Mar 1, 2016

குழப்பம்

என் பெயர் களஞ்சியம். முதலில் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன். என் வயது 25. பொருளதாரத்தில் பின் தங்கிய குடும்பம்தான். அப்பாவின் சொந்த ஊர் மதுரை அருகில். எனது 5 வயதில் அவர் இறந்து விட்டார். அப்பா இறந்ததும் அம்மா எனது தங்கையை அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். தையல் வேலையும், சிறிய அளவில் இட்லி சுட்டு விற்று பிழைத்து வருகிறார். நான் அப்பாவின் அம்மா (அப்பத்தா) வீட்டில் இருந்து  நியூஸ்பேப்பர் விநியோகம், பால் பாக்கெட் போடுதல், சிற்றாள், லாரியில் கீளீனர் போன்ற சிறுசிறு வேலைகளைச் செய்து தான் பள்ளி கல்லூரி என எல்லாம் முடித்தேன். 

என் கல்வித் தகுதி M.Sc Electronics and Instrumentation. ஆங்கிலம் ஒரளவு தெரியும். நான் படித்து முடித்து வேலை தேடி ஆறு மாதம் அலைந்து கடைசியில் ஜக்கிய அரபு அமீரகத்தில் ஒரு சிறிய அலுவலகத்தில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் Procurement assistant பணி கிடைத்ததது. இரண்டு வருடப்  பணி முடிந்து கடந்த மாதம் நாடு வந்தேன். இந்த இரண்டு வருடச் சம்பளமும் சேமிப்பும் சென்ற வருடம் நடந்த தங்கையின் திருமணத்திற்கும் சரியாய் இருந்தது. தந்தையின் ஸ்தானத்தில் ஒரு கடமை முடிந்தது. இனி என் வாழ்க்கையை பார்க்க வேண்டும், அம்மாவை வைத்து நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

இப்பொழுது ஒரு குழப்பத்தில் இருக்கிறேன். சற்றேறக் குறைய ஒரு வருடத்திற்கு முன் நீங்கள் எழுதிய இரண்டு பதிவுகளில் மத்திய அரசு தேர்வுகளில் தமிழர்கள் குறைவாக தேர்வாவது பற்றி வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட இந்த ஒரு வருடம்  இது என் மனதில் பல எண்ண ஓட்டங்களை விதைத்துள்ளது. நானும் முழு மனதாக அமர்ந்து படித்து தேர்வு பெற வேண்டும் என்று எண்ணம் தோன்றியுள்ளது. 

அதே சமயம் வேறொரு நிறுவனத்தில் அழைப்பு வந்தது. வெளிநாட்டு வேலை உண்மையில் நிலையில்லாதது. இப்பொழுது இறுதியாக கடன் ஒன்றும் இல்லை. இன்னும் கையில் ஒரு இருபதாயிரம் மிச்சம் வைத்திருக்கிறேன். இப்பொழுது மறுபடியும் இரண்டு வருடம் வெளிநாட்டுக்கு ஓடுவது எனக்குச் சரியாக படவில்லை. முடிவு என் கையில் தான் இருக்கிறது. நான் என்ன முடிவெடுத்தாலும் அம்மாவுக்கு சம்மதம்தான். மாதம் ஐயாயிரம் ரூபாய் அவரது செலவுக்கு அனுப்பினால் போதும்.

எனவே, சென்னையில் ஏதேனும் அரசு பயிற்சியகத்தில் சேர்ந்து எட்டு அல்லது ஒன்பதாயிரம் சம்பளத்தில் பகுதி நேர வேலை செய்தபடி அரசு வேலைக்குத் தயாராகலாம் என்று நினைக்கிறேன்.

நண்பர்கள் அனைவரும்  இந்த காலத்தில் அரசு  வேலை கிடைப்பது மிகவும் கடினம் என்றும் போட்டி அதிகம் என்றும் அதனால் வெளிநாட்டு வேலைக்குச் சென்று கையில் கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கச் என்று சொல்கிறார்கள். 

நான்  எதை தேர்வு செய்வது என்று மிகுந்த குழப்பத்தில் உள்ளேன். வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். என்னுடைய குழப்பத்தைத் தீர்க்க முடியுமா?

மிக்க நன்றி.

அன்புடன்,
களஞ்சியம்.

                                                                        **

அன்புள்ள களஞ்சியம்,

நீங்கள் வெளிநாட்டு வேலையை நிராகரித்துவிட்டு கிட்டத்தட்ட போட்டித் தேர்வு எழுதுவது என முடிவு செய்துவிட்டீர்கள் என புரிந்து கொள்ள முடிகிறது. நல்ல முடிவுதான். 

வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். குழம்புவதில் தவறேதுமில்லை. 

உடனடியாகச் சில திட்டமிடல்களைச் செய்யுங்கள். 

நூற்றுக்கணக்கான தேர்வுகள் இருக்கின்றன. எந்தத் தேர்வுக்கு தயார் செய்யப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். பெட்ரோலிய நிறுவனங்கள், ரயில்வேயின் தொழில்நுட்பப் பிரிவுகள் போன்ற துறை சார்ந்த வேலைகளுக்குத் தொழில்நுட்பம்(Technical) சார்ந்த தேர்வுகள் நடத்தப்படும். அத்தகைய தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா அல்லது பொது அறிவுத் திறனுக்கும் ஆளுமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு தேர்வாணையம் (UPSC), தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (TNPSC) உள்ளிட்டவற்றின் நிர்வாகப் பிரிவுகளுக்கான தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா என்ற முடிவுக்கு வந்துவிடுங்கள்.

இந்த முடிவை எட்டுவதற்கு முந்தைய வருடங்களின் வினாத்தாள்கள் உங்களுக்கு உதவக் கூடும். கடந்த சில வருடங்களின் வினாத் தாள்களில் சுமார் இருபது முதல் முப்பது சதவீதக் கேள்விகளுக்கு உங்களுக்கு முழுமையாகவோ அல்லது ஓரளவுக்கோ பதில் தெரியும் என்றால் துணிந்து பயிற்சியைத் தொடங்கிவிடலாம். அதன் பிறகு அதற்கேற்ற பயிற்சி நிலையம், தரமான புத்தகங்கள் என்று விவரங்களைச் சேகரிக்கத் தொடங்குங்கள். அதே தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிற வேறு சில மாணவர்களுடன் தொடர்பை உருவாக்கிக் கொள்வது நல்ல பலனைத் தரும். ஆனால் நாம் தேர்ந்தெடுக்கிற மாணவர்கள் உண்மையிலேயே அர்பணிப்பு உணர்வுடன் தேர்வுக்குத் தயாராகிறவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பன்றிகளோடு சேர்ந்த கன்றுக்குட்டியின் கதையாகிவிடக் கூடும். 

நீங்கள் குறிப்பிட்டிருக்கிற இன்னொரு விஷயம் பகுதி நேர வேலை. எட்டாயிரம் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு சென்னையில் பகுதி நேர வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அப்படியே கிடைத்தாலும் பிழிந்து எடுத்துவிடுவார்கள். தேர்வுக்கு தயாராகுவதிலும் சிரமமாகிவிடும். இயலுமெனில் இன்னும் குறைவான சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை என்று புத்தகக் கடை மாதிரியான இடங்களில் வேலைக்கு முயற்சி செய்யலாம். தேர்வுக்கு தயாரிப்பதற்கு நேரம் கிடைக்கும். நீங்கள் நினைப்பது போல அம்மாவுக்கு ஐந்தாயிரம் அனுப்பவதில் சிரமம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒன்றிரண்டு வருடங்கள் பொறுத்துக் கொள்ளலாம்.

மற்றபடி, போட்டி அதிகமாக இருக்கிறது என்பதெல்லாம் சாக்குபோக்கு. எங்குதான் போட்டி இல்லை? கோவிலுக்கு முன்னால் பிச்சை எடுக்கிற இடத்தில் கூடத்தான் போட்டி இருக்கிறது. கடித்துத் துப்பிய ஒரு எலும்புத் துண்டை தெருவில் வீசினால் கண்ணிமைக்கும் நேரத்தில் நான்கைந்து நாய்கள் அடித்துக் கொள்கின்றன. எலும்புத்துண்டுக்கும், பிச்சைக் காசுக்குமே போட்டி இருக்கிற உலகத்தில் போட்டியே இல்லாமல் எனக்கு எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு அபத்தம்? போட்டியில் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையும் ஒதுங்கிக் கொள்ளலாம் என்கிற தயக்கமும் நம் மனநிலையைப் பொறுத்துதான். எல்லோருக்கும் அதே இருபத்து நான்கு மணி நேரம்தான் இருக்கிறது. சரியான திட்டமிடலும், ஒழுங்கான தயாரிப்பும், அர்பணிப்பும் இருந்தால் போதும். எந்தக் களமாக இருந்தாலும் இறங்கி அடிக்கலாம்.

