Jan 12, 2016

வேட்டைக் காடு

‘கொன்னுடுவாங்களாப்பா?’ பரதன் கேட்ட போது பழனிக்கு நெஞ்சுக்குழி அடைத்துக் கொண்டது.

எச்சிலை விழுங்கிக் கொண்டு ‘இல்ல சாமி..தப்பிச்சுடலாம்’ என்றான். இதைச் சொல்லும் போது அவனது தைரியம் முற்றாகத் தொலைந்திருந்தது. வெளியில் மனிதர்களின் சலனம் எதுவுமில்லை. ஆனால் யாருமில்லை என்பதை உறுதியாகக் கணிக்க முடியவில்லை. டார்ச் விளக்கொளி இல்லை என்பது ஆசுவாசமாக இருந்தாலும் கவிந்திருந்த இரவு திகிலூட்டுவதாக இருந்தது. புதருக்குள் இரவுப்பூச்சிகள் கடிக்கத் தொடங்கியிருந்தன. 

பரதன், ‘போயிடலாம்ப்பா’ என்றான்.  

‘கொஞ்ச நேரம் பொறுத்துக்க தங்கம்’ - பழனி கெஞ்சலாகச் சொன்னான். பரதனுக்கு பொறுத்துக் கொள்ளும் வயதில்லை. ஆறு வயது கூட முழுமையாக பூர்த்தியடைந்திருக்கவில்லை. மதியத்துக்கு மேலாக எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. அப்பனோடு சேர்ந்து மரணத்திடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அழ வேண்டும் போலிருந்தது. பழனி அவனை அழ விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான். துரத்துபவர்களுக்கு அழுகைச் சப்தம் சமிக்ஞையாக மாறிவிடக் கூடும். 

பழனிக்கு இருள் பழக்கமானதுதான். எத்தனையோ முறை களவுக்குச் சென்றுவிட்டு இருளுக்குள் புதைந்து கிடந்திருக்கிறான். உடல் முழுக்கவும் எண்ணையை மட்டும் பூசியபடி பிடிக்க முயற்சிப்பவர்களிடமிருந்து வழுக்கி வந்து புதர்களுக்குள் படுத்துக் கிடந்ததுண்டு. இப்பொழுது பரதன் இருப்பதுதான் பாரமாக இருந்தது. அவனைச் சுமந்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறான். மெல்ல மெல்ல குரூரமாக மாறிக் கொண்டிருந்த ஊர் இப்பொழுது வெறியெடுத்துத் திரிகிறது. தனது குழந்தையையும் சேர்த்துக் கொன்றுவிடப் போவதாக முடிவெடுப்பார்கள் என்று பழனி நினைத்திருக்கவில்லை. அவனையாவது காப்பாற்றிவிட்டாலும் கூட போதும் என்பதுதான் நினைப்பாக இருந்தது.

ஒடிக் களைத்து ஒளிந்திருந்த போது தனது தினவெடுத்த உடலை கிழித்து வீசி விட வேண்டும் என பழனிக்குத் தோன்றியது. சித்ராவோடு தொடுப்பு வைத்திருக்கக் கூடாது என்கிற எண்ணம் நிலைமை கை மீறிப் போன பிறகு துளிர்ப்பதாக தனக்குத் தானே கசந்து கொண்டான்.

ஆரம்பத்திலிருந்தே அவளின் வனப்பு அவனை நோக்கி வலை வீசிக் கொண்டேயிருந்தது. சின்னசாமிக்கு வெளியூர் சோலி அதிகம். நெல் அறுப்பு இயந்திரம் வைத்திருந்தான். அவ்வப்போது அவன் போய்விடுவது சித்ராவுக்கும் பழனிக்கும் செளகரியமாகப் போய்விட்டது. கொள்ளிக்கட்டையைத் தண்ணீரில் அழுத்தினாலும் புகை காட்டிக் கொடுத்துவிடுவதைப் போல சித்ராவின் பூரிப்பு சின்னசாமிக்கு சந்தேகத்தைக் கிளறிக் கொண்டேயிருந்தது. அதிக நாட்கள் பிடிக்கவில்லை. ஊர் வாய் திறந்து கொண்டது.

