Feb 22, 2014

பூனை கண்களை மூடிக் கொண்டால்....

ரேமண்ட் கார்வர்- இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஈரோட்டிலிருந்து தாமோதர் சந்துரு அழைத்து கார்வரின் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்கும் வரை எனக்கு இந்தப் பெயர் தெரியாது. இந்தக் கேள்வியை அவர் கேட்ட போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. யார் என்றே தெரியாத ஒருவரின் புத்தகத்தைப் பற்றி பேசச் சொன்னால்?  ஆனால் பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போகாதல்லவா? எனக்குத்தான் ரேமண்ட் கார்வரைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் அவர் பெரிய ஆள்தான். கூகிளும் விக்கிப்பீடியாவும் அப்படித்தான் சொல்கின்றன. 

யதார்த்தவாதக் கதைகள் செத்துப் போய்விட்டதாக- இப்படி அவ்வப்போது யாராவது கிளம்புவார்கள்- அது செத்துப் போய்விட்டது; இது செத்துப் போய்விட்டது என்று- அப்படி யதார்த்தவாதம் செத்துப் போனதாக பேச்சு வந்த காலத்தில் ‘இதோ நான் இருக்கேன்’ என்று சிகரெட்டும் கையுமாக களமிறங்கி பேனாவைச் சுழற்றிய முக்கியமான ஆள் கார்வர்.

எழுத்து என்றாலே அது ராஜாக்களைப் பற்றியும், பிரபுக்களைப் பற்றியும், பணக்காரர்களைப் பற்றியும் மட்டும் மேட்டுக்குடிதனத்தோடு எழுத வேண்டும் என்ற கற்பனாவாதத்தை(இதை ரொமாண்டிசம் என்கிறார்கள்) தாண்டி ‘சாமானிய ஆட்களைப் பற்றியும் எழுதலாம்ய்யா’ என்று ஒரு கூட்டம் கிளம்பியது. அது யதார்த்தவாத (Realism) எழுத்து. பூச்சும் அரிதாரமும் இல்லாமல் இருப்பதை இருப்பது மாதிரியே நம்மைச் சுற்றிய விஷயங்களை யதார்த்தமாக எழுதுவது. ரியலிஸத்தில் கார்வர் இன்னுமொரு படி மேலே போயிருக்கிறார். அவருடைய எழுத்து டெர்ட்டி ரியலிஸம். பொறுக்கி, குடிகாரன், திருடன், கைவிடப்பட்ட பெண் இவர்களையெல்லாம் கதை மாந்தர்களாக வைத்து எழுதுவது.

ஜல்லியை நிறுத்திக் கொண்டு மேட்டருக்கு போய்விடலாம்.

கார்வரின் புத்தகம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இல்லை. தமிழில்தான். க.மோகனரங்கன், சூத்ரதாரி, செங்கதிர் மற்றும் விஜயராகவன் ஆகிய நான்கு பேர்கள் சேர்ந்து கார்வரின் பன்னிரெண்டு கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்தக் கதைகளைப் பற்றித்தான் கூட்டத்தில் பேச வேண்டும். 

கிட்டத்தட்ட வாசித்து முடித்தாகிவிட்டது. 

பன்னிரெண்டுமே நல்ல கதைகள்தான். மிக எளிமையான மொழி நடையாலான கதைகள் இவை. தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை ரேமண்ட் கார்வர் கதைகளாக்கிவிடுகிறார். ஊர் ஊராக பெட்டி படுக்கையோடு இடம் மாறிக் கொண்டிருக்கும் அம்மா, ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் தனது மனைவியை கவர்ச்சிகரமானவளாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் கணவன், வாழ்க்கையில் பிரியும் கணவனும் மனைவியும் தங்களின் குழந்தைக்காக அடித்துக் கொள்வது போன்ற கதைகள். வழவழா கொழகொழா இல்லாத கதைகள் இவை.

என்னதான் ‘க்ளாஸிக்’ என்றாலும் மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்கும் போது அப்படியொன்றும் தாய்மொழியில் வாசிப்பது போல இருப்பதில்லை. துளி நெருடல் இருக்கும். இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. இருந்தாலும் கூட இது போன்ற புத்தகங்களை வாசிப்பது மிக அவசியம் என நினைக்கிறேன்.

அப்படி நினைப்பதற்கு ஒரு ப்ளாஷ்பேக் இருக்கிறது.

ஹைதராபாத்தில் இருந்த சமயம் பெரும்பாலான நாட்கள் சாரதி ஸ்டுடியோஸூக்கு ஓடிவிடுவேன். அங்குதான் பிலிம் கிளப் இயங்கிக் கொண்டிருந்தது. எஸ்.வி.ராமகிருஷ்ணன் அதில் உறுப்பினர். அவர் தயவில் அயல்மொழி படங்களை ஓசியில் பார்த்துக் கொண்டிருந்தேன். மற்ற மொழிப்படங்கள் என்றால் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டேன். ஆனால் பிரெஞ்ச், ஹங்கேரிப் படங்கள் என்றால் தவறவிட்டதில்லை. அந்தப்படங்களில் நிச்சயம் ஓரிரு ‘ஸீன்களாவது’ தேறிவிடும் என்பதைத் தவிர வேறு முக்கியமான காரணங்கள் இல்லை. 

ஆனால் எஸ்.வி.ஆர் விட மாட்டார். படம் முடிந்த பிறகு ‘என்ன பார்த்தே?’என்பார். அவர் கேட்பது வேறு அர்த்தத்தில். ஆனால் ஆரம்பத்தில் அவர் எந்த அர்த்தத்தில் கேட்கிறார் என்று புரியாது. அவருக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் வயது வித்தியாசம். எதைப் பார்த்ததாகச் சொல்வது? பிதுங்கப் பிதுங்க விழிப்பேன். அவராகவேதான் சொல்வார் ‘இந்த மாதிரி வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும் போது அந்த நாட்டோட கல்ச்சரை தெரிஞ்சுக்கலாம். எல்லா நாடுகளுக்கும் போகவா போறோம்? இப்படியான படங்கள்தான் அதற்கான வாய்ப்பு’ என்று. பிரெஞ்சு, ஹங்கேரியில் எல்லாம் இதுதான் கல்ச்சர் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்ட காலம் அது. 

அயல்மொழிப்படங்கள் மட்டுமில்லை; அயல்மொழி புத்தகங்களும் கூட அதே மாதிரிதான். அந்த தேசத்தின் பண்பாடு, அந்த மக்களின் வாழ்வியல் முறை போன்றவற்றை மட்டுமில்லை- அந்த மொழியில் எழுத்தாளர்கள் நடத்தும் விளையாட்டுக்களை புரிந்து கொள்ளவும், நமது இலக்கியத்திற்கும் பிற மொழிகளின் இலக்கியத்திற்குமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளவும் கூட இந்தப் புத்தகங்கள் உதவுகின்றன. 

‘வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு’ என்ற இந்தப் புத்தகமும் அதையேதான் செய்கிறது.

ரேமண்ட் கார்வரின் இந்தப் புத்தகம் பற்றித்தான் ஈரோட்டில் இன்று பேசுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். நாஞ்சில்நாடன், பெருமாள் முருகன், மகுடேஸ்வரன் என்ற ஜாம்பவான்கள் வருகிறார்கள். சொதப்பாமல் இருக்க இந்த நள்ளிரவில் கார்வரின் விரல்களை மீண்டுமொருமுறை பிடித்துக் கொண்டு அமெரிக்காவை ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கிறேன். ஆமென்!


0 எதிர் சப்தங்கள்: