Jun 8, 2018

பாஸிட்டிவிட்டி என்றால்..

நாம் செய்கிற எந்தவொரு காரியத்திலும் சந்தோஷத்தையும் திருப்தியையும் எதிர்பார்க்கிறோம் அல்லவா? அது இல்லையென்றால் ஏன் செய்யப் போகிறோம். 'களத்துல எது சந்தோசம்?' என்ற கேள்வியை எதிர் கொண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எதையாவது ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறேன். உண்மையில் என்னிடம் சரியான பதில் இல்லை என்று அர்த்தம். இப்பொழுது கேட்டால் தெளிவான பதிலைச் சொல்ல முடியும். 'நம்மை நம்பி அல்லது நம்மைப்  பார்த்து ஒரு கூட்டம் சேருமல்லவா? அதுதான்'.

உடனடியாகவெல்லாம் யாரும் வந்துவிடமாட்டார்கள். முன்பு நானும் புலம்பியிருக்கிறேன். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. அருமையான குழாம் உருவாகியிருக்கிறது. இளைஞர்கள்தான் மிகப்பெரிய பலம். அடர்வனம் அமைக்கும் வேலையை திருவிழா போலச் செய்கிறார்கள். நிகழ்வில் சட்டையில் அணிவதற்கான பேட்ஜ் மட்டும் ஐம்பது அச்சடித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 'அளவான எண்ணிக்கையில் அச்சடிச்சுக்குறோம்' என்று சொல்லிச் சொல்லியே ஐம்பத்தைத் தொட்டுவிட்டது. இன்றும் நாளையும் இளைஞர்கள் மொத்தமும் விடுப்பு எடுத்திருக்கிறார்கள். இன்று நிலத்தை அளவெடுத்து, இடம் குறித்து குழி தோண்டுகிறார்கள். கல்லூரியிலிருந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் குழு ஒன்று வருகிறது. மதியம் அத்தனை பேருக்கும் உணவும் தயாரிக்கிறார்கள். பந்தல் அமைத்து, மைக் செட் கட்டி என அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

(கம்பி வேலி அமைக்கப்பட்டு நிலம் தயாராகிக் கொண்டிருக்கிறது)


(விழாவுக்கான பந்தல்)

அடர்வனம் வாட்ஸாப் குழுவில் தொடர்ந்து செய்தி வந்து கொண்டேயிருக்கிறது- பந்தல் செலவு இன்னாருடையது, குடிநீர் செலவு அன்னாருடையது, பாத்திரங்கள் வாடகை இவர் கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார் என்று. இளைஞர்கள் இப்படி இணைந்து செயல்படாவிட்டால் இப்படியெல்லாம் யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார்கள்.




நேற்று அவர்களாகவே கூடி கமிட்டிகள் பிரித்தாகிவிட்டது. அரசு தாமஸ் சென்றிருந்தார்.  'வரவேற்பு குழு' 'உணவுக் குழு' என்று சிறு சிறு குழுக்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன, 'வாகனங்கள் ஒழுங்குபடுத்தும் குழு' கூட இருக்கிறது.  ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு. நாளைய நிகழ்வை இந்த குழுக்களே பார்த்துக் கொள்ளும். கோட்டாட்சியர், வட்டாட்சியர் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் வரை சகலருக்கும் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்கள். சர்வகட்சி அரசியல் பிரமுகர்களையும் அழைத்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய அளவில் மரம் நடும் நிகழ்ச்சி நடக்கும் என்றெல்லாம் நினைத்திருக்கவில்லை. நேற்றைய கூட்டம் முடிந்த பிறகு அரசு தாமஸ் அழைத்து 'இப்படி ஒரு எனர்ஜெட்டிக் டீம் இருந்தா போதும்' என்றார்.

நேற்று இளைஞர்கள் அழைத்து 'ப்ளெக்ஸ் வைக்கணும்' என்றார்கள். இருக்கட்டும். களத்தில் என்ன நடந்திருக்கிறது என்று அடுத்தவர்களுக்குத் தெரியுமல்லவா? மரங்களின் பட்டியல் நிரந்தரமாக இருக்கும். இது ப்ரூப். அனுப்பியிருந்தார்கள். எனது பெயரை நீக்கிவிட்டு அச்சடிக்கச் சொல்லியிருக்கிறேன். 


