Jun 19, 2017

விற்பனையாளரை முடிவு செய்தாகிவிட்டதா?

பள்ளிகளில் நூலகம் அமைத்துத் தரவிருக்கிறோம் என்பது தெரிந்த விஷயம்தான். யாரிடம் புத்தகங்களை வாங்குவது என்பதுதான் குழப்பமாக இருந்தது. ஒவ்வொரு புத்தக விற்பனையாளரும் ஒரு விலையைச் சொல்லியிருந்தார்கள். எல்லோருமே நண்பர்கள்தான். அறிமுகமானவர்கள். எளிமையான காரியம் என்றும் சொல்ல முடியாது. பல பதிப்பாளர்களிடமிருந்தும் புத்தகங்களைத் தேடிப் பிடிக்க வேண்டும். ‘பட்டியலில் ஒன்றிரண்டு மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் நிறைய மாற்றங்களைச் சொல்லக் கூடாது’ என்கிற நிபந்தனையுமிருந்தது.

விற்பனையாளர்களைப் பொறுத்தவரைக்கும் அதிகபட்சமாக பாரதி புத்தகாலயம் 25% தள்ளுபடி தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமே புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். மற்ற விற்பனையாளர்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. தொடர்ந்து செயல்படுவோம்.

கோல்செஸ்டர் குழுமத்தினர் ஐம்பதாயிரம் ரூபாயையும், திரு. ஜெய்பிரகாஷ் பத்தாயிரம் ரூபாயையும் பாரதி புத்தகாலயத்திற்கு நேரடியாக அனுப்பி வைப்பார்கள். அறுபதாயிரம் ரூபாயை ஏற்கனவே முடிவு செய்து வைத்தது போல பின்வரும் ஆறு பள்ளிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • வி.க.க.நடுநிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம்
  • பக்தவச்சலம் சஷ்டியப்தபூர்த்தி உயர்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
  • ஜெயலட்சுமி மானிய துவக்கப்பள்ளி, அரியலூர்
  • டாக்டர். T.திருஞானம் துவக்கப்பள்ளி, கீழ் சந்தைப்பேட்டை
  • தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மேட்டூர்
  • தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி, திண்டிவனம்.
புத்தகப்பட்டியல் இணைப்பில் இருக்கிறது.

இருபத்தைந்து சதவீதம் தள்ளுபடி என்பதால் ஒரு பள்ளிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மிச்சமாகும். ஆக, 2500*6 = 15,000. இந்தத் தொகை ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்தத் திட்டத்தில் கலந்து கொண்டு திரு அகமது குலாமும், திரு முருகேசனும் ஆளுக்கு பத்தாயிரம் ரூபாயை அனுப்பி வைத்து அவரவர் ஊர் பள்ளிக்கு இரண்டு செட் புத்தகங்களை வாங்கிக் கொள்ளவிருக்கிறார்கள். அந்த இரு பள்ளிகளும் கூட அரசுப் பள்ளிகள்தான். அவர்களது தொகையிலிருந்து 2500*2=5,000 ரூபாய் மிச்சம் ஆகும். மொத்தம் இருபதாயிரம் ரூபாய். இன்னுமொரு ஆயிரத்து ஐநூறு ரூபாயைச் சேர்த்தால் இன்னமும் கூடுதலாக மூன்று பள்ளிகளுக்கு நூலகம் அமைத்துக் கொடுத்துவிட முடியும். 

ஆறு பள்ளிகள் நாம் தேர்ந்தெடுத்தவை. இரு பள்ளிகள் அகமதுவும் முருகேசனும் தேர்ந்தெடுத்தவை. மிச்சமாகிற பணத்தில் இன்னமும் மூன்று பள்ளிகளைச் சேர்க்கிறோம். ஆக மொத்தம் இம்முறை தமிழகத்தில் பதினோரு பள்ளிகளுக்கு நூலகம் அமைட்

இன்னமும் மூன்று பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே வந்த கோரிக்கைகளிலிருந்து பள்ளிகளை பரிசீலித்து முடிவு செய்துவிடலாம் என்றிருக்கிறேன்.

நூலகங்கள் அமைத்துக் கொடுக்கும் பள்ளிகளில் சில கோரிக்கைகளை முன் வைக்கும் திட்டமிருக்கிறது.
  • குறைந்தபட்சம் வாரம் ஒரு மணி நேரமாவது ‘நூலகம்’ என்று பாடப்பிரிவேளையை உருவாக்கி மாணவர்களை வாசிக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கை.
  • மூன்றாம் வகுப்பு வரைக்குமான மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புத்தகங்களை வாசித்துக் காட்டட்டும்.
  • நான்காம் வகுப்பிற்கு மேலான மாணவர்கள் தாமாகவே புத்தகங்களை வாசிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  • புத்தகம் கிழிந்துவிடும் என்பதற்காக புத்தக விநியோகத்தை சுருக்க வேண்டியதில்லை. வாசித்துக் கிழிபடுமானால் தொடர்ந்து புத்தகங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்.
  • நூலகத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் முதல் மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வருட இறுதியில் ஊக்குவிக்கும்படியான பரிசு வழங்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். 
இப்பள்ளிகளைப் பின் தொடர்ந்து பலன்களைப் பார்த்து அதனடிப்படையில் எதிர்காலத்தில் சில முடிவுகளையும் திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கிராமப்புற பள்ளிகளைப் பொறுத்த வரையில் ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்கள் இருப்பின் அத்தனை பேரும் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றுவிடுவார்கள் என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை. அதிகபட்சமாக பத்து மாணவர்கள் பாடப்புத்தகத்தைத் தாண்டி பிற புத்தகங்களை வாசிக்கிற பழக்கத்தைப் பெற்றாலே பெரிய வெற்றிதான். அதைத்தான் அடைய விரும்புகிறோம். வாசிப்பின் வழியாக மாணவர்களின் உலகம் விரிவடையும். வெளியுலகத்தைப் புரிந்து கொள்வார்கள். அவர்களின் தேடல் பரவலாகும். இதுதான் இலக்கு. அதை நோக்கித்தான் இந்தப் பயணமும் இருக்கிறது.

3 எதிர் சப்தங்கள்:

Thenammai Lakshmanan said...

vaazththukkaL Manikandan :)

T said...

Manikandan,

I am going to buy a set of all the books from the list and give it to

கிருஷ்ணராயபுரம் வட்டம்,
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி,
அரசு மேல்நிலைப்பள்ளி.

For their contribution to rain water harvesting.

https://www.facebook.com/kovaibala/posts/1396804777025512

Ragu said...

பல பள்ளிகளில் உள்ள நூலகங்களில் மாணவர்களை விடுவதே இல்லை என்பது என் பள்ளி வயது அனுபவம். நீங்கள் புத்தகம் கொடுத்த பள்ளிகளில் என்னஅ நடக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.