காலையில் பதினோரு மணிவாக்கில் ஹெப்பால் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தபோது, சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆம்புலன்ஸைச் சுற்றிலும் நான்கைந்து பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தபோது ஆம்புலன்ஸிற்குள் ஒரு பெண்மணியை படுக்க வைத்திருந்தார்கள். புடவை கட்டுதலின் நேர்த்தியும், காலில் கொலுசும் தெரிந்தது. முகம் தெரியவில்லை. ஆம்புலன்ஸின் அடுத்த பக்கமாக சென்று முகத்தை காண்பதற்கு முன்பாக அருகில் நின்றுகொண்டிருந்தவரிடம் ”என்ன ஆனது?” என கேட்டதற்கு ஓடும் ரயிலில் இருந்து விழுந்துவிட்டதாகச் சொன்னார். இறந்துவிட்டாரா என்று கேட்கத் தோன்றியது என்றாலும் கேட்கவில்லை.
யுகாதி பண்டிகையின் கொண்டாட்டத்தில் பெங்களூர் களைக் கட்டியிருந்தது. தலையிலும் உடலிலும் எண்ணெயை பூசிக்கொண்டு ஆண்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் அநேகமாக குளித்து முடித்து நெற்றியில் விபூதியும் குங்குமமாக இருந்தார்கள். மாவிலையும், வேம்பிலையும் உச்சகட்ட வியாபாரத்தில் பிதுங்கிக் கொண்டிருந்தன.
ஆம்புலன்ஸின் மறுபக்கம் நகரும் போதே அந்தப்பெண்மணியின் புடவை விலாகமல் இருப்பதற்காக கால்களின் நடுவில் அவர் அணிந்திருந்த செருப்பினை வைத்திருந்தது தெரிந்தது. மிக அருகே நகர்ந்து அவளது முகத்தை பார்த்த போது வாய் சற்று திறந்திருக்க சற்றே உப்பியிருந்த முகத்தில் பாறையில் அழுத்திக் கீறப்பட்ட கோடென ரத்தம் வடிந்திருந்த கறை காய்ந்து அப்பியிருந்தது. ஈக்கள் மொய்க்கத் துவங்கியிருந்தன.
அதற்கு மேல் முகத்தை பார்க்க விருப்பமில்லை. நகர்ந்த போது காக்கிச் சட்டையணிந்திருந்த பெண் போலீஸ் மிக இயல்பாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். ஆம்புலன்ஸிற்குள் கிடப்பது அவருக்கு மற்றுமொரு பிணமாக இருந்தது. சலனமற்ற அவரிடம் யார் இவர் என்று கேட்ட போது அடையாளம் எதுவுமில்லை என்றும் செல்போன் கூட வைத்திருக்கவில்லை என்றார்.
என்னையறியாமல் “ப்ச்” என்றேன். ஒரு நெரிசல் மிகுந்த நகரத்தின் அரிதாரத்தை பூசிக் கொண்டிருக்கும் சாமானியனான நான் அந்த “ப்ச்” சப்தத்தோடு அந்த இடத்தில் எனக்கான காட்சி முடிந்துவிட்டதாக உணர்ந்தேன்.
யுகாதி கொண்டாட்டத்தின் பாதியில் அவரது குடும்பம் அம்மாவை, மனைவியை அல்லது மகளைக் காணவில்லை என்று சற்று பதட்டமடைந்தவர்களாகி தேடத் தொடங்கியிருப்பார்கள். அவளைக் கண்டறிய இன்னும் இரண்டொரு நாட்கள் ஆகக் கூடும். அப்பொழுது இவள் ஏதேனும் அரசு மருத்துவமனையின் பிணவறையில் தனக்காக ஒதுக்கப்பட்ட ஓய்விடத்தில் எந்த விசனமுமில்லாமல் ஒடுங்கிக் கிடப்பாள்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment