Oct 10, 2016

நம் கையில் என்ன இருக்கு?

‘அவங்ககிட்ட சொன்னா எங்கீங்க கேட்கிறாங்க?’

‘பயப்படுறாங்க’

‘அவங்களுக்கு நம்பிக்கையில்லை...நாம எப்படி ஃபோர்ஸ் பண்ணுறது?’ இப்படி திரும்பத் திரும்ப எதிர்கொள்கிற பதில்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 

மேற்சொன்னவிதமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பவர்களிடம் காட்டுவதற்காகவாவது ஒரு கட்டுரையை விரிவாக எழுத வேண்டும் எனத் தோன்றியது.

அப்பாவுக்கு ஈரலில் பிரச்சினை. பல ஆண்டுகளுக்கு முன்பாக விபத்து ஒன்றில் கால் முறிந்தது. அறுவை சிகிச்சைக்காக ஒரு யூனிட் இரத்தம் செலுத்தினார்கள். அநேகமாக அதுதான் வினையாக இருந்திருக்கக் கூடும். ஹெபாட்ட்டிஸ் சி வைரஸ் உள்ளே புகுந்துவிட்டது. உள்ளே நுழைந்த வைரஸானது பிரச்சினையை வெளிக்காட்டாமல் ஈரலில் தங்கி அதன் மீது தனது வேலையைக் காட்டுகிறது. ஈரல் முழுவதும் தழும்புகளும் காயங்களும் உண்டாகின்றன. இதை chirrohsis என்கிறார்கள். Fibroscan என்கிற கருவியின் மூலம் கண்டறியப்பட்ட போது ஈரல் முற்றாக வலுவிழந்திருந்தது. ஈரல் செயல்படுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது.

இதெல்லாம் நவம்பர் 2015 ஆம் ஆண்டு நடந்தது. 

கோவையில் ஒரு குடல் மற்றும் வயிற்று நோய் சிறப்பு மருத்துவமனையில்தா பரிசோதித்தோம். வைரஸைக் கொல்வதற்காகக் கொடுக்கப்பட்ட மாத்திரையின் விலை மட்டும் மாதம் இருபத்து மூன்றாயிரம் ரூபாய். sofocure என்பது அந்த மாத்திரையின் பெயர். மருத்துவமனையில்தான் இந்த விலை. தேடியலைந்து மருந்துகளின் மொத்த விற்பனையாளரைப் பிடித்த போது அதே மாத்திரையை வெறும் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கினோம்.

நவம்பர் மாதத்திலிருந்து அடுத்த நான்கைந்து மாதங்கள் வரைக்கும் ஒவ்வொரு மாதமும் பெங்களூரிலிருந்து கோவை செல்ல வேண்டியிருந்தது. நன்றாகத்தான் இருந்தார். ஆனால் மெல்ல மெல்ல உடல் நிலை நலிவுற்றபடியே இருந்தது. அதை மருத்துவர்களிடம் சொன்னால் ‘அப்படித்தான் இருக்கும்’ என்றார்கள். பிப்ரவரி மாதத்தில் உடல் வெகுவாக நசிவுற்ற போது அழுத்தம் திருத்தமாக மருத்துவர்களிடம் சொல்ல வேண்டியிருந்தது. சுதாரித்துக் கொண்டவர்கள் உடனடியாக அல்ட்ரா சவுண்ட் செய்து பார்க்கச் சொன்னார்கள். பார்த்துவிட்டு ஈரலில் கட்டி என்றார்கள். அதன் பிறகு வயிற்றில் ஒரு துளையிட்டு ஈரலின் ஒரு பகுதியை எடுத்து மும்பைக்கு அனுப்பி வைத்தார்கள். மும்பையிலிருந்து வந்த முடிவு தலையில் இடியை இறக்கியது. Hepatocellular carcinoma. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதைச் சொல்லவில்லை. கோவையில் அதுவரை மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த குடல் மற்றும் வயிறு சிகிச்சை நிபுணர் இனி தன்னிடம் மருத்துவமில்லை என்றார்.

தம்பியும் நானும் பதறிப் போனோம். கோவை மெடிக்கல்ஸ் என்ற இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அந்த பேயறைந்த இரவில் அறை ஒதுக்கித் தந்தார்கள். இந்த நோய்க்கு மார்க்கெட்டில் ஒரேயொரு மாத்திரைதான் இருப்பதாகச் சொன்னார்கள். நெக்ஸாவேர் என்பது மாத்திரையின் பெயர். மாதம் கிட்டத்தட்ட நாற்பத்து மூன்றாயிரம் ரூபாய் வரைக்கும் தேவைப்படும். அதே மாத்திரை உள்ளூர் நிறுவனம் ஒன்றும் தயாரிக்கிறது. விலை குறைவு. ‘எது எடுத்துக்குறீங்க?’ என்றார் மருத்துவர். எங்களுக்கு பதில் தெரியவில்லை. ‘நீங்கதான் முடிவு செய்யணும்’ என்று சொல்லிவிட்டார்கள். பணத்துக்காக பயப்பட்டுவிடக் கூடாது என்று விலை அதிகமான மாத்திரைக்கு ஒத்துக் கொண்டோம். அது உடலில் சூட்டைக் கிளப்பும். உடல் தாங்காது. ஆனால் வேறு வழியே இல்லை. ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். மருத்துவக் கோப்புகளை எடுத்துக் கொண்டு இரவோடிரவாக பெங்களூரு வந்து இரண்டு மூன்று மருத்துவமனைகளில் நிபுணர்களைச் சந்தித்துக் கேட்ட போது ‘அது ஒண்ணுதான் சிகிச்சை’ என்றார்கள். அறுவை சிகிச்சை, ஈரல் மாற்று என்று எதுவும் வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

