Apr 21, 2016

பஞ்சு மிட்டாய்

பிரபு ராஜேந்திரன் நல்ல வாசகர். வாசகர் என்றால் நான் எழுதுவதை வாசிக்கிறவர் இல்லை. நல்ல எழுத்தாளர்கள் எழுதுவதையெல்லாம் வாசித்துவிடுவார். வாசித்தவை குறித்து நிறையப் பேசவும் செய்வார். ஒரு முறை பெங்களூரில் சந்தித்துக் கொண்டோம். அமர்ந்து பேசுவதற்கு தோதான இடம் வாய்க்கவில்லை. பெலந்தூர் ஏரிப்பக்கம் சென்று நின்று கொண்டே பேசினோம். ஓராள் சிக்கிக் கொண்டார் என்கிற நினைப்பில்‘அதை வாசிச்சிருக்கீங்களா? அதை வாசிச்சிருக்கீங்களா?’ என்று சில புத்தகங்களின் பெயரை எல்லாம் கேட்டேன். வாசித்திருந்தார். திருப்பி அதே கேள்வியைக் கேட்டார். ‘இங்க வெயிலா இருக்கு...இன்னொரு நாளைக்கு பேசலாமா?’ என்று கிளம்பி வந்துவிட்டேன். அதன் பிறகு அவரைப் பார்த்ததாகவே ஞாபகமில்லை.

நல்லவேளையாக இப்பொழுது குழந்தைகள் பக்கம் திரும்பிவிட்டார். பெங்களூரில் குழந்தைகளை அழைத்து வைத்து கதை சொல்கிறார்கள். பெற்றவர்கள் குழந்தைகள் எல்லோரும் கூடுகிறார்கள். குழந்தைகளுக்கு கதை சொல்கிறார்கள். நிகழ்ச்சியின் பெயரே ‘கதை சொல்லப் போறோம்’. கிட்டத்தட்ட இருபதாவது நிகழ்வை நடத்தவிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்ததுண்டு. ஆனால் வாரக் கடைசியில் பெங்களூர் வீட்டில் இருந்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் எங்கேயாவது ஓடிவிடுகிறேன். பிரபு அழைக்கும் போதெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டேயிருக்கிறேன். கூட்டம் மட்டும் நடத்திக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது அடுத்த கட்டத்துக்கும் நகர்ந்துவிட்டார்கள். ஐந்து பேர் கொண்ட ஆசிரியர் குழுவொன்றை வைத்து குழந்தைகளுக்கான இதழ் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள். பஞ்சுமிட்டாய் என்று பெயர். இதழை மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார்கள்.

குழந்தைகள் வரைந்த ஓவியங்களை வைத்து ஒரு கதை, குழந்தைகளுக்கான பாடல், சிறுமியின் சிறுகதை, புதிர் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள். இருபத்து இரண்டு பக்க இதழ் இது. தமிழ் வாசிக்கத் தெரிந்த குழந்தை இருந்தால் அச்செடுத்துக் கொடுத்துவிடலாம். மெதுவாக வாசிப்பார்கள். அர்த்தம் கேட்கும் போது சொல்லிக் கொடுக்கலாம்.

இதழில் சில குறைகள் இருக்கின்றன. ஒருவேளை அடுத்தடுத்த இதழ்களில் அவற்றையெல்லாம் களையவில்லையெனில் விரிவாகப் பேசலாம். இப்போதைக்கு இந்த முயற்சி வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியது.

பஞ்சுமிட்டாயின் முதல் இதழ் எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை. இரண்டாவது இதழை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். அடுத்த தடவையிலிருந்து இதழ் வேண்டுகிறவர்கள் பிரபுவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தால் தனது பட்டியலில் சேர்த்துக் கொள்வார் என நினைக்கிறேன். இத்தகைய சிற்றிதழ்கள் முயற்சிகள் அவ்வப்போது நடைபெறும். பிறகு திடீரென்று நின்றுவிடும். பிரபு ராஜேந்திரனுடன் இந்த இதழுக்காக வேலை செய்கிற மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை- பிரபுவுக்கு இப்பொழுதுதான் குட்டிக் குழந்தை. அந்தக் குழந்தை கல்லூரி செல்லும் வரைக்குமாவது இந்த வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென விரும்புகிறேன். ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

மின்னஞ்சல்: prabhu.thi@gmail.com 

3 எதிர் சப்தங்கள்:

Prabhu said...

First magazine : http://pravagham.blogspot.in/2016/02/1-2016.html

The name Panchumittai is from second magazine.

Gurunathan said...

when will you publish the result of 'Book cover designer identifier' contest?? :)

மோகன்ஜி said...

மிக்க நல்ல முயற்சி இது. குழந்தைகளுக்கு கற்பனைத் திறனை வளர்க்கும் இத்தகு முயற்சிகள் பாராட்டுக்குரியது. இவற்றை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யபெற்றோரும் பள்ளி ஆசிரியர்களும் அணுகப்பட வேண்டும். நண்பருக்கு வாழ்த்துக்கள். அறிமுகத்துக்கு நன்றி மணிகண்டன் சார்!