புதருக்குள் பரதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ‘அம்மாகிட்ட போறேன்’ என்றான். பசியும் பயமும் இருளும் அவனை திகிலடையச் செய்திருந்தன. அம்மாவின் முகம் அவனுக்கு நினைவிலேயே இல்லை. அந்தச் சூழலில் தன்னுடைய அப்பாவிடம் என்ன கேட்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. பழனிக்கு சுதாவின் நினைப்பு மின்னலைப் போல வந்து போனது. பங்களாப்புதூர்காரர்கள் பழனியை நிர்வாணமாக்கி மின் கம்பத்தில் கட்டி வைத்திருப்பதாகக் கேள்விப்பட்ட போது பரதனைத் தூக்கி இடுப்பில் போட்டுக் கொண்டு சுதா வந்திருந்தாள்.

நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. செட்டியார் தோட்டத்து கிணற்றில் மோட்டாரைத் திருடிய போது பிடித்துவிட்டார்கள். தப்பிக்கவே முடியாமல் சிக்கியிருந்தான். சுதா வந்து சேர்ந்த போது பழனியின் முகம் கிழிந்து வீங்கியிருந்தது. ‘தேக்குக் கட்டை’ என்று அவள் வர்ணித்த உடல் அப்பொழுது ஊருக்கு காட்டப்பட்டிருந்தது. அழுது கதறினாள். யாரோ இரண்டு பேர் அவளது தலைமுடியைப் பிடித்தார்கள். அவளது இடுப்பில் இருந்த பரதன் வீறிட்டான். சில பெண்கள் உள்ளே வந்து அவளை அடிக்க வந்தவர்களைத் தடுத்தார்கள்.

‘அவன் திருடறது இந்தத் தேவடியாவுக்கு தெரியாமலா இருக்கும்?’ என்று ஒருவன் கேள்வி எழுப்பினான். சுதாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பைத்தியம் பிடித்தது போல அரற்றினாள். பழனி இரும்பு வேலைக்குச் செல்வதாகத்தான் தனக்குத் தெரியும் என்றாள். அவளுக்கு வாய் கசப்பேறிக் கொண்டிருந்தது. அவிழ்ந்து கிடந்த தனது கூந்தலை அள்ளிக் கொண்டை போட்டுக் கொண்டவள் ‘இவனும் வேண்டாம்...இவன் பையனும் வேண்டாம்’ என்று பரதனைக் கீழே விட்டுவிட்டுக் கிளம்பினாள். ஒற்றைக் கணத்தில் முடிவெடுத்துவிட்டாள். கூட்டத்திலிருந்து நெஞ்சழுத்தக்காரி என்று குரல் எழும்பியது. பழனியால் எதுவும் பேச இயலவில்லை. பரதன் அடித் தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தான். அடித்துச் சலித்தவர்கள் கயிற்றை அவிழ்த்துவிட்டுச் சென்றார்கள். ஒரு பெண்மணி கொடுத்த துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு குடிசைக்கு வந்து சேர்ந்தான். அதன் பிறகு தனது அம்மாவை இப்பொழுதுதான் பரதன் கேட்கிறான். சுதா தன்னைவிட்டு விலகாமல் இருந்திருக்க வேண்டும் என்று பழனிக்குத் தோன்றியது.

