உங்களது அறியாமையை பார்த்து சிரிக்கிறேன். ஒருவேளை நீங்கள் Product based நிறுவனத்தில் பணியாற்றியதே இல்லை என நினைக்கிறேன். நான் அப்படியான ஒரு நிறுவனத்திற்காக பணிபுரிகிறேன். ஒரு வருடம் ஆகிவிட்டது; எனக்கு எல்லாவிதமான சுதந்திரங்களும் இருக்கின்றன. கணக்கில்லா விடுமுறைகள், வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான அனுமதி, வரையறுக்கப்படாத பணி நேரம்- நான் அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்றாலோ அல்லது நேரத்திலேயே வீடு திரும்பினாலோ யாருமே கேள்வி கேட்பதில்லை. அதற்கான அனுமதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு மின்னஞ்சலை அனுப்பினால் போதும்- விடுமுறை கிடைத்துவிடும். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.
ஆமாம், தேவைப்படாதபட்சத்தில் நீங்கள் பணியிலிருந்து நீக்கப்படுவீர்கள். அரசாங்க அலுவலகங்களைப் போல வெட்டியாக அமர்ந்து பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. நீங்கள் உங்கள் வேலையில் முன்னேற வேண்டும். புதியதாக கற்றுக் கொண்டிருக்க வேண்டும். உழைக்க வேண்டியிருக்கிறது. ஒருபக்கம் வேலையிலிருந்து நீக்குகிறார்கள். இன்னொரு பக்கம் திறமையானவர்களை பிடித்து வைத்துக் கொள்ள சம்பளத்தை இரண்டு மடங்காக்கவும் தயங்குவதில்லை.
நான் சம்பள உயர்வு கேட்டேன். இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 75% உயர்த்திக் கொடுத்தார்கள். ஆறுமாதங்கள்தான் ஆகிறது. இன்னொரு சம்பள உயர்வு வரப் போகிறது. இவையெல்லாம் நாம் வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பதைப் பொறுத்ததுதான். நான் கணினியைக் காதலிக்கிறேன். கற்பதை விரும்புகிறேன். லினக்ஸ் பிடிக்கும். ப்ரோகிராம் எழுதுவது பிடித்திருக்கிறது. பிடித்ததைச் செய்கிறேன். சம்பாதிக்கிறேன். இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவராக இல்லையென்றால், உங்களுக்கு எது பொருத்தமானதாக இருக்கிறதோ அதைத் தேட வேண்டும். புகார் செய்து கொண்டிருக்கக் கூடாது.
எனக்கு இங்கு எல்லாவிதமான சுதந்திரமும் இருக்கிறது. அலுவலக நேரத்திலேயே கூட சில மணி நேரங்கள் உறங்குகிறேன். அலுவலக நேரத்திலேயே சினிமா பார்க்கிறேன். எங்கள் அலுவலகத்திலேயே மினி தியேட்டர் இருக்கிறது. ஒவ்வொரு மதிய நேரத்திலும் விளையாடுகிறேன். மாலை நேரங்களில் அலுவலகத்தின் ஜிம்முக்குச் செல்கிறேன். யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. வீடு போரடித்தால் அலுவலகத்திற்குச் செல்கிறேன். அலுவலகம் போரடித்தால் வீட்டிற்குச் செல்கிறேன். எதை விரும்பினாலும் எனது மேனஜரிடம் கேட்கிறேன்.எந்தத் தடையும் இல்லை. ஐடி நிறுவனத்திற்காக வேலை செய்வதை பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். ஏனென்றால் இங்குதான் எனது அத்தனை சுதந்திரங்களையும் அனுபவிக்க்கிறேன்.
நன்றி,
கோகுல்
அன்புள்ள கோகுல்,
உங்களின் கடிதம் சந்தோஷம் அளிப்பதாக இருக்கிறது. தனது வாழ்க்கையைக் கொண்டாடுவதாகச் சொல்லும் மனிதர்களைப் பார்ப்பதைவிட பெரிய சந்தோஷம் வேறு இருக்க முடியாது என நம்புகிறேன். இங்கு புலம்புவர்கள்தான் அதிகம். அது சரியில்லை; இது சரியில்லை என்று சொல்வதற்கு ஏதாவது ஒரு காரணம் சிக்கிக் கொள்ளும்.அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உங்களின் இந்த வாக்குமூலம் வித்தியாசமானது. அதற்காகவே இதை பொதுவெளியில் வெளியிட உங்கள் அனுமதி தேவை. (உங்கள் நிறுவனத்தின் பெயரை நீக்கியிருக்கிறேன்)
உங்களின் இந்தக் கடிதம் சம்பந்தமாக இரண்டு விஷயங்களைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
முதலாவது விஷயம், இந்தத் துறையில் அத்தனை பேருக்கும் உங்கள் நிறுவனம் வேலை கொடுப்பதில்லை. அதனால் பெரும்பாலானோருக்கு இந்த வசதிகள் வாய்ப்பதில்லை.
இரண்டாவது விஷயம், இது போன்ற பிரச்சினைகளில் உங்களைப் போன்ற ஐந்து சதவீதம் பேரின் சந்தோஷங்களையும் பிரதாபங்களையும் எழுதுவதையும் விடவும் அறுபது சதவீதம் பேரின் பிரச்சினைகளை எழுதுவதுதான் அவசியமானது என்று நினைக்கிறேன்.
இவை தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஒன்று சொல்ல வேண்டும். உங்களின் உற்சாகத்தையும், சம்பளக் கணக்கையும் பார்த்தால் நிச்சயமாக நீங்கள் வேலைக்குச் சேர்ந்து ஐந்து வருடங்கள் கூட ஆகியிருக்காது என்று கணித்துவிடலாம்.
எடுத்தவுடனேயே பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் இப்படித்தான் இருக்கும். இது ஒரு ஹனிமூன் காலம். சொல்கிறேன் என்று தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்- முதல் ஐந்து வருடங்களுக்கு அப்படித்தான் தெரியும். நமது நிறுவனம்தான் பெஸ்ட்; நமது வேலைதான் பெஸ்ட்; நமது சம்பளம்தான் பெஸ்ட். இப்படி எல்லாமே ‘பெஸ்ட்’. உலகமே கிட்டத்தட்ட காலடியில் கிடப்பது போலத்தான்.
இந்த சொகுசும், அதீதமான பெருமிதமும்தான் ஒருவனது வாழ்க்கை முறையை மாற்றுகிறது. கைகளில் நிறைய பணம் புழங்கும். திருமணம் ஆகியிருக்காது. கேள்வி கேட்க அருகாமையில் யாரும் இருக்க மாட்டார்கள். நண்பர்கள் பெருகியிருப்பார்கள். ரெஸ்டாரண்ட்கள், ஊர் சுற்றல்கள், மால், காஸ்ட்லி ஆடைகள் என்று ஆளை புரட்டிப் போடும். இனி எந்தக்காலத்திலும் கீழே விழப்போவதில்லை என்ற எண்ணம் வந்து மண்டையில் ஏறிக் கொள்ளும்.
‘ஆளே மாறிட்டாண்டா’ என்கிறார்கள் அல்லவா? அதைக் கண்கூடாக பார்க்கலாம்.
இந்த ‘ஆளே மாறிட்டாண்டா’தான் பிற துறைகளில் இருப்பவர்களுக்கு எரிச்சல் உண்டாக்குகிறது. அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பீற்றிக் கொண்டு திரிவோம்.
நம் வாழ்க்கை முறையை புரட்டிப் போடும் இத்தகைய வசதிகளும் வாய்ப்புகளும் ஒருவிதமான பொறிதான். நம்மையும் அறியாமல் சிக்கிக் கொள்வோம். சீக்கிரம் வெளியில் வரவே முடியாத பொறி அது. சுதந்திரம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது எப்பொழுதும் சுதந்திரமாகவே இருப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
நம் வாழ்க்கை முறையை புரட்டிப் போடும் இத்தகைய வசதிகளும் வாய்ப்புகளும் ஒருவிதமான பொறிதான். நம்மையும் அறியாமல் சிக்கிக் கொள்வோம். சீக்கிரம் வெளியில் வரவே முடியாத பொறி அது. சுதந்திரம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது எப்பொழுதும் சுதந்திரமாகவே இருப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
உங்களுக்கு இப்பொழுது இருக்கும் இதே மனநிலை வேலைக்குச் சேர்ந்து பத்து வருடங்கள் கழித்தும் இருந்தால் அதை வரம் என்று தாராளமாகச் சொல்லிவிடலாம். உங்களுக்கு அத்தகைய வரம் கிடைக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள். ஆனால் அதற்கு முன்பாக ‘உன் அறியாமையைப் பார்த்துச் சிரிக்கிறேன்’ என்றெல்லாம் சொல்வது சரியானதில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.
மிக்க அன்புடன்,
மணிகண்டன்
தொடர்புடைய பதிவு: ஐடித் துறையில் உரிமையும் சுதந்திரமும் இருக்குதானே?
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment