Oct 25, 2017

எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க?

அலுவலகத்தில் உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘இருப்பதிலேயே பெரிய சவால் என்று எதை நினைக்கிறீர்கள்?’ என்று ஒரு பொதுக்கேள்வியை முன்வைத்தார்கள். சந்தேகமேயில்லாமல்- அழுத்தங்களைச் சமாளிப்பதுதான் என்றேன். Stress Management என்பது இலாவகமான கலை. ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. ‘பத்து மணிக்கு ஆபிஸ் வந்துடுன்னு சொல்லுறீங்க...கண்டவன் கூட எல்லாம் வரும் வழியில் சண்டை போட்டுவிட்டு வந்தேன்’ என்றேன். சிக்னலில் பச்சை விழுந்தவுடன் வண்டியை நகர்த்திவிட வேண்டும். ஒரு வினாடி தாமதித்தாலும் பின்னால் நிற்பவவன் ஒலியெழுப்பத் தொடங்கிவிடுகிறான். செமக் கடுப்பு. கண்டபடி திட்டிவிட்டு அவனைத் தாண்டி வந்தவுடன் இரத்த அழுத்தத்தை அளந்து பார்த்தால் எப்படியும் 150/100 என்ற அளவிலாவது இருக்கும். 

‘எதுக்கு இவ்வளவு கோபம் வருகிறது?’ என்று யோசித்துப் பார்த்தால் பத்து மணி என்கிற இலக்குதான் முக்கியக் காரணம். பத்து நிமிடங்கள் முன்னாடி கிளம்பினால் பிரச்சினையே இல்லை என்று யாராவது அறிவுரை சொல்வார்கள். அது காலங்காலமாகச் சொல்லப்படுகிற அறிவுரை. ஒரு மணி நேரத்தில் அடைந்துவிடக் கூடிய இடத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் கிளம்பினால் போதும். பத்து நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பி ஏன் பத்து நிமிடங்களை வீணடிக்க வேண்டும்? ‘இவுரு பெரிய அப்துல்கலாமு...பத்து நிமிஷத்தை வீணடிக்காம போக்ரானில் அணுகுண்டு வெடிக்கப் போறாரு’ என்று யாராவது கலாய்க்கக் கூடும். அவர்களைத் தனியாக டீல் செய்து கொள்ளலாம்.

அழுத்தங்களைச் சமாளிப்பதுதான் நம் காலத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. வீட்டில் உருவாக்கப்படும் அழுத்தங்கள், வெளியிடங்கள், பணி புரியும் இடங்கள் என சகல இடங்களிலும் அழுத்திப் பிழிகிறார்கள். தமக்குள்ளாகவே உருவாகும் தனிமனித மன அழுத்தத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சுயபச்சாதாபம், தமக்கு நிகழ்ந்த துக்கங்கள், நிறைவேற்றப்படாத காமம் போன்ற காரணங்களினாலும் தனிமனிதனுக்குள்ளாக அழுத்தம் உருவாகிறது. நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதனுமே நிரம்பக் காற்று நிரப்பப்பட்ட பலூன்களாக இருப்பதுதான் பெரும் துரதிர்ஷ்டம். வெடித்துவிடக் காத்திருக்கும் வெடிகுண்டு பலூன்கள்.

‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..லா..ல..லா’ என்று இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எவ்வளவு தூரம் சாத்தியம்? யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பல்வேறு இடங்களிலிருந்து அம்புகள் வந்து விழுகின்றன. தனது கோபத்தை எங்கேயாவது வெளியேற்றிவிடக் காத்துக் கொண்டேயிருக்கிறார்கள். யாராவது சிக்கினால் சிக்கியவன் மேல் சுடுதண்ணீரைக் கொட்டுவது போலக் கொட்டிவிடுகிறார்கள். அமில வார்த்தைகள்.

தொழில்களிலும் போட்டிகள் அதிகம். செலவினங்களைக் குறைக்க வேண்டும். இலாபத்தைப் பெருக்க வேண்டும். கார்போரேட் நிறுவனங்களில் மட்டுமில்லை- சுயதொழில் செய்கிறவர்களுக்குக் கூட டார்ச்சர்தான். எங்கள் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களால அத்தனை சனி, ஞாயிறுகளிலும் வேலை செய்யச் சொல்கிறார்கள். தினசரி பனிரெண்டு மணி நேரமாவது வேலை செய்ய வேண்டியிருக்கிறது. காந்தி ஜெயந்தி, தீபாவளி என்று எதுவும் இல்லை. நான் பரவாயில்லை. வேறு சிலர் திணறிக் கொண்டிருக்கிறார்கள். 

முன்பு எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம்- நண்பனொருவன் பன்னாட்டு வங்கியில் பணியில் இருந்தான். அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்த சமயம். வங்கிகளுக்கு கடும் அழுத்தங்கள் உருவாகியிருந்தன. அது பணியாளர்கள் மீது விடிந்தது. அவன் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. காலையில் அலுவலகத்திற்குச் செல்லும் போது ஷூவை இறுக்கிக் கட்டிக் கொள்வானாம். இரவில் பணி முடிந்து வீடு திரும்பும் போது ஷூவை இளக்கும் போது அன்றைய தினம் தனது மனதில் ஏறியிருந்த மொத்த அழுத்தமும் கால் வலியாக இறங்கி ஓடுவதாக உணர்ந்ததாகச் சொன்னான். ‘அடப்பாவி’ என்றேன்.

‘அதுவொருவிதமான Stress management' என்றான். அதுவொரு தவறான முறையிலான Stressmanagement.

