யுவராஜூக்கு இருபத்தொன்பது வயதாகிறது. சென்னையில் ஒரு சிறு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நவம்பர் 27 ஆம் தேதி ஒரு விபத்து ஏற்பட்டு அடிவயிற்றில் பலமான அடி விழுகிறது. ஒரு வயதுக் குழந்தையுடன் உள்ள மனைவியின் தலையில் பெரும் பாரம் இறங்குகிறது. யுவராஜின் வீட்டில் அவர் மட்டுமே ஒரே சம்பாத்தியம். மருத்துவமனையில் ஆலோசனை செய்துவிட்டு ஒரு சிறுநீரகத்தை எடுக்கச் சொல்லிவிட்டார்கள். வயிற்றுக்குள் நிறைய பிரச்சினைகள். குடல் பகுதி எதிர்பார்த்த அளவில் வேலை செய்யவில்லை. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் சொன்ன செலவு பெருந்தொகை. ‘நீங்க வேணும்ன்னா வேற மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய்டுங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பணம் கட்ட வேண்டும்.
யுவராஜின் நண்பர் பிரபாதான் தகவல் கொடுத்தார்.
உதவி தேவைப்படுகிறவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்த பிறகு பின்னணியை விசாரிக்க வேண்டியிருக்கும். குடும்பப் பொருளாதார நிலை, எவ்வளவு உதவி தேவைப்படுகிறது உள்ளிட்ட விவரங்களையெல்லாம் சேகரித்துதான் முடிவு செய்ய முடியும். சமீபமாக நிசப்தம் அறக்கட்டளையில் மிகச் சிறந்த தன்னார்வலர்கள் இணைந்து வேலை செய்கிறார்கள். உதவி தேவைப்படுகிறவர்களின் விவரங்களை குழுமத்தில் அனுப்பி வைத்தால் யாரேனும் ஒருவர் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள். உதவி தேவைப்படுகிறவர்களைச் சந்தித்துப் பேசுவது, விவரங்களைச் சரிபார்ப்பது, எவ்வளவு பணம் தேவைப்படுகிறது அதில் எவ்வளவு தொகையை அவர்களாகவே சமாளித்துக் கொள்ள முடியும் உள்ளிட்ட பெரும்பாலான விவரங்களைச் சேகரித்துக் குழுமத்துக்கு அனுப்புகிறார்கள். தேவைப்பட்டால் குழுமத்தில் விவாதமும் நடைபெறுகிறது.
அப்படித்தான் யுவராஜின் குடும்பத்தைச் சந்தித்து விவரங்களைச் சேகரிப்பது உள்ளிட்ட அத்தனை பொறுப்பையும் விஜயகுமார் எடுத்துக் கொண்டார். யுவராஜ் குறித்தான அத்தனை விவரங்களையும் அனுப்பிக் கொண்டேயிருந்தார். ஒற்றைச் சிறுநீரகம் நீக்கப்பட்டு நாற்பத்தைந்து நாட்களுக்கு யுவராஜ் மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருந்தார். குழாய் மூலமாக உணவு வழங்கப்பட்டது. வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து மனைவி செலவுகளைச் சமாளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் செலவு தாங்கமுடியாமல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அப்பொழுதும் விஜய் அவர்களுடன் தொடர்பில் இருந்தார்.
ஜிப்மரில் செலவு குறைவுதான் என்றாலும் வேறு வழியில்லாமல் வலது கால் பாதத்தை நீக்கிவிட்டார்கள். கடைசியில் சிறுகுடல் பகுதியில் குழாய் பொருத்துவதற்காக சென்னையில் எஸ்வி என்ற மருத்துவமனைக்கு மாற்றியிருக்கிறார்கள். அப்பொழுது கையில் இருந்த மொத்தப் பணமும் கரைந்திருக்கிறது. கடைசியாக அறுவை சிகிச்சை முடிந்து கட்ட வேண்டிய பணம் என்று பதினைந்தாயிரம் பில் வந்திருக்கிறது. விஜய் மருத்துவமனையில்தான் இருந்தார்.
மருத்துவமனையிலிருந்து விஜய் அழைத்த போது கோபியில் இருந்தேன். சனிக்கிழமை மாலை ஆகியிருந்தது. இனி காசோலையை திங்கட்கிழமைதான் அனுப்ப முடியும். விஜய் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. தனது வங்கிக்கணக்கின் காசோலையில் தொகையை எழுதி மருத்துவமனையில் கொடுத்துவிட்டு ‘செவ்வாய்க்கிழமை வரைக்கும் இதை வைத்திருங்கள்..வேறொரு காசோலையைக் கொண்டு வந்து கொடுத்து இதை வாங்கிக் கொள்கிறேன். ஒருவேளை வரவில்லையென்றால் பணத்தை என்னுடைய கணக்கிலிருந்தே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
மருத்துவமனைகள் என்றாலே மோசம் என்று பேச வேண்டியதில்லை. அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இன்று காசோலை மருத்துவமனையில் வழங்கப்பட்டுவிட்டது. பதினைந்தாயிரம் என்பது பெரிய தொகை இல்லைதான். ஆனால் அதற்காக கடைசி வரைக்கும் யுவராஜின் குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பேசி தன்னுடைய காசோலையைக் கொடுத்துவிட்டு வந்தது என விஜயகுமார் வெகுவாக மெனக்கெட்டிருக்கிறார்.
‘எப்படி இத்தனை வேலைகளைச் செய்ய முடிகிறது?’ என்று யாராவது அடிக்கடி கேட்டுவிடுகிறார்கள். விஜய் மாதிரியானவர்களைத்தான் கை காட்ட வேண்டும். யாருடைய முகமும் வெளியில் தெரியாது. ஆனால் செயல்படுகிறார்கள். அவர்களால்தான் சாத்தியம். அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்த நல்லதைச் செய்வோம் எனக் களமிறங்கும் வரைக்கும்தான் தயக்கம் இருக்கும். இறங்கிவிட்டால் தாங்கிப் பிடிக்க யாராவது கை கொடுத்துவிடுவார்கள். நிசப்தம் அறக்கட்டளை நல்லதொரு உதாரணம். எதிர்காலத்தில் இன்னமும் பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.
அந்த நம்பிக்கை வந்திருக்கிறது.
யுவராஜ் நிச்சயம் நலம் பெற்றுவிடுவார். அவர் பூரண நலமடைய மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்வோம். அவருடைய மனைவிக்கும் குழந்தைக்கும் குடும்பத்துக்கும் ஆன்ம பலத்தை ஆண்டவன் அருளட்டும். நன்கொடையாளர்களுக்கும், நிசப்தம் அறக்கட்டளையில் இணைந்து செயல்படுகிற தன்னார்வலர்களுக்கும் நன்றி. விஜய்க்கும், பிரபாவுக்கும் தனிப்பட்ட நன்றி.
5 எதிர் சப்தங்கள்:
Hats Off Vijaya Kumar
Keep it up Mani. Hats off to Vijaykumar.
நல்லவர்கள் நிறைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
√
Post a Comment