ஒருவர் அழைத்திருந்தார். பெயர் அவசியமில்லை. முப்பத்தேழு வயதாகிறது. பெங்களூரில் ஒரு அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கி தவணை கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு மகள். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். மனைவி இல்லத்தரசி. கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென்று வேலையை விட்டு அனுப்பிவிட்டார்கள். இடிந்து போயிருக்கிறார். முன் பின் அறிவிக்கப்படாத வேலை இழப்பு. ‘பெருசா சேமிப்புன்னு எதுவுமில்லை...ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்றார். இரண்டு மாத அடிப்படைச் சம்பளத்தை மட்டும் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக குறைந்தது பத்துப் பேர்களிடமாவது பேசியிருப்பேன். வேலைச் சந்தை அப்படியொன்றும் நன்றாக இல்லை. இவருக்கு என்றில்லை- வேறு சில நண்பர்களுக்காகவும் கடந்த சில நாட்களாக விசாரித்தால் ‘ஜனவரிக்கு மேல பார்க்கலாம்’ என்கிறார்கள். புதிய ஆட்களை எடுக்க எந்த நி்றுவனமும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த ஒன்றரை வருடங்களாகவே வேலைச் சந்தை அடி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. பெருநிறுவனங்கள் ஆட்களை வெளியேற்றின. ட்ரம்ப்பைக் காரணம் காட்டி பல நிறுவனங்கள் தமது பணியாளர்களின் கழுத்துக்களை நோக்கி கத்திகளை வீசின. பல நிறுவனங்கள் வெளியே சத்தம் வராமல் கமுக்கமாக கதையை முடித்தன. வேலை இழந்து தேடிக் கொண்டிருக்கிறவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கக் கூடும். 2017 அக்டோபருக்கு மேலாக நிலைமை சீரடைந்துவிடும் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சூழல் மாறியது போலத் தெரியவில்லை. இப்பொழுது ஜனவரியை நோக்கி விரல் நீட்டுகிறார்கள்.
கடந்த ஒன்றரை வருடங்களாகவே வேலைச் சந்தை அடி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. பெருநிறுவனங்கள் ஆட்களை வெளியேற்றின. ட்ரம்ப்பைக் காரணம் காட்டி பல நிறுவனங்கள் தமது பணியாளர்களின் கழுத்துக்களை நோக்கி கத்திகளை வீசின. பல நிறுவனங்கள் வெளியே சத்தம் வராமல் கமுக்கமாக கதையை முடித்தன. வேலை இழந்து தேடிக் கொண்டிருக்கிறவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கக் கூடும். 2017 அக்டோபருக்கு மேலாக நிலைமை சீரடைந்துவிடும் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சூழல் மாறியது போலத் தெரியவில்லை. இப்பொழுது ஜனவரியை நோக்கி விரல் நீட்டுகிறார்கள்.
கடந்த பத்து அல்லது பதினைந்தாண்டுகளாக பெங்களூரிலும் கோவையிலும் தனது விரிவாக்கத்தைச் செய்து கொண்டிருந்த ஜெர்மானிய பெருநிறுவனமொன்று சத்தமில்லாமல் பல ப்ராஜக்ட்களை வியட்நாமுக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இன்னோர் இந்திய ஐடி சேவை நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் கம்போடியா சென்று வருகிறார். அங்கே நிறுவனத்தை வலுப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கிறார்கள். ஆட்களை எடுத்து, பயிற்சியளித்து வேலையை அங்கே அனுப்ப வேண்டும் என்பது இவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இலக்கு.
‘அங்கே சம்பளம் குறைவு’ என்பது மட்டுமே காரணமில்லை. இங்கே நிறுவனங்கள் இழந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஆதரவு, திறமையான ஆட்களுக்கான பற்றாக்குறை என பல்லடுக்குச் சிக்கல் இது. யாரைக் கேட்டாலும் ‘எங்க கம்பெனியில் hiring freeze' என்கிறார்கள். கடந்த வருடம் கல்லூரிகளில் வளாகத் தேர்வில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்துச் சென்ற பல நிறுவனங்கள் இன்னமும் மூச்சுவிடவில்லை. படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் மாணவர்களிடம் பேசினால் பதறுகிறார்கள்.
ஒரு காலத்தில் சிடிஎஸ் நிறுவனத்தை சொர்க்கம் என்பார்கள். வேலையிலிருந்து வெளியேற்றுவது வெகு அரிது. நாற்பது வயசுக்கு மேல அதுல சேர்ந்துட்டா ரிட்டையர்மெண்ட் வரைக்கும் காலத்தை ஓட்டீவிடலாம்’ என்று ஒரு சக நண்பர் சொன்னது நினைவில் இருக்கிறது. இன்றைக்கு அந்த நிறுவனமே கதகளி ஆடிக் கொண்டிருக்கிறது. மேல்மட்ட ஆட்கள் பலர் வேலையை விட்டு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். சிடிஎஸ்ஸே அப்படியெனில் அந்தக் காலத்திலேயே சர்வசாதாரணமாக வெட்டிக் கொண்டிருந்த நிறுவனங்களைப் பற்றியெல்லாம் கேட்கவே வேண்டியதில்லை. ரத்த வேட்டைதான்.
பன்னாட்டு கார்போரேட் நிறுவனங்களுக்கு இலாபம் மட்டுமே முதற்குறிக்கோள். இலாபம் குறையும் போது செலவினங்களைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். முதல் செலவினமாக ஊழியர்களின் சம்பளம் அவர்களின் கண்ணில்படுவது துரதிர்ஷ்டம்தான். ஓலா, ஊபர் மாதிரியான நிறுவனங்கள் வரைக்கும் யாருமே விதிவிலக்கில்லை. கடந்தாண்டுகளில் மாதம் 32000 ரூபாய் வரைக்கும் வருமானம் பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுநர்களுக்கு இந்தாண்டு மாதம் சராசரியாக 21000 ரூபாய் கூட வருவதில்லை என்ற புள்ளிவிவரம் கண்ணில்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இலாபம் மீதான வெறி நிறுவனங்களுக்கு அதிகமாகிறது. நிறைய பிடித்தம் செய்யத் தொடங்கியிருக்கின்றன. ஓலா, ஊபரில் போகும் போது ஓட்டுநர்களிடம் கேட்டுப் பார்க்கவும்.
ஐடி துறையில் மட்டுமில்லை- பொதுவாகவே பல துறைகளிலும் இதுதான் சூழல். ஊழியர்களால் உடனடியாக வேலை மாற முடியாத சூழலை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. சம்பள உயர்வை நிறுத்தி வைக்கின்றன. பணி உயர்வை தாமதப்படுத்துகின்றன. புதியவர்களை வேலைக்கு எடுக்காமல் முன்பு ஐந்து பேர்கள் சேர்ந்து செய்த பணியை இப்பொழுது மூன்று பேர்களை வைத்துச் சமாளிக்கச் சொல்லி அழுத்துகிறார்கள். ஏதேனும் சுணக்கம் காட்டுகிறவர்களை ‘பெர்பார்மன்ஸ் சரியில்லை’ என்று முத்திரை குத்துகிறார்கள். உற்பத்தித் துறை, வங்கி, விளம்பரம் என எந்தத் துறையில் இருப்பவர்களிடமும் இயல்பாகப் பேசிப் பார்க்கலாம். ‘வேலை எப்படிப் போகுது?’ என்று கேட்டால் பதில் சொல்வார்கள்.
சர்வதேச அளவில் மந்தநிலை காணப்படுகிறது என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதுவும் முக்கியமான காரணம் என்றாலும் இந்திய வணிகச் சூழல், அரசாங்கங்களின் கண்காணிப்பு இல்லாமை எனத் தொடங்கி இதுவரையிலும் பல நிறுவனங்கள் தமது ஊழியர்களை வெறும் சுரண்டலுக்கு மட்டுமே பயன்படுத்தின என்பது வரைக்கும் நிறையக் காரணங்களை அடுக்க முடியும். ஒருவன் வெப்சைட் வடிவமைப்பாளராகப் பணியில் சேர்ந்தால் அவன் ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் அதில் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அவன் வேறு தொழில்நுட்பங்களைப் பற்றி யோசிக்கக் கூட வாய்ப்பளிக்காத பணிச்சூழல்தான் இங்கே நிலவுகிறது. அவன் வேலை செய்து கொண்டிருக்கு மென்பொருளானது சந்தையில் தமது இடத்தை இழக்கும் போது அதில் பணியாற்றிய ஊழியனும் வேலையை இழக்கிறான். இதுவொரு கொடுமை.
தம்மை புதிய நுட்பங்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதும், சந்தையில் நிலவும் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் வழியாக இன்னமும் சில ஆண்டுகளுக்கு பணியில் இருக்க முடியும். ஊளைச்சதையாக தொங்குகிறவர்களை- நிறுவனங்கள் அப்படித்தான் குறிப்பிடுகின்றன- பெருத்த இலாபம் தராத தொழில்நுட்பங்களை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு- தமக்கு ஊளைச் சதையாக இருப்பவர்களை வெட்டி வீசுவதற்கு எந்த நிறுவனமும் தயங்கப் போவதில்லை. கடந்த வாரத்தில் வேலைச் சந்தை நிபுணர் ஒருவரிடம் பேசிய போது ‘திஸ் சிச்சுவேஷன் வில் கண்டினியூ’ என்றார். அவர் கணிப்புப்படி அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்காகவாவது வருடம் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பேர் வேலையிழப்பார்கள் என்றார்.
பயப்படவும் பதறவும் எதுவுமில்லை. வேட்டைக்காடு இது. அப்படித்தான் இருக்கும். எல்லாவற்றுக்கும் நம்மைத் தயார் செய்து கொள்வது நம் கைகளில்தான் இருக்கிறது.
3 எதிர் சப்தங்கள்:
ஊளைச் சதையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்ய நேரம் செலவிடும் நம்மால் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைக்கு செல்ல முடியவில்லை. வேலை சந்தையை விவசாயத்தை நோக்கி,விவசாயம் சார்ந்த துறைகளை நோக்கி திருப்பாத வரை பிரச்னைகள் தீராது.
"உழைப்பு" நிறைய பிரச்னைகளை உருவாகாமல் தடுக்கும்.
வருத்தமான செய்தி. நம்மூர் டாக்டர்கள் ஒரு சிலர்ங்க வந்து டாக்சி ஓட்டுகிறார்கள்.
We have to do all kind of work if we lose our job. We always saying I do not know any other work other than what we are doing now. We can earn some/more money until we get a expected job. Actually, we never know until we will try. What we have to learn that no jobs are good or bad.
Post a Comment