Mar 29, 2020

கொரோனாவுக்கு

நிசப்தம் அறக்கட்டளையின் வழியாக கொரொனா தடுப்பு பணிகளுக்கு ஏதாவது செய்யும் திட்டமிருக்கிறதா என்று சிலர் கேட்டிருக்கின்றனர்.

யோசித்துப் பார்த்தால் எதுவுமே தோன்றவில்லை. இந்த தருணத்தில் களப்பணி என்றெல்லாம் இறங்குவது சரியானதாக இருக்காது. வெள்ளம், புயல் மாதிரியான இயற்கைப் பேரிடர்களின் போது நாம் ஓரளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற எண்ணம் இருக்கும். தைரியமாகச் செய்ய இயலும். இப்பொழுது எந்த புள்ளிவிவரத்தை நம்புவது என்றே தெரியவில்லை. கட்டம்- ஒன்று என்கிறார்கள் சிலர்; சிலர் இரண்டாம் கட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்; மூன்றுக்கு வந்துவிட்டோம் என்று சிலர் கட்டுரைகள் எழுதுகிறார்கள். அதனால் அவசரப்பட்டு எந்த விபரீதத்திலும் ஈடுபட வேண்டியதில்லை. 

இன்னமும் சில நாட்களுக்குப் பிறகு நிலைமைக்கு ஏற்ப முடிவெடுக்கலாம்.

இன்றைய தேதியில் அறக்கட்டளையில் அறுபது லட்ச ரூபாய் இருக்கிறது. ( ₹5995182.18). இதில்  ₹31,97,431.00(முப்பத்தியொரு லட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து நானூற்று முப்பத்தியொரு ரூபாய்- மூன்று தனித்தனி பத்து லட்சங்களாக) நிரந்தர வைப்பு நிதியில் இருக்கிறது. மீதமிருக்கும் ₹2797751.18 (இருபத்தியேழு லட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து எழுநூற்றி ஐம்பத்து ஒரு ரூபாய்) வரவு செலவுக் கணக்கில் இருக்கிறது. 


அடுத்து வரும் நாட்களில் கொரோனாவினால் சூழல் இன்னமும் மோசமானால், அடுத்த கல்வியாண்டிற்கு நிசப்தம் மாணவர்களுக்கான கல்வித் தொகையாக பத்து லட்ச ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு மீதம் ஐம்பது லட்ச ரூபாயையும் கொரானா தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையெனில் அறுபது லட்சத்தையும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். கல்லூரிக் கட்டணத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

எப்படி பயன்படுத்துவது என்பதை அந்தத் தருணத்தில் முடிவு செய்து கொள்ளலாம். முழுத் தொகையையும் பயன்படுத்துகிற அளவுக்கு மோசமான சூழல் வந்துவிடக் கூடாது என்றுதான் மனதார விரும்புகிறேன். நம்முடைய எந்த ஆறுதலுக்கும் பணிக்கும் அவசியமேயில்லாமல் வைரஸ் விலகிவிடுமானால் வெகு சந்தோஷம். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அதிகரிக்கும் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, அரசுகளின் குளறுபடிகள், ஒரு பகுதி மக்களின் பதற்றம், இன்னொரு பகுதி மக்களின் அசமஞ்சம் என எல்லாவற்றையும் ஒரு சேரப் பார்க்கும் போது சற்று குழப்பமாகவும், பயமாகவும்தான் இருக்கிறது. 

நிலைமை கை மீறி ஏதேனும் தேவைகள் எழுமாயின் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் செயலாற்றிவிட வேண்டும்.

தொகை விவரம் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக பதிவு செய்து வைக்கிறேன். ஏதேனும் கருத்துகள், ஆட்சேபனைகள், பரிந்துரைகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.

1 எதிர் சப்தங்கள்:

Yarlpavanan said...

தங்கள் நேர்மைக்கு
நாம் பணிகிறோம்
தங்கள் பணி தொடரட்டும்