சமீபமாக எரிச்சலூட்டும்படியான ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். ‘இந்தச் சாதிக்காரருக்கு உதவுங்கள்’ என்றும் ‘சாதிச் சொந்தத்துக்கு வணக்கம்’ என்றும் வருகிற கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. சில நண்பர்களிடம் இதை பகிர்ந்ததும் உண்டு. உண்மையிலேயே சாதிய, மத அடையாளங்களைக் காட்டி உதவி கோரும்போது சங்கடமாக இருக்கிறது.
நேற்று அதிகாலையில் கூட ஒருவர் அப்படி அனுப்பியிருந்தார். எழுந்தவுடன் அதுதான் கண்ணில்பட்டது. உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கும் போது ‘இந்தச் சாதிக்காரன்..அதனால் உதவுங்கள்’ என்று கேட்பது சரி என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டேவிட்டேன். முன்பு இப்படியான கோரிக்கைகள் வந்தால் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவதுதான் வழக்கம். ‘அப்படிக் கேட்டது தவறுதான். வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு அனுப்பியதையே உங்களுக்கும் அனுப்பிவிட்டோம். உதவுங்கள்’ என்று பதில் அனுப்பியிருந்தார். பரிசீலிக்கவே இல்லை. முடியாது என்று பதில் அனுப்பினேன்.
பணம் கொடுக்கிறவர்களில் யாரும் சாதி பார்த்துக் கொடுப்பதில்லை. ஆனால் கோரிக்கை வைக்கிறவர்கள்தான் சாதியை ஒரு சலுகையாகப் பயன்படுத்துகிறார்கள்.
விதவிதமான நன்கொடையாளர்கள் குறித்து எத்தனையோ முறை எழுதியாகிவிட்டது- பத்து நாட்களுக்கு முன்பாக ஒருவர் அழைத்திருந்தார். வேலை இல்லாத இளைஞர்களுக்கு Skilled Training என்று அரசாங்கமே அளிக்கிறது. பல நாட்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி. அதில் கலந்து கொள்கிறவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகையாகவும் வழங்கப்படுகிறது. சேலத்தில் தாம் கலந்து கொண்டதாகவும் தமக்கு அப்படிக் கிடைத்த பணத்தை அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்க தொடர்பு கொண்டிருந்தார். ‘எதுக்குங்க அனுப்புறீங்க?’ என்று கேட்டால் ‘ட்ரெயினிங் உருப்படியாவே இல்லை..அந்தப் பணத்தை வாங்க மனசாட்சி ஒத்துக்கல’ என்றார். சாதாரணமாக நம்பவே முடியாது. ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். வேலை இல்லாத ஒருவர் கிடைக்கும் சொற்பப்பணத்தைக் கூட அனுப்பி வைக்கும் போது அவர் என்ன சாதி பார்த்தா பணம் அனுப்பி வைக்கிறார்?
அந்தப் பணத்தை வாங்கி சாதியின் அடிப்படையில் இன்னொருவருக்கு நீட்டினால் எங்கே போய் பாவத்தை நீக்குவது?
படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் என்று நாம் நம்புகிற மனிதர்கள் பலரும் சாதியை இறுகப்பற்றியிருக்கிறார்கள். சாதி மட்டுமில்லை- ஏதேனும் ஒரு அடையாளம்.
இதை எழுத வேண்டியதில்லை என்று பல தருணங்களிலும் நினைத்ததுண்டு. ஏதோ தம்மை புனிதனாகக் காட்டிக் கொள்வது போன்ற தொனி உருவாகக் கூடும். அப்படியில்லை. ஆனால் எங்கேயிருந்து சாதியை, மதத்தை, ஊரை அடையாளமாக்குகிறார்கள் என்று புரிவதேயில்லை. நாசூக்காக சாதியைக் கேட்கிறவர்களை எதிர்கொண்டபடியே இருக்க வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் எந்தப் பிரச்சினையுமில்லை. நேர்பேச்சில் சம்பளம் உட்பட எதைக் கேட்டாலும் சொல்லிவிடுகிறேன். ஆனால் ‘ஒருதலைப்பட்சமாக செயல்பட்டிருக்கிறோமா’ என்கிற சந்தேகம் எழுவதையும் தவிர்க்கவே முடிவதில்லை.
எந்தவொரு அடையாளத்தையோ அல்லது பிராந்தியத்தையோ அடிப்படையாக வைத்து செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அப்படிச் செயல்படுவது அடிப்படையிலேயே அறமற்ற சுயநலச் செயல்பாடாக அமைந்துவிடும்.
சார்பற்றவனாக அடையாளம் எதுவுமில்லாத பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பவனாகவே செயல்பட விரும்புகிறேன். அதற்காகவே அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மனிதாபிமானத்தையும் தகுதியையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அவை நிச்சயமாக சாதி அல்லது ஊர் சார்ந்த விதிவிலக்குகள் இல்லை. இனி வரும் காலங்களில் யாரேனும் சாதியை முன்வைத்துப் பேசத் தொடங்கினால் அவற்றைப் பொதுவெளியில் எழுதி எனது அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வேன்.
நன்றி.
3 எதிர் சப்தங்கள்:
சரி. சரி.. சரி...
யாரங்கே.
அம்மணியை (அச்சச்சோ)
எம் மணியை வருத்திய சாதி எனும் பிக்பாஸை (அச்சச்சோ, அச்சச்சோ) பிசாசை ஒழித்து விட்டு வாருங்கள்.😊
னல்லபெயர் வரவர அதர்க்கு ஸமமாக இப்படிப்பட்ட சவால்களும் வண்தே தீரும். ணிச்சயம் இதை வெற்றிகரமாக கைய்யாளுவீர்கள்.
இ தி ல் உ று தி யோ டு இ ரு ங் க ள்
Post a Comment