சிலருக்கு முதல் வருடத்திலேயே வெற்றி கிடைக்கும். வேறு சிலருக்கு கூடுதலாகக் காலம் பிடிக்கும். அவ்வளவுதானே தவிர தேர்வுகளில் வெல்வது ஒன்றும் நடக்காத காரியமில்லை. 

வெளிநாட்டுக்குச் செல்லலாமா அல்லது போட்டித் தேர்வுகளா என முடிவெடுப்பதற்கு முன்பாக பின்வருவனவற்றை தீர்க்கமாக யோசித்துக் கொள்ளுங்கள்-

1.  இலக்கை அடையும் வரைக்கும் மனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. கடைசி வரைக்கும் எந்தவொரு கணத்திலும் தொய்வில்லாமல் மனநிலையை வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். 
3.    ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு ‘எனக்குத் தேர்வு ஒத்து வராது’ என்று உடைந்து போனால் முதலில் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்க வேண்டிய சூழல் வந்துவிடும்.

இதையெல்லாவற்றையும் யோசித்த பிறகும் ‘தேர்வுகளில் எழுதி வென்று விட முடியும்’ என்ற நம்பிக்கை இருந்தால் வேறு எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ள வேண்டாம் களஞ்சியம். வென்றுவிடலாம். 

அறக்கட்டளையின் வழியாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு பண உதவி எதுவும் செய்வதில்லை ஆனால் பயிற்சி மையங்களைத் தேர்ந்தெடுத்தல், சரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தல், பகுதி நேர வேலை போன்ற எந்தவிதமான உதவியாக இருந்தாலும் தயங்காமல் தொடர்பு கொள்ளலாம். நிச்சயமாகச் செய்து கொடுக்க முடியும்.

ஆயிரம் கரங்கள் காத்திருக்கின்றன.

வாழ்த்துக்கள்! 

அன்புடன்,
மணிகண்டன்

Feb 1, 2016

நேர்காணல்

மே மாதம் நெருங்கும் போது கல்லூரி மாணவர்கள் நிறையப் பேர் தொடர்பில் வருகிறார்கள். இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களாக இருந்தால் பிரச்சினையில்லை. இன்னமும் அவகாசம் இருக்கிறது. சொன்னால் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் படித்து முடித்து ஓராண்டுக்கும் மேலான மாணவர்கள் என்றால் பதற்றத்தை அதிகமாகவே காட்டுகிறார்கள். நேற்று ஒரு மாணவர் பேசினார். ‘ஒரு வருஷம் என்ன செஞ்சுட்டு இருந்த?’ என்று நேர்காணலில் கேட்டதாகச் சொன்னான். இது இயல்பான கேள்விதான். நேர்காணல் நடத்துகிறவர் இந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே தவித்துப் போக வேண்டியதில்லை. ஆனால் பையன் அவரிடம் பினாத்தியிருக்கிறான். அனுப்பி வைத்துவிட்டார்கள்.

‘வேலை தேடிக் கொண்டிருந்தேன்’ என்று தாராளமாகச் சொல்லலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஒரு வருடம் வேலை தேடியவன் என்பதாலேயே முட்டாள் என்று யாரும் நிராகரிக்கப் போவதில்லை. ஆனால் ஒரு வருடத்தில் நம்முடைய தயாரிப்பு என்ன என்பதை நிரூபித்தாக வேண்டும். இத்தகையவர்களிடம் அருண் பற்றித்தான் சொல்கிறேன். அவன் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் நல்ல கல்லூரியிலேயே இடம் கிடைத்திருந்தது. கல்லூரியில் அவனுடன் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறுதியாண்டிலேயே ஐடி நிறுவனங்களுக்குள் கர்சீப் போட்டு வைத்திருந்தார்கள். அருணுக்கு மட்டும் வாய்க்கவே இல்லை. அதற்கு மிக முக்கியமான பிரச்சினையொன்று தடைக்கல்லாக இருந்தது. இதே நேர்முகத் தேர்வுகள்தான். தமிழ் வழிக் கல்வி, ஆங்கிலம் சரளமாக இல்லை, தன்னம்பிக்கை இல்லை என்று ஏதொவொரு காரணத்தினால் காலி ஆகிக் கொண்டேயிருந்தான். எழுத்துத் தேர்வுகளைச் சமாளித்தாலும் நேர்காணல்கள் காலை வாரிக் கொண்டிருந்தன. சறுக்கிக் கொண்டேயிருந்தான்.

வகுப்புத் தோழர்களில் பெரும்பாலானவர்கள் இருபதாயிரம், முப்பதாயிரம் என்கிற சம்பளத்தில் வேலைக்குச் சேர்வதற்கான அப்பாய்ண்ட்மெண்ட் கடிதங்களோடு இருக்கும் போது நாம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத சூழலில் குழப்பம் வரத்தான் செய்யும். நமக்கு வேலையில்லை என்பதைவிடவும் ஊர்க்காரர்களுக்கு பதில் சொல்லியே தாவு தீர்ந்துவிடும். நம்மோடு விடுவார்களா? ‘பையன் என்ன செய்கிறான்?’ என்று அம்மா அப்பாவையும் தாளித்து எடுத்துவிடுவார்கள். இவர்களுக்கு பதில் சொல்வதற்காகவே ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு வேலை கிடைத்தாலும் தேவலாம் என்றிருக்கும். இத்தகைய சமயங்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துவிடுகிறார்கள். அதுவும் ஒரு நல்ல வழிதான். நம்மைத் தயார் படுத்திக் கொள்ள இரண்டு வருடங்கள் கிடைக்கும். பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரியும் அதிகமாகியிருக்கும். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமாவதில்லை. அருணுக்கும்தான். பால் கறந்து விற்கும் குடும்பம் அவனுடையது. பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.  

நான்கைந்து பேர்களிடம் வழி கேட்டிருக்கிறான். அதில் ஒருவர் உருப்படியான வழியைச் சொல்லியிருக்கிறார். ‘ஸ்கெட்ச் போடு’ என்பதுதான் அந்த வழி. அதென்ன ஸ்கெட்ச்? 

ஐடி துறையை நுணுக்கமாக கவனித்துப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இன்றைக்கு ஜாவாவில் ஆட்களை அதிகமாக எடுக்கிறார்கள் என்றால் எப்பொழுதுமே ஜாவா தெரிந்தவர்களுக்கே டிமாண்ட் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆறு மாதத்திற்கு பிறகு டாட் நெட்டுக்கோ அல்லது ஆரக்கிளுக்கோ ஆட்களின் தேவை அதிகமாக இருக்கும். அதை மோப்பம் பிடிக்க வேண்டும். அதைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். ஆறு மாதங்களில் இந்தத் துறை தலையெடுக்கப் போகிறது என்று கணித்து அதை ஒழுங்காகப் படித்துத் தயாராக வேண்டும். இது முதலாவது வழி. கொஞ்சம் ரிஸ்க் அதிகம். நம் கணிப்பு தவறாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் குடி மூழ்கிப் போய்விடாது. ஆறு மாதத்தில் வேலைக்கு சேர்வதற்கு பதிலாக கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். அவ்வளவுதான்.

