கன்னடத்தில்‘கூபே’ என்றால் கூகை என்று அர்த்தம். ஆட்டோக்காரர், பஸ் கண்டக்டர், போக்குவரத்து ஒழுங்குக் காவலர் என்று யாராக இருந்தாலும் இந்த ஊரில் அடுத்தவனைத் திட்டுவதற்கு இந்தச் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். சென்னையில் ‘ங்கோத்தா’ புழங்குவது போல. ஆனால் சென்னையில் அநியாயம். திட்டுவதற்கு மட்டுமில்லாமல் அதை மிக மிக சாதாரணமான சொல்லாக மாற்றிவிட்டார்கள். ‘ங்கோத்தா செம ஸ்பீடு...ங்கோத்தா போலீஸ்காரன் கை காட்டுனான்...ங்கோத்தா நிக்காம வந்துட்டேன்’ என்று ஒரு வரியை முடிப்பதற்குள் மூன்று முறை கூட சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். மொழி மீதான ஆளுமை மிக்கவனாக இருந்தால் ஒரே வாக்கியத்தில் ஐந்து அல்லது ஆறு முறை கூடச் சொல்லிவிடுகிறார்கள்.
சென்னையில் ஒரு ஆட்டோக்காரரிடம்தான் இந்த வார்த்தையில் முதன்முறையாக திட்டு வாங்கினேன். சென்ட்ரலில் இறங்கி பேருந்துக்காக போய்க் கொண்டிருந்த போது ‘ஆட்டோ வேணுமா சார்?’ என்று பவ்யமாகத்தான் கேட்டார். நெற்றி நிறைய திருநீறும் ஆட்டோவுக்குள் ஊதுபத்தியுமாக ஆன்மிகம் சொட்டிக் கொண்டிருந்தது. எப்படியிருந்தாலும் ஆட்டோவில் போகப் போவதில்லை. ஆனால் ஒரு பொது அறிவுக்காக கேட்டு வைத்துக் கொள்ளலாம் என்று வாயைக் கொடுத்துவிட்டேன்.
‘வேளச்சேரி போகோணுங்கண்ணா...எத்தனை ஆகுமுங்க?’என்றேன்.
காலில் ரப்பர் செருப்பும், வாய் நிறைய கொங்குத்தமிழுமாக - வாய் மணத்தது என்று சொல்ல முடியாது- அதிகாலையில் இறங்கியிருந்தேன். நாறத்தானே செய்யும்? அது சென்னைக்கு தனியாக வரும் முதல் பயணம். அதற்கு முன்பாக ஒரேயொரு முறை அப்பாவும் நானும் பொறியியல் கவுன்சிலிங்குக்காக புளிச்சோறும் தக்காளிச்சோறும் கட்டிக் கொண்டு வந்திருந்தோம். ஒரே பகல்தான். காரியம் முடிந்ததும் கிளம்பிவிட்டோம். எம்.ஜி.ஆர் சமாதியைக் கூட பார்க்காத பயணம் அது. அதன் பிறகு இப்பொழுதுதான். சென்னை என் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கன்குடி மாரியம்மனை வேண்டிக்கொண்டு காலை கீழே வைத்திருந்தேன்.
‘முந்நூறு கொடு’ என்றார். உடனே சுதாரிச்சு ‘வேண்டாங்கண்ணா’ என்று சொல்லியிருந்தால் தப்பித்திருக்கலாம்.
‘மெட்ராஸ்ல ஏமாத்துவாங்களாமா கண்ணு..ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா வெலையைக் கொறச்சுக் கேளு’ என்று உசுப்பேற்றி ரெயில் ஏற்றி அனுப்பி வைத்திருந்தார்கள். அதே நினைப்பில் இருந்தேன். அந்த இடத்தை விட்டு நகர்வதான பாவனையில் ‘ஐம்பது ரூவாய்க்கு வருவீங்களாண்ணா?’ என்றேன்.
அந்த ஆளுக்கு உச்சி முடி நட்டுக் கொண்டது. இவன் எப்படியும் வரமாட்டான் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். ‘ங்கோத்தா கானங்காத்தால வந்துருக்கானுக பாரு சாவுகிராக்கி’என்றார். திருப்பி என்னவோ சொன்னேன்.
‘டேய் இங்கிருந்து வேளச்சேரிக்கு அம்பது ரூவாயா? சதாய்க்கிறியா? ங்கோத்தா’- கவனியுங்கள் இரண்டு முறை அந்தச் சொல்லைச் சொல்லிவிட்டார்.
‘என்னை என்ன வேணும்னாலும் பேசிக்குங்க...ஆத்தா அப்பன பேசுனீங்கன்னா நடக்கறதே வேறீங்கண்ணோவ்’ என்று எனக்கும் நட்டுக் கொண்டது- ஐ மீன், உச்சி முடி நட்டுக் கொண்டது.
