எதை எழுதுவது, எதை எழுதாமல் விடுவது என்கிற குழப்பமே எழுதாமல் இருந்துவிடச் செய்கிறது.
பல மாதங்களுக்குப் பிறகு ஊருக்குச் சென்றிருந்தேன். சித்த மருத்துவர் சரவணன் ‘முதல்ல சிரிச்சு பழகுங்க’ என்றார். அவர் அண்ணன் மாதிரி. மனம் இந்த வரியைத்தான் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருக்கிறது. ஒருவன் இறுகிக் கிடப்பதை இதைவிட எப்படி எளிமையாக சொல்ல முடியும் என்று தெரியவில்லை. அம்மாவும் அதைத்தான் சொன்னார். கடைசியாக சண்டை வந்த போது வேணியும் அதையே சொன்னாள். ஆளாளுக்கு ஒவ்வொரு வகையில் சொன்னாலும் சொன்ன விஷயம் ஒன்றே ஒன்றுதான்.
பெங்களூரில் வேலையில் இருக்கும் போது போக்குவரத்து நெரிசலில் அலுவலகம் செல்ல ஒரு மணி நேரம் ஆனாலும் சிந்தனை முழுக்க பறந்து கொண்டேயிருக்கும். எதையாவது நினைத்துக் கொண்டேயிருந்தேன். நினைத்ததை எழுதிக் கொண்டேயிருந்தேன். யோசித்துப் பார்த்தால் அப்பொழுதெல்லாம் ரகசியம் என்று மனதுக்குள் எதுவுமே இருந்ததில்லை. அது அவ்வளவு பெரிய சுதந்திரமாக இருந்தது.
அப்பொழுதும் மன உளைச்சல் இருக்கும். அலுவலகத்தில் யாராவது பிரச்சனை செய்வார்கள். ஆட்களை அவ்வப்பொழுது வேலையை விட்டு வெளியில் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். நம்மையும் அனுப்பிவிடுவார்களோ என்று பதற வேண்டியிருக்கும். ஆனால் அதெல்லாம் வேறொரு களம். இங்கேயிருந்து பார்த்தால் அதற்காகவா பதறினோம் என்று தோன்றுகிறது.
எல்லாமும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே!
சென்னையில் கடிவாளம் பூட்டிய குதிரைக்கணக்காகத்தான் ஓட்டம். திட்டுபவர்கள்தான் அதிகம். வசைகளும் அவதூறுகளும் நிறைய. நாம் நம்மைப்பற்றிய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தால் ஒன்றுமில்லை. திடீரென்று நாம் நிறுத்தினால் அடுத்தவர்களின் கதைகளில் நாம் ஒரு கதாபாத்திரம் ஆகிவிடுவோம். அப்படித்தான் ஆகிப் போனது. ‘அடேய் அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்ல எத்தனிப்பதற்குள் இன்னொருத்தர் இன்னொரு கதையைச் சொல்வார்.
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள் என்ற ஆத்மாநாமின் கவிதை வரிகள்தான் தோன்றும்.
பெருக்கெடுத்து ஓடுகிற வெள்ளத்தில் இலை ஒன்றின் மீது அமர்ந்துள்ள எறும்பு மாதிரிதான் ஆகிவிட்டது. அசைந்தால் விழ வேண்டும். விழுந்தால் கதை முடிந்துவிடும். பிரச்சனை என்னவென்றால் எறும்பு மீது பெரிய பனங்காய் ஒன்றும் இருக்கிறது.
தொடங்கிய இடத்திற்கு, தொடங்கியது போலவே திரும்பவும் போய்ச் சேர முடியாது. அப்படி போய்ச் சேர்வதில் அர்த்தமுமில்லை. இருக்குமிடத்தில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ள முடியுமா என்று முயற்சித்துப் பார்க்கலாம். மீட்டுக் கொள்ள முடிந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் வேறு வழியில்லை.
உண்மையில் இறுகித்தான் போய்விட்டேன். எதையும் புகழவும் இல்லை; இகழவும் இல்லை. புலம்பலும் இல்லை; பெருமையும் இல்லை.
உலகமும் வாழ்க்கையும் நமக்கு கொடுப்பதெல்லாம் பாடங்கள்தான். நல்லதோ கெட்டதோ- அது பாட்டுக்கு நடந்து கொண்டேயிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.
அதை விடுவோம்-
நிசப்தம் அறக்கட்டளையில் இன்றைய தேதிப்படி(30 ஆகஸ்ட் 2026) ரூ 41,90,834.00 (நாற்பத்தியொரு லட்சத்து தொண்ணூறாயிரத்து எந்நூற்று முப்பத்து நான்கு ரூபாய்) வைப்பு நிதியாகவும், ரூ 17,00,496.95 (பதினேழு லட்சத்து நானூற்று தொண்ணூற்றாறு ரூபாய்) செயல்பாட்டு (Operative) நிதியாகவும் என மொத்தம் ரூபாய் 58 லட்சத்து 91 ஆயிரத்து 330 உள்ளது. அரசு-அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தேவையெனில் தொடர்பு கொள்ளச் சொல்லவும். பெற்றோர் இல்லாத மாணவ-மாணவியருக்கு முன்னுரிமை தரவும்.
இப்போதைக்கு நன்கொடை எதுவும் வேண்டாம். சரியான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தால் கூட இத்தொகையில் பெரும்பகுதியைக் கரைக்க மூன்றாண்டுகளாவது தேவைப்படும்.