இரண்டாவது வழி ஒன்றும் இருக்கிறது. சில தொழில்நுட்பங்களைச் சொல்லித் தருவதற்கு ஆட்களே இருக்க மாட்டார்கள். ஆனால் நிறுவனங்களில் அந்த நுட்பங்களைத் தெரிந்த ஆட்களுக்கான தேவை இருக்கும். அப்படியான டென்கானலஜியைக் கண்டுபிடித்து அதைச் சொல்லித் தரும் பயிற்சி நிறுவனத்தையும் கண்டுபிடித்து படிக்கத் தொடங்க வேண்டும். ஓரளவுக்கு நம்பிக்கை வந்தவுடன் ஏதாவதொரு நிறுவனத்திற்குள் நுழைந்துவிடலாம். அருண் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தான். ஒரு புண்ணியவான் நிறுவனம் சென்னையில் அந்தப் படிப்பைச் சொல்லித் தந்து கொண்டிருந்தது. ஆறு மாதப் படிப்பு அது. காலையில் குளித்து தயாராகிச் சென்றால் மதியம் வரைக்கும் வகுப்பு நடக்கும். அதன் பிறகு வீட்டுக்கு வந்துவிடலாம். ஆனால் அருண் அங்கேயேதான் தவம் கிடந்தான். மதியத்திற்கு மேலாக அங்கிருந்த கணினிகளைப் பயன்படுத்தி பயிற்சி செய்யத் துவங்கினான். சில ப்ராஜக்ட்களை அவனாகவே செய்து கொண்டிருந்தான். ஆரம்பத்தில் திக்கித் திணறியவனுக்கு ஒரு சமயத்தில் அது பிடிபடத் தொடங்கியிருக்கிறது. இப்படியான நெருப்பு கனன்று கொண்டிருந்தால் எப்படியும் வேலையைப் பிடித்துவிடலாம். லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. 

ஒரு கன்சல்டன்ஸி நிறுவனத்தில் விவரங்களைக் கொடுத்து வைத்திருந்தான். அமெரிக்காவுக்கான H1 விசாக்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் நிறுவனம் அது. அருணுக்கு ஒரு வருட அனுபவம் இருப்பதாகச் சொல்லி விஸாவை வாங்கிவிட்டார்கள். அண்ணாமலை ரஜினியைப் போல வெற்றி அவ்வளவு சீக்கிரமாக ஒரே பாடலில் வந்து தோளில் விழுந்துவிடவில்லைதான். எதிர்ப்படுபவர்களின் கேள்விகள், அழுத்தங்கள், வீட்டில் காசு வாங்கும் கொடுமை என எல்லாப் பிரச்சினைகளையும் தாண்டித்தான் தயார் செய்தான். கடுமையான உழைப்பு அது. ஆனால் வெறும் உழைப்பு மட்டுமே நமக்கான இடங்களை பெற்றுத் தந்துவிடுவதில்லை. சரியான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பது அவசியம். எதை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்பொழுது செய்ய வேண்டும். அருண் செய்தான்.

பொறியியல் படித்துவிட்டு ஏதோவொரு துணிக்கடையில் கண்காணிப்பாளராக இருக்கும் ஆட்களும் இருக்கிறார்கள். சொற்ப சம்பளம். ‘வேலை தேடிப் பார்த்தேன்.  என்னதான் உருண்டாலும் ஒட்டுகிற மண்தானே ஒட்டும்’ என்று தத்துவம் பேசியபடி கிடைத்த வேலையில் சேர்கிறவர்கள் அவர்கள். இப்படியெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எந்தத் துறையிலும் வெற்றி தானாக வந்து சேராது. ஐடி துறையும் அதற்கான விதிவிலக்குகள் இல்லை. இனிமேல் ஐடி அவுட். அந்தத் துறையே காலி என்பதெல்லாம் லுலுலாயி பேச்சு. ஆட்களுக்கான தேவை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நம்மிடம் உள்ளே நுழைவதற்கான தகுதியும் திறமையும் தேவையான உழைப்பும் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

ஐடி நிறுவனங்களைப் பொறுத்த வரைக்கும் உள்ளே நுழைவது எளிமையான காரியம்தான். ஆனால் குறி வைத்து அடிக்க வேண்டும். மேற்சொன்ன இரண்டு வழிகள் மட்டும்தான் ஐடிதுறையில் நுழைவதற்கான நுழைவாயில்கள் இல்லை. ஆயிரத்தெட்டு வழிகள் இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் பெரும்பாலானவர்களுக்கு அந்த வழிகள் தெரிவதில்லை. முரட்டுவாக்கில் ஒரே கதவையே திரும்பத் திரும்பத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே கதவு எல்லோருக்கும் திறக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு கதவு திறக்கவில்லை என்றால் அந்தக் கதவை விட்டுவிட்டு அடுத்த கதவைத் தட்டுவதற்கு நமக்குத் தெரிய வேண்டும். அது மட்டும்தான் கை கொடுக்கும்.