Dec 26, 2017

ஓர் அப்டேட்

மூன்று நாட்களாக பள்ளி குறித்தான வேலைகளுக்காக அலைந்து கொண்டிருந்தோம். இடம் தேடுவதுதான் முக்கியமான பணியாக இருந்தது. நான்கைந்து இடங்களைப் பார்த்திருக்கிறோம். விலை அதிகமாகச் சொல்கிறார்கள். ‘வருமானத்துக்காக பள்ளியைத் தொடங்கவில்லை; சேவைதான் நோக்கம்’ என்று விளக்கினால் செண்ட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் குறைக்கிறார்கள். அது அவர்கள் இடம். விலை சொல்வது அவர்கள் உரிமை.

‘இன்னும் பங்கு பிரிக்காம இருக்குங்க..முக்கால் ஏக்கர் வரும்...நீங்க எடுத்துக்குங்க...எங்கப்பாவும் சொந்தக்காரங்களும் என்ன சொல்வாங்கன்னு தெரியல..ஆனா இடம் ஒத்து வருமான்னு பார்த்துட்டுச் சொல்லுங்க’ என்று சொல்லுகிற நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்த இடம் தற்போதைய பள்ளியிலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவு தள்ளியிருக்கிறது. ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

இடத்துக்கென பெருந்தொகை சாத்தியமில்லை. நாற்பது லட்சத்துக்குள் இடம் பார்க்க வேண்டும். ‘இப்போ ஒரு தொகையைக் கொடுத்துவிடலாம். பிறகு மீதத் தொகையைக் கொடுத்துவிடலாம்’ என்று கூட சில நண்பர்கள் சொன்னார்கள். சரி என்று ஐம்பது அல்லது அறுபது லட்சத்துக்கு சரி என்று சொல்லிவிட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது. பெரிய கும்பிடு போட்டிருக்கிறேன். ஒருவேளை பணத்தைப் புரட்ட முடியாவிட்டால்? விபரீதமாகிவிடும்.

நல்லதொரு இடமாகக் கிடைத்தால் சிறு தொகையைக் கொடுத்து ஒப்பந்தம் போட்டுவிட்டு அடுத்தகட்ட வேலையைத் தொடங்க வேண்டும். தற்போதைய நிர்வாகத்திடமிருந்து கை மாற்றுவது, நகராட்சியின் சான்றிதழ்கள், வருவாய்த்துறை, தீயணைப்புத் துறையின் சான்றிதழ்கள், கல்வித்துறையின் அனுமதி, உள்ளூர் அரசியல் என எவ்வளவோ இருக்கின்றன. எங்கேயிருந்து தடைக்கல் உருண்டு விழும் என்று தெரியாது. முரட்டுவாக்கில் மொத்தப்பணத்தையும் கொடுத்து கிரயத்தை முடித்துவிட்டு ஏதேனும் ஒரு திசையிலிருந்து சிக்கல் வந்துவிட்டால் பணத்தை மீட்டு எடுப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ஒவ்வொரு அடியையும் யோசித்துத்தான் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.

நமக்கு உதவுகிற பணிகளில் இருக்கும் நண்பர்களிடமும் இதைத்தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். ‘நம்முடைய தனிப்பட்ட பணம் என்றாலோ அல்லது இலாப நோக்கில் ஆரம்பிப்பதாக இருந்தாலோ எவ்வளவு முரட்டு முடிவுகளையும் எடுக்கலாம். இது அப்படியன்று. ஒவ்வொரு ரூபாய்க்கும் பதில் சொல்ல வேண்டியப்வேண்டியிருக்கும். ஒருவேளை பள்ளியைத் தொடங்க முடியாவிட்டால் அது பற்றி எந்தக் கவலையுமில்லை. ஆனால் பணம் எந்த விதத்திலும் வீணாகிவிடக் கூடாது’ என்பதை அழுத்தமாகப் பேசியிருக்கிறேன். அவர்களும் புரிந்திருக்கிறார்கள்.

இனி ஒரு வாரம் அதனதன் போக்கில் நடைபெறட்டும். நான் பெரிதாகத் தலையிடப் போவதில்லை. மேற்சொன்ன நடவடிக்கைகளைத் தொடர்ந்து சகல திசைகளிலுமிருந்து க்ரீன் சிக்னலைப் பெறுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜனவரி இரண்டாம் தேதியன்று நிலவரம் குறித்து தெளிவான காட்சி கிடைக்கும். அப்பொழுதுதான் அரையாண்டுத் தேர்வு விடுமுறைகளுக்குப் பிறகு பள்ளி தொடங்குகிறது. அதன் பிறகு இன்னொரு முறை நிலவரம் குறித்து எழுதுகிறேன். அனைத்துத் தரப்பும் சரி என்று சொன்னபிறகு இடம் அமைந்தால் நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படியில்லையெனில் ஓரடி பின்னால் நகர்ந்துவிடலாம்.

நிறையப் பேர் விசாரிக்கிறார்கள். ‘சொல்ல முடியும்ன்னா சொல்லுங்க’ என்றார் ஒரு நண்பர். இதில் மறைக்க என்ன இருக்கிறது?

திரை மறைவு அல்லது ஒளிவு மறைவுக் காரியங்கள் என்றெல்லாம் எதையும் செய்யப் போவதில்லை. எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் வெளிப்படையாக, அத்தனை பேருக்கும் தெரிந்தபடியேதான் நடக்கும். அப்பட்டமாக எழுதுவதால் காரியம் தடைப்பட்டுப் போகும் என்றால் தடைப்பட்டுப் போகட்டும். தவறு எதுவுமில்லை. செயலைச் செய்வதைக் காட்டிலும், அடுத்தகட்ட வளர்ச்சி என்பதைவிடவும் நம் மீதான நம்பகத்தன்மைதான் மிக அவசியம். அதில் ஒற்றைக் கீறல் கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் வெகு கவனமாகவே இருக்க விரும்புகிறேன்.

நன்றி.

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

சேக்காளி said...

// ‘சொல்ல முடியும்ன்னா சொல்லுங்க’//
இதுக்கு என்ன அர்த்தம் ?

Vaa.Manikandan said...

ஏதாச்சும் ரகசியமா செஞ்சுட்டு இருந்தீங்கன்னா சொல்ல வேண்டாம் என்று அர்த்தம்..

அன்பே சிவம் said...

சேக்காளி said...

//ஏதாச்சும் ரகசியமா செஞ்சுட்டு இருந்தீங்கன்னா சொல்ல வேண்டாம் என்று அர்த்தம்..//

நாடோடிப் பையன் said...

Mani

Great effort.

Why don't you buy an existing and failing/failed school and turn it around in your vision?

It will help avoid all the prep work required with starting a brand new school.

Regards.