நெல் அறுப்பு முடிந்து அந்தியூரிலிருந்து திரும்பியிருந்த சின்னசாமிக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவனது அமைதி சித்ராவுக்கு நடுக்கமூட்டுவதாக இருந்தது. இயல்பாக இருப்பது போல முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருந்தாள். வீட்டை விட்டுத் தப்பித்து ஓடிவிட வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் சின்னசாமி அதிக அவகாசம் கொடுக்கவில்லை. தென்னை மரத்துக்கு வைக்கும் மருந்தை எடுத்து வந்து வாழைப்பழத்தில் திணித்தான். அதை அவள் பார்க்கும் படியாகவேதான் செய்தான். முகத்தை கடுமையாக வைத்தபடி பழத்தை அவளுக்கு முன்பாக நீட்டி கண்களாலேயே தின்னச் சொல்லி சைகை காட்டினான். திடீரென உடைந்து நொறுங்கிய கண்ணாடிக் குடுவையாய் அவனது கால்களில் விழுந்து ‘என்னை உட்டுடுங்க’ என்று கதறினாள். அவன் ஓங்கி உதைத்ததில் சித்ராவின் வயிறு கலங்கியது. ஆனால் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. மீண்டும் சைகை காட்டினான். கையெடுத்துக் கும்பிட்டாள். தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை உருவினான். அவன் வீச்சுக்கு முன்னால் அவளுடைய எதிர்ப்பு சுருண்டது. அவளுக்கான அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டிருந்தது. வழியும் கண்ணீரோடு சேர்த்து வாழைப்பழத்தை விழுங்கினாள். கடைசி விழுங்கலின் போது அவனுடைய பரிதாபத்தைக் கோரியபடி பார்த்தாள். சின்னசாமி துளியும் சலனமின்றி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இழுத்துச் சென்று கிணற்று மேட்டில் வீசினான். 

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் எரித்து முடித்தார்கள்.

‘இதோட முடிஞ்சுதுன்னு நினைச்சுக்கக் கூடாது. அந்தத் தாயோளியை வெட்டோணும்...அப்போத்தான் நாய்களுக்கு புத்தி வரும்’ இடுகாட்டில் சின்னசாமி உறுமிய போது யாரும் எதுவும் பேசவில்லை.  ‘அவனுக்கு ஒரு பையன் இருக்கிறானப்பா’ என்று சின்னதுரை பேச்சை ஆரம்பித்த போதே ‘இருந்தா?’ என்று எகிறினான் சின்னசாமி. 

‘ரெண்டு பேரையும் வெட்டி காக்காய்க்கு வீசினாத்தான் ஊருக்குள்ள பயம் இருக்கும்’ என்று ஓர் இளவட்டம் உரக்கப் பேசிய பிறகு சின்னதுரையும் எதுவும் பேசவில்லை. தன்னால் இவர்களிடம் பேச முடியாது என்று அடங்கிக் கொண்டார். நெருப்பு அணைவதற்கு முன்பாகவே சின்னசாமியும் அவனோடு சேர்ந்து ஏழெட்டுப் பேருமாக கிளம்பினார்கள். பழனியைக் குடிசைக்குள் பூட்டி கொளுத்திவிடுவது என்றுதான் முடிவு செய்திருந்தார்கள். அவனது குடிசைக்கு அருகாமையில் வேறு குடிசைகள் இல்லை. ஏரிக்கரை புறம்போக்கு நிலம் அது. 

‘வெளிய தப்பிச்சு வந்தான்னா ஒரே வெட்டா வெட்டிப் போடலாம்’ என்று சின்னசாமி சொல்லியிருந்தான்.

பொழுது சாயத் தொடங்கியிருந்தது. கொக்குகள் கூட்டம் கூட்டமாக கூடு திரும்பிக் கொண்டிருந்தன. பழனி பரதனுடன் டீக்கடையில் அமர்ந்திருந்தான். ‘பன்னு வாங்கித் தர்றியாப்பா?’ என்று பரதன் கேட்ட போதுதான் அவர்கள் பழனிக்கு அருகாமையில் வந்து சேர்ந்திருந்தார்கள். டீக்கடைக்காரருக்கு என்னமோ விபரீதம் நடக்கப் போவது புரிந்தது. அவர் பழனிக்கு சாடை காட்டினார். சுதாரித்துக் கொண்ட பழனி பரதனைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான். பரதனுக்கு பயத்தில் உடல் நடுங்கியது. ‘பயப்படாத சாமி..ஒண்ணும் ஆவாது’ என்று பழனி சொன்னதை பரதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதல் வெட்டு பழனியின் முதுகில் விழுந்தது. ஆழமான வெட்டு இல்லையென்றாலும் ரத்தம் சிந்தத் தொடங்கியிருந்தது. பரதன் அவனது தோள் மீது கிடந்ததால் தனது அப்பனின் முதுகைப் பார்க்க முடிந்தது. 

‘அப்பா...ரத்தம்’ என்றான். 

‘நீ கண்ணை மூடிக்க சாமி’ என்றான். பரதன் கண்களை இறுக்க மூடிக் கொண்டான். 

பழனியோடு போட்டி போட்டு அவர்களால் வரப்புகளுக்குள் ஓடி வர முடியவில்லை. இருள் கவிந்தது. புதருக்குள் ஒளிந்து கொண்டால் தப்பித்துவிடலாம் என்று தாழம்பூ புதருக்குள் ஓடினான். அந்தத் தாழம்பூ புதருக்குள் சித்ராவுடன் பல நாட்கள் கிடந்திருக்கிறான். வாய்க்காலுக்கு துணி துவைக்கச் செல்வதாக போக்குக் காட்டிவிட்டு அவள் வந்துவிடுவாள். அப்படியொரு இடம் புதருக்குள் இருப்பதை வெளியிலிருந்து பார்த்துக் கண்டுபிடிப்பது சிரமம். நிலத்தைச் சுத்தம் செய்து அதன் மீது வைக்கோலைப் போட்டு வைத்திருந்தார்கள். உடைகள் விலகிக் கிடந்த தருணமொன்றில் தாழம்பூவின் வாசம் தன்னைக் கிறங்கச் செய்வதாக அவள் சொன்னாள். ‘இந்த வாசத்துக்கு பாம்பு வரும் தெரியுமா?’ என்று முதன்முறையாக அவன் சொன்ன போது அவள் சிணுங்கினாள். வியர்வை மினுமினுத்துக் கிடந்த அவளது உடலைத் தாழம்பூவால் ஒற்றியெடுத்தான்.  ‘நீ என்னமோ பண்ணுற’ என்று அவள் கண்களை மூடிக் கிடந்தது பழனிக்கு ஞாபகம் வந்து போனது. அவளின் அந்தச் சொற்கள் அவனைக் கிளர்ந்த மிருகமாக்கியிருந்தது. காமத்துக்கு சாதியில்லை என்று சொல்லிச் சிரித்தான். 

தனது பழைய ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும் என்று தலையை ஒரு முறை வேகமாக ஆட்டினான். இந்த ஊரிலிருந்து தப்பித்துச் சென்று விட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டான். காமம் தன்னை இழுத்து வந்து வேட்டைக்காடு ஒன்றில் விட்டுவிட்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. புதருக்கு வெளியில் வேட்டை மிருகங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. முதுகில் வலி கடுகடுத்துக் கொண்டிருந்தது. கையை வைத்துப் பார்த்தான். பிசுபிசுத்தது. பழனிக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் வெளியில் செல்வது சரியில்லை என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான். பரதன் உறங்கியிருந்தான். இருளில் பரதனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. கைகளால் விசிறிக் கொடுத்தான். எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுக் குழந்தையை தான் வதைப்பதாகத் தோன்றியது. நள்ளிரவு தாண்டியதும் பரதனைத் தூக்கிக் கொண்டு ஓடி விட வேண்டும் என முடிவு செய்திருந்தான். சத்தியமங்கலத்துக்குச் சென்று அங்கேயிருந்து சாம்ராஜ்நகருக்குச் சென்றுவிடுவதென தீர்மானித்திருந்தான். 

சலனமேயில்லாமல் இரவு நகர்ந்து கொண்டிருந்தது. அத்தனையும் அடங்கிவிட்டதாக பழனி நினைத்த தருணத்தில் புதருக்குள் பெரும் கல் ஒன்று வந்து விழுந்தது. பழனிக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. அடுத்தடுத்து இரண்டு மூன்று கற்கள் வந்து விழுந்தன. அவசர அவசரமாக பரதனை எழுப்பினான். அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேற முயற்சித்தான். ஏழெட்டு டார்ச் விளக்குகள் ஒளிர்ந்தன. 

‘ஒளிஞ்சிட்டா விட்ருவோமா?’ என்றான் சின்னசாமி. அதைக் கேட்ட தொனியில் வன்மம் கொப்புளித்தது. பழனி தப்பிக்க வழியில்லை என்று புரிந்தவனாய் நொறுங்கிப் போனான். 

‘என்னைக் கொன்னுடுங்க...ஆனா எம்பையனை விட்டுடுங்க’ என்றான்.

‘அவ கூட படுக்கறப்போ பையன் நெனப்பு வரலையா?’ என்று எகத்தாளமாகக் கேட்டான். பழனியால் எந்த பதிலையும் சொல்லவில்லை.

‘தப்புதான்...எனக்கு என்ன தண்டனை வேணும்ன்னாலும் கொடுங்க...இந்தப் பிஞ்சை விட்டுடுங்கய்யா’ - அவனது கதறல் பரிதாபமாக இருந்தது.

‘இன்னமும் என்ன பேச்சு’ என்றான் ஒருவன். அந்தக் குரல் அடங்குவதற்குள் பழனியின் பின்னந்தலையில் ஓங்கி ஒரு வெட்டு விழுந்தது. இரண்டு கைகளாலும் தனது தோள் மீது கிடந்த பரதனை இறுக்க அணைத்துக் கொண்டான். பரதனின் முகத்தைப் பார்க்க முயற்சித்தான். அவன் அப்பொழுதும் தூக்கத்திலேயே கிடந்தான்.

13 எதிர் சப்தங்கள்:

Mahesh said...

ethana naal achu nisapthathil kathai padithu.
paavam pazani. kaamam paduththumpaadu.
good narration.
avvappothu punaivu sirukathaikalum ezuthungal sir.

வண்ணதாசன் said...

துளிப் பிசிறு இல்லாமல் நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள்

சேக்காளி said...

//துளிப் பிசிறு இல்லாமல் நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள்//
என்று சமவெளியிலிருந்து வந்த பின்பு நானென்னெ எழுத?

Unknown said...

அருமையான மற்றும் கனமான எழுத்து நடை மணி! சிறு கவனிப்பு. "சித்ரா தன்னைவிட்டு விலகாமல் இருந்திருக்க வேண்டும் என்று பழனிக்குத் தோன்றியது". "சித்ரா" என்பதிற்குப் பதிலாக "சுதா" என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

VIJO said...

arumai... barathana thapika vitrukalam...

Sundhar said...

Very impressive, it is a long time that I have read a short story that left an impact on me. Huge. Congratulations.

This has everything, fast paced narration, the perspective and the thought process of the protagonist and the most important ending to be decided by the user.

Lovely.



Guhan said...

@Kumar:

Sutha - Pazhani's wife
Chithra - Pazhani's lover and wife of Chinnachamy


Anonymous said...

நண்பரே http://www.higopi.com/ucedit/Tamil.html இல் tamil 99keyboard தெரிவு செய்து
அகரம் இல்லா தோட்ட‍க்காரன் சனிக்கிழமை ஆடு உண்ண‍ தவிடு மட்டும் கௌவ்வினான் கேட்டால் நி நுங்கு துன்றியா என ஏளனம் செய்ய நான் ஐய பொடா அஃகு பிழாஞ்சு ஈ நான் அஞ்ஞான் கேட்டொ என பறஞ்சு, என எழுதமுயற்சி செய்யவும்.
நன்றி மணிகண்டன்
நித்தி

Chandru said...

உருக்கமான கதை..மிகவும் அருமை..

kavignar said...

sex with crime in village style.good description with out writer's interruption story goes...we follows

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!

Vinoth Subramanian said...

Sir! Super sir! Nice!

Bakkyaraj said...

Story is nice except two peep words