Aug 21, 2017

கேள்விகளும் பதில்களும்

நீங்கள் உங்கள் எழுத்தில் சாருவை வேண்டும் என்றே தவிர்த்து விட்டு விலகி போய் விட்டீர்களா? இல்லை அவரை நீங்கள் ஒரு இலக்கியவதியாக ஏற்று கொள்ளவில்லையா? கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு எழுத்தாளனை தவிர்ப்பது நியாயமா? சமீபத்தில் எழுதிய கட்டுரையில் எஸ்ரா , ஜெமோவை பாராட்டி எழுதியுள்ளீர்கள். அவர்களோடு சம தளத்தில் நிற்கும் சாரு பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. குறைந்தபட்சம் விமர்சனம் கூட இல்லை. சாரு பற்றிய உங்கள் கருத்து என்ன. அவரை இலக்கிய உலகத்தில் எங்கே வைத்துளிர்கள் உங்கள் பார்வையில்.

ஒருவரைப் பாராட்டும் போது ‘இவரைப் போய் பாராட்டலாமா?’ என்று கேட்டால் அர்த்தம் இருக்கிறது. ஒருவரைப் பற்றிப் பேசவில்லையென்றால் ‘ஏன் பேசவில்லை’ என்று கேட்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

முன்பொருமுறை வெண்முரசை தங்கள் மேலாளர் ஒருவர் தினமும் வாசிப்பதாகவும் அவருடன் விவாதிப்பதற்காக நீங்களும் தம்கட்டி உடனுக்குடன் வாசிக்க வேண்டியிருப்பதாக எழுதியிருந்தீர்கள். வெண்முரசை இப்போதும் தொடர்கிறீர்களா?

இல்லை. எழுதுவதில் வேகம் குறையும் போதும் சலிக்கும் போதும் ஜெமோவை வாசிக்கிறேன். எனக்கு அவர் உந்துசக்தி.

நீங்கள் செய்யும் பல சேவைகள் அரசாங்கம் செய்ய தவறுபவை. நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?

வரலாம்தான். வந்து புத்தி கெட்டுப் போய்விட்டால் என்ன செய்வது? 

What is the future of nisaptham trust? Like when you become old and cannot put the same efforts as you do now?

எனக்கு முப்பத்தைந்து வயதுதானே ஆகிறது?

வருங்காலத்தில் பள்ளி தொடக்கி இப்பொழுது பயனடைந்துள்ள மாணவர்கள் போன்ற மாணவர்களை சேர்த்து புதிய பாட்டத்திட்டத்தை வைத்து சிறந்தவர்களாக உருவாக்க எண்ணம் உண்டா? 

இன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகளில் கவனத்தை வைப்பதுதான் நல்லது. காலமும் நேரமும் உருவாக்கும் தேவைகளைப் பொறுத்து களத்தை மாற்றிக்க் கொள்ளலாம்.

தங்களுக்கு மன அழுத்தம் தரும் விஷயம், செயல் எது? அப்பொழுது எப்படி சமாளித்துக் கொள்கீறீர்கள்?

அம்மாவையும் மனைவியையும் கோபப்படச் செய்வது. உறக்கம் தவிர வேறு மருந்து இல்லை.

எந்த புத்தகத்தை அதிக முறை வாசிச்சிருக்கீங்க? எத்தனை முறை? ஏன் பிடிச்சிருக்கு?

சத்திய சோதனை - இரண்டு முறை வாசித்திருக்கிறேன். ஒருவன் இவ்வளவு அப்பட்டமாக இருக்க முடியுமா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புவதால் பிடித்திருக்கிறது.

தியானத்தில் விருப்பம் உண்டா? அதெல்லாம் நிஜம் அல்லது பொய்யின்னு அனுபவம் உண்டா? இதில் உங்களுக்கு என்ன கருத்து. அம்புட்டு பேரும் அயோக்கணுங்கனா ஒருத்தனும் இல்லையா? நீ உன்ன நம்புன்னு சொல்றது சராசரிக்கும் குறைவான பதில். கார்ப்பரேட் முனில ஒருத்தர சொல்ல முடியுமா?

இன்றைக்கு உயிருடன் இருக்கும் ஒருவர் மீதும் நம்பிக்கை இல்லை.

இது வரை என் மனைவி, மக்கள், அம்மா, அப்பாவுக்கு கூட இந்த விஷயம் தெரியாது. உங்களிடம் தான் முதல் முறையாக கூறுகிறேன். இந்த மாதிரி ஒரு விஷயம் சொல்லுங்களேன்.

நிறைய இருக்கிறது. எதைச் சொல்வது என்றுதான் யோசிக்கிறேன்.

உங்கள் அப்பாவைப் பற்றி நீங்கள் எழுதிய அளவுக்கு, உங்கள் அம்மாவைப் பற்றி நீங்கள் அதிகம் எழுதியதாகத் தெரியவில்லை..

ஓர் உறவை இழக்கும் போது அல்லது இழந்துவிடுவோம் என்று நினைக்கும் போதுதான் அதன் அருமை தெரிகிறது.

Sarahah வில் கேட்கப்பட்ட கேள்விகள்.

1 எதிர் சப்தங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சட்டென்று பார்க்கும்போது கேள்வி, பதில் போலவும் பதில் கேள்விபோலவும் இருக்கிறது.