பாலா மார்ஸ் அழைத்து ‘நீட் தேர்வுக்கு ஏதாவது செய்கிற திட்டமிருக்கிறதா?’ என்றார். முன்பே கூட சிலர் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்கள். தயக்கமாகத்தான் இருந்தது. ஒரு பாடத்துக்கு இருபத்தைந்தாயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை பயிற்சியாளர்களுக்குக் கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள். பயிற்சியாளர்கள் வீட்டிற்கே வந்து பாடம் சொல்லித் தருவார்கள். பயிற்சியாளர்களை நியமித்தல், பயிற்சி வகுப்புகளில் சேர்த்தல் என நீட் தேர்வு பயிற்சிக்காக பல லட்சங்கள் வரைக்கும் தம்முடைய மகன் அல்லது மகளுக்காகச் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். குழிக்கு ஏற்ற பணியாரம் என்கிற கதையாக நாம் கொடுக்கிற தொகைக்கு ஏற்ப விதவிதமான கவர்ச்சிகளுடன் பாடம் நடத்துகிற பயிற்சி மையங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஈசல் பூச்சியென பெருகியிருக்கும் இந்த கூட்டத்துக்குள் நாம் என்ன செய்ய முடியும் என்ற யோசனையில்லாமல் இல்லை.
கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள், மாணவர்கள், பாலா மார்ஸ் மாதிரியான ஆர்வலர்கள் என்று பல தரப்பினரிடமும் பேசியதிலிருந்து யோசனை இப்பொழுது ஒரு வடிவத்துக்கு வந்திருக்கிறது. பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பத்து முதல் பதினைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அத்தனை பேரும் அரசுப் பள்ளி மாணவர்களாக இருப்பார்கள். தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின மாணவர்கள் என்றால் முன்னுரிமையளிக்கலாம். மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள், தலைமையாசிரியரின் பரிந்துரை, குடும்பச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏன் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் என்று கேட்டால் அரசுப்பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களில் பயிற்சி வகுப்புக்கான கட்டணம் கூட செலுத்த முடியாதவர்கள் அவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இன்னொரு காரணம்- நம்முடைய இலக்கும் சிறியதாக இருக்கும். சுமாரான மதிப்பெண்களை வாங்கச் செய்தால் கூடப் போதும். கல்லூரியில் இடம் வாங்குவது எளிது.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அக்டோபர் மாதத்திலேயே ஒரு நாள் பயிலரங்கை நடத்தி நீட் தேர்வு குறித்தான முழுமையான புரிதலை அளிக்க வேண்டும். அதே நாளிலேயே நீட் பயிற்சிக்கான புத்தகங்களையும் அவர்களுக்கு வழங்கி அந்தந்த பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கண்காணிக்கச் சொல்லலாம். கண்காணிக்கும் ஆசிரியர்களும் நம் மாணவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். மார்ச் மாதம் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைகின்றன. அநேகமாக மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெறும். இடைப்பட்ட நாற்பது நாட்களும் மாணவர்களை ஓரிடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு கொடுத்து பயிற்சி ஆசிரியர்களை நியமித்து- அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும்- பயிற்சியளித்து தேர்வுக்கு அனுப்பலாம்.
செய்ய இயலாத காரியமில்லை. சிலவற்றில் கவனத்தைச் செலுத்த வேண்டும். உதாரணமாக மாணவர்கள் கணிதத்தை தவிர்த்து விட்டு மருத்துவப் படிப்பிலும் சேர முடியாமல் போனால் அவர்களை நட்டாற்றில் விட்டது போல ஆகிவிடும். அதனால் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு இறுதி வரைக்கும் அவர்கள் நான்கு பாடத்திலுமே கவனம் செலுத்துவதுதான் சரி. ஓரிடத்தில் தங்க வைத்துப் படிக்க வைப்பதென்றால் விடுதி வசதியுடன் கூடிய பள்ளிக்கூடமாக இருந்தால் சரியாக இருக்கும். நாற்பது நாட்களும் மாணவர்களை கவனித்துக் கொள்வதற்காக தன்னார்வலர்களோ அல்லது விடுதிக் காப்பாளரோ தேவையாக இருக்கும். அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கான கால அட்டவணையைத் தயார் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு இடையிடையே உளவியல் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்குவதற்கான சரியான நிபுணர்களைப் பிடிக்க வேண்டும். நாற்பது நாட்களுக்கு மாணவர்கள் வெளியூரில் தங்குவதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும். உள்ளூர் ஆசிரியர்கள் நம்மைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி நிறைய இருக்கின்றன. சற்றே மெனக்கெட வேண்டியிருக்கும். செய்து பார்த்துவிடலாம்.
வார இறுதியில் ஐந்தாறு பள்ளிகளின் தலையமையாசிரியர்களைச் சந்திக்கும் திட்டமிருக்கிறது. இன்னமும் சில நாட்களில் கூடுதலான தெளிவு கிடைக்கும்.
அக்டோபர் மாதத்தில் நடைபெறும் ஒரு நாள் பயிலரங்கில் கலந்து கொள்வதற்கும், நாற்பது நாட்கள் தங்கிப் படிப்பதற்கும் தயாராக இருக்கும் மாணவர்கள்- நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களாக இருப்பின் தெரியப்படுத்துங்கள். ஏனோதானோ என்றிருக்கும் மாணவர்களை விட்டுவிடலாம். அவர்களையும் நசுக்கி நாமும் நம்முடைய உழைப்பை வீணடித்துக் கொள்ள வேண்டியதில்லை. அதிகபட்சம் பதினைந்து மாணவர்களைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள், தாழ்த்தப்பட்ட/பழங்குடியின மாணவர்களுக்குத்தான் முன்னுரிமையளிக்கலாம். மார்ச் மாதம் வரைக்கும் மாணவரை ஆத்மார்த்தமாகக் கவனித்துக் கொள்ளும் ஆசிரியர் ஒருவரும் அந்தந்தப் பள்ளியில் இருப்பது அவசியம்.
எவ்வளவு மாணவர்களை மருத்துவர்களாக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இறங்கிப் பார்த்துவிடலாம். இதுவொரு சீரிய சோதனை முயற்சியாக இருக்கும். இந்த முயற்சியில் கற்றுக் கொள்ளும் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த வருடங்களில் திட்டத்தை மாற்றியமைக்கலாம்.
எவ்வளவு மாணவர்களை மருத்துவர்களாக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இறங்கிப் பார்த்துவிடலாம். இதுவொரு சீரிய சோதனை முயற்சியாக இருக்கும். இந்த முயற்சியில் கற்றுக் கொள்ளும் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த வருடங்களில் திட்டத்தை மாற்றியமைக்கலாம்.
4 எதிர் சப்தங்கள்:
// செய்து பார்த்துவிடலாம்.//
அச்சார வாழ்த்துக்கள்.
//எவ்வளவு மாணவர்களை மருத்துவர்களாக்க முடியும் என்று தெரியவில்லை//
முதல் அமர்வின் மூலம் ஒருவர் மருத்துவரானால் கூட மிகப் பெரிய வெற்றிதான்.
மேலும் அதன் பின்னாலான போட்டி தேர்வுகளை மாணவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
செய்ய இயலாத காரியமில்லை. சற்றே மெனக்கெட வேண்டியிருக்கும்.
I AM WILLING TO DO MY BIT.
I HAVE A FEW IDEAS WHICH I THINK ARE WORKABLE.
AFTER MY B.SC.(PHYSICS) WHEN I JOINED "CA" SUPPOSED TO BE A VERY TOUGH COURSE MY TEACHER IN ACCOUNTS TOLD ME
" COVER; COVER TO COVER; THEN NO FEAR"
WHAT HE MEANT WAS TO STUDY ALL CHAPTERS IN ANY BOOK WITHOUT OMITTING A SINGLE LINE. IT MAY SOUND HERCULEAN/IMPOSSIBLE TO BEGIN WITH .NOT AT ALL THAT DIFFICULT IF ONE STUDIES DAILY EVEN FOR 2/3 HRS.
I PASSED MY CA INTER/FINAL IN FIRST ATTEMPT WITH AN ALL INDIA RANK IN CA FINAL.
INCIDENTALLY I STUDIED IN TAMIL MEDIM TILL MY SCHOOL FINAL.
I THINK MY SERVICES WILL BE OF SOME USE TO STUDENTS PARTICULARLY TO TAMIL MEDIUM STUDENTS.
PLEASE TAKE MY HELP.
MY MAIL ID IS nagooo2002@yahoo.co.uk
ANBUDAN,
M.NAGESWARAN.
Fantastic. Wish you a success on your endeavor.
//I THINK MY SERVICES WILL BE OF SOME USE TO STUDENTS PARTICULARLY TO TAMIL MEDIUM STUDENTS.
PLEASE TAKE MY HELP.//
தமிழில் படித்தவர்கள், படிப்பவர்கள் சார்பாக நன்றி நாகேஸ்வரன் சார்.
Post a Comment