ஊரே களை கட்டியிருக்கிறது. தொந்தி வயிறும் தும்பிக்கையுமாக திரும்பிய பக்கமெல்லாம் விநாயகர்தான். ஹைதராபாத்தில் அறுபது அடியில் சிலை வைத்திருக்கிறார்கள். பெங்களூரில் அந்த அளவுக்கு உயரமான சிலைகள் இல்லையென்றாலும் வீதிக்கு வீதி வைத்திருக்கிறார்கள். காலையிலேயே தலைக்கு குளித்துவிட்டேன். ஏதாவதொரு விநாயகர் கோவிலுக்குச் சென்று வரலாம் என்றால் ஒவ்வொரு கோவிலிலும் பெருங்கூட்டம். வீட்டிற்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு விநாயகருக்கு சல்யூட் வைத்தால் போதுமல்லவா? முடிந்தது. ஹேப்பி பர்த்டே விநாயகா.
கணபதியார் தமிழ்நாட்டுக்கடவுளே இல்லை என்றால் சண்டைக்கு வந்துவிடுவார்கள். ‘இல்லையென்று சொல்லிவிட்டால் போதுமா?’ உருப்படியான தரவுகள் வேண்டாமா என்பார்கள். கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும். விநாயகர் தமிழ்நாட்டுக்கான கடவுளாக எந்தக் காலத்தில் மாற்றப்பட்டார் என்று வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் மா.இராசமாணிக்கனார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சதாசிவ பண்டாரத்தார் போன்ற வரலாற்று பெருந்தலைகளுக்கு ஒரே கருத்துத்தான் - கணபதி வடநாட்டில் இருந்து வந்தவர்.
பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் சாளுக்கிய நாட்டின் மீது போர் தொடுத்த போது அவனது படைத்தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இன்றைய நாகை மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்காட்டங்குடிக்காரர். சாளுக்கிய நாட்டின் மீதான போரில் பரஞ்சோதியார் வெற்றி பெறுகிறார். இன்றைய கர்நாடகத்தின் பாகல்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் வாதாபி நகரில் கணபதியின் யானை முகச் சிலை வித்தியாசமாக இருக்கிறது. அந்தக் கடவுளைத்தான் வெற்றிக்கடவுளாக அந்த ஊரில் வணங்குகிறார்கள். பரஞ்சோதியார் அந்தக் கடவுளை தனது ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறார். தமிழ்நாட்டுக்கு எடுத்து வருகிறார். தனது சொந்த ஊரான செங்காட்டங்குடியில் ஏற்கனவே இருக்கும் சிவன் கோவிலில் இந்த விநாயகரை வைத்து வழிபடத் தொடங்குகிறார். இது நடந்தது கி.பி.642 ஆம் ஆண்டு. அதிலிருந்துதான் கணபதி தமிழகக் கடவுள் ஆகிறார்.
மற்ற இடங்களில் எப்படியென்று தெரியவில்லை. இப்பொழுதும் எங்கள் ஊரில் பிள்ளையார் சிலையை செய்வதைவிடவும் வேறொரு இடத்தில் இருந்து எடுத்து வந்து வைத்தால் சிறப்பு என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை வாதாபி பிள்ளையாரோடு இணைத்துப் பார்க்கலாம்.
இந்த பரஞ்சோதி வேறு யாரும் இல்லை. சிறுத்தொண்டர்தான். இறைவன் மாறுவேடத்தில் வந்து ‘உனது மகனின் கறி வேண்டும்’ என்று கேட்ட போது சமைத்துக் கொடுத்தார் அல்லவா? அதே சிறுத்தொண்டர். சிறுத்தொண்டர்தான் தமிழகத்துக்கு விநாயகரை எடுத்துவந்தார் என்று நம்பினால் கணபதி தமிழர்களின் கடவுள் இல்லை என்பது உறுதியாகிவிடும். ஆனால் எல்லோரும் நம்புவார்களா?
மற்ற இடங்களில் எப்படியென்று தெரியவில்லை. இப்பொழுதும் எங்கள் ஊரில் பிள்ளையார் சிலையை செய்வதைவிடவும் வேறொரு இடத்தில் இருந்து எடுத்து வந்து வைத்தால் சிறப்பு என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை வாதாபி பிள்ளையாரோடு இணைத்துப் பார்க்கலாம்.