அவன் இன்றைக்கு வேலையை விட்டுவிட்டான். அமெரிக்காவில் வேலையை விட்டு அனுப்பினார்கள். நண்பர்களுடன் சேர்ந்து சிறு நிறுவனத்தைத் தொடங்கினான். அது தம் கட்டியது விற்றுவிட்டார்கள். கிடைத்த பெருந்தொகையில் ரிசார்ட் ஒன்றை வாங்கி ‘இது போதும்’ என்று அமைதியாகிவிட்டான். பெரும்படிப்பு படித்தவன். ‘படிச்சதெல்லாம் வீணா போய்டாதா?’ என்று தெரியாத்தனமாகக் கேட்டேன். ‘படிக்கிறது சம்பாதிக்கிறதுக்குன்னு நினைச்சா உன்னை மாதிரி பெரிய முட்டாள் யாராச்சும் இருக்க முடியுமா?’ என்று கேட்டு பெரிய குண்டு பல்பாகக் கொடுத்தான்.

நிறுவனம் தொடங்கி, இலாபம் பார்த்து, பெருந்தொகையைக் கையில் சேகரிப்பது அவனைப் போன்ற பெருமண்டைக்காரர்களுக்குச் சாத்தியம். எல்லோருக்கும் சாத்தியமான காரியமா என்ன?

நம் அளவுக்கு ஏதாவது யோசிக்க வேண்டியதுதான் என்று அடங்கிக் கொண்டேன். பிற எல்லாவிதமான அழுத்தங்களைக் காட்டிலும் தொழில் ரீதியாக உருவாகும் அழுத்தம்தான் பூதாகரமானதாகத் தெரிகிறது. பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் இருக்கக் கூடும். அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்று இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கான நுட்பங்களைச் சொல்லித் தருகிறார்கள். ‘முட்டையில் படிச்சதுதான் கட்டைக்குப் போகிற வரைக்கும்’ என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. ரத்தத்திலேயே ஊறி இருக்க வேண்டும். இல்லையென்றால் சிறுகச் சிறுகப் பழகியிருக்க வேண்டும். ஆனால் அதெல்லாம் சாத்தியமில்லாதவர்களுக்கு மிகச் சுலபமான ஒரு காரியம் இருக்கிறது. தொழில் வேறு; குடும்பம் வேறு- இங்கேயிருக்கும் அழுத்தத்தை அங்கேயும் அங்கேயிருக்கும் சிக்கல்களையும் இங்கேயும் காட்டினால் சோலி சுத்தம். தனித்தனியாகக் கோடு போட்டு வைத்துக் கொள்வதில் ஆரம்பிக்கிறது அழுத்தங்களைச் சமாளிக்கும் கலை. 

குடும்பமும் தொழிலும் வெவ்வேறு என்ற தெளிவை உருவாக்கிவிட்டாலே பாதி அழுத்தத்தைச் சமாளித்தது போலத்தான் என்றொரு கட்டுரையில் வாசித்தேன். அலுவலக வேலையை வீட்டில் செய்யக் கூடாது; வீட்டை அலுவலகத்தில் நினைக்கக் கூடாது என்று அர்த்தமில்லை. ஆனால் இரண்டுக்குமான தெளிவு இருக்க வேண்டும். குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை என்கிற புரிதல் அவசியம். யோசித்துப் பார்த்தால் நம்முடைய உழைப்பு, சம்பாத்தியம் என எல்லாமே குடும்பத்துக்காகத்தானே? நாம் விழும் போதெல்லாம் தாங்கிப் பிடிப்பதும் குடும்பம்தான். ஊர் உலகத்தில் இருக்கும் அழுத்தத்தையெல்லாம் அங்கே கொண்டு போய் இறக்கி வைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

நிறைய இருக்கிறது. பேசவும், புரிந்து கொள்ளவும்.

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

ஒரு விநாடி என்றால் கூட பச்சை எரிந்தவுடன் வண்டியை நகர்தாதது தப்பு தானே?. அப்புறம் ஏன் ஒரண்டை. ஒலி எழுப்பிட்டு போறான் ன்னு போய்கிட்டே இருக்க வேண்டியது தானே.

Anonymous said...

வைரமுத்து புத்தகத்தில் படித்தாக ஞாபகம். தொழில் ரப்பர் பந்து போன்றது. கிழே விழுந்தால் மீண்டும் மேலே வந்து விடும். ஆனால் குடும்பம் என்பது கண்ணாடி போன்றது. கீழே விழுந்தால் உடைந்து விடும்.

நாடோடிப் பையன் said...

Well written article. You have potential to become next Lena Tamizhvanan.

Thanks to 'Anonymous' for quoting Vairamuthu's analogy. It explains what is more important in life.

அன்பே சிவம் said...

Why blood?. Same blood!. நீரு ராசா ஊட்டு கன்னுக்குட்டி. உமக் கென்னன்ற உலகத்தில
நாம இருக்கோம்.

பல வேதனைகள் இருந்தாலும், பகல் வேஷம் போடாம இந்த உலகமே என்னுது, இதுக்கு என்னால் முடிஞ்ச நல்லது செய்யனும்னு நெனக்கிறவங்களுக்கு மட்டும் தான் சோதனை.

சேக்காளி said...

http://www.vikatan.com/news/health/105941-secrets-of-delhi-ganeshs-stress-management.html

Vinoth Subramanian said...

Even I feel the pressure in my office. My new manager doesn't understand the psychology of the visually challenged. What to do?