எங்கள் வீட்டில் ரூபாய் மூன்றாயிரத்துக்கும் மேலாக மின்கட்டணம் வந்துவிட்டது. அம்மா பதறிவிட்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ‘உங்களுக்கு எவ்வளவு கரண்ட் பில்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். மின் கட்டணம் தாறுமாறாக வந்திருக்கிறது என்று புலம்பினால் நான் என்ன செய்ய முடியும்? வீட்டில் எட்டுப் பேர்கள் இருக்கிறோம். மூன்று மின்விசிறிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வப்பொழுது நிலத்தொட்டி நீரை மேலேற்ற மோட்டார் ஓடுகிறது. சரியாகத்தான் இருக்கும் என்று சமாதானம் சொன்னேன். என்னை எரித்துவிடுவார் போலிருந்தது. ‘அப்படி இருந்தாலும் இது அதிகம்..மீட்டர்ல பிரச்சினையா இருக்கும்’ என்றார்.
இனி தப்பிக்க முடியாது. வேறு ஏதாவது ஒரு விவகாரத்தில் திட்டுவதாக இருந்தாலும் இதைக் கோர்த்து திட்டுவார். நமக்கு ஏன் வம்பு என்று கிளம்பிச் சென்று மின்வாரிய அலுவலகத்திதில் ஒரு புகார் கடிதம் கொடுத்தேன். மின்வாரிய ஊழியப் பெண்மணி ஒருவர் ‘எல்லோருக்குமே அதிகமாத்தாங்க வந்திருக்கு....ஏஸி போட்டீங்களா?’ என்றார். வீட்டில் ஏ.ஸியே இல்லை என்று சொன்னேன். புகாரை வாங்கி வைத்துக் கொண்டார். அடுத்த நாள் மின் வாரிய ஊழியர்கள் கர்ம சிரத்தையாக வந்து பார்த்துவிட்டு ‘மீட்டர் சரியா இருக்கு’ என்று சொன்னார்கள். எழுதிக் கொடுத்திருந்த புகார் கடிதத்திலேயே ஓரமாக ‘மின் வாரிய ஊழியர்கள் வந்து சரி பார்த்தார்கள்’ என்று எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டார்கள்.
அதன் பிறகு நான் தப்பித்துக் கொண்டேன். அம்மாதான் யாரிடம் பேசினாலும் மின் கட்டணம் பற்றி விசாரித்தார். பலரும் தமக்கும் அதிகம்தான் என்கிறார்கள். புதிய தலைமுறையில் கூட ஒரு நிகழ்ச்சியின் நேரலையில் கலந்து கொள்ள அழைத்தார்கள். இதே விவகாரம்தான். வீடுகள், நிறுவனங்கள் என பலரும் வழக்கத்திற்கு மாறான மின்கட்டண அதிகம் குறித்துப் புலம்புகிறார்கள். அதன் பிறகுதான் இதில் ஏதோ குளறுபடி இல்லாமல் இத்தனை பேர் இது குறித்துப் பேச வாய்ப்பில்லை எனத் தோன்றியது.
நிறைய மின்வாரிய நண்பர்களிடம் பேசியதில் அவர்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டணக் கணக்கீட்டில் குழப்பமிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
எனக்குப் புரிந்த அளவில் எளிமையாகச் சொல்கிறேன்.
சராசரியாக 200 யூனிட்களைப் பயன்படுத்துகிற குடும்பம் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பம் ஜனவரி-பிப்ரவரி மாதங்களுக்கு 200 யூனிட்களைப் பயன்படுத்தியிருந்தால் மின்கட்டணம் ரூ.170 வந்திருக்கும். (மேலே இருக்கும் பட்டியலில் தொகையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்)
அதன் பிறகு கொரோனா ஊரடங்கினால் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மின் வாரிய ஊழியர்கள் கணக்கு எடுக்கவில்லை. அதனால், மின் வாரியம் அறிவுறுத்திருந்தபடி முந்தைய மாதக் கட்டணமான 170 ரூபாயைக் கட்டியிருப்போம்.
மே-ஜூன் மாதங்களுக்கான மின்கட்டணத்தைக் கணக்கிட மின் வாரிய ஊழியர்கள் தொடங்கினார்கள். அப்பொழுது அவர்களது கணக்கீட்டின்படி 430 யூனிட்களைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது மார்ச்-ஏப்ரல் மற்றும் மே-ஜூன் ஆகிய இரண்டு காலகட்டத்திற்கானது இல்லையா? அதனால் 430 யூனிட்களை இரண்டால் வகுத்துக் கொள்கிறார்கள். 430/2=215 யூனிட்கள்.
215 யூனிட்களுக்கு மின் கட்டணம்= ரூ. 275.
இரண்டு கட்டண காலத்திற்கு ரூ. 275x2= ரூ.550 செலுத்த வேண்டிய தொகை. ஆனால் ஆனால் ஏற்கனவே கணக்கீடு இல்லாமல் 170 ரூபாய் கட்டியிருப்பதால் அந்தத் தொகையை கழித்துவிட்டு மீதியைக் கட்டச் சொல்கிறார்கள்.
ரூ. 550- ரூ. 170= ரூ. 380
முந்நூற்று எண்பது ரூபாய் நாம் கட்ட வேண்டிய தொகை. எல்லாமும் சரியாக இருப்பது போலத்தானே இருக்கிறது? ஆனால் சரியாக இல்லை. இதில் ஒரு குழப்பம் இருக்கிறது. ஏற்கனவே நாம் கட்டிய கட்டணத்தைக் கழிக்காமல், அந்தத் தொகைக்கான யூனிட்களை கழித்திருக்க வேண்டும்.
அந்தக் கணக்கையும் பார்ப்போம்.
மின்வாரிய ஊழியர்கள் எடுத்து வைத்திருக்கும் கணக்கீடு 430 யூனிட்கள். இதில் 200 யூனிட்களுக்கான தொகையான 170 ரூபாயைத்தான் ஏற்கனவே கட்டியிருக்கிறோம் அல்லவா? அதைக் கழித்துவிடுவோம்.
430- 200= 230 யூனிட்கள். இந்த 230 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்தினால் போதும். 230 யூனிட்களுக்கு பில் கட்டணம் 320 ரூபாய்தான் வரும். மின்வாரியம் கணக்கிடுவதற்கும், யூனிட்களைக் கழித்துக் கணக்கிடுவதற்கும் வித்தியாசம் 60 ரூபாய். இதனை இரண்டாக வகுத்துக் கணக்கிட்டால் இன்னமும் குறைவாக வரும். ஆனால் எப்படிக் கணக்கிட்டாலும் நாம் கட்டியிருப்பது அதிகமான தொகைதான். சராசரியாக 200 யூனிட்களைப் பயன்படுத்தும் குடும்பத்துக்கு இந்த வித்தியாசம். அதிகமான மின் பயனீட்டை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசம் வருகிறது.
வெவ்வேறு தொகைக்கு வெவ்வேறு விதமான கணக்கீடுகள் வருகின்றன. நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். சிலருக்கு இலாபம் கிடைத்திருக்கலாம் ஆனால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய கணக்கீடுகளின் போது யாருக்குமே பாதிப்பில்லாமல்தான் அமல்படுத்த வேண்டும்?
மூன்று மாதங்களுக்கு மேலாக முடங்கியிருக்கும் சிறு உணவு விடுதிகள், பட்டறைகள், தொழில் நிறுவனங்கள் போன்றவை வணிகக் கட்டணங்களை செலுத்துகிறவர்கள். அவர்களுக்கு இது பேரிடி. ஏற்கனவே ஊரடங்கினால் தொழில் முடங்கி, வருமான இழப்பு ஏற்பட்டு அவர்களுக்கு இப்பொழுது மின் கட்டணமும் பெரிய சிரமம்தான். எனக்குத் தெரிந்த சில நெருங்கிய நண்பர்கள் கடன் வாங்கி மின் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். ஜூலை 31 வரைக்கும் அவகாசம் கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ‘நிறையப் பேரு கட்டிட்டாங்க...கட்டாதவங்களை கட்டச் சொல்லுங்கள்’ என்கிற ரீதியில் அரசு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்திருக்கிறார். நாம் கவலைப்படுவதும், கனிவு காட்ட வேண்டியதும் மின் கட்டணத்தை கட்ட முடியாதவர்களிடம்தான் என்பதை ஏன் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள்? கட்டியவர்களிலும் எவ்வளவு சதவீதம் பேர் கடன்பட்டும், சிரமத்திலும் கட்டியிருப்பார்கள் என்பதை ஏன் அதிகாரவர்க்கம் யோசிப்பதில்லை?
கனிவு காட்டாவிட்டாலும் இத்தகைய அதிகமான மின் கட்டண பயனீட்டு முறையையாவது மாற்றி, அதிகமாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தருவதுதான் நியாயம். அப்பொழுதுதான் என்னைப் போன்றவர்கள் அம்மாவிடமிருந்து தப்பிக்க முடியும். அதைவிடுத்து மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால் மின் கட்டணம் அதிகம் என்பதெல்லாம் புரியாமல் வைக்கிற வாதம்; ஆட்சியாளர்களின் போதாமையும் புரிதலின்மையும் வெளிப்படுகிற வாதம்!
4 எதிர் சப்தங்கள்:
எங்கள் வீட்டில் இரண்டு மின் குளிரூட்டி இருக்கிறது..
தேவைக்கேற்ப வீட்டின் உள்ளிருக்கும் புழுக்கத்தை வெளியேற்ற மட்டும் ஒரு நாளைக்கு 1 - 1.5 மணி நேரம் மட்டுமே பயன்படுத்துவோம்..
கொரானா சமயத்திலும் அவ்வாறே பயன்படுத்தினோம்..
சாதாரணமாக எழுநூத்தி சொச்சம் செலவு வரும் ..
கடந்த மாதம் செலவு ஆறாயிரத்தி சொச்சம் என கணக்கு வந்தது..
இவர்கள் கணக்கீடு செய்யாமல் இருந்த போதே நினைத்தேன் எடப்பாடி அரசு குளறுபடி செய்யும் என்று ..
என் கணக்கு தப்பவில்லை ..
சாபம் விட்டு கொண்டே செலுத்தினேன் ..
"மக்களின் அரசை இது ? பிச்சைக்காரனிடத்திலும் புடுங்கி திங்க நினைக்கும் மானெங்கெட்ட அரசு .."
Post this scenario also:
Your Calculation:
820-270 => 550units => 2110Rs + 440 => 2550Rs
TNEB Calcuation
820 => 410*2=> 860*2 = 1720
2550 - 1720 => 830 save based on my TNEB calculation
இப்போதாவது மின்வாரியம் முன்வந்து, அடுத்த கட்டணம் கேட்கும் சமயம் சரி செய்வார்கள் என நம்புவோம்
EB staff came and taking the reading is the only issue mean, why they don't use some other methods of customers itself take the meter reading photo/sms to them then based on the rate provided by EB team, we can pay through online. EB also getting money , we also no need to pay more.
Post a Comment