May 25, 2020

மரங்கள்- எப்படி இருக்கின்றன?

அடர்வனம் எப்படி இருக்கிறது? என்று சில நண்பர்கள் கேட்டார்கள். சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. ஊரடங்கு காலத்தில் நிறைய நேரம் கிடைக்கிறது போலிருக்கிறது- புத்தகங்கள் குறித்து, பழைய பதிவுகள் குறித்தெல்லாம் மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள். எதைச் சொல்கிறார்கள் என்று குழப்பத்தில் பழைய பதிவுகளைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரு வகையில் சந்தோஷம்தான். அப்படித்தான் அடர்வனம் குறித்தான நினைவுகள் பலருக்கும் வந்திருக்கக் கூடும்.

செடிகளை நட்ட போது சென்னையில் இருந்தெல்லாம் வந்திருந்தார்களே! ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரையிலும் பலர் தாங்களாகவே வந்து பார்த்துவிட்டுச் சென்று நிழற்படம் அனுப்புவதுண்டு. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள்- அனைத்துமே நாட்டுவகை மரங்களை நட்டு வைத்திருக்கிறோம். ஆழ்குழாய் வசதி, மோட்டார், நீர் பாய்ச்ச குழாய்கள் என அனைத்து வசதிகளும் உண்டு. முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு எதற்கும் பெரிய அவசியமிருக்கவில்லை. தொடக்கத்தில்தான் சில இடர்பாடுகள் இருந்தன. உள்ளூர் நண்பர்களே எல்லாவற்றையும் சமாளித்துவிட்டார்கள். 

மூன்று மாதங்கள் வரைக்கும் வெக்கையென்றால் அதன் பிறகு அதிகப்படியான நீர் பிரச்சினை ஆனது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், நாம் வெம்மையைத் தாங்கி வளரக் கூடிய மரங்களாகத் தேர்ந்தெடுத்திருந்தோம். இரண்டு வருடங்களாக நிலவிய கடுமையான கோடையை மனதிற்கொண்டு அப்படியொரு முடிவுக்கு வந்திருந்தது வினையாகிப் போனது. செடிகளை நட்டு வைத்த மூன்றாம் மாதத்தில் மழை பெய்து அருகாமைக் குளம் நீர் நிரம்பி அளவுக்கதிகமான நீர் வனத்துக்குள்ளும் புகுந்துவிட்டது. தண்ணீரே தேவையில்லாத செடிகளுக்கு எந்நேரமும் நீர் நிறைந்திருந்தால் என்ன ஆகும்? அப்படித்தான் சில செடிகள் அழுகிப் போய்விட்டன. அழுகிய செடிகளின் எண்ணிக்கை நூற்றைம்பது இருக்கக் கூடும். 

எல்லாமே அனுபவம்தான். எல்லாமே படிப்பினைதான். அதன் பிறகு பெரிய சிரமங்கள் எதுவுமில்லை. இப்பொழுது பெரும்பாலான மரங்கள் தப்பிவிட்டன. இனி மனிதர்கள் வனத்துக்குள் நுழைய வாய்ப்பில்லை. சிரமப்பட்டுச் செல்லலாம். ஆனால் பாம்பு, மயில் உட்பட விலங்குகளும் பறவைகளும் அதிகமாகியிருக்கின்றன. அதனால் யாரும் நுழைவதில்லை. இன்னமும் ஒன்றிரண்டு வருடங்களில் முழுமையான வனமாகிவிடக் கூடும். அடர்வனத்தின் நோக்கமே அதுதானே- மனிதர்கள் உள்நுழையாமல், பறவைகள், பூச்சிகளுக்கான வாழிடங்களை உருவாக்குவதும்தான். இனி மரங்கள் பூத்து காய்த்து விதைகள் பரவினால் அழிந்து போன நாட்டு மரங்களை இந்தப் பகுதியில் ஓரளவு மீட்டெடுக்க இந்தச் சிறுமுயற்சி உதவியாக இருக்கக் கூடும். 

மியவாக்கி முறையில் நடப்படும் இத்தகைய அடர்வனங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக அமைக்கப்படக் கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் சற்றே செலவு பிடிக்கக் கூடிய செயல் இது. வனம் அமைக்கப்படும் இடத்தில் நீர் வசதி இல்லாவிட்டால் இன்னமும் கூடுதலான செலவு பிடிக்கும். அதனாலேயே என்னவோ மிகக் குறைவாக- ஆங்காங்கே சிலர் செய்திருக்கிறார்களே தவிர பெரிய அளவில் எதுவும் நடைபெறவில்லை. எப்பொழுது வெயிலில் இருக்கிறோமோ அப்பொழுதுதான் நிழல் பற்றி நினைப்போம் என்பது போல எப்பொழுது வறட்சி தாண்டவமாடுகிறதோ அப்பொழுதுதான் மரம் நடுதல் பற்றி நினைப்போம். தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நிலவிய வறட்சி இல்லாததும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். ஆங்காங்கே மரம் வைக்கிறார்கள். அவர்களும் கூட ‘மரம் வெச்சு பசுமையைக் கொண்டு வந்தே தீருவோம்’ என்று வேகத்தில் செய்வதாகத் தெரிவதில்லை.

ஆனால் அடர்வனம் ஓர் அடையாளமாகியிருக்கிறது. எவ்வளவு பேரின் உழைப்பு? அர்ப்பணிப்புடன் கூடிய உள்ளூர்வாசிகள், ஆனந்த், தொரவலூர் சம்பத் தொடங்கி செடிகளை வாங்கித் தர வாகனம் எடுத்துக் கொண்டு மரக்காணம் வரை கூடவே வந்த ஜெயராஜ் மிகப்பெரிய பட்டியல் அது- நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. பயணத்தில் விதைகளை விதைப்பது போல விதைத்தது இன்று வனமாகியிருக்கிறது. அனைவரின் பார்வைக்கும்...மிக்க மகிழ்வுடன்!









நிழற்படங்கள்: விக்னேஸ்வரன், கார்த்திக்

7 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//மரங்கள் பூத்து காய்த்து விதைகள் பரவினால் அழிந்து போன நாட்டு மரங்களை இந்தப் பகுதியில் ஓரளவு மீட்டெடுக்க இந்தச் சிறுமுயற்சி உதவியாக இருக்கக் கூடும்//
பரவட்டும் விதை

Saravana Kumar N said...

Can we get areal view of this.

Sathieshkumar said...

இது தொடர்பான பழைய செய்தி link கீழே கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் சார்

Jana. said...

Thank you Manikandan and all our brothers, For making this possible..

Unknown said...

Awesome! Awesome Mani anna :)

Unknown said...

awesome!! Rajan

vic said...

சதீஷ்குமார் அடர் வனம் என்ற வார்த்தையை நிசப்தத்தில் தேட என்பதில் அடித்தால் அது சம்பந்தப்பட்ட பதிவுகள் எல்லாமே வரும்