வெளியிலிருந்தும் சில தடைகள் இருந்தன. அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். பெரும்பாலானவற்றை சரி செய்தாகிவிட்டது. பஞ்சாயத்து தரப்பிலிருந்து வெகு உதவிகரமாக இருக்கிறார்கள். அவர்களை ஆரம்பத்திலேயே அணுகி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அடுத்தடுத்த வேலைகளை செய்யும் போது இதெல்லாம் படிப்பினை. 

சந்தோஷமெல்லாம் இளைஞர்களை திரட்டியிருப்பதுதான். இந்த பிணைப்பை ஆத்மார்த்தமானதாக, வடிந்துவிடாத ஆர்வமாக மாற்ற வேண்டும். அரசியல் நடக்கும். யாராவது எதையாவது பேசி உடைக்க முயற்சி செய்யக் கூடும். இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அடர்வனம் முடிந்தவுடன் தமது ஊருக்கான இன்னொரு வேலைத்திட்டத்தை அடையாளம் கண்டறிந்து இதே கட்டுக் கோப்புடன் அவர்களாகவே செய்து முடித்துவிட்டால் போதும். காலகாலத்துக்கும் இந்தக் குழு வலுவானதாக இருக்கும். 

(கணேசமூர்த்தியும் கவினும்)

(சிரித்துக் கொண்டிருப்பவர் மகேஷ்)

இதையெல்லாம் சாத்தியப்படுத்துவதற்கு உள்ளூரில் வேலைகளை இழுத்துப் போட்டு செய்யும் ஒரு காந்தம் அவசியம். கணேசமூர்த்தி அப்படியானதொரு காந்தம். தொடக்கத்திலிருந்து அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து 'அண்ணன் செய்யறாரு..' என்று ஒவ்வொருவராக வந்து நின்றார்கள். இப்படித்தான் குழு வடிவம் பெற்றது. இடையிடையே நாம் உற்சாகமூட்டினால் போதும். இத்தகைய குழுக்கள் திரளும் போது ஆரம்பத்தில் யாராவது எதையாவது சொல்லத்தான் செய்வார்கள். குழுவில் இருக்கும் சிலரது கவனம் சிதறடிக்கப்படும். குழுவினர் தயங்குவார்கள். மீதமிருப்பவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றும் போது எழுப்பப்படும் சலனங்களின் அளவு குறையும். அப்படி சலனம் குறையும் போது குழுவிற்குள்ளான பிணைப்பு வலுவாகும். அதன் பிறகு அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் பொருட்படுத்த மாட்டார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு சலனம் உருவாக்கும் ஆட்கள் பேசக் கூட பயப்படுவார்கள். ஒதுங்கிவிடுவார்கள். பிறகு அத்தனையும் பாசிட்டிவிட்டிதான். இதனை நேரடியாகப் பார்த்தாகிவிட்டது. இதுவொரு மிகப்பெரிய அனுபவம்.

நாளை மரம் நடுகிறோம். நிறையப் பேர் வெளியிலிருந்து வந்து கலந்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். வருக. இந்த பாசிட்டிவ் எனெர்ஜியை பார்ப்பதற்காகவாவது வர வேண்டும்.


மனப்பூர்வமாகச் சொல்கிறேன்- இப்படி ஒவ்வோர் ஊரிலும் மதம், அரசியல், சாதி, சினிமா சாராத ஆக்கப்பூர்வமான இளைஞர் குழு உருவாகிவிட்டால் போதும். ஒவ்வொரு மாற்றமும் தானாக நிகழும். 

18 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

OMG! Mani, you are incredible...such a great example to this greedy world! go ahead man...This is what real ground work is! Amazing and I'm speechless...

Naveen.

deva said...

அண்ணா முதல்ல நன்றி எங்க பசங்கள எல்லாம் குழுவா அமச்சதுக்கு நீங்க இன்னும் support பண்ணுங்க அண்ணா

Mohamed Ibrahim said...

Congrats to the whole team. speechless!

Jayaprakashvel said...

அருமை மணிகண்டன். உங்கள் அர்ப்பணிப்பும் உழைப்பும் அசாத்தியமானது. ஊர்ப்புறங்களில் இன்னதென்று செய்யத்தெரியாததால் தான் இளைஞர் சக்தி வீணாகிறது. அதனால் தான் நான் அவர்கள் ஏதாவது பாடாவதி அரசியல் கட்சிகளில் சேர்ந்தால் கூட பாராட்டுகிறேன். செயல் முக்கியம். வாழ்த்துகள் மணி.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

நம்ம ஊரில் நடக்கும் மனதிற்கு மிகவும் இசைவான நல்லதொரு நிகழ்வில் கலந்து கொள்ள இயலாது என ஆதங்கம் ஆக உள்ளது, மணி.அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

Selvaraj said...

இதயபூர்வமான வாழ்த்துக்கள்

Anonymous said...

Another verse of AuvvayAr from her work “Moodurai” has a key to it. “nallAr oruvar uLarEl avar poruTTu ellOrkkum peyyum mazhai” is that key. Even if there is a single good soul out there, that itself becomes the reason for rains to benefit everyone – the verse says. Such is the truth of kindness.
For life to sustain in this world, even if only a few kind hearts are there, the world will have the life force of air for everyone to breath and live under its roof. VaLLalAr swamigaL would say, “vADiya payiraik kaNDapOdhellAm vADinEn”. Such a great disposition of even being kind and compassionate to a crop that is withering away! Why would it not rain or the earth be filled with air all of us to breathe with such souls?
A well known, rhyme to make babies sleep says thus: “ karuNai oLiyE saindhADu”. The point here is even as a baby our a culture has taught has kindness and when such kindness exists in our minds even for a fraction of second, then the sustenance of the world would be guaranteed.

S.NEDUMARAN , said...

நெஞ்சில் ஈரமும், மாநிலத்துப் பிற உயிர்களிடத்தில் பெருங்கருணை கொண்டவர்கள் சிலராவது இருக்கையிலே, அவர்களும், அவர்களால் எல்லோருமே, உயிர்வாழ முதற்காரணியாய் இருக்கிற காற்று இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது

சேக்காளி said...

//வெளியிலிருந்தும் சில தடைகள் இருந்தன. அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன்//
சொல்லு(ங்க)ம் சின்னையா.
எதிர்காலத்துல எச்சரிக்கையா இருக்கலாமுல்ல

Anonymous said...

Great job, specially when democracy is at critical stage, such moves and group not just doing to protect nature but democracy too.

Anonymous said...

Great work Sir... hope your team will be capturing video moments of the steps from scratch. and should continue till trees starts coming up. Sharing with others would definitely inspire many.

-- Somesh

ராமுடு said...

Mani

Convey my best wishes to entire crew & your family. They are blessed to have you.

Jaypon , Canada said...

அபாரமான ஆரம்பம். வாழ்த்துக்கள்.

Anonymous said...

Hello.This post was extremely motivating, particularly because I was searching for thoughts on this
issue last Wednesday.

சங்கர் said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். "அடர்காடு" என்று அழகு தமிழில் சொல்லலாமே ? ஏன் "வனம்" என்று வடமொழியில் சொல்கிறீர்கள் ? நம் தாய்மொழியில் ஏன் அந்நியச் சொற்களை நாமே ஏன் பரப்ப வேண்டும் ? வடநாட்டு ஆட்கள் யாரேனும் தமிழில் ஆட்களுக்கோ, இடங்களுக்கோ பெயர் வைக்கிறார்களா, நாம் தமிழர் மட்டும், தமிழ்ச்சொற்களை விடுத்து பிற மொழிகளை இங்கே கொண்டு வர வேண்டும். இதனால்தான் நம்மூரில் ஓடும் தொடர்வண்டிக்குக் கூட இந்தியில் பெயர் வைக்கிறார்கள்.

அடர்காடு என்று பேரிட்டால் நன்று அன்றோ :)

பிகு: அடர்வனம் என்றுதான் பேர் வைப்பேன் என்பது உங்கள் உரிமை. அதை மாற்றச் சொல்லி கோரிக்கை மட்டுமே.

சேக்காளி said...

//வனம்" என்று வடமொழியில் சொல்கிறீர்கள் ?//
என்னது "வனம்" ங் கறது வட மொழி சொல்லா?

அன்பே சிவம் said...

அடர்வனம் சுகப் பிரசவம்தானே தகவலுக்கு காத்திருக்கிறோம். (யப்பா இங்கனயும் தூய தமிழ் எதிர்பாராமல் யதார்த்த தமிழுக்கும் ஆதரவு தரவும்..

சேக்காளி said...

//அடர்வனம் சுகப் பிரசவம்தானே//
"ஆமா" வாம் அவைத்தலைவரே.
http://www.nisaptham.com/2018/06/blog-post_11.html