Nov 26, 2012

முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க




வீட்டின் முன்புறமாக கற்கள் ஒட்ட வேண்டிய வேலை ஒன்றிருந்தது. சில வீடுகளின் முன்பாக கருங்கற்களை வரிசையாக ஒட்டியிருப்பதை கவனித்திருப்பீர்கள். அந்த வேலைதான். கற்களை வெட்டுவதிலிருந்து நேர்த்தியாக ஒட்டுவது வரைக்கும் முஸ்லீம்கள்தான் இந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என்று சொன்னார்கள்.

பெங்களூரில் ஷில்கரிபாளையா என்ற இடம் இருக்கிறது. அங்கு இந்த வேலை செய்யும் முஸ்லீம்கள் நிறைய இருப்பதாகச் சொல்லி நியாமத் என்பவரின் எண்ணைக் கொடுத்தார் ஆர்கிடெக்ட் ஒருவர். நெம்பர் தந்ததோடு நிறுத்தாமல் ஒரு எச்சரிக்கையையும் சேர்த்துக் கொடுத்தார். “பண விஷயத்தில் உஷாரா இருங்க சார். முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”.

நியாமத் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்திருந்தார். வயதானவர். ஜிப்பா, முஸ்லீம் குல்லா, இசுலாமியர்களின் ட்ரேட் மார்க் தாடி என்றிருந்தார். இந்தக் கற்களைப் பற்றி கொஞ்சம் விவரித்தார். சாதரஹள்ளி அல்லது சிரா என்ற வகைக் கற்களைத்தான் பெரும்பாலும் ஒட்டுவார்களாம். சிரா கொஞ்சம் ரேட் அதிகம்.  கல்லின் விலை மட்டும் சதுர அடிக்கு எழுபத்தைந்து ரூபாய். ஒட்டும் கூலி சதுர அடிக்கு நூற்றியிருப்பத்தைந்து ரூபாய் என்றார். நூறு ரூபாய் என்றால் ஒட்டுங்கள் இல்லையென்றால் வேறொருவருக்கு வேலையைக் கொடுத்துவிடுகிறேன் என்ற போது பரிதாபமாகப் பார்த்தார். ஆனால் வேலை செய்வதாக ஒத்துக் கொண்டார்.

“அட்வான்ஸ் வேண்டும்” என்றார்.

“எவ்வளவு தரணும்?”

“பத்தாயிரம் குடுங்கோ சார்” என்றவுடன் ஆர்கிடெக்ட்டுக்கு போன் செய்தேன். மறுபடியும் அதே டயலாக்கை இம்மிபிசகாமல் சொன்னார் “முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”

“இப்போ காசு இல்லைங்க பாய். வேலையை ஆரம்பிங்க வாங்கிக்கலாம்” யோசித்தவர் அதற்கும் சரியென்று சொன்னார்.

“எப்போ வேலை ஆரம்பிப்பீங்க?”

“நாளைக்கே ஆரம்பிச்சுடுறோம். ஆனால் நாளைக்கு சாயந்திரம் காசு வேணும் சார்”

“என்னங்க காசு காசுங்குறீங்க. வேலையைச் செய்யுங்க. காசு வரும்”

எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். அடுத்த நாள் வேலையைத் தொடங்கினார். இரண்டு மூன்று ஜூனியர்களோடு வந்திருந்தார். எல்லோரும் குடும்ப உறுப்பினர்களாம். ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வேலை படு வேகமாக நடந்தது. அவர்கள் எத்தனை வேகமாக வேலையைச் செய்தாலும் ஒரு நாளைக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் கொடுத்துவிட வேண்டாம் என்று ஆர்கிடெக்ட் எச்சரித்தார்.

அன்று மாலை ஐந்தாயிரம் கொடுத்தேன். அப்பொழுதும் நியாமத் அதட்டாமல் கேட்டார்.

“ப்ளீஸ் சார், பத்தாயிரம் வேணும்”

“பணம் இல்லைங்க. நாளைக்கு வாங்கிக்கலாம்” என்றேன் .

அவருடன் வந்தவர் என்னிடம் கொஞ்சம் அதட்டலாக பேசினார். அப்பொழுது நியாமத் அவரை சமாதானப்படுத்திவிட்டு என்னிடம் “நாளைக்கு கொடுத்துடுங்க சார்” என்ற போது அவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

சங்கடமாகிவிட்டது.  “ஏ.டி.எம் வர்றீங்களா? எடுத்து தந்துடுறேன்” என்றபோது தலையாட்டினார். இன்னொரு ஐந்தாயிரம் கொடுத்துவிட்டு ஆர்கிடெக்டிற்கு போன் செய்தேன்.

“ஏன் சார் பத்தாயிரம் கொடுத்தீங்க? நாளைக்கு வர மாட்டாங்க பாருங்க” என்றார். அதோடு நிறுத்தாமல் “எத்தனை கட்டடம் நாங்க கட்டறோம்? எங்களுக்கு தெரியாதா சார்?” என்றார்.

நியாமத் ஏமாற்றிவிடுவாரோ என்று பயந்து கொண்டே தூங்கினேன். ஆனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வேலையை ஆரம்பித்திருந்தார்கள். அன்றும் அவர்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அதே வேகம். மதிய உணவு கூட இல்லாமல் எதற்காக இத்தனை வேகமாகச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கும் தினமும் பத்தாயிரம் வாங்கிக் கொண்டார்கள். நான் ஆர்கிடெக்டிடம் பணம் சம்பந்தமாக ஆலோசனை கேட்பதைக் குறைத்திருந்தேன். பத்து நாட்களில் முடிப்பதாகச் சொன்ன வேலையை ஐந்து நாட்களில் முடித்துவிட்டார்கள்.

கடைசி தினத்தில் இன்னொரு பத்தாயிரம் கொடுத்த போது கணக்கு முடிந்திருந்தது. நியாமத் நன்றி சொன்னார். பிறகு முகம், கை கால்களைக் கழுவினார்.  அவருக்குப் பின்னால் ஒவ்வொருவராக கை கால் கழுவினார்கள். கிளம்புவதற்கு தயாரான போது கேட்காமல் இருக்க முடியவில்லை.

“ஏன் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்ளாமல் வேலை செய்யறீங்க?” என்றபோது அவரது ஜூனியர்கள் தங்களுக்குள் முகத்தை பார்த்துக் கொண்டார்கள்.

நியாமத்தான் சொன்னார். அவரது ஜூனியர்கள் ஒவ்வொருவரும் அவரது தம்பிகள். இந்தக் கல் ஒட்டுவதுதான் குடும்பத்திற்கான ஒரே வருமானம். தம்பிகள் யாருக்கும் திருமணம் ஆகவில்லை. நியாமத்துக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். கடைசியாக பிறந்த குழந்தைக்கு ஒன்றரை வயது. அவரது மனைவிக்கு கிட்னி ஃபெயிலியராம். ரொம்ப நாட்களாக டயாலிசிஸ் கிட்டத்தட்ட வாழ்வின் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டாராம்.

“டயாலிசிஸ், ஆஸ்பத்திரி செலவுன்னு பணம் கரையுது சார். எப்படியும் போயிடுவான்னு தெரியுது. ஆனா விட மனசு வரலை. அவளோட நிலைமை, குழந்தைக, பணத்துக்கான தேவையெல்லாம் எங்களை பேச விடறதில்லே சார். அதான் உங்ககிட்ட  கூட பணம் வேணும்ன்னு திரும்பத் திரும்ப கேட்டேன்” என்ற போது தனது ஜிப்பா நுனியால் கண்களை துடைத்துக் கொண்டார்.

“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே” என்றேன்.

“இல்ல சார். எங்களை யாரும் இங்கே நம்பறதில்ல. என்ன சொன்னாலும் பொய் சொல்லுறதாத்தான் சொல்லுவாங்க” என்றார். என்னிடம் ஒரு பத்தாயிரம் அதிகமாக இருந்தது. “முடிந்த போது கொடுங்க” என்று கொடுத்தேன். “ரொம்ப நன்றி சார். தேவைப்படும் போது வாங்கிக்கிறேன். இப்போ வேண்டாம்” என்று கிளம்பினார். அந்த நடையில் நேர்மையிருந்தது.  அவர் நகர்ந்த பிறகு மனம் பாரமாகியிருந்தது. உடனடியாக வீட்டுக்குள் செல்லாமல் அந்த வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஆர்கிடெக்ட் போன் செய்தார்.  “வேலை முடிஞ்சுடுச்சு சார். மொத்தமா ஐம்பதாயிரம் கொடுத்துட்டேன்” என்றேன்.

“ஐயாயிரம் புடிச்சுட்டு கொடுத்திருக்கலாம்ல சார்” என்று துவங்கினார். கட் செய்துவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன். கார்த்திகைக் குளிர் சில்லிடத் துவங்கியிருந்தது.

51 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...


நிதர்சனம்...



CS. Mohan Kumar said...

கதையோ சம்பவமோ எதுவாயினும் நெகிழ்ச்சி அருமை

ரொம்ப நாளாக உங்களிடம் சொல்ல நினைத்த ஒன்று: எங்களை மாதிரி சினிமா, டிவி போன்ற விஷயம் எழுதுவோர் தான் பரபரப்பான தலைப்பு வச்சு மக்களை உள்ளே வர வைக்கிறோம் என்றால், நல்ல எழுத்துகள் எழுதும் நீங்களும் தலைப்பு விஷயத்தில் எப்போதும் அந்த வழியை தான் பின் பற்றுகிறீர்கள்.

இந்த கதை முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை சப்போர்ட் செய்தாலும் தலைப்பு அவர்களை ஹர்ட் செய்வதாய் அவர்களில் சிலர் உணரக்கூடும்

Vaa.Manikandan said...

நன்றி அகல்விளக்கு.

மோகன்,

நன்றி. அடுத்த முறை தலைப்பில் கவனம் எடுத்துக் கொள்கிறேன்.

ஜோதிஜி said...

இது பழைய மனிதர்கள் குணம் இன்றும் போற்றுதலுக்குரியது. நெகிழ்ந்தேன்.

பாலு said...

மணிகண்டன் சார்! நிறைய எழுதுறீங்க! நல்லாவும் எழுதுறீங்க! உங்க ஆர்கிடெக்ட் சொன்னதும் உண்மை. உங்க அனுபவமும் உண்மை. ஆனால் people are people everywhere. The percentage of cheating population is same in USA, Pakistan, Nigeria, Australia & India. We cant discriminate there. All the very best. Keep up the good work.

வவ்வால் said...

முஸ்லீம்சோ, இந்துவோ, சில கட்டிட வேலை செய்பவர்கள் பாதியில் ஓடிவிடுவதுண்டு , அந்த அனுபவத்தில் ஆர்க்கிடெக்ட் சொல்லி இருக்கலாம், ஆனால் முஸ்லீம்ஸ் ஏமாற்றிவிடுவார்கள் என அவர் குறிப்பிட்டு சொல்ல தேவையில்லை.

நான் சில கட்டுமான வேலைகளின் போது மேற்பார்வையாளராக இருந்துள்ளேன், நிறைய பேரு பாதியில் வேலையை விட்டுவிட்டு இன்னொரு இடத்தில் வேலைக்கு போய்விடுவார்கள், எல்லாம் திருப்பதி மொட்டை அடிக்கும் கதை தான்.

இங்கெல்லாம் லேபர் காண்ட்ராக்டர்னு ஒருவர் உண்டு, எல்லாம் அவர் செய்யும் வேலை.

இதனால் நினைத்த காலத்திற்குள் வேலையை முடிக்க முடியாது.

Anonymous said...

நெகிழ வைத்த சம்பவம்.

manjoorraja said...

நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லா மதங்களிலும் எல்லா மொழிகளிலும் இனங்களிலும் இருக்கின்றனர் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

Unknown said...

கண்கள் கலங்கிவிட்டன. தலைப்பை பார்த்துவிட்டு "என்னடா இப்படி எழுதி இருக்காரே சகோதரர் என்று தான் வந்தேன்". உள்ளே படித்ததும் உண்மை விளங்கியது.

இது போல் தான் முஸ்லிம்களும். மீடியாக்களும் சில சுயநலவாதிகளும் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் கெட்டவர்கள் இரக்கமற்றவர்கள் என்று மக்களிடையே பதிய வைத்துவிட்டார்கள். யாரையும் பெயரை வைத்தோ, தோற்றத்தை வைத்தோ, மதத்தை வைத்தோ, மற்றவர்கள் சொல்வதை வைத்தோ மதிப்பிடாதீர்கள். தலைப்பை வைத்து நான் மதிப்பிட்டது போல்? பதிவிற்கு நன்றி சகோதரா..

சேக்கனா M. நிஜாம் said...