இதெல்லாம் நடந்தது 2016 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில். மாத்திரையை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு மாதமும் அப்பாவின் உடல் தளர்ந்து கொண்டேதான் இருந்தது. வெளிப்புறத் தோற்றத்தை வைத்து மட்டும் சொல்லவில்லை. ஈரலின் பணி எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக SGOT, SGBT, Bilirubin போன்றவை ரத்தத்தில் எவ்வளவு அளவு இருக்கிறது என்று பார்க்கிறார்கள். மாதாமாதம் அளவு கூடிக் கொண்டே போனது. ஒவ்வொரு மாதமும் பரிசோதனைக்குச் செல்லும் போது மருத்துவரிடம் கேட்கையில் ‘இதையெல்லாம் குறைக்க முடியாது...கட்டுப்பாட்டில் வெச்சிருக்கலாம்’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். எல்லாமும் ஜூன் மாத இறுதிவரைக்கும்தான். ஜூன் இறுதியில் கோவை மருத்துவரிடம் காட்டிவிட்டு பெங்களூரு சென்ற ஒரே வாரத்தில் நிலைமை கை மீறிப் போனது. 

குளிர்காற்று வீசிய ஒரு தினத்தில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அப்பாவால் எழுந்து படுக்கையறைக்குச் செல்ல முடியவில்லை. கால் வீங்கிவிட்டது. வயிறும் வீங்கியிருந்தது. அடுத்த நான்கைந்து மணி நேரத்தில் நினைவு தவறிப் போனது. தூக்கி வந்து காரில் படுக்க வைத்து வண்டியைக் கோவைக்கு விரட்டினோம். கோவை மருத்துவமனையில் அவசரப்பிரிவில் படுக்க வைத்தார்கள். அப்பாவுக்கு அரைகுறையான ஞாபகம் மட்டும்தான் இருந்தது. மதியத்திற்கு மேல் தனது அறைக்கு அழைத்த மருத்துவர் 1.1 இருக்க வேண்டிய பிலிரூபின் 3.6 ஐ நெருங்கிவிட்டது; 15-37க்குள் இருக்க வேண்டிய SGOT 399 ஐ தொட்டுவிட்டது; 12-78க்குள் இருக்க வேண்டிய SGBT 245 ஐ தாண்டுகிறது. ஈரல் முற்றாக செயல் இழந்ததன் அறிகுறிகள் இவை என்றும் இனி ஈரலைச் செயல்பட வைப்பதற்கு சாத்தியமே இல்லை என்றார். ‘இனி செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்பது அவர் வாதம். கை கால்கள் பதறத் துவங்கின. அம்மாவிடம் இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.

மருத்துவர் சிவசங்கர்தான் ‘நீங்க அப்பாவை இங்க கூட்டிட்டு வாங்க பார்த்துக்கலாம்’ என்றார். கோவை மெடிக்கல்ஸ் மருத்துவமனைக்கு வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் பின்னால் வண்டியில் வரச் சொல்லிவிட்டு தம்பியையும் மாமா பையனையும் மட்டும் ஏற்றிக் கொண்டு அப்பாவை படுக்க வைத்துக் கொண்டு கோபிக்கு கிளம்பினோம். வரும் வழியில் எல்லாம் அப்பாவுக்கு பிடித்த எதையாவது பேசிக் கொண்டே வந்தேன். ‘ம்ம்’ என்கிற சப்தம் மட்டும் அப்பாவிடமிருந்து வந்தது. தாரை தாரையாக வழிகிற கண்ணீரைத் துடைக்காமலேயே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். 

கோபியில் அபி மருத்துவமனையில் படுக்க வைத்த போது ‘கிட்டத்தட்ட கோமா’ என்றார்கள். குறைந்திருந்த சோடியத்தின் அளவை சரி செய்தல், வயிற்றை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளையெல்லாம் அலோபதி மருத்துவத்தின் வழியாகச் செய்தார்கள். அதே சமயம் எந்த மாற்று மருத்துவமாக இருந்தாலும் செய்து கொள்வதற்கான அனுமதியை வழங்கினார்கள்.  

மாமா ஒருவர் பஞ்ச கவ்யத்தையும் அர்க்கையும் கொண்டு வந்து கொடுத்து புகட்டச் சொன்னார்கள். அப்பாவுக்கு விழுங்குகிற வலுவே இல்லை. டீஸ்பூனில் வைத்து உதட்டை ஈரமாக்கினார்கள். கசப்பில் வாயைச் சுழித்தார். மருந்து கொடுத்த மாமாவிடம் ‘இனியும் அவரைக் கஷ்டப்படுத்தணுமா?’ என்றேன். ‘இரண்டு நாளைக்கு கொடுங்க மாப்பிள்ளை’என்றார்கள். இன்னொருவர் ‘தினமும் நித்யகல்யாணி பூவை கொதிக்க வெச்சு கொடுங்க’ என்றார். அதையும் செய்தோம்.

பிரச்சினைகளைக் கேள்விப்பட்டு பேராசிரியர் வெற்றிவேல் வந்தார். சங்ககிரி மனோ என்கிற சித்த மருத்துவரிடம் மருந்து இருப்பதாகச் சொன்னார். பூரமெழுகு என்று பெயர். அதை சித்த மருத்துவத்தின் கீமோதெரபி என்கிறார்கள். உடலில் கட்டியை வளரவிடாமல் தடுப்பதோடு மேலும் பரவாமல் தடுக்கிறது என்கிறார்கள். மனோ பூரமெழுகுக்காக காசு எதுவும் வாங்கிக் கொள்வதில்லை. ‘எனக்கு வைத்தியம் தெரியுது..செய்யறேன்’ என்றார். வெற்றிவேல் இன்னொரு மருத்துவர் இருப்பதாகச் சொல்லி மொடச்சூர் சரவணனிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் பிலிருபீன் அளவைக் குறைப்பதற்கான மருந்தை வாங்கிக் கொண்டோம். இன்னொரு சரவணன் என்கிற சித்த மருத்துவர் வேம்பு, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, துளசி, சீரகம், வில்வம் உள்ளிட்ட மூலிகைப் பொடிகளைக் கலக்கி வைத்துக் கொண்டு கசாயம் வைத்துத் தரச் சொன்னார். அம்மா சலிப்பில்லாமல் செய்து கொடுத்தார். ஒவ்வொரு மருத்துவரையும் காலகாலத்துக்கும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மெல்ல நினைவு வந்தது. சாப்பிட வாயைத் திறந்தார். சில நாட்களில் எழுந்து அமர்ந்தார். பிறகு நடக்கத் தொடங்கினார். இன்றைக்கு கிட்டத்தட்ட இயல்புக்கு வந்துவிட்டார்.

இப்படி எல்லாவிதமான சித்த நாட்டு மருந்துகளையும் எடுத்துக் கொண்டிருந்த போது ப்ளேட்லெட் எண்ணிக்கை குறைந்தது. ‘அதெல்லாம் பிரச்சினையில்லை....மூணு நாளைக்கு பப்பாளி இலைச் சாறைக் கொடுங்க’ என்றார்கள். அப்படியே கொடுத்தோம். எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து இயல்பான அளவில் இருக்கிறது. ரத்தச் சிவப்பணு எண்ணிக்கை எட்டு என்கிற அளவில் இருந்து வந்தது. மாதுளம் பழமும், கறிவேப்பிலை பொடியும் தொடர்ந்து எடுத்து வருகிறார். இப்பொழுது பத்து என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பிரச்சினைக்கு ஏற்ப வைத்தியம். இப்பொழுது அப்பாவால் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடக்க முடிகிறது. எப்பொழுதும் போல சாப்பிடுகிறார். வயிறு வீக்கம் இருந்தது. அலோபதி மருத்துவர் சிவசங்கர் நீர் வெளியேற்ற மாத்திரை கொடுத்திருக்கிறார். அதோடு கோவன் இலையைச் சாறு செய்து அவ்வப்பொழுது கொடுக்கிறோம். வீக்கம் குறைந்திருக்கிறது. நேற்று இரத்தப் பரிசோதனை செய்தோம். கிட்டத்தட்ட அத்தனையும் இயல்பான நிலையில் இருக்கிறது. 

ஜூலை 02- 2016
அக்டோபர் 08- 2016
Normal Range
SGOT
399
18.0
15-37 U/l
SGBT
245
34.0
12-78 U/l
Total Bilirubin
3.57
0.7
0.3-1.1 mg/dl
Direct Bilirubin
2.45
0.3
0- 0.25 mg/dl
இன்றைக்கும் கூட பரிபூரண குணம் என்று சொல்லவில்லை. ஆனால் miracle என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். முதுமைக்குரிய தளர்வுடன் நன்றாகவே இருக்கிறார். தெளிவாக இருக்கட்டும் என்பதற்காகவே நவம்பர், பிப்ரவரி, ஜூலை மாதங்களில் என்ன நடந்தது என்று மாதம் வாரியாகவே சொல்லியிருக்கிறேன்.

இது குறித்தெல்லாம் முன்பே ஓரளவுக்கு எழுதியிருக்கிறேன். ஆனாலும் மேற்சொன்ன கேள்விகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கின்றன. அப்பாவின் உடல் நிலையை இவ்வளவு விரிவாகவும் அப்பட்டமாகவும் எழுதக் காரணம் இருக்கிறது. எந்த மருத்துவத்தையும் குறை சொல்வதோ தூக்கிப்பிடிப்பதோ நோக்கமில்லை. நேரடி சாட்சியமாக இருந்திருக்கிறேன். அதனால் எல்லாவற்றையும் மிகை குறை இல்லாமல் அப்படியே எழுதியிருக்கிறேன். 

ஒவ்வொரு மருத்துவத்திலும் ஏதோவொரு பலம் இருக்கிறது. நவம்பர் மாதத்திலிருந்து எடுத்த ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, பயாப்ஸி என்று அத்தனைவிதமான முடிவுகளும் கைவசம் இருக்கின்றன. யார் கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராகவே இருக்கிறேன். 

இந்தக் கட்டுரை கூட நம்பிக்கையை விதைப்பதற்காகத்தான். நம்மைச் சுற்றி இருக்கிற நல்லனவற்றை விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். 

பாரம்பரிய மருத்துவத்தைப் பொறுத்தவரையிலும் நேர்மையான மருத்துவர்களைக் கண்டறிவதுதான் மிகப்பெரிய காரியம். அதைச் செய்துவிட்டால் போதும்.  பாதிக்கடலைத் தாண்டியது போலத்தான்.

சித்தர்கள் வாக்கு ஒன்றும் நினைவுக்கு வருகிறது  - ‘எவனெவனுக்கு எது எது கிடைக்கணுமோ அது அது அவனவனுக்குக் கிடைக்கும். நீ பறிக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது’.

ஆயினும், சொல்வதைச் சொல்வோம். ஏதாவதொருவகையில் எங்கேயாவது சில உயிர்கள் தேறி வரட்டும். எல்லாவற்றையும் ரகசியமாக பதுக்கி வைத்து என்ன செய்யப் போகிறோம்?

Oct 6, 2016

சித்த மருத்துவக் குறிப்புகள்

அன்புள்ள மணிகண்டன்,

சித்த மற்றும் நாட்டு வைத்தியங்கள் பற்றி நீங்கள் எழுதுவது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 72 வயதாகிறது. அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். சித்த மருத்துவத்திலும் நாட்டு வைத்தியத்திலும் சுய ஆர்வம் காரணமாக கற்று வைத்திருக்கிறேன். இது கடல். எனக்கு கையளவு தெரியும். யாருக்கும் மருத்துவம் பார்ப்பதில்லை. தேர்ந்த வல்லுநர்கள் மட்டும் மருத்துவம் பார்க்க வேண்டும். என்னைப் போன்று சுயமாகக் கற்றவர்கள் உணவுப் பொருட்களின் வழியாகவே நோய் தீர்க்கும் வழிகளைப் பற்றி பேசினால் தவறில்லை. 

சில நாட்களுக்கு முன்பாக நீங்கள் எழுதியிருந்த கட்டுரையில் கழற்சிகாய் பற்றி எழுதியிருந்தீர்கள்- பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு மட்டுமில்லாமல் உடலில் எந்தப் பகுதியில் inflammation என்றாலும் அதன் காரணமாக உண்டாகக் கூடிய கட்டிக்கு கழற்சி காய் பயன் தரக் கூடியது.  கழற்சி நாட்டு மருந்துக் கடைகளிலேயே கிடைக்கும். ஐந்து குருமிளகு சேர்த்து காலையில் ஒரு காயும் மாலையில் ஒரு காயும் உண்டு வந்தால் எந்தவிதமான கட்டிக்கும் நல்ல பலனளிக்கும். சமீபத்திய கட்டுரையொன்றில் ஏதோவொரு குழந்தைக்கு தலையில் கட்டி என்று எழுதியிருந்தீர்கள் அல்லவா? அந்தக் குழந்தையின் பெற்றவர்களிடம் சொல்லி இதை முயற்சித்து பார்க்கச் சொல்லுங்கள். நிச்சயமாக நன்மை கிடைக்கும்.

இதே அளவிற்கு பலன் தரக் கூடியது நித்யகல்யாணி பூ. காசரளி என்றும் பெயர் உண்டு. உடலில் கட்டி வந்தவர்கள் (கேன்சர் கட்டி உட்பட) பத்து பூக்களைப் பறித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை டம்ளராக சுண்டியவுடன் தினமும் ஒருவேளை குடித்து வந்தால் வித்தியாசத்தை உணரலாம். கொதிக்கும் போது பூவின் ஊதா நிறமானது வெண்மையாக மாறும். இந்தப் பூவையும் உடலில் எந்தப் பாகத்தில் கட்டி வந்தாலும் முயற்சிக்கலாம். 

நிறைய மருத்துவக் குறிப்புகளைத் தர விரும்பினாலும் கூட அனுபவப்பூர்வமாக உணர்ந்தவற்றை மட்டுமே எழுத விரும்புகிறேன்.

எனக்கு அடிக்கடி சிறுநீர்த் தொற்று உண்டாகும். சிறுநீர் பரிசோதனையில் E-coli என்று வந்தால் லவங்கப் பட்டையை பொடியாக்கி வைத்துக் கொண்டு காலையிலும் இரவிலும் ஒரு டீஸ்பூன் தயிரோடு சேர்த்து வந்தால் போதும். அலோபதி மருத்துவத்தின் ஆன்ட்டி-பயாடிக்கை எடுத்துக் கொண்டாலும் இதைத் தொடர்ந்து உட்கொள்ளலாம். ஒருவேளை சிறுநீர் பரிசோதனையில் கிருமி எதுவுமில்லை என்றாலும் தொடர்ந்து எரிச்சல் ஏற்பட்டால் உடற்சூடுதான் முக்கியக் காரணமாக இருக்கும். இளநீரில் பனங்கற்கண்டைச் சேர்த்து குடித்தால் போதும். உடல் சூட்டைத் தணிக்க இது நல்ல வழி. கூடவே ஒரு கரண்டி நல்லெண்ணையில் உரிக்காத வெள்ளைப் பூண்டு ஒன்றிரண்டு பற்களைப் போட்டு கூடவே குருமிளகு ஆறு சேர்த்து கொதிக்க வைத்து ஆறியவுடன் இரண்டு கால்களிலும் கட்டைவிரலில் மேலும் கீழுமாக பூசிக் கொண்டால் உடல் சூடு வெகு விரைவில் தணிந்துவிடும். 

சித்த அல்லது நாட்டு வைத்தியத்தில் மருந்தாக இல்லாமல் food compliment ஆகவே பல நோய்களைச் சீராக்க முடியும். மேற்சொன்னவை போல food compliment நிறைய இருக்கின்றன. பின்விளைவுகளும் இல்லாதவை. அலோபதி, ஓமியோபதி என்ற எந்த மருத்துவத்தைப் பின்பற்றினாலும் இவற்றை உடலில் சேர்த்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை, மஞ்சள், மிளகு, பூண்டு என நாம் தினசரி பயன்படுத்துகிற உணவுப் பொருட்களே பல வியாதிகளுக்கு எதிராக வேலை செய்யக் கூடியவை. ‘உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் வாழ்வியல் முறை. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிறழத் தொடங்கிய போது நிறைய நோய்கள் வந்து நம்மை ஒட்டிக் கொண்டன. உங்களைப் போன்ற அடுத்த தலைமுறையினர் இத்தகைய உணவு முறைகள் குறித்தும் மருந்துகள் குறித்தும் பேசுவதன் மூலமாக பரவலாகச் செய்திகளைக் கொண்டு சேர்க்க வேண்டுமென விரும்புகிறேன்.

நீங்கள் எழுதிய கட்டுரைகள் நம்பிக்கையளிக்க கூடியதாக இருந்தன. நினைவுக்கு வரக் கூடிய குறிப்புகளை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

நன்றி. 

அன்புடன்,
சண்முகம்.

(ஆங்கிலத்திலிருந்த கடிதத்தை மொழிபெயர்த்திருக்கிறேன்)

Sep 27, 2016

நோய் நாடி

சமீபமாக மாற்று மருத்துவம் குறித்தான தகவல்களைக் கோரி நிறையப் பேர் அழைக்கிறார்கள். மின்னஞ்சல்கள் வருகின்றன. எனக்கு பெரிய அளவில் தெரியாது. பேராசியரின் எண்ணைக் கொடுத்துவிடுகிறேன்.

ஆனால் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும் போது ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லிவிடுவதுண்டு. ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ அதன் பிறகுதான் அது தணிக்கும் மருந்தை நாட வேண்டும். நோய் என்னவென்று கண்டறிவதற்கும் அதன் அடிநாதத்தைப் பற்றுவதற்கும் அலோபதி மருத்துவத்தைவிட்டால் வேறு வழியில்லை. அவர்கள் சொல்லுகிற பரிசோதனைகளை மேற்கொண்டு ‘இதுதான் பிரச்சினை’ என்று கண்டுபிடித்துவிடுவது முக்கியமான வேலை. அதன் பிறகு மருத்துவம் முறை பற்றி யோசிக்கலாம்.

சமீபத்தில் ஒரு குடும்பத்தினர் அழைத்திருந்தார்கள். பத்து வயதுக் குழந்தைக்கு மூளையில் பிரச்சினை. அதை விரிவாக எழுத முடியாது. கேள்விப்பட்ட எனக்கு இரண்டு நாட்களாகத் தூக்கமில்லை. கண்டபடி கனவு வருகிறது. இரண்டு மூன்று முறை உறக்கத்திலிருந்து விழித்து எழுந்ததெல்லாம் நடந்தது. அதனால் விரிவாக எழுதுகிற மனநிலை இல்லை. பிரச்சினை என்னவென்றால் குழந்தை உண்ணும் சாப்பாட்டு அளவு குறைகிறது என்று ஒவ்வொரு மருத்துவராக அலைந்திருக்கிறார்கள். கடைசியில் யாரோ ஒரு ஜூனியர் மருத்துவர் சொன்னாரென்று தலையில் ஸ்கேன் செய்த போது பிரச்சினையைக் கண்டறிந்திருக்கிறார்கள். பிரச்சினை என்று மட்டும்தான் சொல்கிறார்கள்.  என்ன ஏது என்கிற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ‘மருந்து வேண்டும்’ என்றார்கள். ‘தயவு செய்து நியூரலாஜிஸ்ட் ஒருவரைப் பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறேன். பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. பார்க்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

மாற்று மருத்துவம் மீது நம்பிக்கையில்லாமல் இதைச் சொல்லவில்லை. எங்கள் அப்பாவை அலோபதி மருத்துவம் முற்றாகக் கைவிட்ட பிறகுதான் சித்தாவை நாடினோம். அலோபதி மருத்துவர் சிவசங்கரோடு சேர்த்து நான்கு சித்த மருத்துவர்கள் உதவினார்கள். அப்பாவுக்கு இப்பொழுது பெரிய பிரச்சினை எதுவுமில்லை. வயிறு வீக்கம் மட்டும் இருக்கிறது. ஆனால் நன்றாக இருக்கிறார். வழக்கம் போல பசியாகிறது. உணவருந்துகிறார். தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்கிறார். வெகு  தெளிவாக இருக்கிறார். உள்ளூரில் இடம் ஒன்று விற்பனைக்கு வந்த போது விசாரித்து விலை முடித்து முன்பணம் கொடுத்திருக்கிறார். அந்த அளவிற்கான தெளிவு. எல்லோருக்குமே ஆச்சரியம்தான். ஆனால் இதே வைத்திய முறை அப்படியே அத்தனை பேருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. தீவிரமான நோய்மை எனில் வாய்ப்பிருக்கும் மருத்துவங்களையெல்லாம் ஒரு முறையாவது அலசி ஆய்ந்துவிடுவதுதான் சாலச் சிறந்தது. ஆனால் Analysis என்பதைப் பொறுத்தவரையில் வேறு எந்த மருத்துவரையும் விடவும் அலோபதி மருத்துவரைத்தான் நம்ப வேண்டும்.

சமீபத்தில் நாட்டு மருத்துவங்கள் குறித்த புத்தகங்கள், கிடைக்கும் குறிப்புகளை எல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். மூலிகைகள் குறித்தான குறிப்புகளையும் தேடி எடுத்துக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இதையெல்லாம் வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாது. ஆனால் நமது வாழ்க்கை முறையிலேயே நிறைய மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. இப்பொழுது ஓரளவுக்கு விழிப்புணர்வு அடைந்திருக்கிறோம்தான். முடிந்த அளவுக்கு வேதிப் பொருட்களைத் தவிர்க்கலாம் என்று நாம் விரும்பினாலும் அது முற்றாகச் சாத்தியமில்லை. விளைபொருட்களிலிருந்து பிராய்லர் கோழி வரைக்கும் எல்லாவற்றிலும் வேதிப் பொருட்கள் கலந்திருக்கின்றன. ஆர்கானிக் பொருள் என்று விற்கப்படுகிற சோப், ஷாம்பூ என எல்லாவற்றிலும் Ingredients என்ன இருக்கிறது என்று பார்த்தால் ஏதேனும் வேதிப் பொருள் கலந்திருக்கிறது. ஆர்கானிக், இயற்கை, நேச்சுரல் என்கிற சொற்களுக்கெல்லாம் இப்போது விலை அதிகம். அதைப் பயன்படுத்தி பலர் திருட்டுத்தனமாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

மருத்துவம் என்பது இரண்டாம் கட்டம். உடல் நலத்தோடு இருக்கும் போதே வாழ்க்கை முறையின் வழியாகவே நிறைய காரியங்களை நம் உடலுக்காக நம்மால் செய்ய முடியும். நீலக் கொளுஞ்சி என்றொரு செடி இருக்கிறது. அதன் வேரை தட்டி கொதிக்க வைத்து வருடம் ஒரு முறை வெறும் வயிற்றில் குடித்தால் நம் உடலில் சேகரமாகும் பெரும்பாலான விஷங்களை முறித்துவிடுகிறது என்று சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது குறித்த நிறையைக் குறிப்புகளும் இருக்கின்றன. சாதாரணக் கொளுஞ்சி வேறு. நீலக் கொளுஞ்சி வேறு. இதைத்தான் நீலி என்கிறார்கள். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் முந்தின நாள் செய்துவிடலாம்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை நிலாவரை இலைப் பொடி மூன்று தேக்கரண்டிகளை தேனில் குழைத்து இரவு தின்றால் வயிறு சுத்தமாக உதவுகிறது. இப்படி நிறையக் குறிப்புகள் கிடைக்கின்றன. எல்லோராலும் பின்பற்ற முடியக் கூடிய சிறு சிறு குறிப்புகள். பெரும்பாலான நாட்டு மருந்துக் கடைகளில் இத்தகைய பொடிகள் கிடைக்கின்றன. இவை எதுவும் எதிர்மறை விளைவை உண்டாக்குவதில்லை என்றாலும் சித்த மருத்துவர்களின் ஆலோசனகளுடன் இவற்றையெல்லாம் முயற்சித்துப் பார்க்கலாம். 

மருத்துவம், மருந்து என்பதற்கெல்லாம் முன்னதாக நம் உடலைப் புரிந்து கொள்ளுதல் வெகு அவசியமாகிறது. நன்றாக இருக்கும் போது நம் உடலைப் பற்றி எதுவுமே கண்டுகொள்வதில்லை. இயந்திரம் போல அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டேயிருக்கிறது. இயந்திரத்தைக் கூட வருடம் ஒரு முறையாவது நிறுத்தி சர்வீஸ் செய்து திரும்ப ஓட விடுகிறோம். உடலுக்கு எதுவுமில்லை. முப்பது அல்லது நாற்பது வருடங்கள் ஓடிக் கொண்டேயிருந்து அதன் பிறகு மெல்ல மெல்ல பிரச்சினைகளைச் சந்திக்கிறது. பிரச்சினைகள் தொடங்கிய பிறகு மருத்துவம்தான் ஒரே வழி. உடலைப் புரிந்து கொள்வதெல்லாம் சாத்தியமேயில்லை. சர்வீஸ் என்பதற்கும் வாய்ப்பில்லை. 

குருதியில் ப்ளேட்லெட் எண்ணிக்கை குறையும் போது பப்பாளி இலைச் சாறு. ரத்த சிவப்பணுக்கள் குறையும் போது கறிவேப்பிலை பொடியும் பேரீச்சம் பழமும் என்று சாதாரணக் குறிப்புகள் நிறையக் கிடைக்கின்றன. வருடம் ஒரு முறை உடல் பரிசோதனை செய்து அலோபதி மருத்துவர்களின் உதவியுடன் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு ஆரம்பகட்டமெனில் இத்தகைய சிறு சிறு நாட்டு மருத்துவத்தின் வழியாகவே பெரும்பாலும் தப்பித்துவிட முடியும் என்று வெகு நம்பிக்கையாகச் சொல்லலாம். 

ஜலதோஷத்தின் போது கற்பூரவள்ளி இலையை நன்கு மென்றால் போதும். சிறுநீர் கடுப்பு என்றால் பச்சை வெங்காயத்தை மென்று தின்னலாம். வாய்ப்புண் என்றால் அதிமதுரப் பொடி ஒரு வேளைக்கு. பெரும்பாலான காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம். இப்படியே ஒற்றைத் தலைவலியில் ஆரம்பித்து நிறைய சிறு சிறு பிரச்சினைகளுக்கு நம்மிடமே வைத்தியமிருக்கிறது. ஆனால் ஒன்று- ஏற்கனவே சொன்னது போல எல்லோருக்கும் எல்லா வைத்தியமும் பொதுவானதாக இருப்பதில்லை. அதற்குத்தான் நம் உடலை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எது நம் உடலின் பிரச்சினை ஒத்து வரும் என்பதை ஒரு பொழுது போக்காகவே செய்யலாம். எதுவும் குடி மூழ்கிப் போகாது. எல்லாவற்றுக்கும் பாரா சிட்டமாலும், வேதிப் பொருட்களும்தான் மருந்தாக இருக்க வேண்டும் என்றில்லை. நம்மிடமே நிறைய மருந்துகள் இருக்கின்றன. நாம்தான் மறந்து கொண்டிருக்கிறோம்.

நாட்டு மருந்துக்கான முக்கியமான(நம்பகமான) புத்தகங்கள் இருப்பின் தெரியப்படுத்தவும். விவாதிக்கலாம். இதில் நாம் விவாதிக்க நிறைய இருக்கின்றன.

Jul 25, 2016

மாற்று மருத்துவம்

அப்பா எப்படி இருக்கிறார் என்று யாராவது விசாரிக்கிறார்கள். நன்றி. நன்றாக இருக்கிறார். பூரணமாக குணமடைந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால் நிறைய முன்னேற்றம். ஹெபாட்டிஸ் சி வைரஸ்தான் பிரச்சினையின் மூலகாரணம். அது கல்லீரலை எழுபத்தேழு சதவீதம் சுருக்கியிருந்தது. Chirrohtic condition என்கிறார்கள். அதன் பிறகு வைரஸூக்கு மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் கடந்த பிப்ரவரியில் வேறு பிரச்சினைகளைக் கண்டறிந்தார்கள். வெளியில் யாருக்கும் சொல்லவில்லை. அம்மாவுக்கும் கூடத் தெரியாது. இன்னமும் கூட அப்பாவுக்குத் தெரியாது.

பரிசோதனை விவரங்களை வைத்துக் கொண்டு நான்கைந்து சூப்பர் ஸ்பெஷல் மருத்துவர்களைச் சந்தித்தேன். ‘இதுக்கு ஒரே மருந்துதான் இருக்கு. அதுவும் கூட முழுமையாக சரி செய்யாது; ஆனால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்’ என்றார்கள். அந்த மருந்தை பேயர் நிறுவனம் தயாரிக்கிறது. மாதம் நாற்பத்தைந்தாயிரம் ரூபாய். ஜூன் மாத இறுதி வரைக்கும் அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டிருந்தார். அவர்கள் சொன்னது போல நோய் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் படிப்படியாக நோயின் வீரியம் உயர்வதைக் காணமுடிந்தது. வலி எதுவுமில்லை. ஆனால் ஒரு வகையிலான அசெகளரியம். கோயமுத்தூரில் ஒவ்வொரு மாதமும் மருத்துவரைச் சந்திக்கும் போது ‘அது அப்படித்தான் இருக்கும், ஆனால் நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறது’ என்பார். திரும்பி பெங்களூர் வந்துவிடுவோம்.

அப்படியிருந்த போதுதான் ஜூலை இரண்டாம் நாள் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. அதற்கு ஒரு வாரம் முன்பாகத்தான் பரிசோதனைச் செய்திருந்தோம். வழக்கம் போலவே கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் சொன்னார். பெங்களூரில் நினைவு குறையக் குறைய மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது ‘ஈரல் செயல்பாட்டை நிறுத்திவிட்டது. இனி மருத்துவம் செய்ய முடியாது’ என்று கை விரித்தார்கள். அத்தனை வாய்ப்புகளும் தடைபட்ட பிறகுதானே மாற்று மருந்துகளை யோசிக்கத் தோன்றும்? நாட்டு பசுவின் மூத்திரத்தைப் பற்றி யாராவது பேசும் போது நக்கலடித்திருக்கிறேன். ஆனால் பஞ்சகவ்யம், அர்க் மற்றும் புனர்னாவா ஆகிய மருந்துகளைக் கொடுக்க ஆரம்பித்தோம். மெல்ல மெல்ல முன்னேற்றம் தெரிந்தது.

இந்தச் சமயத்தில்தான் சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராக இருக்கும் வெற்றிவேல் வந்து பார்த்தார். அவர் மின்னியல் பேராசியர். ஆனால் சொந்த முயற்சியில் சித்த மருத்துவத்தில் மிகப்பெரிய அறிவாளி. அவராகப் படித்து வளர்த்துக் கொண்ட அறிவு. அப்துல்லா சாஹிப், பலராமையா உள்ளிட்ட சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் புத்தகங்களை வரிசைக்கிரமாக மனனம் செய்து வைத்திருக்கிறார். அவர் சங்ககிரி மனோகர், மருத்துவர் சரவணன் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து செயல்படுகிறார். அவர் முதன்முறையாக வந்து சித்த மருத்துவத்தைப் பற்றி பேசிய போது பெரிய நம்பிக்கையில்லை. 

‘சித்தா, நாட்டு மருந்தில் எல்லாம் ஸ்டீராய்டு கலந்துடுவாங்க..தயவு செஞ்சு போய்டாதீங்க’ என்று ஆரம்பகட்டத்தில் சில அறிவுரைகள் வந்து சேர்ந்தன. அதனால் பயமாக இருந்தது. வைத்தியம் பார்க்கிற மருத்துவர் வியாபார நோக்கில்லாமல் நேர்மையானவராக இருக்க வேண்டுமே என்கிற தயக்கம் இருந்தது. பேராசிரியர் வெற்றிவேலுக்கு சித்த மருத்துவத்தில் வருமானம் எதுவுமில்லை. உடலைப் புரிதல் என்கிற நோக்கத்தில் விடிய விடிய ஓலைச் சுவடிகளையும் புத்தகங்களையும் படித்துக் கொண்டிருக்கிறார். 

இரண்டு மூன்று முறை மருத்துவமனைக்கே வந்து பேசினார். அவருடைய அப்பா எங்கள் அம்மாவுக்கு ஆசிரியர். அய்யாமுத்து வாத்தியார் என்றால் உள்ளூரில் பிரபலம். வெற்றிவேல் அவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு சித்த மருத்துவத்துக்கும் ஒத்துக் கொண்டோம். நோயைத் தடுக்க ஒரு மருந்து, ஈரலை மீண்டும் செயல்படச் செய்ய தனி மருந்து என்று எந்த மருத்துவர் எதில் சிறப்பாகச் செயல்படுகிறாரோ அவரிடம் அந்தந்த மருந்துகளைப் பெற்றுத் தந்தார். எந்த மருத்துவரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. இன்றோடு இருபத்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அப்பாவால் நடக்க முடிகிறது. சாப்பிட முடிகிறது. ஏற்கனவே சொன்னது போல சிறு சிறு அசெகளரியங்கள் இருந்தாலும் ‘இனி மருத்துவம் வேலைக்கு ஆகாது. நீங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம்’ என்ற சூழல் எதுவும் இல்லை. 

இதை இவ்வளவு அவசரமாக எழுத வேண்டியதில்லை. என்னளவில் இது உணர்வுப்பூர்வமான விஷயம். எழுதினால் யாராவதொரு மருத்துவர் வந்து விவாதத்திற்கு இழுக்கக் கூடும். அப்பாவை மையமாக வைத்து விவாதம் எதிலும் ஈடுபடுகிற மனநிலை இல்லை. ஆனால் யாராவது ஒருவருக்கு நிச்சயமாக பயன்படக் கூடும் என்பதற்காக இதை எழுதுகிறேன். கடந்த ஏழெட்டு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரத்தப் பரிசோதனை செய்த விவரங்கள், அப்பொழுதெல்லாம் என்ன புள்ளிகள் இருந்தன, கடைசியாக சித்தா மற்றும் நாட்டு மருந்து கொடுக்கப்பட்டு இருபத்தியிரண்டு நாட்கள் கழித்துச் செய்த பரிசோதனையில் எவ்வளவு புள்ளிகள் இருந்தன என எல்லாமும் கைவசம் இருக்கின்றன. ஒரு நாள் விரிவாகப் பதிவு செய்கிறேன்.

ஈரலின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்காக சில ரத்தப் பரிசோதனைகளைச் செய்கிறார்கள். முக்கியமான சிலவற்றை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.


ஜூலை 02
ஜூலை 22
Normal Range
SGOT
399
84
15-37 U/l
SGBT
245
59
12-78 U/l
Total Bilirubin
3.57
1.3
0.3-1.1 mg/dl
Direct Bilirubin
2.45
0.9
0- 0.25 mg/dl

(“ஈரலைப் பொறுத்தவரையிலும் downgrade ஆவதைத் கட்டுபடுத்தலாம். அதையும் மீறி கீழே விழத் தொடங்கினால் தடுப்பது சிரமம். இவருக்கு கீழே விழத் தொடங்கிவிட்டது”- இது கோவையில் சிறப்பு மருத்துவர் சொன்ன வார்த்தைகள்)

இதையெல்லாம் எழுதுவதால் அலோபதி மோசம் என்பதை நிரூபிப்பதும் என் நோக்கமில்லை. கோபியில் செயல்படும் அபி மருத்துவமனை இல்லையென்றால் கோவையிலிருந்து அப்பாவை அழைத்துச் சென்று எங்கே படுக்க வைப்பது என்று தெரிந்திருக்காது. அபி மருத்துவமனையின் மருத்துவர்கள் செந்தில்நாதன், கார்த்திகேயன், குமரேசன், மோகன் உள்ளிட்டவர்களுக்கு வந்து பார்க்க வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்து ஆலோசனைகளைச் சொன்னார்கள். மருத்துவர் சிவசங்கர் ஒரு நாளைக்கு மூன்று முறை வருவார். உதவிகரமான சிகிச்சைகள் அத்தனையையும் அவர்தான் அளித்தார். பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு நிலைமையைத் துல்லியமாகக் கணித்தது அவர்தான். அவர் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமே ஆகியிருக்காது. செவிலியர்கள் அத்தனை உதவிகளையும் செய்தார்கள். அலோபதி மருத்துவர்களின் உதவியுடன், சித்த மற்றும் நாட்டு மருந்துகள் வேலை செய்கின்றன.

நோய் இன்னமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருக்கலாம். ஆனால் நோய் முதிர்ந்த நிலை இது; may be in weeks time என்று சொல்லப்பட்டவருக்கு எவ்வளவு முன்னேற்றம் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக குறிப்பிட்டிருக்கிறேன். ஒருவேளை ஆரம்பகட்டத்திலேயே மாற்று மருந்துகளை முயன்றிருந்தால் இவ்வளவும் சிரமம் நேராமல் இருந்திருக்கலாம். 

ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து மருத்துவ விவரங்களை எழுதலாம் என்றுதான் தோன்றியது. ஆனால் அப்படியில்லை. யாரேனும் இதைப் பின்பற்றக் கூடும். தொடர்பு கொள்ளக் கூடும். அவர்களுக்கு பயன்படட்டுமே. 

பேராசிரியர் வெற்றிவேலை அழைத்து ‘உங்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதட்டுமா? யாராவது விவரங்கள் கேட்டால் உங்கள் எண்ணைக் கொடுக்கட்டுமா?’ என்றேன். ‘தாராளமாகச் செய்யுங்கள். சேவையாகத்தானே செய்கிறோம்? இதில் என்ன தொந்தரவு’ என்றார். என்றாலும் கூட இங்கே பொதுவெளியில் அவருடைய எண்ணைக் குறிப்பிடவில்லை. தேவைப்படுகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் அவருடைய எண்ணைத் தருகிறேன். எந்த மருத்துவரிடம் எந்த மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து அவர் வழிகாட்டக் கூடும்.

சித்த மருத்துவத்துடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிற அர்க், பஞ்சகவ்யம் கிட்டத்தட்ட அத்தனை புற்று நோய்களிலும் வீர்யத்துடன் செயல்படுவதாகச் சொல்கிறார்கள். இந்துத்துவவாதிகள் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக மட்டுமே குருட்டுவாக்கில் நாட்டுப் பசுவின் மூத்திரத்தை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

மாற்று மருந்துகள் செயல்படுவதைக் கண்டுணரும் போது விவரங்களை மற்றவர்களுக்கும் சொல்வது நம் கடமை. ஒரேயொரு மருத்துவத்தை மட்டுமே கண்களை மூடிக் கொண்டு நம்ப வேண்டியதில்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன். இவையெல்லாம் யாரோ சொன்னதில்லை. நேரடியான சாட்சியமாக இருக்கிறேன். சரியான மருத்துவரைக் கண்டுபிடிப்பதில்தான் மிகப்பெரிய சவால் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்துவிட்டால் போராடிப் பார்த்துவிடலாம். ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கக் கூடும். நம்பிக்கை மட்டுமே முக்கியம்.