Jul 21, 2009

இடைத் தேர்தல் புறக்கணிப்பு- Election Enjoyment

இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் அதன் தற்போதைய கூட்டணிக் கட்சிகளான மதிமுகவும் பாமகவும் அறிவித்துவிட்டன. கம்யூனிஸ்ட்களும் இவர்களை பின் தொடரலாம். திமுக தனது தேர்தல் பிரயத்தனங்களை குறைப்பதற்கான வாய்ப்பை இவர்கள் வழங்கியுள்ளனர். ஆளுங்கட்சியின் பணமும் அதிகார ஆதிக்கமும் இந்த இடைத் தேர்தலில் ஓரளவு குறையலாம் என்று எதிர்பார்க்கலாம் என்றாலும் முற்றாக இல்லாமல் இருக்காது.

ஜனநாயகத்தை தேர்தல் கமிஷனால் சரியாக நிலைநாட்ட முடியாது என்பதாலேயே தாங்கள் தேர்தலை புறக்கணிப்பதாகச் சொன்னாலும், உண்மையான காரணம் அதுவாக இருக்க முடியாது. பலவித தகிடுதத்தங்களையும்- மிகக் கச்சிதமாக செய்து முடிக்கும் ஆளும்கட்சியோடு தற்சமயம் மோதுவது எப்படியும் தோல்விக்கான மோதலாகவே இருக்கும். தோல்வி கிடைக்கும் பட்சத்தில் ஏற்கனவே தோல்வி கண்ட தொண்டர்கள் மேலும் சோர்வடையக் கூடும் என்று ஜெயலலிதா மறைமுகமாக அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா கொடநாட்டை விட்டு வெளிவருவதும், ஹெலிக்காப்டர் போன்ற தமிழக அரசியல் களத்திற்கு ஒத்துவராத சில சமாச்சாரங்களைக் கைவிடுவதும் இந்த தருணத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. எம்.ஜி.ஆர் சேர்த்து வைத்திருந்த கிராமப்புற பெண்களின் வாக்கு வங்கியை, இலவசம் என்ற பெயரில் அரசு கஜானாவில் கை வைத்து மிக இலாவகமாக தன் பக்கம் திருப்பி வரும் கருணாநிதியின் அரசியல் முன்னகர்வை தடுத்து நிறுத்தும் களப்பணி துளி கூட இல்லாமல் ஜெயலலிதா அசட்டையாக இருக்கிறார்.

முந்தைய தேர்தல் வெற்றிகளுக்கு ஜெயலலிதாவின் கிராமப்புற பயணமும், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தொட்டு வருமாறு பயணத்திட்டத்தை வகுத்துக் கொடுத்த செங்கோட்டையன் போன்றவர்களின் கடும் உழைப்புகளும் பின்புலமாக இருந்திருக்கின்றன. ராமதாஸும், வைகோவும் என்னதான் தலைகீழாக நின்றாலும் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே இருக்கும் கவர்ச்சிதான் அந்த அணியினருக்கு வாக்கு வாங்கித் தரும் ஆயுதம். அதை சரியாக பயன்படுத்தாமல் ஓய்வெடுக்கிறேன் என்ற பெயரில் ஜெயலலிதா வீணடிக்கிறார். இந்த ஓய்வையும் தேர்தல் புறக்கணிப்பையும் நான் இணைக்கவில்லை. ஓய்வு என்பதை அவர் குறைக்காத வரை அவரது செல்வாக்கை நிலை நிறுத்த முடியாது என்பதுதான் இங்கே குறிப்பிட விரும்புவது.

தேர்தல் புறக்கணிப்பின் பின்புலமாக ஆளும்கட்சியின் தேர்தல் செயல்பாடுகள் குறித்தான அச்சம் மட்டுமில்லாமல் வேறு காரணங்களும் இருக்கக் கூடும். ஜெயலலிதாவுக்கு இருக்கும் பெரிய பலம், அவர் யாருமே எதிர்பாராத நேரத்தில் எடுக்கும் பல முடிவுகள் பல நேரங்களில் அவருக்கு சாதகமாக முடிந்துவிடுவதே. அவரது முடிவுகள் எதற்காக எடுக்கப்பட்டன என்பதற்கான விடைகளும் வெளி வந்ததில்லை. இந்த புறக்கணிப்பு முடிவும் அத்தகையதானதாக இருக்குமா என்று தெரியவில்லை.

இந்த புறக்கணிப்பை ஒட்டுமொத்தமாக தேமுதிகவுக்கான பலமாக பார்ப்பதும் சரியென்று படவில்லை. அதிமுகவும் களத்தில் இல்லாத இந்தத் இருமுனைத் தேர்தலில், தேமுதிக தோல்வியுற்று வாக்கு வித்தியாசம் மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், 'கேப்டனின்' கூட்டைக் கலைக்க வேறு யாரும் கை வைக்கத் தேவையில்லை. எனவே தேமுதிகவுக்கு இந்த இடைத் தேர்தல் 'ஆசிட்' டெஸ்டாகவே இருக்கும்.

தேமுதிக வெல்வதற்கும் திமுகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தேமுதிக ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்கான அஸ்திரமாக இருக்கும் என்பதால் அது மொத்தமாக அழிந்துவிட திமுக காய் நகர்த்தாது என்பதே அனுமானம். குச்சியும் முறியக் கூடாது பாம்பும் சாகக் கூடாது என்பதான அடியாகத்தான் தேமுதிகவின் மீதான திமுகவின் அடியாக இருக்கும். அதிமுகவை பொறுத்த வரைக்கும் இதுவரை, தேமுதிக, திமுகவுக்குத்தான் எதிரி என்ற கணிப்பு இருந்திருந்தால் அது தவறாகிறது. தேமுதிக எப்பவுமே எதிர்கட்சிக்கான எதிரியாக இருக்கும் என்பதே என் கணிப்பு.

நாளை அதிமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில், அதற்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் சிதறடிக்கவே தேமுதிக உதவும். எனவே அந்தச் சமயத்தில் திமுகவுக்கு எதிரியாக தேமுதிக இருக்கும். இந்த நிலையில் தேமுதிக எந்த அளவுக்கு பலவீனப்படுகிறதோ அப்போதுதான் அதிமுக தனக்கான வெற்றி வாய்ப்புகளை பொதுத் தேர்தலில் அதிகரிக்க முடியும்.

நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் போட்டியிட்ட கொங்குநாடு முன்னேற்றப் பேரவை திமுகவின் வாக்குககளை பிரித்து அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இந்தக் கட்சி கொங்கு மண்டலத்தில் இருக்கும் கொங்கு வேளாளர் இனத்தில் இருந்து அதிமுகவுக்குச் செல்லும் பாரம்பரிய வாக்குகளை பிரித்து திமுக வின் வெற்றிக்காக கலைஞரால் கொம்பு சீவி விடப்பட்ட கட்சி என்ற பேச்சு இருந்தது. ஆனால் அதிமுகவின் வாக்குகள் எப்பவும் போலவே அதிமுகவுக்கே சென்றிருக்கின்றன. திமுக கொங்கு மண்டலத்தில் பெரும் அடி வாங்கியிருக்கிறது. இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்த முறை கொ.மு.பே போட்டியிடுகிறது என்பதால் தேமுதிக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் வாய்ப்புகள் உண்டு.

ஸ்ரீவைகுண்டம், பர்கூர், கம்பம் மற்றும் இளையான்குடி ஆகியவற்றில் இளையான்குடியில் யாதவர் வாக்குகளும் ராஜ கண்ணப்பனின் தனிப்பட்ட செல்வாக்கும், பர்கூரில் தம்பிதுரை மற்றும் அதிமுகவின் செல்வாக்கும் மிக முக்கியமான காரணிகள். இவை இந்தத் தேர்தலில் பயன்படப் போவதில்லையா அல்லது திமுகவுக்கு எதிரான ஆயுதமா அல்லது தேமுதிகவுக்கு எதிரான ஆயுதமா என்பதும் கவனிக்கத் தக்கவை.

ஸ்ரீவைகுண்டம் பற்றியும் கம்பம் பற்றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாததால் கருத்துச் சொல்வதில் நியாமில்லை.

அரசியல் செயல்பாடுகள் நல்லதா கெட்டதா என்பது பற்றியெல்லாம் சொல்ல முடியாது. சொல்வதில் அர்த்தமும் இல்லை. இந்த கால கட்டத்தில் எந்த அரசியல் கட்சியும் அதன் தலைவரும் எடுக்கும் எந்த முடிவும் அவர்களின் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும். இப்படி இருந்தால் இவர்கள் தோற்று அவர்கள் வெல்வார்கள் என்பதும் அந்த முடிவாக இருந்திருந்தால் இவர்கள் வெல்வார்கள் என்பது வேண்டுமானால் நமக்கு சுவாரசியமான பொழுது போக்குக்கான விவாதமாக இருக்கலாம். மற்றபடி யார் வென்றாலும் தோற்றாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. நாம் அடுத்த தேர்தல் Enjoyment க்காக காத்திருப்போம். நம் தேசத்தை பொறுத்தவரைக்கும் அரசியல் வாதிகள் எல்லோரும் ஒரு குட்டையில் இருப்பவர்கள். மக்கள் அனைவரும் வேறு குட்டையில் இருப்பவர்கள். குட்டைகள்தான் வேறு. மற்றபடி Same குட்டை மட்டைஸ்தான்.

2 எதிர் சப்தங்கள்:

உடன்பிறப்பு said...

நல்லா அலசி இருக்கீங்க, பொறுத்து இருந்து பார்க்கலாம்

Muthu said...

// எம்.ஜி.ஆர் சேர்த்து வைத்திருந்த கிராமப்புற பெண்களின் வாக்கு வங்கியை, இலவசம் என்ற பெயரில் அரசு கஜானாவில் கை வைத்து மிக இலாவகமாக தன் பக்கம் திருப்பி வரும் கருணாநிதியின் அரசியல் முன்னகர்வை //

சமீப காலத்தில் படிச்ச மிகப்பெரிய காமெடி கருத்து இதுதான்.

எம்.ஜீ.ஆர் கிராமத்து பெண்களின் ஓட்டை ஏதோ அவங்க காட்டில் களை பறிச்சு வாங்கி வச்ச மாதிரியும் அதை கருணாநிதி புடுங்கிட்ட மாதிரியும் சொல்றீங்க..யோவ் ....

மக்கள் பணம் மக்களுக்கு வரட்டுமேய்யா..உமக்கு ஏன்?