நெகிழவைத்துவிட்டது

பகிர்வுக்கு நன்றி !

semmalai akash said...

எல்லாமே! உண்மை என்று சொல்லமுடியாது! அவரவர் தொழில்நுட்பமாகவும் இருக்கலாம்.

Seeni said...

sonthame azhuthu vitten.........

Prakash said...

உழைக்கும் மக்களிடம் இருக்கும் நேர்மையான பண்புதான் இது. இதில் குறிப்பிட்ட மதத்தவர் என்ற வேறுபாடுகள் கிடையாது. இதுபோன்ற மக்களிடம் நெருங்கி வாழ்ந்து பாருங்கள் அற்புதமான மனிதர்கள் இவர்கள்.

Aashiq Ahamed said...

உங்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

ரொம்பவே நெகிழ்வூட்டும் பதிவு...நம்மையும் அறியாமல் கண்ணீர் வருகின்றது.

அழகான பதிவுக்கு மிக்க நன்றி..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Flavour Studio Team said...

உங்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் ஏக இறையின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...


மனதை கனக்க வைத்த பதிவு..!! பகிர்வுக்கு நன்றி சகோ..!

குறையொன்றுமில்லை. said...

மிகவும் நெகிழ வைத்த சம்பவம் எல்லா பிரிவிலும் நல்லவர்களும் அல்லாதவர்களும் கலந்து தான் இருக்காங்க.

Unknown said...

thanks for share bro....!

Anonymous said...

super sir.....Hindus and muslims are brothers.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
நல்ல பதிவு. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வினை பதிவு செய்யும் எச்செயலும் பாராட்டத் தக்கது. நாம் ஒரு கருத்தை நமது அனுபவங்களின் மீதே எடுக்கிறோம். அது அனைவருக்கும் பொருந்துமா? என்பதே கேள்வி.

சர்வ ரோக நிவாரண‌ கருத்துகள் இருக்கவே முடியாது என்பதே நம் கருத்து.ஒவ்வொரு சமூகத்திலும் பல தரப்பட்ட மனிதர்கள் இருப்பர்.
ஆர்க்கிடெக்ட் என்பதால் பல தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கிய அனுபவம் இருக்கும் என்பதால் அவர் அனுபவத்தின் மீதே அப்படி கூறி இருக்க்லாம்.

நீங்கள் சந்தித்த மனிதர் வாங்கிய கூலி,ஆற்றிய பணி, பிறரை விட சிறப்பாக உங்களுக்கு தோன்றி இருப்பின் நன்றே. இதே போல் பலமுறை,பலரை வைத்து வேலை செய்யும் வாய்ப்பு இருந்தால் உங்களின் கருத்து என்னவாகும்?.

எனினும் இந்த திரு நியாமத் அய்யா நல்ல‌ மனிதராக,திறமை உள்ள‌ தொழிலாளியாக‌ தோன்றுவதால் உங்கள் சுற்றம் நட்புகளுக்கு பரிந்துரைக்க வேண்டுகிறேன். பெங்களூரில் வாழும் நண்பர்கள் திரு நியாமத்தின் தொலை பேசி எண் பெற்று வேலை கொடுப்பது நன்று!!!


நன்றி

Unknown said...

Kathai ai padikum poluthu aluthuvithen.. Oru silar appadi thaan thavaraga neenaikirargal.. Story super..

மு மாலிக் said...

மணிகண்டன் அவர்களே,

உங்கள் அனுபவத்தினை எழுதியுள்ளீர்கள். நன்று.

நிச்சயம் ஒரு வஹ்ஹாபியல்லாத முஸ்லிமினால் மட்டுமே இத்தகைய இறைத்தன்மைகளை வெளிபடுத்த முடியும் என்று உங்களிடம் சொல்லிவைக்க விரும்புகிறேன்.

ஏனெனில், நாளை சென்னை பர்மா பஸாரில் ஒரு வஹ்ஹாபி சுன்னி உருட்டி முஸ்லிம் கடையில் பொருள் வாங்கி ஏமாற்றப்பட்டுவிட்டு, நாளை "முஸ்லீம்கள் நிச்சயமாக ஏமாற்றுவார்கள்" என்று பதிவு எழுத வாய்ப்புள்ளது

Unknown said...

அருமையான பதிவு ... மற்றவர்களுக்கு பகிர்ந்து உள்ளேன் .நன்றி ..

நட்புடன் ஜமால் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...

வேகநரி said...

திரு நியாமத் இஸ்லாமியரா?ஹிந்துக்காரனா? அவர் ஒரு கிறேட் தொழிலாளி.மதவாதிங்களை யாருமே ஒரு பொருட்டா மதிக்க கூடாது.நியாமத் என்கின்ற ஒரு தொழிலாளியை மதிக்கிறேன்.
நன்றி சகோ சார்வாகன்
நன்றி சகோ இக்பால்

Jeyakumar S said...

கண்கள் பணித்தது...
அருமை....
மேன்மேலும் உயர வாழ்த்துகிறேன்...

இப்னு அப்துல் ரஜாக் said...

நிதர்சனம்

Unknown said...

நல்லதொரு பதிவு..சகோ.

//இந்த திரு நியாமத் அய்யா நல்ல‌ மனிதராக,திறமை உள்ள‌ தொழிலாளியாக‌ தோன்றுவதால் உங்கள் சுற்றம் நட்புகளுக்கு பரிந்துரைக்க வேண்டுகிறேன். பெங்களூரில் வாழும் நண்பர்கள் திரு நியாமத்தின் தொலை பேசி எண் பெற்று வேலை கொடுப்பது நன்று!!! //

ஆம் சார்வாகனின் இக்கருத்தையே நாம் வழிமொழிகிறோம்...நல்ல மனிதர்கள் துன்பப்படுவது வேதனை தருகிறது..

நன்றி !!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நல்லதொரு பதிவு..சகோ.மணிகண்டன்

//இந்த திரு நியாமத் அய்யா நல்ல‌ மனிதராக,திறமை உள்ள‌ தொழிலாளியாக‌ தோன்றுவதால் உங்கள் சுற்றம் நட்புகளுக்கு பரிந்துரைக்க வேண்டுகிறேன். பெங்களூரில் வாழும் நண்பர்கள் திரு நியாமத்தின் தொலை பேசி எண் பெற்று வேலை கொடுப்பது நன்று!!! //---நல்ல பின்னூட்டம் சகோ.சார்வாகன். நான் சொல்ல வந்தேன்...! அருமையாக சொல்லிவிட்டீர்கள்..! நன்றி.

Nizam said...

பதிவை படித்து கண்கள் கலங்கிவிட்டான. அருமையான பதிவு நன்றி... நன்பரே

பட்டிகாட்டான் Jey said...

இவரைப்போன்ற நேர்மையாளர்களை, மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.

அதுவே அவர்களின் நேர்மைக்கும் உழைப்பிற்கும் குடுக்கும் பரிசாக இருக்கும்.

Padhy said...

சகோ.மணிகண்டன்,

இது அனுபவமா அல்லது கதையா? அந்த ‘நியமத்’ என்னும் சகோவை தொடர்பு கொள்ள முடியுமா?

Venkat said...

Very well written Mani! Hats off!

Unknown said...



நேர்மைக்கு மதமோ சாதியோ என்ற வேறுபாடு கிடையாது!

ரமேஷ் வைத்யா said...

மணிகண்டன், கடைசியில் கார்த்திகைப் பனி மேட்டர் எதற்கு?

nagoreismail said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்... உங்கள் அனுபவத்தில் நல்ல மனிதர் ஒருவரை சந்தித்துள்ளீர்கள்.. ரொம்ப மகிழ்ச்சி.. அவர் முஸ்லீமாக வாழ்கிறார்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி...

இதே அந்த ஆர்கிடெக்ட் கதை எழுதியிருந்தார்ன்னா அவரிடம் காசை வாங்கிட்டு காணமால் போன முஸ்லீமாக வாழாத ஒரு முஸ்லிமை பற்றி எழுதியிருப்பார்.

காசு வாங்கிட்டு ஏமாத்தாதவர்கள் டெல் அவிவில் கூட இருக்கலாம்..

என்றாலும் ஒரு நல்ல மனிதரை பற்றி அவர் முஸ்லிமாக இருப்பதை பற்றி மிக தைரியமாக மீடியாக்களை எதிர்த்துக் கொண்டு எடுத்துக்காட்டியமைக்கு நன்றி பாராட்டுகிறேன்.

enrenrum16 said...

ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு சோகம் :-((... அந்த ஆர்க்கிடெக்கிடம் நியமத்தின் வேலை திறமை பற்றி இன்னும் எடுத்துக் கூறி புரிய வைத்திருக்கலாம்.... அவருடைய தவறான மனோபவம் மாறியிருக்கும்.....

நியமத்தோ.... மாரிச்சாமியோ.... இந்த மாதிரி தினக்கூலி வேலை செய்பவர்களிடம் பேரம் பேசுவதில் மனிதர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம்...:-((

Subramanian said...

கண்கள் கலங்குகின்றன! மனிதனை மனிதனாக பார்க்க முடியாதவன், கேவலமானவன். அவனை நான் வெறுக்கிறேன்!

அழகிய நாட்கள் said...

//முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க// ஒரு நல்ல விஷயத்தை இப்படி தலைப்பைக்கொடுத்திட்டீங்களே?.....

Anonymous said...

ஒரு நல்ல அனுபவம் உங்களுக்கு முஸ்லீம்களை பற்றி புரிந்து கொள்ள ஆனால் எல்லா முஸ்லீம்களும் இஸ்லாத்தை பிரதிபலிப்பார்களா என்பது வருத்தம், ஏனெனில் இந்த சடவாத materialistic உலகில் உள்ள வாழ்வாதார தேவைகளுக்காக சில முஸ்லீம்கள் இஸ்லாத்தை புறந்தள்ளி சுயநலம் என்று வீழ்ந்து விடுகிறார்கள், அது அவர்களைப் பொருத்தவரை இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும், ஆனால் மாற்றத்தை கொண்டுவர சில இயக்கங்கள் உழைப்பது உண்மை, உண்மையில் இஸ்லாம் வாழ்வதற்கு, வாழ்வில் நம்பிக்கை வைப்பதற்கு சிறந்த வழி என்பதில் மாற்றுக்கருத்தில்லை....நன்றி..

ராஜ நடராஜன் said...

இந்தியாவின் அரசியல் சூழல்களாலும்,பிஜேபியின் பாபர் மசூதி இடிப்பு தீவிரவாதத்தோடு,இஸ்லாமிய தீவிரவாதத்தால் மூலை சலவை செய்யப்பட்டவர்களின் குண்டு வெடிப்பு போன்ற யதார்த்தங்களை கடந்து சராசரி முஸ்லீம் நீங்க சொன்னமாதிரியான நல்ல குணவான்களே.

சகோ.சார்வாகன் சொன்னது போல் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பெரியவர் நியாமத்தின் உழைப்புக்கு சிபாரிசு செய்யலாம்.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

எனக்கு தெரிந்து ௯௦ % முஸ்லிம்கள் நல்லவர்கள்.௧௦% எந்த மதத்திலும் உண்டு.அவர்களை சீண்டி சீண்டியே அவர்களை தீவிரவாதிகளாக இந்துக்களாகிய நாம்தான் செய்கிறோம்

Aathiga Tamilan said...

I agree with veganari. Talk about a person called "நியாமத்".

People will now come to get associated with a Muslim called நியாமத். He will be dissociated and disowned (saying he is a namesake Muslim) once he does wrong deeds.

People are strange creatures.

Anonymous said...

அருமையான மனதைத் தொட்ட சம்பவம் ... ! இஸ்லாமியர்கள், இந்துக்கள் என மனிதர்களை பிரித்துப் பார்ப்பது கேவலம், மனிதர்களில் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு .. அதிகம் இஸ்லாமிய சமூகத்தில் புழங்கியதால் சொல்கின்றேன். இஸ்லாமியர்களிடம் பல நல்லவர்களே உள்ளார்கள் ... எப்போது உதவிக் கேட்டாலும் மறுக்காமல் செய்யும் குணமும் அவர்களிடம் உண்டு ... ! அவர்கள் எந்த மாதிரி தொழில் செய்தாலும் அதிலும் ஒரு நேர்மை வைத்திருப்பார்கள் ... !

ஹம்துன்அஷ்ரப் said...

ஓரு இனத்தையே குற்றபரம்பரையாக சித்தரிக்கும் தலைப்பு,இருந்தாலும் நியமத் போன்றவர்கள் நிறைந்ததுதான் "இஸ்லாம்" என்பதை புரிந்துக்கொண்டால் சரி.

suvanappiriyan said...

அருமையான இடுகை! எனது தளத்திலும் உங்கள் பதிவை பதிந்துள்ளேன்.

Engr.Noushad said...

கட்டிட வேலையில் பொதுவாக ....

முழு வேலையும் முடிந்த உடன்தான் வேலைக்கான முழு தொகையை கொடுக்க வேண்டும்...இது 100% செய்ய வேண்டிய ஒன்று



அது யாராக இருந்தாலும் சரி...( முஸ்லிம் என்று குறிப்பாக கிடையாது )



இது கட்டுமான பனியின் கூலி கொடுக்கும் முறையாகும் ...



வேலை முடிந்தபின் நமக்கு முழு திருப்தி என்ற எண்ணம் ஏற்படும்போது சற்று கூடுதலாக கூலி கொடுப்பதில் அவர்கள் மகிழ்வு பெறுவதுடன் அடுத்த முறை நாம் அழைத்தால் வரவும் செய்வார்கள்....



சிலர் பிரியத்தின்,நம்பிக்கையின் பேரில் கூடுதலாக முன் பணம் கொடுத்து விட்டால்.மீதி பணம் வாங்குவதற்கும் கஷ்டம்தான்....மாறாக வேறு வழி இல்லாமல் ..மீதி தர வேண்டிய பணத்திற்கு ஏதாவது வேலை வாங்கி கழிக்க வேண்டிய சூழ்நிலையும் நிலவுகின்றது...



ஆக முன்பணம் கொடுப்பது முற்றிலுமாக தவிர்க் பட வேண்டும்..



இப்பவும் கூட பாருங்களேன்....

முன் பணத்தை கொடுத்து விட்டு

நமதூரில் சிறு சிறு குதுகைகார்களை தேடி அலைவது குறைந்த பாடில்லை..



இன்னும் ஒரு விஷயம் என்ன என்றால்..

வீட்டை கட்டி கொடுத்த ஆளும் சரி,வீட்டில் வேலை செய்த ஆசாரி,கொத்தனார் ,மின் வேலை மற்றும், பைப் வேலைசெய்பவர்கள்( Plumber )

உள் பட பராமரிப்பு வேலைக்கு அழைத்தால் வருவதில்லை...கை காலை பிடித்து தொங்க வேண்டி உள்ளது..



அதுவும் வெளி நாட்டிலிருந்து விடுப்பில் செல்லும் ஆட்கள் விஷயம் படும் மோசம் தனது வீட்டு பராமரிப்பு வேலைகளை முடிப்பது பெரும் கஷ்டமான சூழ் நிலையில் முடிக்காமல் திரும்பி வந்து விடுகின்றனர்,



அதில் நானும் அனுபவபட்டு இருக்கின்றேன்..சென்ற விடுமுறை வரை இந்த கஷ்டம் தான்..



இதுதான் இன்றைய சூழ் நிலை.....



மேல் கூறப்பட்ட நிலை மாறவேண்டுமானால் ..கட்டுமான பனியின் சொந்தக்காரர் நடந்துகொள்வதில் தான் உள்ளது..



அணைத்து துறைகளிலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்ற கூடியவர்கள் இருக்க தான்செய்வார்கள்..





அன்புடன்

நௌஷாத் அலி ( கட்டிட பொறியாளர் )

அல் கோபார்...

பாலராஜன்கீதா said...

இடுகையும் பின்னூட்டங்களும் அருமை.
//Prakash said...
உழைக்கும் மக்களிடம் இருக்கும் நேர்மையான பண்புதான் இது. இதில் குறிப்பிட்ட மதத்தவர் என்ற வேறுபாடுகள் கிடையாது. இதுபோன்ற மக்களிடம் நெருங்கி வாழ்ந்து பாருங்கள் அற்புதமான மனிதர்கள் இவர்கள்//
அற்புதம் ப்ரகாஷ்.

hari prasath said...

really nice. man should stop seeing a human based on his address he carries like skin,religion,caste,country or any thing else. see his or her behaviour and character.

Unknown said...

இப்படிப்பட்ட நல்ல என்னத்தை அவருக்கு ஊட்டியது இஸ்லாம்தான்

நாடோடிப் பையன் said...

Very good post.

I know of several people who follow Islam and have been great persons with impeccable character.

If possible, try following up with that elderly craftsman and see how his family is doing.

G u l a m said...

அன்பு சகோ,

நெகிழ்ச்சியானதொரு இடுகை!