Apr 21, 2011

குடையின் கீழ் தனித்துக் கிடக்கும் கடிதம்



உலர்த்துவதற்காக விரித்து வைக்கப்பட்டிருக்கும்
குடையின் கீழ்
தனித்துக் கிடக்கும்
இந்தக் கடிதத்தில்தான்
என் தோல்வியடைந்த காதல்கள்
ஆவணமாக்கப்பட்டிருக்கின்றன

சலனமில்லாத தொலைக்காட்சிக்கு
நேரெதிராகப் படபடக்கும்
அந்த கடிதத்தில்தான்
நம் துரோகங்களின் சாட்சிகள்
பட்டியலிடப்பட்டிருக்கின்றன

நள்ளிரவில் அணைக்கப்படாத
விளக்கு வெளிச்சத்தில்
பதற்றத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்
கரப்பான் பூச்சியொன்று
கண நேரம் நின்று சென்ற
இந்தக் கடிதத்தின்
மூன்றாம் பத்தியில்தான்
உன் சல்லாபங்கள் தொடங்குகின்றன

பிரியத்தின் சொற்களால் நிரம்பிக் கொண்டிருந்த
கடிதம்
பதினோராவது பத்தியின் மூன்றாம் சொல்லிலிருந்து
துரோகத்தின் கசப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.

தீராத நடுக்கத்தில்
பகல்களையும்
இரவுகளையும்
பெளர்ணமிகளையும் தாண்டி
இந்தக் கடிதத்தை எழுதியவன்
முடிக்க எத்தனிக்கையில்
முகத்தில் வியர்வை பெருக்கெடுத்தது

கொஞ்சம்
தண்ணீர் அருந்தினான்.

தீர்க்கவே முடியாத கணக்குகளை
மீண்டும்
வரிகளாக்கத் துவங்கியவன்
உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின்
நடுவிரலைக் கீறி
கொஞ்சம் குருதியை பருகினான்

பின்னர்
முடிவே இல்லாத இந்தக் கடிதத்தை
முகவரி எழுதாமல் வீசினான்

அவன் கிழிக்காமல் எறிந்த
அந்தக் கடிதம்
இப்பொழுது
உலர்த்துவதற்காக விரித்து வைக்கப்பட்டிருக்கும்
குடையின் கீழ்
தனித்துக் கிடக்கிறது.

3 எதிர் சப்தங்கள்:

Ramesh said...

ரசித்தேன்

இராஜராஜேஸ்வரி said...

குடைக்குள் மழை!

பாட்டு ரசிகன் said...

nice...
அசத்தலான கவிதை..
வாழ்த்துக்கள்...