். ஓங்கி மண்டையில் அடிப்பது மாதிரி இது. அதன் பிறகு இது பற்றி எதுவுமே பேசவில்லை. எனக்கு பொசுக்கென்று ஆகிவிட்டது. மறுபடியும் நானாக வயது பற்றியெல்லாம் எதையோ சொல்ல முயற்சித்தேன். பேச்சை மாற்றிவிட்டார். இடையில் ஒரேயொரு முறை மட்டும் ‘நாற்பதுக்கு முன்னாடி வாழ்க்கை வேற மாதிரி; நாற்பதுக்கு அப்புறம் வேற மாதிரி. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. வாழ்க்கையை அனுபவிக்க தயாராகிக்குங்க’ என்று சொல்லிவிட்டு மீண்டும் பேச்சை மாற்றிவிட்டார்.
‘நான் பாட்டுக்கு சிவனேன்னுதானே கிடக்கிறேன். வயசாகிடுச்சுன்னு சொல்ல இவ்வளவு வளைச்சு வளைச்சு பேசியிருக்க வேண்டுமா’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நாற்பதுக்கு கூட இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. நமக்கென்று வந்து வாய்க்கிறார்கள் பாருங்கள். அந்த சித்ரா சுக்லா இருக்காங்க இல்ல...அந்த சித்ரா சுக்லா...
5 எதிர் சப்தங்கள்:
கண்ணா, வயசாயிடுச்சுன்னு ஒத்துக்கிறதுல என்ன தயக்கம். அதான் இப்பல்லாம் ஒரு பதிவுக்கும், அடுத்த பதிவுக்கும் ரெண்டு வாரத்துக்கும் மேலாகுதுல்ல. (இதுக்கும் வயசுக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேக்கக் கூடாது. விஷயம் சொன்னா அனுபவிக்கணும்; ஆராயக்கூடாது)
// அந்த சித்ரா சுக்லா இருக்காங்க இல்ல...அந்த சித்ரா சுக்லா...
No comments // Simply waste
படையப்பா படத்திலிருந்து தர்பார் வரைக்கும் தலீவருக்கு வயசாயிடுச்சுனு படத்துலயே்சொல்லிகினு இருக்காங்க.. ஆனா தலைவர் தூள் கெலப்புல...
நீ கலக்கு அண்ணாத்தே!! நாங்க இருக்கோம்!!
இதுக்கும் வயசுக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேக்கக் கூடாது. விஷயம் சொன்னா அனுபவிக்கணும்; ஆராயக்கூடாது) ஆராயலீங்கோவ்...
வாய் புளித்ததா புளியங்கா புளித்ததா ன்னு தெரியலியே
Post a Comment