இந்த பரஞ்சோதி வேறு யாரும் இல்லை. சிறுத்தொண்டர்தான். இறைவன் மாறுவேடத்தில் வந்து ‘உனது மகனின் கறி வேண்டும்’ என்று கேட்ட போது சமைத்துக் கொடுத்தார் அல்லவா? அதே சிறுத்தொண்டர். சிறுத்தொண்டர்தான் தமிழகத்துக்கு விநாயகரை எடுத்துவந்தார் என்று நம்பினால் கணபதி தமிழர்களின் கடவுள் இல்லை என்பது உறுதியாகிவிடும். ஆனால் எல்லோரும் நம்புவார்களா?
அப்படியெல்லாம் இல்லை. கணபதியார் தமிழகப் பண்பாட்டில் காலங்காலமாக இருக்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அதற்கான உறுதியான தரவுகள் இல்லை இல்லை. சங்க இலக்கியங்கள், பதினெட்டு கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை என எந்த இலக்கியத்திலும் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் இல்லை. அவ்வளவு ஏன்? பெரிய புராணத்தில் கூட அப்பர் எந்த இடத்திலும் விநாயகரைப் பற்றி பாடுவதில்லை. கணபதீச்சரம் என்றும் குறிப்பிடுவதில்லை. ஆனால் அவருக்குப் பின்னர் வந்த சம்பந்தர் கணபதீச்சரம் என்று பாடுகிறார்.
அப்பரும்(கிபி 575-656) சம்பந்தரும்(கிபி 638-654) கணபதியைத் தமிழகத்திற்கு எடுத்து வந்த சிறுத்தொண்டரும்(கிபி 600-649) கிட்டத்தட்ட ஒரே காலத்தைச் சார்ந்தவர்கள். அப்பர் திருச்செங்காட்டங்குடிக்குச் சென்று பாடியிருக்கிறார். ஆனால் கணபதீச்சரம் என்று எந்த இடத்திலும் பாடியதில்லை. அந்த ஊர்க் கோவிலில் இருக்கும் சிவனைப் பற்றி மட்டும்தான் பாடியிருக்கிறார். அவருக்குப் பின் வந்த சம்பந்தரும் கூட முதல் இரண்டு முறை திருச்செங்காட்டங்குடிக்குச் சென்ற போது கணபதீச்சரம் பற்றி பாடியதில்லை. அங்கு இருக்கும் சீராளத்தேவர் என்ற சிவனைத்தான் பாடுகிறார். சிறுத்தொண்டரின் அழைப்பை ஏற்று மூன்றாவது முறையாக அந்த ஊருக்குச் செல்லும் போதுதான் ‘கணபதியீச்சரம்’ என்று எழுதுகிறார். இந்த மூன்றாவது சந்திப்பு கி.பி. 642க்குப் பிறகு நடைபெறுகிறது. அப்பொழுது நரசிம்மவர்மன் படையிலிருந்து ஓய்வு பெற்ற பரஞ்சோதியார் திருத்தொண்டராக மாறி திருச்செங்காட்டங்குடிக்கு வந்துவிடுகிறார். ஆக இந்தச் சமயத்தில்தான் கணபதி தமிழ்நாட்டில் குடியேறியிருக்கிறார்.
இதற்கு பிறகுதான் கணபதியை வெற்றிக்கடவுள் என்றும் முதற்கடவுள் என்றும் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. தொல்காப்பியத்திலும் கூட குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன், முல்லைக்கு திருமால், மருதத்துக்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்கு கொற்றவைதான். விநாயகருக்கு இடம் இல்லை. பெரிய புராணத்துக்கு பிறகான காலத்தில் எழுதப்பட்ட நூல்களில்தான் கணபதி காப்பு இடம் பெறத் தொடங்கியது.
திருமூலரின் திருமந்திரத்தில் ‘ஐந்து கரத்தினை யானை முகத்தினை’ என்று கணபதி காப்பு இருக்கிறது. திருமூலரின் காலம் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஒருவேளை அவர் சிறுத்தொண்டர் காலத்துக்கு முன்பானவர் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் சிறுத்தொண்டருக்கு முன்பே யானை முகத்தான் இங்கு இருந்திருக்கிறானா? இந்தக் கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க மறைமலையடிகளாரை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். திருமூலரின் பாடல்களுக்குள் சிவனுக்கு இடம் உண்டு. ஆறுமுகனுக்கு இடம் உண்டு. ஆனால் பிள்ளையாருக்கு இடம் இல்லை. ஏன் விநாயருக்கு இடம் இல்லை? ஏனென்றால் திருமூலர் கணபதி பற்றி அறிந்திருக்கவே இல்லை. அதனால்தான் அவரது பாடல்களில் கணபதி பற்றி எதுவும் எழுதவில்லை. அந்தக்காலத்தில் திருமந்திரத்தை சுவடிகளில் எழுதும் போது யாரோ ஒருவர் கணபதி காப்பை இடையில் சேர்த்திருக்கிறார். மிகைப்பாடல். ஆக, திருமூலர் காலத்திலும் கணபதி இருந்திருக்கவில்லை.
இப்படியெல்லாம் இலக்கியத்தைச் சான்றாக வைத்து கணபதி பிற்காலத்தில்தான் தமிழகத்திற்கு வந்திருக்கிறார் என்று சொல்லும் போதெல்லாம் ஏதாவதொரு தமிழாசிரியர் ‘பிள்ளையார்பட்டி தொன்மையானது’ என்று சொல்வார். ஆனால் பிள்ளையார்பட்டி கணேசனும் கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்வன்தான் என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. நரசிம்மவர்மன் சாளுக்கியரை வென்ற பிறகு வடக்கே படையெடுக்கவில்லை. தெற்கு நோக்கி பார்வையைத் திருப்பினான். பாண்டியர்களோடு போரை ஆரம்பித்து வெற்றியும் கொண்டான். வாதாபி போருக்குப் பிறகு கணபதியை வெற்றித் தெய்வமாக போற்றத் துவங்கிய நரசிம்மன் மருதங்குடி என்னும் பிள்ளையார்ப்பட்டியிலும் விநாயகரைக் கொண்டு வந்திருக்கலாம் என்கிறார்கள். பிள்ளையார்பட்டி விநாயகர் வலபுரி, செங்காட்டங்குடி பிள்ளையார் இடம்புரி என்றாலும் வாதாபி பிள்ளையாருக்கும், பிள்ளையார்ப்பட்டி பிள்ளையாருக்கும் உருவ அமைப்பில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. ரா.பி.சேதுப்பிள்ளையும் இதையேதான் சொல்கிறார். பிள்ளையார்ப்பட்டியின் குடவரைக் கோவில் மூலவர் சிவபெருமான் தான். பிற்காலத்தில் அருகில் ஒரு பாறையில் பிள்ளையாரின் வடிவத்தை உருவாக்கினார்கள். அந்த கற்பகப் பிள்ளையாரின் பெயரே ஊருக்கும் பெயராக அமைந்துவிட்டது. ஆக, பிள்ளையார்பட்டி விநாயகனும் வாதாபிக்கு பிறகான விநாயகன்தான்.
இன்றைக்கு இந்துத்துவ அமைப்புகள் தங்களின் சித்தாந்தங்களை கிராமங்கள் வரைக்கு ஊடுருவச் செய்யவும் இந்துக்கள் என்ற பெருங்குடையின் கீழ் சாமானியர்களைக் கொண்டுவரவும் விநாயகரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது அவர்களின் உரிமை. தவறு என்று சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு சிற்றூரிலும் நான்கைந்து ப்ளாஸ்டர் விநாயர்களை வைத்து குதூகலித்து பின்னர் எடுத்து நீர் நிலைகளை நாசமாக்குவதுதான் சங்கடமாக இருக்கிறது. தீபாவளிக்காக காற்றை சீரழிக்கிறோம். விநாயகனுக்காக நீரைச் சீரழிக்கிறோம். சாணத்திலோ, மஞ்சளிலோ பிடித்து வைத்து அருகம்புல்லைச் செருகி பூசையை முடித்து நீரில் கரைத்தால் பிள்ளையார் வேண்டாம் என்று சொல்வாரா என்ன?