‘பெரீப்பா...ஒரு பையன்ன்ன்ன்ன்...பாத்ரூம்ல இருந்து வெளீல வந்தான்...வெளில ஒரு புள்ள நின்னுட்டு இருந்தாளா....அவளைக் கிஸ் பண்ணீட்டான்’ யுவி இப்படிச் சொன்ன போது ‘என்னடா இது.. இந்தக்காலத்துப் பசங்களோட கருமமா இருக்குது’ என்றார் அம்மா. யுவி ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். ஷாக் கொடுப்பதில் அவனொரு கில்லாடி. இப்படி எதையாவது அவ்வப்போது சொல்வான். சுற்றியிருப்பவர்கள் பதறியபடி பேச்சை மாற்றிவிடுவார்கள் அல்லது கண்டும் காணாதது போல இருந்துவிடுவார்கள். அவன் சொன்ன போது எனக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. பெரியப்பனின் ஜீன் போலிருக்கிறது எனத் தோன்றியது. அந்தக் காலத்திலேயே இப்படி எதையாவது பார்த்துவிட்டு வந்து கண் காது மூக்கு வைத்து எதையாவது சொல்லிக் கொண்டிருப்பேன். ‘அவனைப்பாருடா... அஸ்மா தீபா ரெண்டு பேரையும் லவ் பண்ணுறான்...ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கப் போறான்’ என்றொரு கிசுகிசுவை உருவாக்க அது டீச்சர் காது வரைக்கும் போய் ‘சத்தியமா நான் சொல்லல டீச்சர்’ என்று கற்பூரம் அணைக்காத குறைதான். அப்பொழுது மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.
அடுத்தவனைப் பார்த்து வயிறு எரிவது, அவன் அப்படிடா, இவன் இப்படிடா என்றெல்லாம் கதையளப்பது- அவன் செய்தானோ இல்லையோ- கிளப்பிவிடுவதையே பிழைப்பாக வைத்திருந்தவன் நான். ஒரு காரியமும் உருப்படியாகச் செய்ததில்லை. கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண். செம அழகு. அவளாகவேதான் வந்து பேசினாள். ‘அவளா வந்து பேசற அளவுக்கு நீ என்ன அழகனா?’ என்று கேட்கக் கூடாது. பருவத்தில் பன்றிக்குட்டியு கூட அழகுதான். வில்லை வளைத்து வைத்த புருவமும் அரும்பு மீசையும். ஆனால் அவள் வந்து பேசிய காரணம் வேறு. பேச்சுப்போட்டி அரட்டை அரங்கம் என்று கொடி நட்டி வைத்திருந்தேன். அது சம்பந்தமாக வந்து பேசினாள். இரண்டு நாட்கள் அடிவயிறு முழுக்க பட்டாம்பூச்சிதான். நெஞ்சாங்குழி முழுக்கவும் கம்பளிப் பூச்சிதான். நூலகத்திலும் கேண்டீனிலுமாகப் பார்த்துப் பார்த்த்டு டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒருத்தன் சந்தோஷமாக இருந்தால் எங்கேயாவது புகையும்.
ஒருத்தன் வந்தான். ‘வேண்டாம் விட்டுரு...அவ எங்க ஏரியா’ என்பதைச் சொல்வதற்காக. என்னைவிட ஒரு வருடம் இளையவன் என்றாலும் ஆள் கழுமுண்டராயனாக இருப்பான். போதாக்குறைக்கு உள்ளூர்வாசி. முக்கி எடுத்துவிடுவானோ என்று தவிர்த்துவிட்டு அவளிடம் ‘உன்னைப் பற்றி அவன் கண்டபடி சொல்கிறான்’ என்று போட்டுக் கொடுத்துவிட்டேன். இங்கே நாகரிகமாக எழுதியிருக்கிறேன். நான் சொன்னதையெல்லாம் அவள் நம்பியிருந்தால் ஜென்மத்துக்கும் பேசியிருக்க மாட்டாள். நமக்கு கிடைக்காதது அந்த பயில்வானுக்கும் கிடைக்கக் கூடாது என்கிற நப்பாசைதான். கல்லூரி முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம். ‘நான் சொல்லவேயில்லை..அவன் உன்கிட்ட உடான்ஸ் விட்டிருக்கான் கண்ணு’ என்று கெஞ்சிக் கூத்தாடியிருப்பான்.
இன்னொருத்தி அப்படித்தான். குனிந்த தலை நிமிர மாட்டாள். ‘உங்க ஊர்தான்..செமயா இருக்கால்ல’ என்று பற்ற வைத்தார்கள். ‘எங்க ஊரு தண்ணி அப்படி..அழகாத்தான் இருப்போம்’ என்று சொல்லிவிட்டு அவளிடம் பேசத் துடித்த நாட்கள் இருக்கின்றனவே. எப்பொழுது இரண்டு மூன்று பேர்களுடனேயே சுற்றுவாள். அர்ஜூன் ரெட்டி படம் பார்த்த பிறகுதான் உரைக்கிறது. நம்மை மாதிரியான ரெவிடிகள் எல்லாம் நேரடியாகச் சென்று பேசியிருக்க வேண்டும். ‘ஏய்..போங்கடி’ என்று அல்லக்கைகளைத் துரத்தியிருக்க வேண்டும். ம்க்கும். வெகு நாட்களுக்குப் பிறகுத் தனியாக வந்தாள். ‘நீங்க கோபியா?’ என்று மட்டும்தான் கேட்டேன். ‘மேவானி’ என்றாள். இரு ஊர்களுக்கும் அதிகபட்சம் பத்து கிலோமீட்டர் தொலைவுதான் இருக்கக் கூடும். அதற்கு மேல் என்ன கேட்க வேண்டும் என்று எனக்கும் தெரியவில்லை. அவளும் பதில் சொல்லவில்லை. அடுத்த நாள் எதிரில் பார்த்தால் சிரிக்கக் கூடும் என்று நினைத்திருந்தேன். தலையைக் குனிந்தபடியேதான் நடந்து போனாள்.
‘கிஸ் பண்ணிட்டான்’ என்று யுவி சொன்ன போது இதெல்லாம்தான் நினைவுக்கு வந்து போயின.
பள்ளிக்காலத்தில் உள்ளூரில் ஒரு தனிப்பயிற்சி வகுப்பு நடைபெறும். அங்கேயொரு அழகி வந்தாள். நாங்கள் படித்துக் கொண்டிருந்தது ஆண்கள் பள்ளி. பாலைவனம். ட்யூசனில் இப்படிப் பார்க்கும் ஒன்றிரண்டு பெண்கள்தான் ரோஜாப்பூக்கள். அவள் வேறொர்ய் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் பேசலாம் என்று நினைக்கும் போதெல்லாம் இருவர் குறுக்கே வந்துவிடுவார்கள். பெரிய செல்வன். சின்ன செல்வன். ஒருத்தன் பெரிய அண்ணனாம். இன்னொருத்தன் சின்ன அண்ணனாம். ‘ஏண்டா இப்படியெல்லாம் செண்டிமெண்ட் பார்க்குறீங்க?’ என்று கடுப்பாக இருக்கும். மூன்று பேரும் கடிதம் எழுதிக் கொள்வார்கள். ‘அன்புள்ள பெரிய அண்ணனனுக்கு...சின்ன அண்ணனை நன்றாகப் படிக்கச் சொல்லவும்’ என்று எழுதியிருப்பாள். ஒரே பள்ளி; ஒரே வகுப்பறை. பக்கத்து பக்கத்து இடம். ஆனால் கடிதாசி. எரிச்சல் வருமா? வராதா? அப்பொழுதும் ஒரு கிசு கிசுவைக் கிளப்பிவிட்டேன். மூன்று பேரும் வெறியெடுத்துத் திரிந்தார்கள்.
ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஒரு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் சேர்ந்திருந்தோம். நாங்கள் மூன்று பேர். எங்களுடன் ஒரு அக்காவும் வந்தார். அக்கா மருத்துவப்படிப்பு முடித்திருந்தார். ஏகப்பட்ட வயது வித்தியாசம். ஆனாலும் அந்த அருகாமை, புன்னகை எல்லாம் சந்தோஷம்தான். அந்த அக்கா ரங்கீலா படத்துக்குச் செல்வதாகச் சொன்னார். எனக்கு இந்தியில் ஒரு வார்த்தை தெரியாது. விகடனில் ஜாக்கி ஷெராஃப்பும் ஊர்மிளாவும் கிளுகிளுப்பாக இருக்கும் படம் ஒன்றை பிரசுரம் செய்திருந்தார்கள். அக்கா வேறு படத்துக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டார் அல்லவா? எப்படியாவது அதே காட்சிக்குச் சென்றாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று பணம் வாங்கிப் போய் ‘வசனமாடா முக்கியம்? படத்தைப் பாருடா’ என்று பார்த்துவிட்டு எழுந்து வரும் போது அக்காவைப் பார்த்துச் சிரித்துப் புளகாங்கிதம் அடைந்தெல்லாம் ஒரு பருவம். நெருங்காமல் நெருங்கிப் பேசுகிற த்ரில்.
ஒரு பெண் நம்மைப் பார்த்தால் போதும் பேசினால் போதும் என்று திரிவதே ஒரு சந்தோஷமான அனுபவம்தான். அந்தப் பார்வைக்கும் சிரிப்புக்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டு காலங்காலமாக இப்படிக் கதை சொல்லிக் கொண்டு திரியலாம். இவர்கள் என்னடாவென்றால் ஒன்றாம் வகுப்பிலேயே கிஸ் அடிக்கிறார்களாம்! சின்னப்பசங்க...
4 எதிர் சப்தங்கள்:
//ஒரே வகுப்பறை. பக்கத்து பக்கத்து இடம்.//
நல்லா படிப்பாங்க போலருக்கு.
பெரியப்பனின் ஜீனா த் தெரியல 'கொலஸ்ட்ரால்' + குசும்பா த் தெரியுது.
வசனமாடா முக்கியம்?.
படத்தப் பாருடா!.
'தூள்'
Finishin Touch is Super Mani.....
Post a Comment