Apr 8, 2010

சமகாலக் கவிஞன்: சுகுமாரன்


தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால் கவிதைகளை வாசிப்பவர்களும் கவிதை பற்றி பேசுபவர்களும் மிகக் குறைவு என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.
நவீன கவிதைகளைப் பற்றி தொடர்ச்சியாக பேசி வரும் மிகச் சொற்பமானவர்களில் முக்கியமானவர் சுகுமாரன். விமர்சனம், முன்னுரை, கவிதையின் போக்கு பற்றியதான கட்டுரைகள், கவிதாளுமைகள், கவிதை மொழிபெயர்ப்பு என்ற ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி சுகுமாரனது கட்டுரைகளை கவிதை வாசகர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. சுகுமாரனின் செயல்பாட்டின் சிறப்பம்சமாக அதன் நேர்மைத் தன்மையும் கறார்த்தன்மையையும் குறிப்பிடுவேன்.

சுகுமாரனின் கவித்துவம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் முடிந்துவிட்டது என்று ஒரு விமர்சனக் குறிப்பை பார்த்தேன். போகிற போக்கில் கருத்துகளை உதிர்த்து செல்வதற்கு முன்னதாக சற்றேனும் நாம் குற்றம் சாட்டுகிறவரின் சமகால இலக்கியச் செயல்பாட்டினை அறிந்து கொள்வது அவசியம். பிப்ரவரி'2010 உயிர்மையை புரட்டிப் பார்த்திருந்தால் கூட, இந்த வாக்கியத்தை எழுத கை நடுங்கியிருக்கும். அதில் ஐந்து முக்கியமான கவிதைகளை சுகுமாரன் எழுதியிருக்கிறார். நான் பிரதி எடுத்து வைத்திருக்கும் "வாசவதத்தை தற்கொலை செய்த இடம்" என்ற ஒரு பிரமாதமான கவிதையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். கவிதையை கவிதையாக மட்டுமே வாசிக்கும் எந்த ஒரு வாசகரும் கவித்துவத்தை நிர்ணயம் செய்து கொள்ளட்டும்.

கவிஞனை அவனது கவித்துவம் பற்றிய எதிர்மறை விமர்சனத்திற்கு ஆளாக்குவதற்கு முன்னால் கவித்துவம் குறைந்திருக்கும் அந்த கவிஞனது சில சமீப கவிதைகளையாவது முன் வைத்திருக்க வேண்டும்.

கவித்துவம் குறைந்துவிட்டது என்று யாரும் யாரைப் பார்த்தும் சொல்லிவிட முடியும். ஆனால் சொல்லும் இடத்தில் படைப்பு சார்ந்து விவாதிக்க இடம் கொடுத்திருக்கிறோமா என்பதுதான் அந்தக் விமர்சனக் குறிப்பை பொருட்படுத்த வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பதை நிர்ணயிக்கிறது. படைப்பு சார்ந்த விவாதிக்க விமர்சனக் குறிப்பில் ஒரு வரி இடமாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தக் குறிப்பில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சுகுமாரன் முன்னால் நடந்து செல்லும் கவிதாளுமை மட்டுமில்லை. தனக்கு பின்னால் வந்து கொண்டிருக்கும் கவனம் பெறத்தக்க கவிஞர்களைப் பற்றி எழுதுவதிலும் எந்தத் தயக்கமும் காட்டியதில்லை. பெண் கவிஞர்களுக்கு விமர்சனம் எழுதுகிறார் என்று தூற்றும் முன்பு தான் தூற்றும் நபர் வேறு யாருக்கெல்லாம் விமர்சனம் எழுதியிருக்கிறார் என்பது பற்றியும், எழுதிய விமர்சனத்தில் என்ன இருக்கிறது என்றும் கவனித்திருக்க வேண்டும். புத்தகக் கண்காட்சியில் வாங்கிய பெரும்பாலான இளம் கவிஞர்களின் தொகுப்புகளில் சுகுமாரன் முன்னுரை எழுதியிருக்கிறார். உதாரணமாக இந்த ஆண்டு வந்திருக்கும் த.அரவிந்தனின் முக்கியமான தொகுப்பில் மிகச் சிறந்த முன்னுரை சுகுமாரனுடையது. பிருந்தாவின் கவிதைகள் பற்றி எதிர்மறை விமர்சனந்தான் எழுதியிருக்கிறார்.

சுகுமாரன் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அவரைப் பற்றிய பொதுவான விமர்சனம் வைக்கப்பட்டிருக்குமாயின் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இரண்டு எழுத்தாளர்களுக்குள்ளான பிரச்சினையாக இருந்திருக்கும் அல்லது மொழி பெயர்ப்பு தவறு என்பது மட்டுமே கட்டுரையின் சாராம்சமாக இருப்பினும் எனக்கு மொழிபெயர்ப்பில் இல்லாத பரிச்சயத்தின் காரணமாக எதுவும் பேசியிருக்க முடியாது.

ஆனால் போகிற போக்கில் சுகுமாரனின் கவித்துவம் முடிந்துவிட்டது என்பதும், அவர் பெண்களுக்கு மட்டுமே பாராட்டுபத்திரம் வாசிக்கிறார் என்பதும் முற்றாக நிராகரிக்க வேண்டிய வாதங்கள்.

ஒரு கவிதை வாசகனாக, தமிழ்க் கவிதைகளை தொடர்ந்து கவனிப்பவனாக, ஒரு முக்கியமான கவிதாளுமை மீதான உண்மையற்ற விமர்சனத்துக்கு அரைப்பக்க பதில் கூட எழுதாமல் இருக்க முடியவில்லை.

இதைப் பதிவிடும் போது சுகுமாரனின் சமீப கவிதைகளையும், அவரது கவிதை சார்ந்த கட்டுரைகளையும் நான் இன்னும் விரிவாகவே பேசியிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
===
நேற்று ஹஃபீஸின் கவிதையை இணையத்தில் தேடினேன். இந்தக் கவிதைக்கு தலைப்பு எதுவுமில்லை. "த கிப்ஃட்" என்னும் தொகுப்பில் வேறு சில கவிதைகளுடன் இருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பையும், சுகுமாரனின் மொழிபெயர்ப்பையும் இணைத்திருக்கிறேன்.

I
Have
Learned
So much from God
That I can no longer
Call
Myself

A Christian, a Hindu, a Muslim,
A Buddhist, a Jew.

The Truth has shared so much of Itself
With me

That I can no longer call myself
A man, a woman, an angel,
Or even pure
Soul.

Love has
Befriended Hafiz so completely
It has turned to ash
And freed
Me

Of every concept and image
My mind has ever known
=============
நான்
கடவுளிடமிருந்து ஏராளமாகக்
கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எனவே
ஒரு கிறித்துவன் என்றோ
ஒரு இந்து என்றோ
ஒரு முஸ்லிம் என்றோ
ஒரு பௌத்தன் என்றோ
ஒரு யூதன் என்றோ
என்னை இனிமேலும் நான்
அழைத்துக் கொள்ள மாட்டேன்

உண்மை
என்னிடம் ஏராளமானவற்றைப்
பகிர்ந்து கொண்டிருக்கிறது

எனவே
ஓர் ஆண் என்றோ
ஒரு பெண் என்றோ
ஒரு தேவதை என்றோ அல்லது
தூய ஆன்மா என்றோ
என்னை இனிமேலும் நான்
அழைத்துக் கொள்ள மாட்டேன்

அன்பு
முழுமையாக ஹஃபீஸுடன் நட்பு
கொண்டாயிற்று

என் மனம் இதுவரை அறிந்த
எல்லா எண்ணத்தையும்
எல்லா பிம்பத்தையும் சாம்பலாக்கி
விட்டது.

என்னை விடுதலை செய்து விட்டது.
======
உயிர்மை'2010 ல் வெளி வந்த சுகுமாரனின் கவிதை:

வாசவதத்தை தற்கொலை செய்த இடம்
நீங்கள் நின்றிருக்கும் இந்த இடம்
வயலாக இருந்தது முன்பு
இன்னும் மட்காத
ஏதோ விதை நெல்லின்
புனர்ஜென்மச் சுவாசம்
உங்கள் பாதங்களில் படரலாம்

நீங்கள் பார்க்கும் இந்த இடம்
அந்தப்புரமாக இருந்தது முன்பு
இன்னும் கடைத்தேறாத
ஏதோ கணிகையின்
உயிருள்ள விலா எலும்பு
உங்கள் பாதங்களை நெருடலாம்

நீங்கள் மிதித்திருக்கும் இந்த இடம்
காமத்தின் தடாகமாக இருந்தது முன்பு
இன்னும் மோகமடங்காத
ஏதோ விரகிதனின்
வலக்கை நடுவிரல்
உங்கள் பாதங்களையும் சுரண்டலாம்

ஏன் நின்றுவிட்டீர்கள்
தயங்காமல் வாருங்கள்
சொன்னதெல்லாம் நேற்றைய உண்மைகள்
இன்றைய கதைகள்

நீங்கள் நடந்து தீர்க்கும் இந்த இடம்
வயல்களாக இருந்ததால் ஆட்கள் இருந்து
ஆட்கள் இருந்ததால் கணிகையர் இருந்து
கணிகையர் இருந்ததால் கதைகள் படர்ந்த இடம்

உங்களூர்க் கணிகைகள் எப்படி இறந்தார்களென்று
தெரியாது என்கிறீர்கள்
எங்களூர்க் கணிகைகள் எப்படி இறந்தார்களென்று
தெரிந்து கொள்ளுங்கள்

ஒவ்வொரு கணிகைக்கும் ஒவ்வொரு மரணம்
ஒருத்திக்கு மூப்பு
ஒருத்திக்குப் பட்டினி
ஒருத்திக்கு வியாதி
ஒருத்திக்கு விபத்து
ஒருத்திக்குக் கொலை
ஒருத்தி மட்டும் தற்கொலையில் முடிந்தாள்

ஏனென்கிறீர்கள் கேளுங்கள்
தெரியாதா உங்களுக்கு
தற்கொலையும் ஓர் ஆயுதம்
எப்படியென்கிறீர்கள் கேளுங்கள்
எப்போதும்
கணிகை நிலம் மன்னர் கலப்பை
கணிகை கொள்கலம் மன்னர் கொடைக் கை
கணிகை இரை மன்னர் வேட்டையாடி
கணிகை பணிவு மன்னர் அதிகாரம்

அந்தப்புரத்தில் துயிலக்
கடமைப்படாத அபூர்வ நாளில்
ஏதோ ஒருவன்
பணிந்து கிடந்தான் கணிகை அமிழ்ந்தாள்
இரையாகக் கிடந்தான் கணிகை கவ்வினாள்
வட்டிலாய்க் கிடந்தான் கணிகை பரிமாறினாள்
நிலமாய்க் கிடந்தான் கணிகை நீராய்ச் சுழன்றாள்

அந்தப்புரத்தில் துயிலக்
கடமைப்பட்ட வாடிக்கைப் பொழுதில்
ஆசைப்பட்டாள்
நிலத்தின் மீது மழையாய் இறங்க
கொடைக்கையாக உயர்ந்தேயிருக்க
இரையை விரட்டி விளையாடிப் பார்க்க
பணிவின்மீது கட்டளையாய்க் கவிய

விபரீதமென்கிறீர்கள் கேளுங்கள்
அடக்கம் ஒருநாள் அடக்கவும் விரும்பும்
ஐயமிருந்தால் துணைவியைக் கேளுங்கள்
சரி, மீதியும் கேளுங்கள்
அந்தப்புரத்து விதிகளை மீறிய
கணிகையை விரட்டியது அரசாணை

நீங்கள் சாய்ந்திருக்கும் இந்த மரத்தின் கிளையில்தான்
நிழலாய்த் தொங்கினாள்
இப்போதும் இலைகளில் கணிகையின் மூச்சு
தம்புரா ஒலிபோல் அசைவதைக் கேளுங்கள்

நீங்கள் மிதித்திருக்கும் இந்த இடத்தில்
மனைவிக்குத் தெரியாமல்
அழாத ஆடவரில்லை.

நீங்கள் நின்றிருக்கும் இந்த இடம்
முன்பு
காமத்தின் தடாகமாக இருந்தது
வாசவதத்தை அதில் நீராகத் ததும்பினாள்
அந்தப்புரத்தின் அதிகாரமாக இருந்தது
வாசவதத்தை அதில் மறுப்பாகத் திமிறினாள்
வயலின் சிலிர்ப்பாக இருந்தது
வாசவதத்தை அதில் தானியமாக முளைத்தெழுந்தாள்

நீங்கள் தெரிந்துகொண்டிருக்கும் இந்த இடம்
முன்பு
வாசவதத்தையின் உடலாக இருந்தது
வாசவதத்தை இங்கே இருந்துகொண்டேயிருக்கிறாள்

3 எதிர் சப்தங்கள்:

Unknown said...

"வாசவதத்தை தற்கொலை செய்த இடம்" - இந்தக் கவிதையை கேணியில் அவருடைய குரலிலேயே கேட்டிருக்கிறேன்.

பகிர்தலுக்கு நன்றி...

Unknown said...

என்ன சொல்ல என்று தெரியவில்லை மணிகண்டன்.
நன்றாக வந்திருக்கிறது இந்த பதிவு.
எனக்கு மனுஷ்ய புத்திரனின் "நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?"
என்ற கவிதையே நினைவுக்கு வருகிறது.

Vaa.Manikandan said...

நன்றி கிருஷ்ண பிரபு.

ஜெகதீசன், அது சாருவின் வெற்று அரசியலுக்காக அவர் எழுதிய குறிப்பு அது. ஒன்றும் சொல்வதற்கில்லை.