‘என்னடா பண்ணுவ? ங்கோத்தா’ என்று அடிக்க வந்துவிட்டார். இன்னுமொருமுறை திட்டியாகிவிட்டது. இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் அப்பொழுது பொடியனாக இருந்தேன். சென்னையைப் பற்றியும் தெரியாது. ‘என்னடா இது இறங்கினதும் அதுவுமாக சண்டைக்கு வருகிறான்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்து நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டுவிட்டார். கையில் இருந்த பை கீழே விழுந்துவிட்டது. தடுமாறி சமாளித்துக் கொண்டேன்.
சமாளித்துக் கொண்டு என்ன பிரஜோஜனம்? அந்த மனிதனைத் திருப்பி அடிக்கவா முடியும். அந்தக் கிடா மனிதரை என்னால் அசைக்கக் கூட முடியாது என்று தெரியும். இன்னும் நான்கு ஆட்டோக்காரர்கள் சேர்ந்து கொண்டார்கள். எனக்கு அழுகை பொத்துக் கொண்டது. இந்த மாதிரி விஷயங்களில் பொசுக்கென்று கண்ணீர் வந்துவிடும். வேளச்சேரி வரைக்கும் நீ ஆட்டோவில்தான் வர வேண்டும் என்று கூட்டிச் சென்று முந்நூறு ரூபாயை பறித்துக் கொள்வார்கள் என்று நினைத்து பயம் வேறு ஒட்டிக் கொண்டது. அதைவிட முக்கியமான காரணம்- ங்கோத்தா என்று திட்டியது. இவன் யார் என்னைத் திட்டுவதற்கு?
அழுவதைப் பார்த்ததும் ஒரு ஆட்டோக்காரருக்கு பரிதாபம் வந்திருக்கக் கூடும். அந்த கிடாயை அமைதியாகச் சொல்லிவிட்டு என்னை அனுப்பி வைத்துவிட்டார். தப்பித்தது ஆட்டோக்காரர் புண்ணியம் என்று ஓடி வந்துவிட்டேன். ஆனால் புதிய மனிதர்களின் முன்பாக அழுததை எந்தக் காலத்திலும் மறக்க முடிவதில்லை.
இது நடந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் ‘இதற்கெல்லாம் ஏன் அழுதேன்’ என்று தோன்றுகிறது. ஒரு ஈகோ சீண்டல்தான். இல்லையா? சம்பந்தமே இல்லாதவன் நம்மை பொதுவெளியில் திட்டுவது நம்மை கோபமடையச் செய்துவிடுகிறது. இயலுமெனில் எதிர்த்து திட்டுகிறோம்; இன்னும் இயலுமெனில் சண்டைக்குப் போகிறோம். இயலாதபட்சத்தில் உள்ளுக்குள் குமைந்து கொண்டு நகர்ந்துவிடுகிறோம்.
யாராவது நம்மை வசை பாடும் போது காதுகளைப் பொத்திக் கொள்வதோ அல்லது சிரித்தபடியோ அதைத் தாண்டுவதோ நம்மால் இயலாத காரியம் என்று நினைக்கிறேன். நம்மால் என்பது தமிழர்களை. பொதுவாகவே தமிழர்களைச் சீண்டிவிடுவது மிக எளிது. பேருந்தில் சற்று நகர்ந்து அமரச் சொன்னால் கூட முறைப்பவர்கள் அதிகம். திருப்பி ஒரு பார்வை பார்த்தால் சண்டை முட்டிக் கொள்ளும். சாலைகளில் தெரியாத்தனமாக பைக்கை முட்டிவிட்டால் கூட பொங்கிவிடுவார்கள். திருப்பி ஒரு வார்த்தையை நாம் உதிர்த்தால் பற்றிக் கொள்ளும்.
பெங்களூருக்கு வந்தபிறகு தெரியாத மனிதர்கள் என் ஈகோவைச் சீண்டுவதை அனுமதிப்பதேயில்லை.இது கன்னடக்காரர்களிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். அவர்களைச் சீண்டுவது சற்று கடினமான காரியம். கன்னடக்காரன் தவறு செய்தால் ‘கூபே’ என்று திட்டிப்பாருங்கள். பதிலுக்கு சிரிப்பார்கள். தமது தவறை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் முறை. ஆனால் பெங்களூரில் ரெட்டி சமூகத்தினர் அதிகம். கன்னடக்காரனாக இருக்கக் கூடும் என்று நினைத்து ரெட்டியை ‘கூபே’ என்று சொல்லி அடி வாங்கினால் கம்பெனி பொறுப்பாகாது. தவறு அவர்களுடையதாக இருந்தாலும் நாம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
தமிழனாக இருந்தால் திருப்பித்திட்டுவதோடு விட்டுவிடுவான். ரெட்டியாக இருந்தால் தனது வண்டியைக் குறுக்கே நிறுத்தி நம்மை கீழே இறக்கி கும்மிவிடுவார்கள். பீ கேர்புல்!
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment