‘இவன் வீட்டுல தங்குறதேயில்ல’ என்று அம்மா திட்டுவதும் கூட இதே காரணத்திற்காகத்தான். என்னையுமறியாமலேயே நிறைய வேலைகள் வந்து சேர்ந்து கொள்கின்றன. தவிர்க்க முடியாத பணிகள். விடுமுறை தினங்கள் இப்படித்தான் கழிகின்றன. வார இறுதியில் ஜீவகரிகாலன் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகுடீஸ்வரனைச் சந்திக்க வந்திருந்தார். அவரை அருகில் வைத்துக் கொண்டு அவரிடம் பேசாமல் பிற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன் என்று சங்கடமாக இருந்தது. அரசு தாமசும் அவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். கரிகாலன் கவனித்திருக்கிறார். அவருக்கு நன்றி.
அவர் ஃபேஸ்புக்கில் எழுதியதை அப்படியே இங்கும் பதிவு செய்துவிட வேண்டும் என நினைக்கிறேன். கடுமையான உழைப்பாளி என்று பிரஸ்தாபித்துக் கொள்வதற்காக இல்லையென்றாலும் மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதாமல் தவறவிடுவதற்கும் அலைபேசி அழைப்புகளைத் தவிர்ப்பதற்கும் கூட இதுதான் காரணம். நேரம் நிறையத் தேவைப்படுகிறது. முடிந்தவரையிலும் வளைத்து வளைத்து கபடி ஆடிக் கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும்....
(குறிப்பு: நிழற்படத்தில் அமீர்கானும் அஜீத்தும் கலந்த கலவையாகத் தெரிவதால் அதையும் பிரசுரித்துவிடுகிறேன்) .
மூன்றாம் நதி இரண்டாம் பதிப்பிற்கு செல்கிறது.
லிண்ட்சே லோஹன் நான்காம் பதிப்பு, மசால் தோசை இரண்டாம் பதிப்பு ஆகியன விரைவில் வெளிவரும். இன்னும் சில புத்தகங்கள் இந்த ஆண்டிலேயே வரும்.
எல்லாவற்றையும் விட நண்பனாக இருப்பதற்கு பெருமைப்பட எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. நான் வந்திருந்த சில மணி நேரங்களில் வெவ்வேறு நபர்கள் அவரை சந்திக்க வந்திருந்தார்கள். ஒருவரோடு பள்ளிக் கல்விச் செயல்பாடு குறித்து, மற்றவரோடு சில மருத்துவ உதவிகள் குறித்து, இன்னுமொரு கட்சிக்காரரோடு சூழல் குறித்த அவரது முயற்சிகளைத் தொடர்ந்தபடி சென்றுக் கொண்டிருந்தது அவர் பேச்சு.
இதற்கிடையில் மூன்று மாணவர்களைச் சந்தித்தேன், ஒருவன் தன் தாய் தந்தையை இழந்தவன், ஒவ்வொரு வார இறுதியிலும் ஆட்டுக்கறி விற்று தனக்கும் தன் சகோதரிக்குமான பொருளைச் சம்பாதித்துக் கொள்கிறான். அவர்கள் நிசப்தம் அறக்கட்டளையின் அரவணைப்பில் இருப்பவர்கள்.
இரண்டாவது, 1123 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளியில் முதலாம் மதிப்பெண் பெற்றவன். என்ன படிக்க வேண்டும் என்று கூடத் தெரியாத நிலையில் இருந்தான், அவனுக்குப் பொறியியல் கல்வி அதன் எதிர்காலம் குறித்து அவனுக்கு விளக்கிவிட்டு அவனை அனுப்பிவைத்தார். அவனும் அவனைப் போன்ற அவ்வட்டாரத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்களை அவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அவர்களை ஊக்குவித்ததில் நிசப்தம் மற்றும் அதன் ஆர்வலர்களின் பங்கும் இருக்கிறது.
இடையில் ஒரு கல்லூரியின் செயலாளரைச் சந்தித்து அருகே உள்ள ஒரு குடியிருப்பில் உள்ள மாணவர்களுக்காக அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பைக் கேட்டறிந்தார் (அவர்கள் யாவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட கழைக் கூத்தாடிகள் எனும் தொழில் செய்தவர்கள்), சென்ற முறை அவர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்து, பள்ளியில் படிக்கும்போதே அவர்களைக் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் Quotaவில் சேர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதால் அதில் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அவர்களின் விளையாட்டிற்கான செலவுகளைத் தொடர்ந்து நிசப்தம் அறக்கட்டளை ஏற்பதாகச் சொன்னார்.
அடுத்ததாக சந்தித்த மாணவன் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். Fisheries படித்துக்கொண்டிருக்கிறான். ஏற்கனவே உதவி பெறும் மாணவன். இந்த வருடம் அவனே சில மாணவர்களை ஊக்குவிப்பதாகச் சொன்னான், சிலர் அதில் பலனடைந்ததாகவும். ஓய்வு நாட்களின் தானும் நிசப்தத்தின் வேலையை செய்வதாகவும் சொன்னான். அந்த ஓய்வு நாட்களில் சிவில் சர்வீஸ்க்கு தயார் செய்வியா என்று கேட்டார் வா.ம.
‘ம்ம் சரி’ என்றான் யோசிக்காமலேயே.
‘யோசிக்காம எதையும் சொல்லாத யோசிச்சு சொல்லு உன்னால முடியுமான்னு’ என்று வா.ம சொல்லும் போது எனக்கு குழப்பமாக இருந்தது. ஏன் அவன் தான் இஷ்டம்னு சொல்றானே, ஏன் டைம் கொடுக்குறிங்கன்னு அவரிடம் கேட்டதற்கு.
‘அப்படி யோசித்து, உழைப்பதாக மனப்பூர்வமாகச் சொன்னால்தான் ஒரு ஐ.ஏ.எஸ் பதவியிலோ வேறு ஏதும் க்ரூப் 1 அலுவலர்கள் யாரையாவது அவனுக்கு mentor ஆக இருக்கச் சொல்லிக் கேட்கவேண்டும். அவர்களுக்கும் நேரம் என்பது எவ்வளவு முக்கியம்’ என்றார்.
ஒரு மாநிலத்தின் நலன், பிராந்தியத்தின் நலன் என்று பேசுவதோடு நின்றால் போதுமா அந்த நலனைச் செய்பவர்கள் அதிகாரம் கொண்டவர்களாகத் தானே இருக்க வேண்டும். அவர்கள் நம் மண்ணிற்கு வேண்டும் தானே என்று மணிகண்டன் என்னிடம் சொல்லும் போது அவர் கண்ணில் ஒரு பரந்த வெற்று நிலம் தெரிந்தது.. அதில் மணியின் கனவு நிச்சயம் கட்டமைக்கப்படும் நிஜமாக.
இத்தனையும் ஞாயிற்றுக்கிழமையின் ஒரு அரை நாளில் நான் கண்ட காட்சிகள், அதுவும் என் பொருட்டு மூன்றாம் நதிக்காக கல்லூரிப் பேராசிரியரைச் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த நேரத்தில் நிகழ்ந்தவை. இவற்றோடு தன் அம்மாவின் மனநிலை குறித்தும், தன் ஓய்வற்ற உடல்நிலை குறித்தும் கூட நண்பனாக சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளும் போது, இவரை Alienஆக நினைத்துக்கொள்ளக் கூடாது என்று சத்தியம் செய்து கொண்டேன்.
வார இறுதியில் மட்டும் இத்தனை வேலைகளை ஒருவன் தொடர்ச்சியாக சில வருடங்கள் செய்த சிறு சிறு முன்னெடுப்புகள் எல்லாம் எத்தனை ஆரோக்கிய விளைச்சல்களாக இருக்கின்றது எனப்பார்க்கும் போது, அப்படியே கண்ணம்மாவிடம் சொன்னேன்.
‘நீயுந்தான் இருக்கியே சோம்பேறி’ என்றாள். பாக்கெட்டிலிருந்த மாத்திரைகள் இனி எப்போதும் தேவைப்படப்போவதில்லை.
நிசப்தம் என்பதும் ஒரு புரட்சியாகத் தான் இருக்கிறது.
என்றும் மாறா ப்ரியங்கள் மணி....