புதிய தலைமுறையின் நியூஸ் 360 இல் கலந்து கொள்ள இன்று அழைப்பு வந்தது. திரு. கார்த்திகேயன் அழைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே மின்கட்டண உயர்வு பற்றிய விவாதத்திற்கு அழைத்தார்கள். கரட்டடிபாளையத்தில் எனக்கு இணைய இணைப்புதான் பிரச்சினை. சில சமயங்களில் சொதப்பிவிடுகிறது. அதனாலேயே அப்பொழுது தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. இன்றைக்கும் தவிர்ப்பது முறையாகாது என்பதால் இரண்டு மூன்று அலைபேசிகள், லேப்டாப், கையில் ஒரு கோகுல் சாண்டல் பவுடர் டப்பா சகிதமாக தனியறைக்கு வந்துவிட்டேன்.
மதியம் இரண்டரை மணிக்கு விவாதம் தொடங்கும் என்றும் ஆனால் இரண்டு மணிக்குத் தயாராக இருக்கச் சொல்லியிருந்தார்கள். ‘ஸ்கைப்பில்’ வீடியோ வேலை செய்யவில்லை. ஆனால் சேனலில் இருந்து அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அலைபேசியில் ஸ்கைப்பில் இணைந்து, அவர்கள் அழைக்கும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, மீண்டும் இணைத்து என்று ஒரு வழியாகிவிட்டேன். ஸ்டுடியோவில் இருந்தவரே ‘ஸ்ஸ்ப்பா’ என்று சொல்லிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பவுடர் டப்பாவை எட்டி உதைத்தேன். அது பாவம் தனியாகக் கிடக்கிறது.
இந்தச் சிரமம் கூட இல்லாமல் ட்ரம்புக்கு தீர்ப்பு சொல்ல முடியுமா?
ஒரு வழியாக அனைத்தும் சரியாகி கிழக்குப் பதிப்பகம் திரு. பத்ரியும் நானும் பேசினோம். திரு. தம்பி தமிழரசன் நெறியாளர். ஓரளவுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்து வைத்திருந்தேன். விசா பிரச்சினை குறித்து முதலில் ஒரு செய்தித் தொகுப்பு, அதன் பிறகு எங்களின் கருத்துகள், செய்தியாளர் தரும் தகவல்கள் மற்றும் நிறைவுக் கருத்து என்று ஓரளவுக்கு முழுமையான புரிதலை இந்த செய்தித் தொகுப்பு தரும் என நினைக்கிறேன்.
***
தற்காலிக விசா நிறுத்தம் என்பதே ஒரு தேர்தல் ஸ்டண்ட். நமக்கு எப்படி பாகிஸ்தானோ அப்படி டொனால்ட் ட்ரம்ப்க்கு இந்த இமிகிரேஷன் பிரச்சினை. வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அதிரடியாக நாட்டுக்கு நலம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வதாகக் காட்டிக் கொள்ள சில விசாக்களுக்கான நடைமுறைகளை டிசம்பர் மாதம் வரைக்கும் நிறுத்தி வைத்திருக்கிறார்.
ஹெச்1 பி என்பது அமெரிக்காவிலேயே தங்கி பணிபுரிபவர்களுக்கான விசா. வருடத்திற்கு 85,000 விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கிறது. இதில் 20000 விசாக்கள் அமெரிக்காவில் உயர்படிப்பு படித்த வெளிநாட்டினருக்கான கோட்டா. மீதமிருக்கும் விசாக்களில்தான் டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் மாதிரியான நிறுவனங்கள் ஆட்களை அனுப்பி வைக்கின்றன. மொத்த ஹெச்1பி விசாவில் இந்தியர்கள்தான் 70% ஆட்கள் செல்கிறார்கள். சீனர்கள் 13-14 சதவீதம். இந்த ஹெச்1 பி விசாவை வருட இறுதி வரைக்கும் நிறுத்தி வைக்கிறார்கள்.
எல் 1 என்பதும் பணியாளர்களுக்கான விசாதான். ஒரு வருடம் வரைக்கும் பணி அல்லது பணியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்வது மாதிரியான சந்தர்ப்பங்களில் இந்த விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களின் இந்தியக் கிளைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தற்காலிகமாக சில மாதங்கள் சென்று வருவதற்கும் இந்த விசாதான். ‘நான் போகலைன்னா அவங்களால இதைச் செய்யவே முடியாது...அநேகமா உங்க நாட்டோட குடி முழுகிடும்’ என்று விசா நேர்காணலில் உதார்விடும்படி சொல்லி அனுப்புவார்கள்.
ஹெச்4 விசா என்பது சார்ந்தவர்களுக்கான விசா (dependent) இந்த விசாக்களில் செல்கிறவர்கள் அனைத்துப் பணிகளையும் அமெரிக்காவில் செய்து சம்பாதிக்க முடியாது. சில பணிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இந்த விசாக்களையும் நிறுத்தி வைக்கிறார்கள்.
ஹெச்2 பி என்பது விவசாயம் இல்லாத ஆனால் உழைப்பு, சேவை சார்ந்த பணியாளர்களுக்கானது. இவை தவிர ஆராய்ச்சிகளுக்காகச் செல்கிறவர்களுக்கு வழங்கப்படும் ஜெ-1 விசாவும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
***
இந்த விசாக்களை நிறுத்தி வைப்பதால் இந்தியர்களுக்கு பாதிப்பு இருக்குமா என்பதுதான் கேள்வி.
அமெரிக்காவிலேயே இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்பில்லை. புதுப்பித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தாலும் அவர்கள் புதுப்பித்துக் கொள்ளத் தடையில்லை. ஒருவேளை அமெரிக்காவை விட்டு வெளியில் வந்திருந்தாலும் கூட விசாவின் காலக்கெடு இருக்குமானால் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அமெரிக்காவைவிட்டு வெளியில் விசாவின் காலக்கெடு முடிந்திருந்தால், கணவன் அமெரிக்காவில் இருக்க மனைவி இந்தியா திரும்பிய சூழலில் கொரோனா பிரச்சினைகளினால் விசாவை புதுப்பித்துக் கொள்ள முடியவில்லை என்றால் சிக்கல்தான்.
நிறுவனங்கள் ஹெச்1பியில் ஆட்களை அனுப்பி தமது க்ளையண்ட்களிடம் ஒன்றுக்கு நான்கு மடங்கமாக பில் போட்டு வசதியாகச் சம்பாதிப்பார்கள். அத்தகைய நிறுவனங்களின் வருமானத்திற்கு அடி. இந்த வருடம் அமெரிக்கா சென்றுவிடலாம் என்று கனவில் இருந்தவர்களுக்குச் சிரமம்தான். இப்படியான பாதிப்புகள் நிச்சயமாக இருக்கும்.
‘இந்தியர்கள்தான் அமெரிக்கர்களின் வேலைகளைப் பறிக்கிறார்கள்’ என்று ஏற்கனவே இருக்கும் எண்ணத்தை இன்னமும் செறிவூட்டுவதாக இந்த முடிவு இருக்கும். தமது நண்பர் ட்ரம்ப்பிடம் சொல்லி மோடி தடுத்திருக்கலாம். ‘நீ தேர்தலில் ஜெயிக்க எங்களை ஏன்யா எதிரியா காட்டுற’ என்று கேட்டிருக்கலாம். ‘இந்தியர்கள் அதிகமாக பெறும் ஹெச்1 பி விசாவில் ஏன் கை வைக்கிறீர்கள்’ என்று முரண்டு பிடித்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை. அகமதாபாத்தில் தின்றது செரித்து முடிவதற்குள் ‘மை ப்ரண்ட்ட்ட்’ டோலன் இப்படிச் செய்திருக்கவும் வேண்டியதில்லை.
***
விசாவை நிறுத்தி வைப்பதால் இந்தியாவுக்கு பலன்கள் இருக்குமா என்று கேட்டால் இருக்கும். ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது.
திருப்பூர், கோவை ஆட்களுக்கு எப்படி வட இந்தியப் பணியாளர்களோ அப்படித்தான் அமெரிக்கர்களுக்கு நாம். சம்பளமும் குறைவு, வேலையும் காட்டுத்தனமாக இருக்கும். வட இந்தியர்கள் வெளியேறிய பிறகு வேறு வழியே இல்லாமல் கோவை முதலாளிகள் நம்மவர்களுக்கு பணி வழங்குவதைப் போல, இந்தியர்கள் வந்து சேராதபட்சத்தில் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் தற்காலிகமாக வேலையைத் தரக் கூடும். ஆனால் இந்தியர்கள்தான் தமக்கு இலாபம் என்பதால் ‘அவுட்சோர்ஸிங்’ செய்வார்கள். தமது பணிகளை மூட்டை கட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க வாய்ப்புகளை அலசுவார்கள். ஏற்கனவே பொருளாதாரம், கொரோனா என்று திணறிக் கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு வகையில் இது இலாபமாகவே இருக்கும்.
ஏன் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றால்- நமக்கு வரும் வேலைகளைத் தட்டிப்பறிக்க சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் தயாராக இருக்கின்றன. இந்தியர்களைவிடவும் அவர்களுக்கு சம்பளம் குறைவு. நம்மைவிடவும் முரட்டுத்தனமாக வேலை செய்யக் கூடியவர்கள். ஆங்கிலம் மட்டும்தான் அவர்களின் முக்கியப் பிரச்சினை. அதனால் நமக்கு வர வேண்டிய பணிகள் கணிசமாக அங்கே செல்லக் கூடும். இந்திய நிறுவனங்களே கூட பல தென்கிழக்காசிய நாடுகளில் கிளைகளைத் தொடங்கியிருக்கின்றன. எனவே அவர்களே கூட பணிகளை அங்கு மடை மாற்றினால் அதனால் இந்தியர்களுக்கு பெரிய இலாபம் என்று சொல்ல முடியாது. இதற்கும் கூட மத்திய அரசுதான் ‘செக்’ வைக்க வேண்டும்.
எப்படியிருந்தாலும் நவம்பரில் ட்ரம்ப் வென்றாலும் கூட டிசம்பரில் இந்தத் தற்காலிக நிறுத்தம் காலாவதியாக அனுமதித்துவிடுவார். புதிய அதிபர் வந்தாலும் காலாவதியாக அனுமதித்துவிடுவார். எந்த நாட்டிலும் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் கார்போரேட் நிறுவனங்களின் இலாபம் மிக முக்கியம். அவர்கள் வெற்றி பெறுவதற்காக மக்களிடம் ‘எங்களுக்கு கார்ப்போராட்களைப் பற்றிக் கவலையில்லை’ என்பார்கள். ஆனால் அது 100% பொய். ‘தற்காலிக’ விசா நிறுத்தம் என்பதும் ‘தற்காலிகம்’தான்.
***
இந்தத் தலைப்பில் ஆர்வமிருப்பவர்கள் நியூஸ்360 செய்திச் சுருக்கத்தைப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் விசா பிரச்சினை என்றாலும் நம்மை மாதிரி பெரிய மனுஷன்தான் தீர்த்து வைக்க வேண்டியிருக்கிறது. அடுத்த பஞ்சாயத்துக்காவது அந்த பவுடர் டப்பாவை ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டும். பத்திரப்படுத்தி வைக்கிறேன்.
புதிய தலைமுறைக்கும், கார்த்திகேயனுக்கும், தம்பி தமிழரசனுக்கும் நன்றி. அடுத்த முறை டெனால்ட் ட்ரம்ப்பைவிட பெரிய ரவுடியிடம் பஞ்சாயத்து செய்ய அழைக்கவும்.
4 எதிர் சப்தங்கள்:
So, now it's now the battle- Joe biden vs Manikandan, who is going to run for presidential nominee from Dem's. As we know, Manikandan would win and run for president Vs Trump.. All the best..
Engalukkum rendu visa, thatti udunga anna, America epdi irukku nu GVM padathula thaan pakkurom.. nerlayum oru vaati parthukkarom...
"India's software engineers are mainly trained for lower end jobs (like testing)" - as u said in the interview. Yes, most of us would agree. In the traditional engg streams, like Civil, mechanical, Electrical - as far as syllabus is considered it is okay (unlike CS/IT - traditional fields are not trained only to do some specific job). But, method of teaching and level of industry exposure are the key factors that put our traditional stream graduates in disadvantageous state. Despite this, many of our graduates, are doing great work and contribution to all stages of project. At least, in O&G field (Front End Engineering design and/or detailed design). Still, there are long way to go... Still, it is true that majority of our engineers are not on par with US/Europe/Japan graduates.
I am a mechanical engineer working in O&G Equipment design, had work exposure in Europe / Middle East.
We ought to do something to bridge this gap or difference, between them and us. And, I believe that it should start within ourselves, first..
Thanks for sharing thoughts
Regards
திருப்பூர், கோவை ஆட்களுக்கு எப்படி வட இந்தியப் பணியாளர்களோ அப்படித்தான் அமெரிக்கர்களுக்கு நாம்
--but you can become a CEO of a company in US, even if not a CEO, many Indians hold many top jobs in US.
Itsdifferent,
அமெரிக்க நண்பர் ஆனந்த் அவர்களும் இதையேதான் சொன்னார். இங்கும் கூலித் தொழிலாளியாக வந்து சொந்தமாக ஹார்டுவேர், எலெக்ட்ரிக்கல் கடை தொடங்கி, வீடு கட்டி அடுத்தவர்களை அதிகாரம் செய்யும் வட இந்தியர்களை குறிப்பாக கோவையில் மிகச் சாதாரணமாக பார்க்க முடியும் என்று சொன்னேன்.
எங்க தல டிவில வர ஆரம்பிச்சிட்டாரு. மகிழ்ச்சி.
Post a Comment