ஐடி துறையில் உரிமையும் சுதந்திரமும் இருக்கிறதுதானே? இல்லாமல் என்ன? தாறுமாறாக இருக்கிறது.
மேனஜரை பெயர் சொல்லி அழைக்கலாம். அவரோடு ஒரே டேபிளில் அமர்ந்து மதிய உணவு உண்ணலாம். அவருடன் ‘தம்’ அடிக்கப் போகலாம். ஆனால் மற்ற துறைகளில் இதெல்லாம் முடியுமா? மேனஜர் வந்தாலே எழுந்து நிற்க வேண்டும். பேச்சுக்கு பேச்சு ‘சார்’ போட வேண்டும். அவர் காலால் தட்டிவிடும் வேலையை நாம் தலையால் செய்து முடிக்க வேண்டும் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்தான்.
வெளியில் சொல்வதற்கு வேண்டுமானால் இது பந்தாவாக இருக்கும். ஆனால் உண்மைதான் பல்லிளித்துக் கொண்டு நிற்கும்.
என்ன சுதந்திரம் இருக்கிறது?
இதோ வங்கியில் பணிபுரிபவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தை முடித்தால் பிஎஸ்என்எல் காரர்கள் ஆரம்பிப்பார்கள். அவர்கள் முடித்தால் வேறு யாராவது. இப்படி போராட்டங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். மரபுசாரா தொழிலாளர்கள் கூட எப்படியோ ஒன்றிணைந்துவிடுகிறார்கள். பாலுக்கு விலை இல்லை என்று பால் வியாபாரிகள் பாலைக் கீழே கொட்டி போராடுகிறார்கள். ஆட்டோ கட்டணத்தை உயர்த்தச் சொல்லி டிரைவர்கள் நகரை ஸ்தம்பிக்கச் செய்கிறார்கள். இதெல்லாம் முடியாத தொழிலாளர்கள் குறைந்தபட்சம் தொழிற்சாலையின் நுழைவாயிலில் நின்று தர்ணா செய்வார்கள்.
ஐ.டியில் இதையெல்லாம் செய்ய முடியுமா? போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம். குறைந்தபட்சம் அடிப்படையான கோரிக்கைகளை பொதுவில் முன் வைக்க முடியுமா? பொதுவில் கூட வேண்டாம். மேனேஜரிடம் சொல்வதற்கு எத்தனை பேருக்கு தைரியம் இருக்கிறது? இங்கு எதுவுமே சாத்தியமில்லை. வருகிறோம். வேலையைச் செய்கிறோம். கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொள்கிறோம். வேலையை விட்டு போகச் சொன்னால் கிளம்பிவிடுகிறோம். அவ்வளவுதான். கோரிக்கையும் கிடையாது கீரிக்கையும் கிடையாது.
பிற துறைகளில் வருடாந்திர போனஸ் குறைந்தால் கேள்வி கேட்பார்கள். சம்பள உயர்வு இல்லையென்றால் கேள்வி கேட்பார்கள். வேலை அதிகமாகக் கொடுத்தால் மறுப்பார்கள். இதில் ஒன்றையாவது இங்கு செய்ய முடியுமா என்ன? ம்ஹூம். எதற்குமே சாத்தியமில்லை.
சென்ற வாரத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆட்களை வீட்டுக்கு அனுப்பிய விவகாரம் செய்தித்தாள்களில் வெளிவந்தது. அதை Man slaughter என்றார்கள். blood bath என்றார்கள். அதன் பிறகு? அவ்வளவுதான். இதோடு விவகாரம் முடிந்துவிடும். இனிமேல் அதைப் பற்றி வெளியே பேச மாட்டார்கள். இப்படியான வேலைக் குறைப்பை ‘திடுதிப்’ என்று வேறு துறைகளில் செய்ய முடியுமா? யூனியன், போராட்டம் என்று மொத்த நிறுவனமும் ஸ்தம்பித்துவிடும். ஆனால் ஐடித்துறையைப் பொறுத்தவரைக்கும் ‘என் வேலையானது எனக்கும் என் குடும்பத்திற்கும் முக்கியம்’என்ற கான்செப்ட்தான். என் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி அறுந்துவிடாமல் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்.
ஐடி துறை நிறுவனங்கள் தனது நிறுவன ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்பட்டும். அவர்களின் நிறுவனம்; அவர்களின் முடிவு. அதைப் பற்றி பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்பாகத் தெரிவித்தால் கூட மனதளவில் தயாராகிக் கொள்ளலாம். அப்படியா செய்கிறார்கள். அலுவலகத்திற்குள் வந்தவனை அழைத்து அடுத்த பத்து நிமிடங்களில் வீட்டுக்கு அனுப்புவது ஆட்டை வெட்டுவது போல் அல்லவா? தொண்ணூறு சதவீதம் பேர் அப்படியே நொறுங்கிப் போகிறார்கள். அடுத்த மாத வாடகை, குடும்பச் செலவு, குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு என அத்தனையும் பூதாகரமாக வந்து அழுத்தத் தொடங்கும். இருண்டு போய்விடுகிறார்கள்.
இதையெல்லாம் இங்கு யாராவது கேட்க முடியுமா என்ன? மூச்சு விட முடியாது.
அதைத்தான் சென்ற முறை எழுதியிருந்தேன். வேலையைவிட்டு அனுப்பப்பட்ட ஒருவன் ஹெச்.ஆரை அடித்தான் என்றும் அதன் மூலம் தனது குறைந்தபட்ச எதிர்ப்பை நிறுவனத்திற்கு காட்டியிருந்தான் என்றும். அதற்கே இன்னமும் ட்விட்டரில் என்னைத் தாளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார். நல்லவேளையாக நான் ட்விட்டர் பக்கம் போவதில்லை. ஹெச்.ஆர் என்ன செய்வான்? அவன் பாவம்தான். மேலே இருக்கும் ஆட்களின் கட்டளையை நிறைவேற்றுகிறான். ஆனால் வேலையிலிருந்து அனுப்பப்படும்போது தனது எதிர்ப்புணர்வை காட்டுவதற்கு வேறு எந்த வழியுமே இல்லாதவன் அதைச் செய்தான் என்பதற்காக எழுதியிருந்தேன். அது ஒரு exceptional case. கிட்டத்தட்ட அத்தனை பேரும் தலையைக் குத்திக் கொண்டும் கண்களைக் கசக்கிக் கொண்டும்தான் வெளியேறுவார்கள். இவன் செய்த காரியத்தை பெருமைக்காகச் சொன்னதாக தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
வேலையை விட்டு அனுப்புவது இருக்கட்டும் விடுங்கள்.
விடுப்பு கொடுக்க எத்தனை அலுவலகங்களில் தயங்குகிறார்கள் தெரியுமா? விடுப்புக் கொடுக்காத மேனேஜரைக் குறை சொல்லவில்லை. அவருக்கு டார்கெட் வைத்துவிடுகிறார்கள். ‘உன்னிடம் இருக்கும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் இந்த வாரம் வேலை செய்திருக்க வேண்டும்’ என்கிறார்கள். அவர் என்ன செய்வார்? மீறி விடுப்புக் கொடுத்தால் அவர் தலையில் கை வைப்பார்கள். மிக நைச்சியமாக வேலை நேரத்தை அதிகரிக்கிறார்கள். மாலை நேரத்தில் சூரியன் மறைவதற்குள் வீடு செல்பவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் மாதத்தில் ஒரு நாள் கூட அதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள்தான் அதிகம். மீறி வீட்டுக்குச் சென்றாலும் அங்கே பெட்டியைத் திறந்து வேலை செய்பவர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள்.
‘உங்களுக்குத்தான் சம்பளம் கொட்டிக் கொடுக்கிறார்களே என்று கேட்கக் கூடும்’. ஆமாம். கொட்டிக் கொடுத்தார்கள்- ஒரு காலத்தில். இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மார்ச் மாதம் வந்தால் போதும். ‘நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது’ என்று பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள். ‘இந்த வருடம் அநேகமாக சம்பள உயர்வு இருக்காது; அல்லது மிகக் குறைந்த அளவில் இருக்கும்’ என்ற நினைப்பை நம்மிடையே உருவாக்கிவிடுவார்கள். நாம் தயாராகிக் கொள்வோம். கடந்த நான்கைந்து வருடங்களில் நல்ல சம்பள உயர்வு என்று பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
வேலை, சம்பளம் என்பதெல்லாம் கூட இரண்டாம் பட்சம். அதைவிடச் சிக்கல் ஒன்று உருவாகியிருக்கிறது. நாமக்கல் பள்ளிகள் மட்டும் இல்லை- ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை கிட்டத்தட்ட ப்ராய்லர் கோழியைப் போலவே ஆக்கிவைத்துவிட்டன. இந்தத் துறையை விட்டு வெளியேறுவதற்கான அத்தனை சாத்தியங்களும் குறைக்கப்பட்டுவிட்டன. இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினால் இன்னொரு ஐடி நிறுவனத்தின் கதவைத்தான் தட்ட முடியும். துணிந்து வேறு தொழில்களில் ஈடுபடுவதற்கான முனைப்புகள் மெல்ல மெல்ல மழுங்கடிக்கப்படுகின்றன. அதற்கான தைரியம் இல்லாத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மீறி துணிந்தாலும் எத்தனை பேருக்கு உடல் ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை. வேறு தொழிலைத் தேடி இந்தச் சூழலில் இருந்து வெளியேறுபவர்கள் மிக மிகச் சொற்பம். அப்படிச் செல்பவர்களை தப்பித்தவர்கள் என்று தைரியமாகச் சொல்ல முடியும்.
இதையெல்லாம் ஐடி நிறுவனங்களை குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை.
சம்பளம் தருகிறார்கள். வாழ்க்கையை சொகுசாக்கிக் கொண்டாகிவிட்டது. இந்த சொகுசுக்காக எனது உரிமை, சுதந்திரம் பற்றியெல்லாம் யோசிப்பது இல்லை. இந்த வேலையும் சம்பளமும் இருக்கும் வரைக்கும் மற்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் வேலை செய்து கொண்டிருப்பேன். செக்கிழுப்பதற்காக பூட்டப்பட்ட மாடு தனது உரிமை பற்றி எப்பவாவது யோசித்திருக்குமா? அப்படியே யோசித்தாலும் உடனடியாக மறந்துவிட்டு செக்கை இழுக்கத் தொடங்கிவிடும் அல்லவா? அப்படித்தான்.
(‘ஐடித் துறையில் உரிமையும் சுதந்திரமும் இருக்கிறதுதானே?’ என்று நேற்று கேட்ட நண்பர் அதியமானுக்காக)
1 எதிர் சப்தங்கள்:
ஐடி துறை யின் சாதாரணர் இல்லை நீங்கள் உங்களை சுற்றி நிகழும் அனைத்தையும் எதார்த்த உணர்ர்வுடன் பார்க்கும் உங்கள் பார்வை ..நான் புரிந்த ஐடி இளைஞர் போல் அல்லாமல் பொறுப்பான இந்திய இளைஞன் ஆக பார்க்கிறேன் நிறைய எழுத என் வாழ்த்துகள்
Post a Comment