Sep 22, 2014

நீ என்ன கல்ச்சுரல் போலீஸா?

வார இறுதியில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். எனக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கியிருந்தார்கள். ஒன்றரை மணி நேரம் தாளித்துவிட்டேன். ‘மொக்கை போடுகிறேனா? மொக்கை போடுகிறேனா?’ என்று கேட்டுக் கேட்டே மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் பாக்யராஜ் ஸ்டைலில் பேசிச் சமாளித்துவிடுகிறேன். ஆங்கிலத்தில் பேசுவதென்றாலும் கூட பிரச்சினையில்லை. கொங்குத் தமிழ் மாதிரி கொங்கு ஆங்கிலம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன். சமாளித்துவிட முடிகிறது என்பதால் அடுத்த சனிக்கிழமை ஒரு கல்லூரி அதற்கடுத்த சனிக்கிழமை இன்னொரு கல்லூரி என்று சமோசாவுக்கும் டீக்கும் ஆசைப்பட்டு படிப் படியாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த உலகம் எந்த அடிப்படையில் என்னையெல்லாம் நம்புகிறது என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. தன்னடக்கத்திற்காகச் சொல்லவில்லை. உண்மையாகவேதான். 

ஜோ டி குரூஸ் மாதிரியானவர்கள் கூட எந்தவித பந்தாவுமில்லாமல் பேசுகிறார்கள். சமீபத்தில் தமிழ் இந்துவில் அவரது நேர்காணலை வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். காலச்சுவடு மதுரையில் நடத்திய கூட்டத்தில்தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேடையில் சிறப்பாக பேசினார் என்று சொல்ல முடியாது. ஆனால் எளிமையாகப் பேசினார். ‘இவ்வளவுதான் நான்’ எந்தவித பாசாங்குமில்லாமல் சொல்வது ஒரு கலை. துளி பகட்டோடு  பேசினாலும் கூட அடுத்தவர்களுக்குத் தெரிந்துவிடும்- இவன் அடக்கமானவன் போல நடிக்கிறான் என்று. அடுத்த வாரம் பெங்களூரில் இலக்கியத் திருவிழா நடக்கிறது. குரூஸ்ஸூம் வருகிறார். வாய்ப்பிருப்பவர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஹேராம் பார்த்ததிலிருந்தே ராணி முகர்ஜியின் ரசிகன் என்று தட்டச்சினால் இந்த கைக்கு போஜனம் கிடைக்காது. ‘அந்த’ ஸீனை யூடியூப்பில் பார்த்ததிலிருந்தே ராணியின் ரசிகன். அவரும் வருகிறார். அவரைப் பார்ப்பதற்காகவேனும் கலந்து கொள்ளவிருக்கிறேன்.

சென்ற வருடம் 69 shades of grey என்று ஒரு கிளுகிளுப்பான அரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள். Erotic எழுத்து பற்றிய உரையாடல் அது. ஆளாளுக்கு தங்களின் எரோடிக் கதைகளைப் படித்துக் காட்டினார்கள். நான்கு நாட்களுக்குக் காய்ச்சல் வந்து கிடந்தேன் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் இந்த வருடம் அப்படி எதுவும் இல்லை என்பது வருத்தம்தான். இருந்தாலும் நட்வர்சிங் வருகிறார். க்ரிஷ் கர்னாட் வருகிறார். இன்னும் பெயர் கேள்விப்படாத அழகான எழுத்தாளர்கள் வருகிறார்கள். அடுத்த முறை தீபிகா படுகோனை அழைத்து வாருங்கள் என்று நேயர் விருப்பத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு வர வேண்டும்.

‘I have a breast, I have a clevage...whats your problem?' என்று அவர் கேட்டதிலிருந்து அவரைப் பெண்ணியவாதி ஆக்கிவிட்டார்கள். அதில் பெண்ணியமும் இல்லை ஆனியனும் இல்லை என்று நாம் சொன்னால் சண்டைக்கு வந்துவிடுவார்கள். உடலைக் காட்டினால் பத்திரிக்கைகளில் பிரதானப்படுத்தத்தான் செய்வார்கள். ஒன்றரை இஞ்ச்சுக்கு ஜட்டியைக் கீழே இறக்கிக் காட்டிய போது ஜான் ஆபிரஹாமும்தான் ஹிட் ஆனார். வெறும் துண்டோடு ஒரு நடிகன் உடலைக் காட்டிய போது மீடியாவில் ப்ளாஷ் அடித்தார்கள். எட்டுப்பேக்கையும் பத்து பேக்கையும் காட்டும் போது ஷாருக்கானும்தான் அட்டைகளில் இடம் பிடிக்கிறார். ஆண் பெண் என்ற பேதமெல்லாம் எதுவும் இல்லை. சினிமாக்காரன் உடலைக் காட்டினால் ஊடகத்தில் இருப்பவன் பயன்படுத்தத்தான் செய்வான். இவர்கள் இரண்டு பேரும் வியாபாரத்திற்காக மாற்றி மாற்றி அடித்துக் கொள்வார்கள். அட்டைப்படத்தில் எவ்வளவு வேண்டுமானாலும ஆடையை நெகிழ்த்திக் கொள்வார்கள். சினிமாவில் எவ்வளவு வேண்டுமானாலும் தளர்த்திக் கொள்வார்கள். அங்கெல்லாம் காசு கிடைக்கிறது. ஆனால் எவனாவது ‘தீபிகாவைப் பாரு’ என்று எழுதினால் பொங்கிவிடுவார்கள். ‘ஆஹா இதுவல்லவா பெண்ணியம்’ என்று இங்கே நான்கு பேர் குதிக்கிறார்கள். என்ன பெண்ணியம்? மாதம் ஒரு பெண் மீது ஆசிட் அடிக்கிறார்கள். கணக்கு வழக்கே இல்லாமல் வன்புணர்கிறார்கள். பாலியல் அத்துமீறல்களில் கொடி பறக்கவிடுகிறோம். அதைப் பற்றியெல்லாம் எவ்வளவு நாட்களுக்கு பேசுகிறோம்? சினிமாக்காரனும் சினிமாக்காரியும் பேசினால் மட்டும் மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டிருப்போம். ‘அவள் உடல் அவள் உடை அவள் உரிமை’ என்று யாராவது ஆசிட் அடிக்க வருவதற்குள் இதை நிறுத்திக் கொள்ள  வேண்டும்.

ஹைதராபாத்தில் மெஹதிப்பட்டணம் என்ற இடத்தில் தங்கியிருந்தேன். அது ஒன்றும் அவ்வளவாக வளர்ச்சியடைந்த பகுதி இல்லை. ஒரு பெரிய குப்பை மேடு இருக்கும். அதற்கு பக்கத்திலேயேதான் பேருந்து நிறுத்தம். பேருந்துகளை விட ஷேர் ஆட்டோக்கள் நிறைய வரும்.  ஏறிக் கொள்ளலாம். நிறையக் கல்லூரி செல்லும் பெண்களும் நிற்பார்கள். பத்து மணிக்கு மேலாகவும் பெண்கள் நிற்பார்கள். அங்கு ஒரு பைத்தியகாரன் இருப்பான். தனக்குத்தானே சிரித்துக் கொண்டு கன்னங்கரேல் என இருப்பான். சட்டையெல்லாம் அணிந்திருக்க மாட்டான். கிழிந்த லுங்கி ஒன்றை இடுப்பில் சுற்றியிருப்பான். நாற்பது வயதுக்குள்ளாகத்தான் இருக்கும். அவன் உயரம் அவனது கண்கள் அவனது உடற்கட்டையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும். சரியான இடத்தில் இருந்திருந்தால் சினிமா நாயகன் ஆகியிருப்பான். அப்பொழுது குப்பை மேட்டில் உருண்டு கிடந்தான்.

அவ்வப்பொழுது ஆட்டோக்காரர்கள் சிலர் அவனைத் துரத்திவிடுவார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவ்வப்பொழுது தனது துணியை விலக்கிக் காட்டுவான். அதையும் பைத்தியத்தின் காரணமாகத்தான் செய்கிறான் என்று நினைத்திருந்தேன். ஆனால் பெண்களிடம்தான் இந்தச் சேட்டையைச் செய்திருக்கிறான். ஆரம்பத்தில் மிரட்டியவர்கள் ஒரு நாள் பட்டையைக் கிளப்பிவிட்டார்கள். முகம் கை கால் எல்லாம் ரத்தம் வழியக் கிடந்தான். அப்பொழுதும் தனக்குத்தானாகவே சிரித்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் அந்த இடத்தைவிட்டு நகர்வது போலத் தெரியவில்லை. நான்கு பேர் அவனுக்கு ஆதரவாகப் பேசினால் நாற்பது பேர் அவனுக்கு எதிராக கற்களைப் பொறுக்கினார்கள். வெகு நேரத்திற்குப் பிறகு ஒரு மீட்பு வாகனம் வந்து தூக்கிச் சென்றது. அதன் பிறகு என்ன ஆனான் என்று தெரியவில்லை. ‘அவன் உடல் அவன் உடை அவன் உரிமை’ என்ற வாதம் அவனுக்கும்தானே பொருந்தும்? அவனை ஏன் அடித்தார்கள்? 

எல்லாவற்றிலும் சுதந்திரம் என்பது ஒரு எல்லை வரைக்கும்தான். பணம் வருகிறது என்பதற்காக மீறிவிட்டு ‘Whats your problem' என்று கேட்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் தெரியவில்லை. இதைச் சொன்னால் ‘வந்துட்டாம்பாரு கல்ச்சுரல் போலீஸ்’ என்பார்கள். சில்க்கூர் பாலாஜி அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்.