“ராஜீவ் காந்தி கொலை என்பது இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல். எந்த அராசங்கமும் அல்லது கட்சியும் நமது தீவிரவாதத்திற்கு எதிரான சண்டையில் மென்மையாக நடந்து கொள்ளக் கூடாது” என்று பிரதமர் திருவாய் மலர்ந்திருக்கிறார். இனி ஒவ்வொருவருவராக வரிசையில் நின்று தடியெடுப்பார்கள். இந்த தேசத்தின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதாக ஒருவர் கருதுவார். இந்த தேசத்தின் பாதுகாப்பு அடமானம் வைக்கப்படுவதாக இன்னொருவர் கதறுவார். தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இப்பொழுதே ஹிந்து பத்திரிக்கையில் ‘அதெப்படி மாநில அரசு முடிவெடுக்கலாம்’ என்கிறார்கள். சிபிஐ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் அமைப்பு. அது நடத்திய விசாரணையில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்களாம். நடுநிலையாளர்களைப் போலவே எழுதியிருக்கிறார்கள். வட இந்திய ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. கையில் மைக்குக்கு பதிலாக துப்பாக்கியைக் கொடுத்தால் நேராக வேலூர் சிறைச்சாலைக்கு வந்து ஏழு பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். தேசத்தின் மீதான அன்பு பெருகி வழிகிறது.
வட இந்தியர்களின் கமெண்ட்டுகளை இணையத்தில் வாசித்தால் கண்களில் ரத்தம் கசிகிறது. இந்த நாட்டில் வெறித்தனமான தேசபக்த உணர்ச்சியோடு இத்தனை மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை நினைக்கவே பெருமையாக இருக்கிறது. அவ்வளவு தூரம் போகாவிட்டால் என்ன? இங்கு இருக்கும் சில மனிதர்களைப் பாருங்கள். ராஜீவ் காந்தியோடு சேர்ந்து செத்துப் போன தமிழர்களுக்காக இதயம் வெடிக்கும் அளவுக்கு அழுகிறார்கள். ராஜீவ் காந்திக்காக இல்லாவிட்டாலும் உடன் செத்துப் போன தமிழர்களுக்காகவாவது ஏழு பேரையும் அம்மிக்கல்லுக்கு நடுவில் வைத்து நசுக்க வேண்டும் அல்லது கொதிக்கும் சுண்ணாம்புக் கால்வாயில் போட்டு சாவடித்துவிட வேண்டும் என்கிறார்கள்.
இத்தகைய கருத்துக்களைச் சொல்லும் தமிழ் நல விரும்பிகள்தான் தமிழக மீனவர்கள் நீலக்கடலில் சுடப்பட்ட போதெல்லாம் குடும்பத்தோடு பட்டினி கிடந்து தங்களை வருத்திக் கொண்டவர்கள் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு அத்தனை பாசம்- தமிழர்கள் மீது. முத்துக்குமரன் இறந்த போதும், இலங்கை முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போதும் தங்களைக் கொளுத்திக் கொள்வதற்காக கெரசின் டின்னோடு சுற்றித் திரிந்தவர்கள். அதனால்தான் ராஜீவ்காந்தியோடு செத்துப் போன தமிழர்களுக்கு பதிலாக இந்த ஏழு பேரைக் கொல்ல வேண்டும் என்கிறார்கள்.
இருக்கட்டும்.
ஒன்பது வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அந்த பேட்டரியில்தான் ராஜீவைக் கொன்ற வெடிகுண்டை தயாரித்தார்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். பேட்டரி செல் வாங்கியதற்கான பில் எதுவும் கையில் வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. பிரபாகரனிடம் கணக்கு காட்ட வேண்டுமல்லவா? ‘பேட்டரி செல் 2 ரூபாய்’ என்று பில் வாங்கி வைத்திருக்கக் கூடும். சிபிஐ சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நம்பிக் கொள்வோம்.
இவர்களைக் கொன்றுவிடுவதால் அல்லது தனிமைச் சிறையிலேயே அடைத்து வைப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? ஒருவேளை இவர்கள் தவறு செய்திருப்பவதாகவே இருந்தாலும் வெளியே வந்த பிறகு இன்னொரு தலைவருக்கு குறி வைக்கப்பார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது இவர்களுக்கு தண்டனையளிப்பது அடுத்தவர்களுக்கான பாடமாக இருக்கும் என்றால் இனிமேல் தீவிரவாதிகள் பயந்து போய் தங்களது துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு சரணடைந்துவிடுவார்களா? எதுவுமே நடக்காது.
ஒரு மனிதனுக்கான அதிகபட்சத் தண்டனை என்பது அவனது வாழ்வின் பெரும்பகுதியை தனிமையில் கழிப்பதுதான். அதை இவர்கள் அதிகப்படியாகவே அனுபவித்துவிட்டார்கள். பத்தொன்பது வயதிலும் இருபது வயதிலும் சிறைச்சாலைக்குள் சென்றவர்கள் நாற்பது வயதிலும் ஐம்பது வயதிலும் வெளியே வர முயன்று கொண்டிருக்கிறார்கள். இளமை முழுவதும் சூரியனைப் பார்க்காத பகல்களால் கழிந்துவிட்டது. உடல் முறுக்கம் முழுவதும் விசாரணை என்ற பெயரில் இறங்கிய லத்திகளாலும் சிறையின் தனிமை தின்றதாலும் இளகிவிட்டது. இனியாவது வெளியே வரட்டுமே. நீங்களும் நானும் நம்பிக் கொண்டிருப்பது போல வெளியே வந்தவுடன் அவர்களுக்கு சாதாரண மனிதனைப் போல வாழ்க்கை அமைந்து விடப் போவதில்லை என்பதுதான் நிஜம்.
அவர்களைச் சாவடியுங்கள், அவர்களை தனிமையில் வாட்டுங்கள், அவர்களைக் கொல்லுங்கள் என்று நாம் உணர்ச்சிவசப்பட்டு கை நீட்ட வேண்டியதில்லை. உனது தந்தையைக் கொன்றிருந்தால் இப்படி விட்டுவிடச் சொல்வாயா என்று கேள்வி எழக் கூடும். அதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்கலாம். உங்களது மகனோ மகளோ இந்த நிலைமையில் இருந்தால் உங்களின் நிலைப்பாடு இதுவாகவேதான் இருக்குமா என்று. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுமே அபத்தமானவைதான்.
நமக்கான அரசியல், நமக்கான கோபங்கள் ஆகியவற்றை ஒதுக்கி விட்டு யோசித்துப் பார்த்தால் அவர்கள் வெறும் மனிதர்கள். கிட்டத்தட்ட அனைத்து எலும்புகளும் ஒடிக்கப்பட்ட, அத்தனை உணர்ச்சிகளும் சாகடிக்கப்பட்ட ஜீவன்கள். இன்னும் இருபது வருடங்களோ அல்லது முப்பது வருடங்களோ அதிகபட்சம் வாழ்வார்கள். எத்தனையோ குற்றவாளிகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பித்த அயோக்கியர்களாலும் சூழப்பட்டிருக்கிறோம். இந்த ஏழு பேரால்தான் நமது புனிதத்தன்மை கெட்டுவிடப் போகிறதா?
இவர்களின் விடுதலை என்பது ஓட்டுக்கான அரசியல், தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு, எதிரியை வீழ்த்தும் திட்டம் என்று என்ன காரணமாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். இத்தனை வருடங்களாக இன்று சாவேனா, நாளை சாவேனா என்று எதிர்பார்த்து இருட்டுக்குள் கிடந்திருக்கிறார்கள். கால் நூற்றாண்டு காலத்தை இழந்துவிட்டார்கள். இனியாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே! அவர்கள் வெளிவருவதற்குத் தேவையான மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- எதுவாக இருந்தாலும் தேர்தல் நடப்பதற்குள் ஏழு பேரும் வெளியே வந்துவிட்டால் விடுதலை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம். தவறினால் அவ்வளவுதான். அடுத்த தேர்தல் வரைக்கும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் நிதர்சனம்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment