Aug 23, 2017

சதுரங்க வேட்டை-2

சதுரங்க வேட்டை 2 படத்தில் இயக்குநர் நிர்மல்குமாருக்கு சில உதவிகளைச் செய்திருக்கிறேன். கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும் சதுரங்கவேட்டை-1 இயக்குநர் வினோத்திடமிருந்து தயாரிப்பாளர் மனோபாலா வாங்கியிருக்கிறார். இயக்கம் நிர்மல்குமார். படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. அநேகமாக செப்டெம்பரில் வெளியாகும் போலிருக்கிறது.

நிர்மல்குமாரை கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாகத் தெரியும். அலைபேசியில் அழைத்து ஒரு கதையைச் சொல்லி அது குறித்து விவாதிப்பதற்காகச் ‘சென்னை வர முடியுமா?’ என்றார். சென்னை போவது பெரிய விஷயமா என்ன? பையைத் தூக்கி தோளில் போட்டிருந்தேன் ‘சின்னப்பையனா இருக்கீங்க’என்றார். சிரித்து வைத்தேன். அன்றைய தினம்தான் விஜய் ஆண்டனியின் இந்தியா-பாகிஸ்தான் படம் வெளியாகிருந்தது. விஜய் ஆண்டனியின் முந்தைய படமான சலீம் படத்தின் இயக்குநர் நிர்மல்குமார் என்பதால் அவரிடம் டிக்கெட்டுகள் இருந்தன. படம் வெளியான தினத்தில் திரையரங்கில்தான் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டோம். 

படம் முடிந்த பிறகு ‘எப்படி இருக்கு?’ என்றார். படம் எனக்குப் பிடிக்கவேயில்லை. அன்றுதான் படம் வெளியாகியிருக்கிறது. நாயகனின் முந்தைய படத்தின் இயக்குநர் இவர்தான். உண்மையைச் சொல்வதா பொய்யைச் சொல்வதா என்று தெரியவில்லை. 

‘மொக்கை’ என்றேன். அவர் எதுவும் சொல்லவில்லை. தவறாக நினைத்துக் கொண்டார் போலிருக்கிறது எனத் தோன்றியது.

அன்று மதியம் நிர்மல்குமாரின் அடுத்த படத்துக்கான கதையைப் பற்றி விவாதித்தோம். திரைப்படங்களில் பணியாற்றுவதற்கு இயக்குநருடனான அலைவரிசை (Frequency) முக்கியம். நம்முடைய பலம், பலவீனங்களை இயக்குநர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ‘இவன்கிட்ட இந்த வேலையை வாங்கிவிட முடியும்’ என்ற தெளிவானவர்களிடம்தான் பணியாற்ற வேண்டும். நிர்மல்குமார் அதில் தெளிவு.

திரையுலகம் என்பது என் சம்பாத்தியத்திற்கான இடமில்லை. ஒன்றாம் தேதியானால் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகிவிடக் கூடாது. திரைப்படம் மட்டுமில்லை அலுவலகத்தைத் தாண்டிச் செய்கிற எந்த வேலையிலும் பணத்தை பொருட்டாக நினைப்பதில்லை. தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு எவ்வளவு ஊதியம் என்று தெரியும். அதை எதிர்பார்த்து ஓடினால் கண்களுக்கு முன்னால் எலும்பைக் கட்டிக் கொண்டு ஓடுவது போலத்தான். ‘நம்மால் இதையும் செய்ய முடியும்’ என்கிற திருப்தியும் கற்றுக்கொள்வதற்கான இடமும் சேர்கிற நட்பும் முக்கியம். அதற்காக உழைக்கலாம். கல்லூரிகளிலும் மேடைகளிலும் ‘நான் படத்துல வேலை செஞ்சேன்’ என்று சொன்னால் மாணவர்கள் நிமிர்ந்து அமர்வார்கள். அவ்வளவுதான். மற்றபடி ‘நமக்கு ஒத்துவராதுங்க’ என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. 

நிர்மல்குமார் நல்ல மனிதர். ப்ரோ, சார், பாஸ் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி அழைப்பார். ‘இதை செஞ்சு கொடுங்க’ என்று கேட்கும் போது நம்முடைய எண்ணங்களும் யோசனையும் வேறு மாதிரி இருக்கும். அப்படி வேலையைச் செய்து கொடுக்கும் போது ‘இதை இப்படி மாத்திக் கொடுங்க’ என்று தயக்கமில்லாமல் கேட்கிறவர். இயக்குநர் என்றில்லை நாம் பணியாற்றுகிற யாருமே நம்மிடம் அப்படிக் கேட்க வேண்டுமானால் நமக்கும் அவருக்குமான ஒத்திசைவு அவசியம். எதைச் செய்து கொடுத்தாலும் மூன்று முறையாவது நிர்மல் திருத்தி வாங்கிக் கொள்வார்.

பொதுவாகவே எந்த வேலையைச் செய்தாலும் அது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படியில்லையென்றால் தூக்கிப் போட்டுவிடலாம். இருப்பது அற்ப ஆயுள். பிடிக்காததையெல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. செய்கிற ஒவ்வொரு வேலையும் நம்மிடமிருந்து கடுமையான உழைப்பைக் கோரக் கூடியதாக இருக்க வேண்டும். பிழிந்து எடுக்கப்பட்ட பிறகும் நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கக் கூடிய வேலைதான் மனதுக்கு நெருக்கமானவை. அப்படியான பணிகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறேன்.

நிர்மல்குமாரிடம் சில கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றைப் படமாக்குவதற்கான முஸ்தீபுகளில் இருந்தார். அதற்கு முன்பாக மனோபாலாவின் இந்த வாய்ப்பு வந்ததும் சதுரங்கவேட்டை-2 ஐ இயக்கச் சென்றுவிட்டார். நிர்மல்குமார் கடுமையான உழைப்பாளி. நள்ளிரவு மூன்று மணி வரைக்கும் கூட விவாதித்திருக்கிறோம். மூன்று மணிக்கு நான் உறங்கி ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தால் அப்பொழுதும் எதையாவது எழுதிக் கொண்டிருப்பார். ‘இந்த மனுஷன் வேகத்துக்கு ஓட முடியாது’என்று நினைத்திருக்கிறேன். எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் பிறகும் பாரதிராஜாவிடமும் உதவி இயக்குநராக இருந்தார். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு முதல் படம்- சலீம்.

சதுரங்கவேட்டை-2 படத்தில் அரவிந்த்சாமியும் த்ரிஷாவும் நடித்திருக்கிறார்கள். அவர்களைத் தவிர நாசர், ராதாரவி, பிரகாஷ்ராஜ் என்று நிறைய பெரும் நடிகர்கள் இருக்கிறார். படத்தைப் பற்றி எதுவும் எழுதக் கூடாது என்றிருந்தேன். இந்தச் சலனப்படம் வாட்ஸப்பில் வந்தது. புதிய இசையமைப்பாளர் அஸ்வமித்ராவின் இசைக்கு கபிலன் வைரமுத்து எழுதிய பாடல். இன்றைய அரசியல் சூழலை வைத்து யாரோ அட்டகாசமாக எடிட்டிங் செய்திருக்கிறார்கள். 

நாம் பணியாற்றிய திரைப்படம் என்கிற மகிழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. வெறுமனே யூடியூப் லின்க்கை பதிவு செய்தால் நன்றாக இருக்காது அல்லவா? அதைச் சுற்றி சில சுவாரசியங்களை எழுதி அதன் பிறகு பதிவு செய்ய வேண்டும். அதற்குத்தான் மேற்சொன்ன கதையெல்லாம்.


ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்- ‘வில்லன்வேர்ல்ட்’ பாடலின் மெட்டை அனுப்பி வைத்து ‘எப்படி இருக்கு?’ என்று இயக்குநர் கேட்டிருந்தார். சினிமா பாடலாசிரியராக வேண்டும் என்பது ஒரு காலத்திய கனவு எனக்கு. அதற்காகவே சென்னையில் அலைந்திருக்கிறேன். இந்த மெட்டுக்கு நன்றாக எழுதிவிட்டால் இயக்குநரிடம் கொடுக்கலாம் என்று எழுதிப் பார்த்தேன். ம்ஹூம். ஒத்துவரவில்லை. திரைப்பாடல் என்பது பயிற்சி. எனக்கு அது போதாது. இன்னொரு மெட்டும் அனுப்பி வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமலேயே அதையும் முயற்சித்துப் பார்த்தேன். வேலைக்கு ஆகவில்லை. அறிவுமதி கலக்கியிருக்கிறார். ஆடியோ வெளியாகட்டும். நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்.

4 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

யப்பா ஆள உடுங்க.

சேக்காளி said...

Mohamed Ibrahim said...

Mani able to concentrate on multiple fields. Hats off!

Aravind said...

super thala. song marana maas. it will be a grand hit