விவேகானந்தா கல்லூரியின் மின்னியல் துறையில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் இருக்கிறது. பல நூறு ஏக்கர் பரப்பளவு இருக்கும். பொறியியல், கலை அறிவியல் என வகைவகையான கல்லூரிகளை ஒரே வளாகத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். முழுமையான பெண்கள் கல்லூரி. எந்தப் பாடப்பிரிவிலும் ஆண்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. கல்லூரியை அட்டகாசமாக பராமரிக்கிறார்கள்.
தேதியெல்லாம் முடிவான பிறகு ஒரு வாரத்திற்கு முன்பாக அழைத்து ‘டெக்னிக்கலா பேசறீங்களா?’ என்று கேட்டார்கள். அது சரிப்பட்டு வராது. கலவையாக பேசுவதாகச் சொல்லியிருந்தேன். பதாகை ஒன்றைக் கட்டியிருந்தார்கள். ‘ஃபோட்டோ அனுப்புச்சு வைங்க’ என்று மறக்காமல் சொல்லிவிட்டேன். வீட்டில் இருப்பவர்கள் நம்ப வேண்டாமா?
கிராமப்புறத்து மாணவிகள்தான் எண்பது சதவீதம்.
பொதுவாக ஒரு வீட்டில் மகனும் மகளும் இருந்தால் மகனுக்குத்தான் எல்லாவிதமான சுதந்திரமும் இருக்கும். அவன் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். சட்டைப் பொத்தான்கள் கழண்டிருக்கலாம். தலைமுடியை விருப்பத்திற்கேற்ப வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். யாரேனும் விருந்தினர்கள் வந்தால் அவன் ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியதில்லை. காபியும் தேநீரும் கொடுக்க வேண்டியதில்லை.பெண்களுக்கு அப்படியில்லை. நாற்காலியில் இப்படித்தான் அமர வேண்டும் என்பதில் ஆரம்பித்து தலை முடி கலைந்திருக்கக் கூடாது. பகலில் உறங்கக் கூடாது. ஆடை துளி விலகியிருக்கக் கூடாது. ஆயிரத்தெட்டு விதிமுறைகள். அதுவும் கிராமப்புறம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.
இதில் ஒரு நுட்பமான அரசியல் இருக்கிறது- சராசரியான ஒரு பெண் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டால் ‘இவளால முடி கூட வளர்க்க முடியாதா?...திமிரு’ என்பார்கள். அதுவே ஒரு ஐபிஎஸ் பெண்மணி முடியைக் கத்தரித்தால் ‘அந்தப் பொண்ணு செம bold' என்பார்கள். எப்படி இந்த வித்தியாசம் வருகிறது? ஒரு பெண் எங்கே தன்னுடைய அறிவை ஆயுதமாக்குகிறாளோ, தனது திறமையை வெளிக்காட்டி வெற்றியடைகிறாளோ அப்பொழுது அவளிடம் உலகம் அடங்குவதற்குத் தயங்குவதில்லை. அதுவே அவள் சராசரிப் பெண்ணாக இருக்கும் வரைக்கும் அவளை அடக்கி வைக்கவே இந்தச் சமூகம் முனைகிறது.
பெண்ணியம் எல்லாம் இல்லை- இதுதானே நிதர்சனம்?
அரங்கில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சார்ந்த முந்நூறு மாணவிகள் இருந்தார்கள்.
தொழில்நுட்பத்தைப் பேசுவதைவிடவும் ‘இந்த உலகம் வேட்டைக்காடு’ என்பதை அழுத்தம் திருத்தமாகப் பேசுவதிலேயேதான் கவனம் இருந்தது. விலங்குகள் தமக்குத் தேவையான அளவுக்கு மட்டும்தான் வேட்டையாடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் எல்லாவற்றையும் கபளீகரம் செய்கிறான். சக மனிதனையே வேட்டையாடுகிறான். இந்த வேட்டைக்காட்டில்தான் நாம் பிழைத்தாக வேண்டியிருக்கிறது. தன்னை தக்க வைத்துக் கொள்வதில் ஓர் ஆணுக்கு இருக்கும் சவால்களைவிடவும் பெண்ணுக்கான சவால்கள் அதிகம். அவள் தனது சிறகை விரித்துவிடக் கூடாது என்பதில் வீடும் சமூகமும் தெளிவாக இருக்கிறது. ‘படிச்சோமா கல்யாணம் செஞ்சோமா என்றிருக்க வேண்டும்’ என்பதுதான் தாரக மந்திரம். இன்றைக்கும் கூட அதிகபட்ச சுதந்திரம் என்பது வேலைக்குச் செல்லலாம். சுதந்திரம் என்றால் குடிப்பதும் புகைப்பதும் இல்லை. எடுக்கப்படும் முடிவுகளில் பெண்களின் பங்களிப்பின் சதவீதம் எவ்வளவு? பெரும்பாலான வீடுகளில் ஆண்கள்தானே முடிவெடுக்கும் அதிகார மையங்களாக இருக்கிறார்கள்? அவன் சொல்வதுதானே நடக்கிறது?
காலங்காலமாக இப்படித்தான் சமூகம் இயங்குகிறது. சராசரிப் பெண்ணாக இருந்தால் இதை உடைப்பதெல்லாம் சாத்தியமில்லை. ‘புருஷன் சொல்லுறதைக் கேளு’ என்றுதான் அம்மாவே கூடச் சொல்வார். அதுதான் சரி என்று தம் மனமும் நினைக்கும். பெண் தமக்கான வெளியை உணர வேண்டுமானால், அதனை அடுத்தவர்களும் அனுமதிக்க வேண்டுமானால் தம்மை, தமது அறிவை, திறமையை சகலவிதத்திலும் நிரூபிக்கிற பெண்ணாக இருக்க வேண்டும். படித்து முடித்துவிட்டு சராசரியாக வெளியேறப் போகிறோமா அல்லது தனித்த பெண்ணாக வெளியேறப் போகிறோமா என்பதை முடிவு செய்து கொள்வதற்கும், இலக்கை நிர்ணயிப்பதற்கும், அதை அடைவதற்குமான எல்லாவிதமான வாய்ப்புகளும் அவகாசமும் கிடைக்கிற தருணம் என்பது கல்லூரிக்காலம்.
Know the Things என்பதற்கும் Learn the Things என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மாணவர்களைச் சந்திக்கும் போது நான் வலியுறுத்துவதெல்லாம் Know the Things தான். எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், விஞ்ஞானம் என சகலத்தைப் பற்றியும் ஐந்து நிமிடங்களுக்காவது பேசுகிற திறன் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் எங்கேயாவது இணைத்துப் பேச முடிகிற வல்லமையும் அவசியமாகிறது.
ஜான் நாஷ்ஷின் கணிதவியல் கோட்பாடுகள் பொருளாதாரத்தில் பயன்படுகின்றன. ஸ்டீபன் ஹாக்கிங்கின் அண்டவெளி குறித்தான கோட்பாடுகளை தத்துவவியலில் பேச முடிகிறது. சகலத்தையும் நுனியளவுக்குகேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேதியியலும் இயற்பியலும் மின்னியல் பொறியாளனுக்கு அவசியம். மின்னியல் பற்றித் தெரியாமல் ஒரு எந்திரவியல் பொறியாளன் இருக்க முடியாது. எந்திரவியலைத் தெரியாதவன் விமானத்தை வடிவமைக்க முடியாது.
பொறியாளன், வல்லுநர் என்பதையெல்லாம் விடுங்கள்.
மிகச் சாதாரணமாக ஈ.பி.எஸ் பற்றியோ ஓ.பி.எஸ் பற்றியோ பெண் பேசினால் கூட ‘இவ பெரிய இவ’ என்றுதானே சொல்கிறார்கள்? வெளியில் இருப்பவர்கள் வேண்டியதில்லை- உடன்பிறந்த அண்ணன் தம்பிகளிலேயே இப்படிச் சொல்கிறவர்கள்தான் அதிகம். அந்த எண்ணத்தை எப்படித் தகர்க்கப் போகிறீர்கள்? தெரிந்து கொள்ளுங்கள். சகலத்தையும் அறிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் பற்றி இவளுக்குத் தெரியும். எதைப் பற்றியும் இவளால் பேச முடியும் என்கிற எண்ணத்தை சக மனிதர்களிடம் உருவாக்குங்கள். வீட்டில் இருப்பவர்களிடம், வெளியில் இருப்பவர்களிடம் என எல்லோரிடமும் பிம்பம் மாற வேண்டும். அதுதான் பெண் தமக்கான வெளியை, சுதந்திரத்தை அடைவதற்கான வழி.
இதையெல்லாம் விரித்து சற்றேறக்குறைய இரண்டரை மணி நேரங்கள் பேசினேன். முடிக்கும் போது ஆத்மார்த்தமாகக் கரவொலி எழுப்பினார்கள். நிறையக் கேள்விகளைக் கேட்டார்கள். ‘விஜய் மல்லய்யாவை ஏன் கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்’ என்பது வரை. மனநிறைவோடு ஊர் திரும்பிய பாதையெங்கும் மழை நனைத்திருந்தது.
இதையெல்லாம் விரித்து சற்றேறக்குறைய இரண்டரை மணி நேரங்கள் பேசினேன். முடிக்கும் போது ஆத்மார்த்தமாகக் கரவொலி எழுப்பினார்கள். நிறையக் கேள்விகளைக் கேட்டார்கள். ‘விஜய் மல்லய்யாவை ஏன் கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்’ என்பது வரை. மனநிறைவோடு ஊர் திரும்பிய பாதையெங்கும் மழை நனைத்திருந்தது.
14 எதிர் சப்தங்கள்:
//இரண்டரை மணி நேரங்கள் பேசினேன்//
காணொளி இருந்தால் இணைக்கவும்.
//ஆயிரத்தெட்டு விதிமுறைகள்//
சிக்னல்கள், சிசிடிவி கேமராக்களின் அவசியம் அதிகரித்துக் கொண்டு தானே இருக்கிறது.
Thank you for your inspirational speech sir...
தல வேட்டி கட்டவில்லயா
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
You have missed to mention that Vivekananda Educational Institutions is the
largest institution (solely for ladies) in Asia, having the largest no. of
students in a single campus.
Nkl Venkatachalam
திரு.வெங்கடாசலம்,
நன்றி. இந்தத் தகவல் எனக்கு இப்பொழுதுதான் தெரியும். யாராவது சொல்லியிருந்தால் குறிப்பிட்டிருப்பேன்.
சரவணகுமார்,
வா.மணிகண்டன்னா வேட்டி. K.V.Manikandanன்னா பேண்ட் சட்டை!
Yes, Vivekananda college is largest education institution for ladies, but at the same time this worst thing also happened in that great institution.
http://www.aathithamizharperavai.com/pdfs/Gayathri%20-LETTER%20FROM%20VIVEKANANDA%20COLLEGE%20STUDENT.pdf
http://www.thehindu.com/todays-paper/tp-national/deceased-girls-father-withdraws-complaint/article4020917.ece
https://masessaynotosexism.wordpress.com/2012/09/10/student-raped-by-4-college-staffs-seeking-justice/
விஜை மல்லையாவை ஏன் கைது செய்யலைனு விளக்கம் குடுங்கள். அப்பதான் இங்க அரசியல் பேசி ஆபத்துல மாட்டுவிங்க
மீசை வெச்சிருந்தா சந்திரன் மீசை இல்லாட்டி இந்திரன்...ஹிஹிஹி..
K for கரட்டடிபாளையம் இல்ல.
இனியது (இனி அது) காட்டடிபாளையம் ஆக்கும்)
அருமையான பதிவு..
இதைத்தான் என் மகள்களுக்கு சொல்லி வளர்த்து வருகிறேன்
Post a Comment