Dec 6, 2017

வண்டியைக் கொடுங்க!

ஸ்ரீனி என்றொரு நண்பர் இருக்கிறார். நல்லவர். நல்லவர் என்றால் உண்மையிலேயே நல்லவர். சம்பளத்தில் ஒரு பகுதியை மனைவிக்குத் தெரியாமல் இல்லாதவர்களுக்குக் கொடுக்குமளவுக்கு நல்லவர். அவர் ஓட்டிப் பழகுவதற்காக ஒரு கார் வாங்கியிருக்கிறார். அரதப்பழசான மாருதி 800. அதுவும் மனைவியின் பெயரில். ஏழெட்டு மாதங்கள் ஓட்டிப்பழகிய பிறகு அதை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தவர் வாங்கிய தரகரிடமே காரைக் கொடுத்துவிட்டார்.

தரகருக்கு வாங்கி விற்பதுதான் பிழைப்பு. ஸ்ரீனியிடம் வாங்கிய வண்டியை முப்பத்தெட்டாயிரத்துக்கு விற்றுவிட்டு முப்பதாயிரத்தைக் கொடுத்திருக்கிறார். ‘எட்டாயிரம் ரூபா கமிஷன் சார்’ என்றாராம். இவர்தான் நல்லவராச்சே? விட்டுவிட்டார். இது நடந்து ஒன்றிரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. கடந்த மாதம் காவல்துறை ஸ்ரீனியின் வீட்டுக்கு வந்துவிட்டது. காவல்துறையைப் பற்றித்தான் தெரியுமே! அக்கம்பக்கத்து டீக்கடையில் விசாரித்து, துணி தேய்க்கும் கடைகளில் விசாரித்து வலை வைத்து அமுக்குவது போல அதிகாலை ஐந்து மணிக்குக் கதவைத் தட்டியிருக்கிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால் ஆந்திராவின் பிரபல கடத்தலான செம்மரக் கடத்தலுக்கு அந்தக் கார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முப்பத்தெட்டாயிரம் கொடுத்து வாங்கிச் சென்றவன் வண்டியை கடத்தலுக்கு விட்டுவிட்டான். காவலர்கள் வண்டியை வளைத்து வண்டி யாருடையது என்று விசாரித்து கடைசியில் இங்கே வந்துவிட்டார்கள். கடப்பாவில் ராஜம்பேட் என்ற ஊரில் இதெல்லாம் நடந்திருக்கிறது. ஸ்ரீனியும் அவரது மனைவியும் வசமாகச் சிக்கிக் கொண்டார்கள்.

எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றால் விடுவார்களா? ஸ்ரீனியிடம் கேட்டால் ‘அப்பவே கையெழுத்தெல்லாம் போட்டு புரோக்கர்கிட்ட கொடுத்துட்டேன்’ என்று சொல்கிறார். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கதவைத் தட்டிவிட்டார்கள்.  செம்மரக் கடத்தலில் பெரிய நெட்வொர்க் இருக்கக் கூடும் என்றுதான் டீக்கடை விசாரிப்புகளையெல்லாம் செய்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் இவர்களை ஏதோ நக்சலைட்டுகள் என்று நினைத்திருக்கக் கூடும். ஸ்ரீனியின் மனைவி செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் செவிலியராக இருக்கிறாள். பாவம். அதிகாலையியே அழ வைத்துவிட்டார்கள். ஸ்ரீனியிடம் பேசினால் ‘போலீஸே பரவால்லைங்க’ என்கிறார். ‘எல்லாத்துக்கும் நீதான் காரணம்’ என்று கரித்துக் கொட்டுகிறாளாம். அனுபவத்தில் அடிபட்ட ஒவ்வொரு ஆணும் அவரது வலியைப் புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீனியின் அப்பா செல்வாக்கு மங்கிப் போன தெலுகுதேசக் கட்சிக்காரர். அந்தக் காலத்தில் பெரிய ஆள். இப்பொழுது ஒன்றுமில்லை. என்றாலும் இத்தகைய வேலைகளைச் செய்கிற அளவுக்கு இன்னமும் விட்டகுறை தொட்டகுறையாக தொடர்பில் இருக்கிறார். பெங்களூரிலிருந்து ஸ்ரீனியின் மனைவியைக் கடப்பாவுக்கு அழைத்துச் செல்வதற்குள்ளாகவே எம்.எல்.ஏ அமைச்சர் என்றெல்லாம் பிடித்து கைது வரைக்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். ‘இங்க இருந்து கடப்பா வரைக்கும் கூட்டிட்டு போய் போக்குவரத்து செலவுக்கு பத்தாயிரம் வாங்கிட்டாங்க’ என்றார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.

இன்னமும் சிக்கல் முழுமையாக விட்டபாடில்லை. என்னவோ செய்து கைது செய்யாமல் விட்டிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் வழக்கு இவரது மனைவி மீதுதான் இருக்கிறது. வழக்காடி இவர்கள்தான் உடைக்க வேண்டுமாம். அலுவலகத்தில் தூக்கம் வரும் போதெல்லாம் எழுந்து போய் ஸ்ரீனியிடம் ‘அந்த புரோக்கர்கிட்ட பேசுனீங்களா?’ என்று வாய் கொடுத்தால் போதும். அந்தத் தரகனை வண்டி வண்டியாகத் திட்டுவார். நமக்குத் தூக்கம் போய்விடும்.

இன்று சாத்தப்பன் பெங்களூரு வந்திருக்கிறார். யாவரும் பதிப்பகம் தொடங்கிய போது அதில் அவரும் ஒரு பங்குதாரர். எமகாதகன். ஆண்களிடமெல்லாம் பேச மாட்டார். நேற்று மாலையில் அதிசயமாக அழைத்து ‘நீங்க ஆபிஸூக்கு பைக்ல போவீங்களா? கார்லயா?’ என்றார். நானாவது காராவது? பெட்ரோல் தீர்ந்துவிடும் என்று அவ்வப்பொழுது இறங்கித் தள்ளிச் செல்வதற்குக் கூட தயங்கமாட்டேன். உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சியும் ஆயிற்று; பெட்ரோலுக்கு பெட்ரோலும் மிச்சம்.

‘ஒண்ணுமில்ல. ஆபிஸ் வேலையா உங்க ஊருக்கு வந்திருக்கேன்...ஒரு நாளைக்கு வண்டி வேணும்’ என்றார். 

எனக்கு அதுவொன்றும் பிரச்சினையில்லை. கொடுத்துவிடலாம். வண்டியில் ஹார்ன் இருக்காது. ஒழுங்காக பிரேக் பிடிக்காது. ‘நயன்தாரா ஸ்லோவாகு’ என்றால் மெதுவாகிவிடும். ‘அனுஷ்கா ஸ்பீடா போ’ என்றால் வேகம் எடுத்துவிடும். எப்பொழுதாவது- இல்லை இல்லை- அடிக்கடி சண்டை வந்து கீழே தள்ளிவிட்டுவிடும். என் சட்டை பேண்ட்டையெல்லாம் கழற்றச் சொல்லி- குதர்க்கமாக யோசிக்காமல் மேலே படியுங்கள்- என் கை கால்களைப் பார்த்தீர்களேயானால் நிறைய சிராய்ப்புகள் இருக்கும். அதெல்லாம் இந்த அனுஷ்கா alias நயன்தாராவின் கோபச் சிணுங்கல்களால்தான்.

பெரும்பாலும் வண்டி ரிசர்விலேயேதான் ஓடும். அதற்கு மட்டும் கோபம் வராதா? கடுப்பில் தள்ளிவிட்டுவிடுகிறது. ஈரச் சாலையில், கொட்டி வைக்கப்பட்ட மணல் மீது, ஓரமாக நின்று கொண்டிருக்கும் மாடு என்று வகைதொகையில்லாமல் விழுந்திருக்கிறேன். அதிகபட்சமாக இருநூறு ரூபாய்க்கு எரிபொருள் நிரப்புவேன். அப்பேர்ப்பட்ட நம்மையும் நம்பி ஒருவர் வண்டியைக் கேட்கிறார். ரிசர்வில் கொடுத்தால் நன்றாக இருக்காது அல்லவா? கடைக்குச் சென்று முப்பது ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினேன். பெட்ரோல் பங்க் பொடியன் மார்க்கமாகப் பார்த்தான். அவனுக்கு என்ன? பார்த்துவிட்டுப் போகட்டும். அநேகமாக இரண்டு கிலோமீட்டர் ஓடினால் ரிசர்வ் விழுந்துவிடும். அது போதும்.

காலையில் மடிவாலாவில் சாத்தப்பன் நின்றார். ஸ்ரீனியின் மனைவி பணியாற்றும் அதே இடம். இட ராசி சரியில்லையே என்று நினைத்தேன். வண்டியில் ஏறிக் கொண்டார். என்னை அலுவலகத்தில் விட்டுவிட்டு வண்டியை வாங்கிக் கிளம்பியவர் ‘நாலு கியருமே கீழேயா?’ என்றார். ‘என்னது இனிதான் கியர் பத்தியே தெரிஞ்சுக்க போறீங்களா?’ என்றேன். சிரித்தார். சிரிப்புக்கு என்ன அர்த்தமோ?

‘நாலு மணிக்கு வர்றேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். மணி ஐந்தாகி, ஆறாகி இன்னமும் காணவில்லை. நல்ல பிள்ளையாகக் கொண்டு வந்து கொடுத்துவிடக் கூடும். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் என்னவெல்லாம் செய்தாரோ என்று பரப்பன அக்ரஹாரா பெருமாளுக்குத்தான் வெளிச்சம். ஸ்ரீனிக்காவது அவரது அப்பா உதவினார். என் தம்பியிடம் பிரச்சினை போனால் ‘வெச்சு கும்மி அனுப்புங்க..அப்போத்தான் திருந்துவான்’ என்பான். எதற்கும் இங்கே எழுதி வைத்துவிடலாம். சின்னம்மாவுக்கு பக்கத்து அறையில் வைத்து வெளுத்து வாங்கும் போது ‘சார்...ப்ளீஸ் நிசப்தம் படிங்க..எனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று கெஞ்சவாவது உதவும்.

4 எதிர் சப்தங்கள்:

GK said...

Mani, Neenga romba safe dhan... oru chinna information, parapana Agraharam officers-ku Tamil theriyadhu. Avanga oru translator vachu kanadathula translate panni vishayam theriyaradhukulla unga kathi adho kathi dhan.

G.K.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

இன்னுமா வண்டி வந்து சேரவில்லை..
வாழ்க வளமுடன்

raja said...

சார் வண்டி வந்துருச்சா!!:)

சேக்காளி said...

இவரே வண்டியை குடுத்து கஞ்சா கடத்துவாராம்.பிடிபட்டால் எனக்கொண்ணும் தெரியாது ம்பாராம்.இத பத்தி நிசப்தத்துல கூட எழுதிருக்கேன் ன்னு ஆதாரத்தை காட்டுவாராம்.
இந்த ஆர்கே நகர் வேட்புமனு நிராகரிப்பு, ஏற்பு,நிராகரிப்பு பிரச்னை உம்மை ரொம்ப தான் கெடுத்து வச்சிருக்கு.