Dec 19, 2019

எதை நோக்கி நகர்கிறோம்?

குடியுரிமை மாற்றுச் சட்டம் குறித்தான பிரச்சினைகள் கிளம்பிய போது ஓரிரு நாளில் அவரவர் தம் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள் என்று தோன்றியது. பிரச்சினைகள் அடங்கிய பிறகு இன்னொரு விவகாரம் வரும் வரைக்கும் காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலை தொடங்கி ‘என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ வரைக்கும் எதையாவது ட்ரெண்ட் செய்து கொண்டிருப்போம் என்றுதான் பலரும் நினைத்திருக்கக் கூடும். அப்படித்தானே நம்முடைய சூழல் இருக்கிறது? கடந்த முப்பதாண்டு காலத்தில் இந்திய அளவில் ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு வெவ்வேறு பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு போராடினார்கள் என்று ஏதாவது நினைவில் இருக்கிறதா?

முப்பதாண்டு என்பது ஒரு தலைமுறைக்கான காலம். 

எண்பதுகளுக்குப் பிறகு பிறந்தவர்கள் தேசிய அளவிலான போராட்டங்கள் எதையும் பார்த்திராத தலைமுறை. அங்குமிங்குமாக ஏதேனும் பிரச்சினைகள், பந்த் என்று நடக்கும். அதிகபட்சம் பஸ் எரிப்பு இருக்கும். அதனால் தேசிய அளவிலான போராட்டம் எப்படி உருப்பெற்று, வடிவம் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் பரவும், அதை அரசு எவ்வாறு தடுப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும், பிரச்சினை எந்தத் திசை நோக்கி நகரும், எப்படி முடிவுக்கு வரும் என்கிற புரிதல் எதுவும் இந்தத் தலைமுறைக்கு இருக்க வாய்ப்பில்லை. இந்தத் தலைமுறைக்கான மனநிலையில் இருந்தவர்கள் யாருமே இன்று குடியுரிமை மாற்றுச் சட்டத்துக்கு எதிராக இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முளை விடும் என எதிர்பார்க்கவேயில்லை.

ஜனத்திரள் போராட்டங்கள் இப்படித்தான் தொடங்குமோ என யோசிக்கத் தோன்றுகிறது.

வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட, தேசிய அளவிலான போராட்டங்கள் எதிலேயும் ஒரு தேசத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களும் களமிறங்கியிருக்க வாய்ப்பில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில் முப்பது கோடி மக்களுமா தெருவில் இறங்கினார்கள்? அப்படி இறங்கியிருந்தால் ஆங்கிலேயர்கள் சிதைந்து போயிருப்பார்கள் அல்லவா? அங்குமிங்குமாக நாடு முழுவதும் சேர்த்து ஒரு லட்சம் பேர்கள் போராட்டங்களில் கலந்திருக்கலாம் அல்லது ஐந்து லட்சம் பேராகக் கூட இருக்கலாம். இந்த எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கலாமே தவிர முப்பது கோடி பேரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். களத்தில் இறங்குகிறவர்களுக்கான மக்கள் ஆதரவு அதிகரிக்க அதிகரிக்க போராட்டக் களத்துக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கும். இந்த ‘கணிசமான’ எண்ணிக்கையே அரசை திக்குமுக்காடச் செய்திருக்கும். அப்படித்தான் போராட்டங்களில் அரசுகள்  தோல்வியடைகின்றன. 

முப்பதுகளில் வாழ்ந்த அமத்தாவையோ, அப்பத்தாவையோ அணுகி ‘சுதந்திரப் போராட்டம் நடந்ததா?’ என்றால் ‘அப்படிச் சொல்வார்கள்’ என்பதுதான் பதிலாக இருக்கும். 

அதற்கடுத்து ஐம்பது, அறுபதுகளில் பிறந்தவர்கள் எமெர்ஜென்ஸி நிலை காலத்தின் பிரச்சினைகளைச் சொல்லக் கூடும். அதுவும் கூட சாமானியர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டார்கள் என்று தெரியவில்லை. அம்மாவிடம் கேட்டால்- அப்பொழுது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்- ‘செய்திகளில் படித்ததோடு சரி’ என்கிறார். ஆனால் அப்படியொரு அரசியல் போராட்டம் நடைபெற்றிருக்கிறது. அதன் விளைவாக தேசத்தில் அரசியல், பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எமெர்ஜென்ஸியின் போதும் நேரடியாகக் களமிறங்கியவர்கள் அதே லட்சக்கணக்கில்தான் இருந்திருக்க முடியும். 

எமெர்ஜென்ஸிக்குப் பிறகு நாட்டில் எவ்வளவோ பெரிய மாற்றங்கள் நடந்துவிட்டன. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, நகரமயமாக்கல், அதன் விளைவுகள் என வரிசையாகப் பட்டியலிட முடியும். மிகச் சமீபத்திய பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரைக்கும் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பல மிகப்பெரிய மாற்றங்களை இந்த நாடு சந்தித்திருந்தாலும் பெருந்திரளான மக்கள் வீதிக்கு வரவில்லை. தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. போராட்டங்களின் மீது ஈர்ப்பு கொண்ட தொழிற்சங்கவாதிகளிடம் பேசினால் ‘எல்லாம் மழுங்கிப் போன சமூகம் இது, இனி போராட்டம் என்பது சாத்தியமேயில்லை’ என்பார்கள். அப்படித்தான் நினைத்துக் கொண்டும் இருந்தோம். ஆனால் இப்பொழுது என்னவோ நடக்கிறது என்பதை மட்டும் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதைப் போல உணர முடிகிறது.

பொருளாதாரம் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது அரசு எப்படி அதன் வீரியத்தை உணரவில்லையோ அதைப் போலவே இந்தப் பிரச்சினையின் எதிர்விளைவுகளையும் உணரவில்லையோ என நினைக்கும் போது பதற்றமாக இருக்கிறது. எல்லாவற்றையும் முரட்டுக்கரம் கொண்டு அடக்கிவிட முடியும் என்பது சாத்தியமேயில்லாதது. ஆனால் அரசின் அடக்குமுறைகள் அடிவயிற்றில் கைவைப்பதாகத்தான் இருக்கின்றன. டெல்லியில் இணையத்தைத் துண்டிக்கிறார்கள் என்றால் அது வெறுமனே தகவல் தொடர்பினை மட்டும் துண்டிப்பதில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளில் நடைபெறும் ஆன்லைன் வணிகம், பணப்பரிமாற்றங்கள் என எல்லாவற்றையும் துண்டிப்பது. இதன் விளைவு இந்த நாட்டு மக்களின் தலையில் அல்லவா இறங்கும்? இணையத்தைத் துண்டிப்பது, தகவல் தொடர்பு பரவாமல் தடுப்பது, தடியடி, 144 என்பதெல்லாம் எவ்வளவு தூரம் அமைதியை நிலைநாட்டும் என்று புரியவில்லை. நூற்றியிருபத்தைந்து கோடி மக்களையும் பயமூட்டிவிட முடியுமா?

சுதந்திரப் போராட்டத்திலும் நிச்சயமாக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவானவர்கள் இந்த நாட்டில் இருந்திருப்பார்கள். எமர்ஜென்ஸியின் போது அரசின் நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள் இருந்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையைவிட கணிசமாக உயரும் போது அரசாங்கம் தோல்வியை ஒத்துக் கொள்ள நேரிடும். இப்பொழுதும் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவான தரப்பு, எதிர்தரப்பு என்று இரண்டுமே உண்டு. ஆதரவு தரப்பின் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எதிர்தரப்பை தம் போக்குக்கு கொண்டு வந்து அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கும். அப்படித்தான் பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும். ஆனால் இந்த இரண்டையுமே மிதவாதத்தில்தான் செய்ய முடியும். முரட்டுத்தனமாக மிரட்டுகிறார்கள் என்பதுதான் இங்கே பிரச்சினையின் அடிநாதம். அதைத்தான் ஃபாசிஸம் என போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.

அரசாங்கம் இறங்கி வருவதில் என்ன தவறு நேர்ந்துவிடும்? நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் ஆரம்பமாகின்றன என்னும் போது அரசாங்கம் ‘நீ என்ன முடியுமோ செஞ்சுக்க..நாங்க அமல்படுத்துவோம்’ என்று வீராப்பாகச் சொல்வது கோடிக்கணக்கானவர்களின் ஈகோவைத் தொட்டுப் பார்ப்பதாகத்தானே இருக்கும்? அதைத்தான் செய்கிறார்கள். தேன்கூட்டில் கை வைத்தாகிவிட்டது. தம்மிடம் இருக்கும் தீப்பந்தத்தை எரித்தே அனைத்து தேனீக்களையும் வழிக்குக் கொண்டு வருவது சாத்தியமா?

அதே சமயம், இத்தனை கோடி மக்கள் உள்ள நாட்டில்  ‘எதிர்கட்சிதான் தூண்டிவிடுகிறது’ என்று யாரும் நம்பவே முடியாததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை ராகுல்காந்தியே வீடு வீடாக வந்து அழைத்தாலும் இவ்வளவு போராட்டங்களை நடத்துகிற அளவுக்கு மக்கள் இறங்கி வர மாட்டார்கள். தம் அன்றாட வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ராகுலுக்கு பின்னால் வர மக்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை.  அப்படி வருவதாக இருப்பின் இதற்கு முன்பே பல போராட்டங்கள் நாட்டில் நடந்திருக்க வேண்டும்.  ஒருவேளை ராகுலை நம்புவதாக இருந்தால் இந்நேரம் அவர்தான் பிரதமராகவும் இருந்திருக்க வேண்டும். காங்கிரஸுக்கு எந்தச் செல்வாக்குமில்லை என்பதுதான் நிதர்சனம்.

ராகுலுமில்லை; பிரியங்காவுமில்லை- வேறு ஏதோவொன்று மக்களை வீதிக்கு இழுக்கிறது. தமது அன்றாட பிழைப்பை விட்டுவிட்டு, கணிசமானோர் தம் கோபத்தைக் கொட்டிவிட முடியும் என்று தெருவுக்கு வருவதாக புரிந்து கொள்ள வேண்டும். பிற ஜனத்திரள் போராட்டங்களைப் போலவே ‘நாம் கலந்து கொள்ளவில்லை; பக்கத்து வீட்டுக்காரன் கலந்து கொள்ளவில்லை’ என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருந்தாலும் யாரோ, எங்கேயோ இழுக்கப்படுகிறார்கள். அடிபடுகிறார்கள். இப்படித்தான் போராட்டம் வடிவம் பெறுமோ என்பதை பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னமும் நாட்கள் நகரும் போது அரசாங்கம் தம் இரும்புக்கரத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க இன்னமும் இன்னமும் பல பேர் வீதியில் இறங்கும் போது நம் தலைமுறை பார்த்திராத இருண்டகாலத்தை நோக்கி நகரக் கூடும்.

11 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அரசாங்கம் இறங்கி வருவதில் என்ன தவறு நேர்ந்துவிடும்?//
அதெல்லாம் இறங்கி வர முடியாது

கண்ணன் முத்து said...

பொதுவா, ஒரு பிரச்சினை வரும்போது பெரிசா வேற ஒன்ன கிளப்புற மாதிரி, பொருளாதாரம் சரியுதுன்னு இதை கையில் எடுத்தாங்கன்னு தோணுது. அதே சமயம் இந்த மாதிரி சூழல சாதகமா பயண்படுத்தி மதரீதியா பெரிய கலவரத்த ஆரம்பிச்சுடுவானுகன்னு வேற பயமா இருக்கு. அப்படி நடக்க கூடாதுன்னு வேண்டிக்கிறேன். வட இந்தியாவில் மதரீதியா இது ஆளுங்கட்சிக்கு சாதகமானதுதான். தமிழ்நாடு, தென்- இந்தியாவில் நிலைமை வேறு. இடதுசாரி என்று நினைக்கும் மே. வங்கத்தில் கூட ஆதரவு தெரியுது.

radhakrishnan said...

மணிகண்டன், விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு எல்லோரும் போராட வருகிறார்களா? தமிழ்நாட்டில் தினமும் எதற்காவது போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.எல்லாம் மீடியாவெளிச்சம் பெற என்றே தோன்றுகிறது.பிற இடங்களிலும் போராட்டத்தில் ஏன் வன்முறைவருகிறது?நோக்கமே வேறாகத்தோன்றுகிறது

Asok said...

From 1900 to 1990, normal life and food scarcity did not get affected if any changes happened in the country. It means even villages are self sustained and independent and not much expectations. Now, even small changes in the country, it will affect each and every person of country. Somehow, we are dependent with every issues/changes.

மதன் said...

இவ்வளவு பெரிய போராட்டமாக மாற மைனாரிட்டிகளும், அவர்களின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்ளும் அரசியல் கட்சிகளும்தான் காரணம். மைனாரிட்டிகள் என்றுமே மதம் சார்ந்து ஒன்றினைவார்கள். ஆனால் மெஜாரிட்டிகள் இப்படி போலி மிதவாதம் பேசிக் கொண்டு பாஜக எதிர்ப்பை காட்டுவார்கள். மீடியாக்களை வைத்திருக்கும் இந்த மதசார்பற்ற கட்சிகளும் இதை பெரிய விஷயமாக மாற்றுவார்கள். இணையப் போராளிகளும் உடனே களத்தில் இறங்கி வெற்றி வெற்றி என கூச்சலிடுவார்கள், நீங்கள் இப்பொழுது எழுதியிருப்பது போல.

மூங்கில் காற்று said...

எல்லோரும் அஸ்ஸாமுக்கு வெளியே நடக்கும் போராட்டம் பற்றியே பேசுகிறார்கள். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் பிற மாநிலத் தலைவர்கள் அஸ்ஸாமியர்களின் நீண்ட கால போராட்டம் குறித்து என்ன கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அது நியாயமானதா? நியாயமற்றதா? அதைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே. ஒட்டு மொத்த இந்திய மக்களும் அஸ்ஸாம் மக்களின்போராட்டம் நியாயமற்றது என்று கருதுகிறார்களா? அவர்களில் யாரேனும் தங்கள் மாநிலத்தில் அவர்களை குடியமர்த்த சம்மதம் தெரிவிப்பார்களா? அப்படி யாராவது கூறி இருக்கிறார்களா? மத்திய் அரசு வேண்டுமானால் ஒன்று செய்யலாம். குடியுரிமை வழங்க ஆதரிக்கும் மாநிலங்களுக்கு 20 லட்சம் பேரை பகிர்ந்த்ளிக்கலாம். அதை ஏற்றுக் கொள்ள வெளிப்படையாக சம்மதம் தெரிவிக்க வேண்டும்/

INDIAN said...

AS USUAL WELL SAID....

Samkev said...

Emergency காலத்தில் பள்ளியில் நான் படித்து கொண்டு இருந்தேன். தமிழகத்தைப் பொருத்த வரை பெரிய அளவில் போராடங்கள் நடைபெறவில்லை என்பது உண்மைதான். கருநாநிதி ஆட்சி அதிரடியாக நீட்கப்பட்ட போதிலும். மக்களுக்குப் பயம். எங்கே நம்மளையும் பிடித்து உள்ளே வைத்து விடுவார்களோ என்ற பயம் கூட இருக்கலாம். இந்திராகாந்தி பிரதமர்.
ஆனாலும் ordinary மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. ரயில், பஸ் சரியான நேரத்தில் இயங்கின. இலஞ்ச, ஊழல்கள் மட்டுப் பட்டது.
விலைப் பட்டியல்கள் கடைகளில் வைக்கப்பட்டது, 3 நாள் அவகாசத்தில். இல்லாவிட்டால் ஆளைப் பார்த்து இஷ்டத்திற்கு விலை வைப்பார்கள. இதேல்லாம் மக்களுக்குப் பெரிதும் பிடித்திருந்தது.
சஞ்சய் காந்தி ஆட்டமும், வலுக்கட்டாய குடும்பக் கட்டுப்பாடு ( 5 kg அரிசி, வேட்டி , கொஞ்சம் பணம் சினிமாப் புகழ் famous) , அரசு ஊழியருக்கு குடும்ப கட்டுப்பாடு ஆள் பிடிக்க monthly quota போன்றவை மக்களிடம் பெரிய ஒவ்வாமையை உருவாக்கியது. வடஇந்தியாவில் அதிகாரத்தில் உள்ளவர்கள் abuse தாங்க முடியாத அளவில் இருந்தது உண்மை. Forced sterilization முஸ்லிம் மக்களிடம், மற்றும் சாமனியர்களிடமும் கோபத்தைக் கிளறியது. அடுத்த வந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார். தங்கள் சொந்த தொகுதிலும் இந்திரா காந்தியும், சஞ்சயும் தோற்றார்கள்.
பெரிய போரட்டங்கள் நடைபெறாவிட்டாலும் மக்களிடம் கோபம் இருந்தது.

kailash said...

அவனவன் வேலை வருமானம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது அரசாங்கம் அதை கவனத்தில் கொள்ளாமல் அதற்கு என்ன செய்வது என தெரியாமல் காஷ்மீர் ராமர் கோவில் குடியுரிமை பதிவேடு குடியுரிமை திருத்த சட்டம் என மடை மாற்றியதால் ஏற்பட்ட கோபத்தினால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் . இதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்று அரசாங்கம் இது வரை கூறவில்லை பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துடன் போட்டி போட்டு கொண்டு கீழிறங்கி கொண்டிருக்கின்றோம்

NAGARATHAN said...

மணிகண்டன், அனைத்தும்/அனைவரும் நலம்தானே. ஏன் 'நிசப்தம்' நிசப்தமாகவே உள்ளது?

Unknown said...

Good

Buy original nattu marunthu online www.nattumarunthu.com nattu marunthu kadai