ஈழத்தில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களும், போரின் பெயரால் அரங்கேற்றப்பட்ட அக்கிரமங்களும், சிங்கள இராணுவத்தின் ஊடாக வல்லரசுகள் அவிழ்த்துவிட்ட இன அழிப்பும் சில ஊடகங்களைத் தவிர பெரும்பாலானவற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டன அல்லது அங்கு வன்முறைகளே நிகழவில்லை என்ற கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டு உலகச் சமூகத்தின் கண்களிலிருந்து இக்கொடுமைகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டன.
நிர்வாணப்படுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவனும், உடல் சிதைக்கப்பட்டு மாண்டு போனவளும், குண்டுகளால் மண்ணுள் புதைந்து போன சிறுவனும், துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்ட சிறுமியும், வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அழித்தொழிக்கப்பட்ட மனிதனும் இன்று நம்மிடம் வேண்டுவது அவர்களின் மரணத்திற்கான சிறு பதிலை மட்டுமே.
சிங்கள இராணுவத்தினரால் சூறையாடப்பட்ட தமிழினத்தின் அடையாளங்கள் கருமை படிந்த சுவடுகளாக இணையத்தில் பதிந்து கிடக்கின்றன. ஈழத்தில் என்ன நடந்தது என்பதை பதைபதைப்புடன் தேடிய ஒவ்வொரு இதயமும் கொஞ்சம் கசிந்ததோடு தனக்குத்தானே கேட்டுக்கொண்ட வினா "இந்த அரக்கர்களுக்கு எந்த தண்டனையுமே கிடையாதா?" என்பதுதான்.
உலகத்தலைவர்கள் தங்களிடம் வினவியவர்களுக்கு மெளனத்தை பரிசளித்தார்கள். வல்லரசுகளை நோக்கி எழுப்பப்பட்ட இந்த வினாவுக்கு நமுட்டுச் சிரிப்பு பதிலாக்கப்பட்டது. இந்த கொடூரங்களின் சாட்சிகள் யாவும் ஈழத்தமிழனோடு சேர்த்தே புதைக்கப்பட்டுவிட்டன என சோர்ந்திருந்த தருணத்தில் சிங்கள இராணுவம் ஈழத்தில் நிகழ்த்திய அட்டூழியங்கள் குறித்தான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது.
குற்றவாளிகளை காப்பதற்கென வல்லோன்களும் வகுத்தவர்களும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வெகுமக்களின் அழுத்தம் இருந்தால் மட்டுமே குற்றவாளிகள் கூண்டிலேற்றப்படுவார்கள். இவர்கள் கழுவிலேற்றப்பட வேண்டியவர்கள்- இப்பொழுதுதான் நாம் கூண்டிலேற்றுவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஈழத்துக்காக எரிந்த முத்துக்குமார் எழுதி வைத்த "காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமமானது" என்ற வரிதான் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
2 எதிர் சப்தங்கள்:
ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் இருப்போம்..
காலம் கடந்த நீதியாவது அரங்கத்தில் அரங்கேறட்டும்
Post a Comment