Sep 4, 2019

குத்து விளக்கு

சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட ஐம்பது லட்ச ரூபாய் செலவு பிடிக்கக் கூடிய திருமணம். மணவறை செலவு மட்டுமே பல லட்சங்கள் என்றார்கள். ஒரு பக்கம் அள்ளி வீசுகிற திருமணங்கள். இன்னொரு பக்கம் ‘ரெண்டு லட்ச ரூபாய் இருந்தால் ஒரு கல்யாணம் செஞ்சுடலாமா?’ என்று கேட்டால் ‘எங்களுக்கு அது பெரிய தொகைங்க’ என்று சொல்கிற குடும்பங்களும் இருக்கின்றன.

சரவணன், ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கிறார். நிசப்தம் வாசகர். அவரது பெற்றோருக்கு அறுபதாம் திருமணம் செய்து வைக்க வேண்டிய தருணமிது. சில நாட்களுக்கு முன்பாக அழைத்த சரவணன் ‘அறுபதாம் கல்யாணத்துக்கு ஆகும் செலவை ஏதாவதொரு ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வதற்காகக் கொடுத்துவிடலாம்...யாராச்சும் இருக்காங்களா?’ என்றார். இப்படியெல்லாம் யாருக்காவது தோன்றுவதே எவ்வளவு பெரிய விஷயம்?

கல்வி, மருத்துவ உதவிக்கான ஆட்களைப் பிடிப்பதே கஷ்டம். இதில் திருமணம் செய்து கொள்ள ஆட்களை எப்படித் தேடுவது? ‘சார்...கல்யாணம் ஆகாத பொண்ணு ஏதாச்சும் இருக்கா?’ என்று கேட்டால் ‘ இத்தனை நாள் ஒழுங்காத்தானே இருந்தான்; இதெல்லாம் வேணிக்குத் தெரியுமா?’ மார்க்கமாக பார்த்துவிட்டுத்தான் பேச்சையே தொடர்கிறார்கள்.

நம்மை மாதிரியான அப்பாடக்கர்கள் இதற்கெல்லாம் பயப்பட்டால் வேலைக்கு ஆகுமா? இத்தகைய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக யாரேனும் அணுகும் போது விட்டுவிடக் கூடாது. இங்கு உதவத் தயாராக நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் பலரும் ‘யாருக்கு உதவுவது’ என்று தெரியாமல் குழம்பியே தமது அடுத்த காரியத்தைப் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். அதனால் யாரேனும் அணுகினால் சற்று மெனக்கெட்டாலும் பரவாயில்லை என்று காரியத்தை இழுத்துப் போட்டுச் செய்துவிட வேண்டும். இத்தகைய செயல்கள் நிச்சயமாக எங்கேயாவது ஓரிருவருக்காவது முன்னுதாரணமாக அமையக் கூடும். 

‘தீபாவளிக்கு குழந்தைகளுக்கு ஆடை எடுத்துக் கொடுத்துவிடலாம்’ ‘திருமண நாள் வருகிறது....நூறு பேருக்கு விருந்து படைத்துவிடலாம்’ என்றெல்லாம் யாராவது கேட்டால் ‘எனக்கு நான்கு நாட்கள் அவகாசம் கொடுங்கள். விசாரித்துவிடுகிறேன்’ என்றுதான் கேட்பேன். முடியாது என்றும் வாய்ப்பில்லை என்றும் சொன்னதில்லை. நிச்சயமாக உதவிகளைப் பெற்றுக் கொள்ளத் தகுதியான ஆட்கள் இருப்பார்கள். தேடுவதுதான் கொஞ்சம் சிரமமான காரியம். ஆனால் தேடிவிடலாம். தெரிந்த நண்பர்களிடமெல்லாம் சொல்லி வைத்திருந்தேன். பெரும்பாலானவர்கள் ஆச்சரியத்துடன் ‘இப்படியெல்லாம் செய்யறதுக்கு ஆட்கள் இருக்காங்களா’ என்ற கேள்வியைத்தான் கேட்டார்கள். 

சரவணன், மூன்று லட்சம் வரைக்கும் கொடுப்பதாகச் சொன்னார். நண்பர்களிடமெல்லாம் ‘ரெண்டு பொண்ணுங்களுக்கு செய்யற அளவுக்கு பணம் இருக்கு’ என்று சொல்லியிருந்தேன். சரவணன் கொடுக்கும் மூன்று லட்சத்துடன் சேர்த்து நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்து ஒரு பெண்ணுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் எனக் கணக்கிட்டிருந்தேன். 

தகுதியான பெண்ணைக் கண்டறிய வேண்டும். பெண்ணுக்கேற்ற மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக கிடைத்த பையனுடன் திருமணம் செய்து வைக்க முடியாதல்லவா? கல்லூரி பேராசிரியை கலைச்செல்வி சந்தியாவின் விவரங்களை அனுப்பி ‘நம்ம சூப்பர் 16 கார்த்தியும் அதே அலுவலகத்தில் பணியாற்றுகிறான். அவன் வழியாக இந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்கள் கிடைத்தது’ எனச் சொன்னார். சந்தியாவின் விவரங்களைப் பார்த்தவுடனே நினைவுக்கு வந்துவிட்டது. சந்தியாவை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். ஆனால் சரவணன் கேட்ட தருணத்தில் நினைவுக்கு வரவில்லை. பி.ஈ முடித்த பெண். அம்மா உயிரோடில்லை. அப்பாவின் ஆதரவு இல்லை. பாட்டியின் வீட்டில் வளர்கிறார். பி.ஈ படித்திருந்தாலும் அலுவலகம் ஒன்றில் உதவியாளராக நான்காயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலையில் இருக்கும் பெண். அவருடைய பாட்டி சம்பாத்தியத்தில் செலவுகளைச் செய்து திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளையும் பக்கத்து ஊர்தான். 

சந்தியா பற்றி பற்றி மேலதிக விவரங்களை விசாரித்தோம். அரசு தாமஸ் நேரில் சென்று பார்த்துவிட்டு ‘தகுதியான பெண்’ என்று சொன்னார். அதன் பிறகு இதனை எப்படி செயல்படுத்துவது என்றுதான் யோசிக்க வேண்டியிருந்தது. இரு குடும்பங்களும் சேர்ந்து, பெரிதாக எந்தச் செலவுமில்லாமல், விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் வாங்காமல் திருமணத்தை நடத்தி முடித்துவிடுகிறார்கள். நாளை காலையில் முகூர்த்தம். சரவணன் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அப்பொழுது அவரது அம்மாவையும் அப்பாவையும் அழைத்து வருவார். சந்தியாவின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்து, சரவணனின் பெற்றோர் கையினால் வழங்கச் சொல்லி அவர்களிடம் சந்தியாவும் அவரது கணவரும் ஆசி பெற்றுக் கொள்ளும்படி திட்டமிட்டிருக்கிறோம்.

இன்னொரு பெண்ணையும் அடையாளம் கண்டிருக்கிறோம். பெற்றோர் இல்லாத பெண். தமது இரண்டு தங்கைகளையும் அவர்தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு தகுதியான மணமகன் இன்னமும் அமையவில்லை. அவரது உறவினர்களிடம் சொல்லி வைத்திருக்கிறோம். அவர்கள்தான் ‘ரெண்டு லட்ச ரூபாய் எங்களுக்கு பெரிய தொகைங்க’ என்று சொன்னவர்கள். மணமகன் அமைந்துவிட்டால் இரண்டு பெண்களுக்கும் ஒரே நாளில் சீர் செய்துவிடலாம்.

தமிழகம் முழுக்கவும் பரவலாக இத்தகைய காரியங்களைச் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் சாத்தியமாக்குவதில் பெரும் தடைக்கற்கள் இருக்கின்றன. நல்லதொரு அணி அமையாமல் இவற்றை செய்ய முயற்சித்தால் மண்டை காய்ந்துவிடும்.  பேராசிரியை கலைசெல்வி, ஆசிரியர் அரசு தாமஸ், பிரபாகர் என ஒரு அணியாக இருந்துதான் இந்த அளவுக்கு நகர்ந்திருக்கிறது. இனி பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அவை சந்தியாவின் வீடு போய்ச் சேரும் வரை அணி சேர்ந்துதான் பணியாற்ற முடியும். அப்படியொரு அணியை பரவலாக அமைக்க முடிவதில்லை. அது ஒருவகையில் நல்லதும் கூடத்தான். இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து கொள்ளலாம்.

ஒரு குடும்பம் உதவுகிறது, இன்னொரு குடும்பம் அந்த உதவியைப் பெற்றுக் கொள்கிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தொடங்கி வைத்த திருப்தி ஒரு குடும்பத்துக்கு; பெரிய சிரமமில்லாமல் தமது வாழ்க்கையைத் தொடங்கும் நிம்மதி எளிய குடும்பம் ஒன்றின் பெண்ணுக்கு. இரண்டுக்கும் இடையில் பாலமாக இருந்து செயல்படும் சந்தோஷமே நமக்கு.

நாளை திருமணம் நடைபெறும் சந்தியா, துரைமுருகன் தம்பதியினர் பெருவாழ்வு வாழ்க! சரவணன் குடும்பமும், அவர்தம் பெற்றோரும் நிறைந்த மனநிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும் நீடூழி வாழ்க!

7 எதிர் சப்தங்கள்:

kannan jagannathan said...

உங்கள் தன்னலமற்ற பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

சந்தியா-துரைமுருகன் தம்பதியினர் மற்றும் அந்த இன்னொரு பெண்ணும் தம்பதி சமேதரர்களாக ஆன்மீக மற்றும் உலகாய நற்செல்வங்கள் அனைத்தும் அடையப் பெற்றுப் பெரு வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறையருளும், குருவருளும் துணை நிற்கட்டுமென வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்-பேராசிரியர். ப.கோபாலகிருட்டிணன். 9994240629 9344053440

Jaypon , Canada said...

வாழ்க வளமுடன். படிக்கவே எத்தனை பரவசமாக இருக்கிறது. உதவ நினைக்கும் எல்லோருக்கும் உதவும் வாய்ப்பு கிடைப்பதில்லை. உதவி வேண்டி நிற்போறும் அப்படித்தான். இங்கே அது சாத்தியப்படுகிறது. உங்கள் அனைவரின் முயற்சியும் திருவினையாக்கும் இறைவனுக்கு நன்றி.

சேக்காளி said...

//Blogger Jaypon , Canada said...
படிக்கவே எத்தனை பரவசமாக இருக்கிறது//
அதே

Mohamed Ibrahim said...

Congrarts Mani and Saravanan!

MV SEETARAMAN said...

apt job done Kuttuvilakku has been lit . congradulations. Manikandan. Veni will be also very happy too

Hari said...

Thanks for Good hearted people.
Many thanks to Mani for sharing this.
God bless you all all.