நண்பர் ஒருவர் முப்பதுக்கு நாற்பது சைட் வாங்கியிருக்கிறார். பெங்களூரில்தான். சற்று வயதான நண்பர். சற்று என்றால் அறுபதைத் தாண்டிய வயது. 1970லேயே பெங்களூர் வந்துவிட்ட மலையாளி. இங்கு இருக்கும் தமிழர்களை விடவும் சுத்தமாகத் தமிழ் பேசுவார். இத்தனை வருடங்களாக இங்குதான் பெயிண்டிங் காண்டராக்டராக இருந்தார். இப்பொழுது பையன் தலையெடுத்துவிட்டான். தனது இரண்டு பெண்களையும் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. இனி இவரது சாம்ராஜ்யத்தில் மனைவியும் இவரும்தான். இனி வேலை செய்தது போதும் என்று நினைத்தவர் ஓய்வெடுக்கலாம் என முடிவு செய்து தன்னிடமிருந்த வேறொரு இடத்தை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் இந்த முப்பதுக்கு நாற்பதில் வீடு கட்டப் போகிறார். ரிட்டையர்ட்மெண்ட் வாழ்க்கை.
சென்றவாரத்தில் போர்வெல் துளை போட்டிருக்கிறார்கள். துளை போட்டதுதான் மிச்சம். ஒரு சொட்டுத் தண்ணீரைக் காணவில்லையாம். வெறுத்துப் போய் கடையில் வாங்கிய ஒரு பாட்டில் தண்ணீரைக் குழிக்குள் ஊற்றிவிட்டு மூடிவிட்டார்கள். அவரை சில மாதங்களுக்கு முன்பாக முதன்முதலாக ஒரு டீக்கடையில்தான் சந்தித்துப் பேசினேன். பரஸ்பரம் பேசிக் கொண்டதில் பழகிக் கொண்டோம். மாலை நேரத்தில் டீ குடிப்பதற்காக வெளியே போகும் போது அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வோம். அதே கடையில் நேற்று சந்தித்த போதுதான் இந்த விஷயத்தைச் சொன்னார். அவருக்கு குழியில் தண்ணீர் வரவில்லை என்பது பற்றி ரொம்பவும் வருத்தம். வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வாங்கிய இடத்தில் முதல் முயற்சியே தோல்வியடைந்துவிட்டதே என்ற வருத்தம்தான். ஆனால் இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பெங்களூரில் கிட்டத்தட்ட பல இடங்களில் இதுதான் நிலைமை.
முக்கால் ஏக்கர் இடம் இருந்தால் முப்பது நாற்பது சைட்டுகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு துளை போட்டுவிடுகிறார்கள். பல இடங்களில் இரண்டு அழ்துளைக் கிணறுகளுக்கு இடையே பத்து அடி தூரம் கூட இருப்பதில்லை என்பதுதான் உண்மை. இவன் குழியில் இருப்பதை அவன் உறிஞ்சிக் கொள்கிறான் அடுத்த மூன்றாவது மாதத்தில் இந்தக் குழியிலிருந்து இன்னொரு குழி உறிஞ்சிக் கொள்ளும். அவ்வளவுதான். அடுத்த பத்தடியில் இன்னொருத்தன் குழியைத் தோண்டினால் வெறும் புகைதான் வரும்.
பூமாதேவிக்கு மட்டும் கை இருந்தால் நம்மையெல்லாம் இழுத்துப் போட்டு புதைத்துவிடுவாள். எத்தனை வலியைத்தான் தாங்குவாள்?
‘நான் இந்த ஊருக்கு வந்த போது வருடத்தில் முக்கால்வாசி நாட்கள் மழை பெய்யும்’ என்றார் அந்த பெயிண்டர் நண்பர். அவர் சொல்வது நாற்பது வருடங்களுக்கு முன்பு. அப்பொழுது இங்கு அத்தனை மரங்கள் இருந்தன. கார்டன் சிட்டி என்பதுதானே இதன் இன்னொரு பெயர். அதனால் மழை பெய்திருக்கும். இப்பொழுதுதான் கண்ணில் படும் மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மழை எப்படி பெய்யும்? ஆளாளுக்கு மொட்டை மாடியில் நின்று அடுத்தவன் தலையில் சிறுநீர் கழிக்க வேண்டியதுதான்.
அரசாங்கம் மரங்களை வெட்டுகிறது என்று புகார் வாசிக்கிறார்கள். அரசாங்கமும்தான் என்ன செய்யும்?
ஒரேயொருவன் அலுவலகம் வருவதற்கு எண்பது லட்ச ரூபாய் காரை பயன்படுத்துகிறான். இப்பொழுதெல்லாம் ஐந்து லட்ச ரூபாய் காரை யார் வேண்டுமானாலும் வாங்கிவிட முடிகிறது. கண்ணாடியை ஏற்றிவிட்டுக் கொண்டு பாடல் கேட்டபடியேதான் அலுவலகம் வருகிறார்கள். இரண்டு தெரு தள்ளிய கடைக்குச் செல்வதற்குக் கூட பைக்கை எடுத்துக் கொள்கிறோம். அதுவும் பைக்கை உதைக்க வேண்டியதில்லை. பட்டன் ஸ்டார்ட். வாழ்க்கையை வெகு சொகுசாக்கிக் கொண்டோம்.
ஒவ்வொரு ட்ராபிக் சிக்னலிலும் இருபது நிமிடங்கள் ஆகிறது. காலையிலும் மாலையிலும் போக்குவரத்து காவலாளிகள் மென்று தண்ணீர் குடிக்கிறார்கள். அப்படியிருந்தும் முன்னால் போகும் வண்டியில் ‘டொம்’ என்று அடித்துச் சண்டை போடுகிறார்கள். அருகில் வரும் கார்க்காரன் மீது கோடு போட்டு வண்டியை விட்டு இறங்குகிறார்கள். வேறு வழியே இல்லாமல் மரங்களை வெட்டி சாலைகளை அகலப்படுத்த அரசாங்கம் டெண்டர் விடுகிறது. ஒரு மரத்துக்கு பதிலாக ஐந்து மரங்களை நடுவோம் என வெகு ஜம்பமாக அறிவிப்பார்கள். ஆனால் எங்கே நட்டார்கள், அது முளைத்த குழியை விட்டு மேலே வந்ததா என்று ஒன்றும் தெரியாது.
அறுபது வயதுடைய ஒரு மரத்தை வெட்டிவிட்டு அதற்கு பதிலாக ஐந்து செடிகளை நட்டி வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
அடிப்படையைச் சரி செய்யாமல் க்ளோபல் வார்மிங், க்ரீன் ஹவுஸ் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இல்லையா?
மாற்றம் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும். வீட்டில் கார்பொரேஷன் நீர் இருந்தாலும் கூட ‘எதுக்கும் போர் போட்டு வைத்துக் கொள்ளலாம்’ என்று குழி தோண்டிவிடுகிறார்கள். ‘எதுக்கும் இருக்கட்டுமே’ என்பதைப் போன்ற அசிங்கமான மனநிலை வேறு இல்லை. ஆனால் அது நம் டி.என்.ஏவிலேயே இருக்கிறது.
‘எதுக்கும் இருக்கட்டுமே’ என்று பேசும் போது இன்னொரு விஷயமும் ஞாபகத்திற்கு வருகிறது.
பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்கித் தருவதாக ஒரு திட்டம் இருக்கிறது அல்லவா? அது குறித்து ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள். பல பள்ளிகளில் புத்தகங்களை பராமரிக்க மாட்டார்கள். ஆசிரியர்கள் வீட்டுக்குத்தான் போகும். பையன்களுக்கு பயன்படாது’ என்று. அவர் சொல்வதும் சரிதான். ‘எதுக்கும் இருக்கட்டுமே’ என்று ஆசிரியர்கள் தினமும் இரண்டு புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றால் கடைசியில் பள்ளியில் ஒன்றும் இருக்காது. அதனால் பள்ளிகளை மிக கவனமாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதுவரைக்கும் இந்தத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது. இன்னுமொரு இருபதாயிரத்துக்கான காசோலையை ஒருவர் அனுப்பி வைத்திருக்கிறார். அது இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. ஆக முப்பதாயிரம் ரூபாய்கள் உறுதி. அது போக உதவி செய்ய விரும்புவதாக சுமார் பத்து மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. அவை ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து பத்தாயிரம் வரை வேறுபட்ட தொகைகள். அவையும் கிடைக்கும்பட்சத்தில் இப்போதைய நிலையில் எப்படியும் ஐந்து அல்லது ஆறு பள்ளிகளுக்கு புத்தகங்களை வாங்கிட முடியும் என நம்பிக்கை இருக்கிறது.
இந்தப் பண விவகாரம் பற்றி எங்கள் வீட்டில் அத்தனை ஒப்புதல் இல்லை. ‘நம்மால் முடிந்தால் செய்ய வேண்டும். முடியவில்லையென்றால் விட்டுவிட வேண்டும். அடுத்தவர்கள் விரும்பினால் அவர்களாகச் செய்து கொள்ளட்டும்’ என்று அம்மாவும், தம்பியும் பயப்படுகிறார்கள். பணம்தான் பெயரைக் கெடுக்கும் ஆயுதம் என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. அதனால் ஒரு ரூபாயைக் கூட எனது கணக்குக்கு மாற்றக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. மேற்சொன்ன இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்தவர் தனது பெயர் எந்தவிதத்திலும் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்றார். அதனால் அந்தத் தொகையை மட்டும் எனது பெயருக்கு காசலோலையாக வாங்கிக் கொள்ள சம்மதித்திருக்கிறேன்.
‘இன்றைக்கு கூரியர் வரும்’ என்று சொன்ன போது அம்மாவும் அப்பாவும் பதறிவிட்டார்கள். ‘ஐம்பதாயிரம் ரூபாய்க்குச் செக் வரும்’ என்று சொன்னால் பயப்படத்தானே செய்வார்கள்? ஒருவரேதான் மொத்தத் தொகையையும் கொடுக்கிறார். இருபதாயிரம் ரூபாயை இரு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் இன்னொரு முப்பதாயிரம் ரூபாயை ‘வாழை’ அமைப்பினருக்கு கொடுத்துவிடுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.
நிசப்தம் தளத்தில் சென்ற நவம்பரில் ‘வாழை’ பற்றி எழுதியதன் வழியாக அந்த அமைப்புக்கு இதுவரையில் முப்பதாயிரம் கிடைத்திருக்கிறது. இப்பொழுது கூரியரில் வந்து கொண்டிருக்கும் இன்னொரு முப்பதாயிரம் ரூபாய். ஆக மொத்தம் அறுபதாயிரம் ரூபாய் அந்த அமைப்பினருக்குக் கிடைத்திருக்கிறது. வழங்கியவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.
இந்தத் தொகைகளைப் பார்க்கும் போது எனக்கும் சற்று பயமாகத்தான் இருக்கிறது. இதை உண்மையாகவேதான் சொல்கிறேன். அடுத்தவர்களின் பணத்தை வாங்கும் போது சிறு பதற்றம் இருக்கும் அல்லவா? அதுதான். நம்மை நம்பிக் கொடுக்கிறார்கள். அந்த நம்பிக்கை துளி கூடச் சிதையாமல் காப்பாற்ற வேண்டும் என்ற பயம்தான் இது.
வெளிப்படையாக இருந்தால் பிரச்சினை இருக்காது என நம்புகிறேன். பார்க்கலாம். துளி பிசகினாலும் இது போன்ற காரியங்களைச் சுத்தமாக கைவிட்டுவிட வேண்டும்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment