கவிதை என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வரையறை எதுவும் இல்லை. 'இதைத்தான்' கவிதை செய்ய வேண்டும் என்று சொல்வதற்கான உரிமையும் யாருக்கும் இல்லை. மக்களின் பிரச்சினைகளையும், சமூகத்தின் சிக்கல்களையும் பேசுவதுதான் கவிதை என வரையறைக்குள் குறுக்குவதெல்லாம் கிட்டத்தட்ட பாவச்செயல் மாதிரிதான். சமூகம், புரட்சி என எல்லாவற்றையும் தாண்டி சாமானிய தனிமனிதனின் சிக்கல்களையும், அவனின் ரசனை சார்ந்த விஷயங்களை மட்டுமே கூட ஒடுங்கிய குரலில் தாராளமாக பேசலாம்.
பொன்.வாசுதேவனின் "ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை" என்னும் தொகுப்பில் இருக்கும் கவிதை இது. இன்று வாசிக்கும் போது வித்தியாசமான அனுபவமாக உணர முடிந்தது.
உயிர்ப்பிரதி
வெகுநாட்களுக்குப் பிறகு
மரங்கொத்திப் பறவையைக்
காண நேரிட்டது
காயத்ரியின் புத்தகத்திலிருந்த
அம்மரங்கொத்தி
மொட்டை மரத்தொன்றில்
ஏற்கனவே வரையப்பட்டிருந்த
பொந்திற்குள் தன் அலகை நுழைத்தபடி
பெருங்குரூரம் ஏதுமற்று
தனக்கான உணவுப் புழுக்களைத்
அத்துவாரத்தில் தேடிக் கொண்டிருந்தது
புழுக்களோ மரங்கொத்தியின்
உணவுத்தேவை குறித்த
கவலையேதுமற்று
அதே அறிவியல் புத்தகத்தின்
உயிரியல் பிரிவில்
மல்லாந்து கிடந்து
பாவனை செய்து கொண்டிருந்தது
காயத்ரி வரைவதற்கு ஏதுவாய்.
காயத்ரியின் புத்தகத்தில் ஒரு மரங்கொத்திப்பறவையின் ஓவியம் இருக்கிறது. ஒரு பொந்திற்குள் தன் அலகை நுழைத்தபடி இருப்பது போல அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. அந்த ஓவியத்தை வரைந்தவன் ஏதோ ஒரு காரணத்திற்காக மரங்கொத்திப் பறவை பொந்துக்குள் தன் அலகை நுழைத்திருப்பது போல வரைந்திருக்கக் கூடும். இந்த ஓவியத்திற்கு கவிஞன் உயிர் கொடுக்கிறான். ஓவியத்திலிருக்கும் அந்தப் பறவை புழுவை தேடுவதற்காகத்தான் தன் அலகை பொந்துக்குள் நுழைத்திருக்கிறது என உறுதியாக நம்புகிறான். இது கவிஞனின் கற்பனை. ஓவியத்திலிருந்து இயற்கையை நோக்கி பயணிக்கும் கவிஞனின் கற்பனை.
அதே புத்தகத்தில் இன்னொரு பக்கத்தில் புழு இருக்கிறது. இதுவும் ஓவியம்தான். முன்பு பார்த்த மரங்கொத்திப்பறவையை இந்தப் புழுவோடு தொடர்பு படுத்துகிறது கவிதை. மரங்கொத்திப்பறவை தன்னைத் தின்றுவிடக் கூடும் என்ற எந்தக் கவலையுமில்லாமல் காயத்ரி தன்னை வரைவதற்கு ஏதுவாக 'போஸ்' கொடுத்துக் கொண்டிருக்கிறது புழு என்கிறார் கவிஞர். புழுவுக்கு கவலையில்லை என்பதும் கவிஞனின் Assumption தான்.
1 - புழுவுக்காகத்தான் பொந்துக்குள் தேடுகிறது, 2- கவலையற்ற புழு என்ற கவிஞனின் இரண்டு உறுதியான முடிவுகள்தான் கவிதையில் இருக்கும் வாசகவெளி என நம்புகிறேன். கவிஞன் எதனால் இத்தனை உறுதியாகச் சொல்கிறான் என்ற கேள்வி வாசகனுக்கு கிளைக் கேள்விகளை உருவாக்குகிறது. குஞ்சுகளுக்கு உணவு தருவதற்காக கூட அந்தப்பறவை தனது அலகை பொந்துக்குள் நுழைத்திருக்கலாம் அல்லது வேறு காரணத்திற்காக ஏன் அலகை நுழைத்திருக்கக் கூடாது என வாசகன் சுயமாக யோசிக்க இடம் இருக்கிறது. Reader's space எனப்படும் வாசகருக்கான வெளியை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் சுவாரசியத்தின் அளவை நம்மால் கூட்டிக் கொள்ள முடியும்.
மரங்கொத்திக்கும் புழுவுக்குமான இடையிலான போராட்டத்தை நம் வாழ்வுக்கும் நமக்குமான போராட்டத்தோடு எளிதில் பொருத்திக் கொள்ள முடியும். நாம் ஒவ்வொரு நாளும் வேட்டையாடப்படுவதாகவோ அல்லது வேட்டையை நடத்துபவராகவோ நம்மை கற்பனை செய்துகொள்ள முடிகிறது. காயத்ரியின் புத்தகத்தை விட்டு மரங்கொத்திxபுழு என்ற இரு படிமங்களை வைத்து கவிதையை வெவ்வேறு தளத்திற்கு வாசகனால் நகர்த்த முடிகிறது. இந்த நகர்த்தல், இந்த கற்பனை, இந்த அனுபவத்தைத்தானே வாசிப்பனுபவம் என்கிறோம். இதைத்தானே கவிதையிடம் இருந்து வாசகன் எதிர்பார்ப்பது?
ஓவியங்களுக்கு உயிர்கொடுத்து அவற்றை கவிதைகளில் உலவச் செய்வதும், கதைகளில் இருக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து கவிதை எழுதுவதும் கவிதையியல் நுட்பம். கொஞ்சம் பழைய நுட்பம் கூட. ஆனால் அதை சரியாகச் செய்துவிடும் போது சுவாரசியம் குறைவதில்லை என்பதற்கு இந்தக் கவிதை ஒரு உதாரணம். சலனத்தை நேரடியாக வாசகனுக்குள் கவிதை உருவாக்குவதில்லை. ஆனால் சலனமடைவதற்கு ஏதுவான அத்தனை சூழலையும் உருவாக்கியிருக்கிறது இந்தக் கவிதை.
4 எதிர் சப்தங்கள்:
super sir
மிக்க நன்றி மணி.
அருமை மணி .........
நண்பர்களுக்கு நன்றி.
Post a Comment