Dec 27, 2013

புலித்தடம் தேடிச் சென்றவனுக்கு...

ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்திருக்கிறது. அவரை அனேகமாக நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கக் கூடும். தெரியவில்லை என்றாலும் பெரிய பிரச்சினை இல்லை- அவர் 1991 இல்தான் பிறந்திருக்கிறார். இருப்பத்தியிரண்டு வயது முடிந்திருக்கிறது. பொடியன் தான். ஆனால் அதற்குள் ஏகப்பட்டது எழுதியிருக்கிறார். பெரும்பாலும் ஈழத்தமிழர்களுக்கான கட்டுரைகள். ஈழம் பற்றிய அவரது விகடன் கட்டுரைகள் பிரசித்தம். அவரது புத்தகமான ‘புலி தடம் தேடி’ அதைவிட பிரசித்தம். இலங்கையில் ரத்த தாண்டவம் முடிந்த பிறகு அதை நேரடியாகப் பார்த்து எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளின் தொகுப்பு அது.

இப்பொழுது மீண்டும் ஒரு முறை இலங்கை சென்ற போது கைது செய்துவிட்டார்கள். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் வைத்திருக்கிறார்களாம். அதைக் கொடும் சித்ரவதைக் கூடம் என்கிறார்கள். கண்டிப்பாக சித்வரை செய்வார்களாம். வருத்தமாக இருக்கிறது. செய்தியைக் கேட்டவுடன் ‘எதுக்கு ரிஸ்க் எடுக்கிறான்? பேசாமல் இருக்க வேண்டியதுதானே’ என்று தோன்றியது. நடுத்தரவர்க்க புத்தி. வேறு எப்படி யோசிக்கும்? ஆனால் அப்படி யோசிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அவர் என்ன கொள்ளையடிக்கவா சென்றிருக்கிறார். ‘எங்கள் நாடு முழுவதுமே ரத்தினக் கம்பளத்தை போர்த்தி வைத்திருக்கிறோம்’ என்று கூவிக் கொண்டிருக்கும் இலங்கையில் ‘கொஞ்சம் கம்பளத்தை தூக்குங்க நானும் பார்க்கிறேன்’ என்று சென்றிருக்கிறார்.

பத்துக்கு பத்து ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கம்யூட்டரில் ஃபேஸ்புக்கை பார்த்துக் கொண்டே கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் களத்திற்குச் சென்று கட்டுரை எழுதும் துணிச்சல்காரன்- இருபத்தியிரண்டு வயதில் எடுக்கும் இத்தகைய முடிவுகளை துணிச்சல் என்பதா அல்லது குருட்டுத் தைரியம் என்பதா என்று குழப்பமாக இருக்கிறது- ஒருவனை அந்நிய தேசத்தில் அடைத்து அடிக்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது.

மிகச் சமீபத்தில் தேவயானிக்காக கதறிய ஊடகங்கள் பெரும்பாலானவை படு அமைதி காக்கின்றன. அவருக்காக கவர்ஸ்டோரி எழுதிய மை கூட தீர்ந்திருக்காது. டீக்குடிக்க போயிருப்பார்கள் போலிருக்கிறது. அமைதியாக இருக்கிறார்கள். அவர்களை விடுங்கள். அரசின் பெருந்தலைகளோ அல்லது அரசியல் பெருந்தலைகளோ காதில் பஞ்சை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சை வெளியே எடுத்தால் குளிர் காதுக்குள் போகிறதாம். இவர்களுக்குத்தான் குளிர்- பிரபாகரனுக்கு அநேகமாக உடல் முழுவதும் சூடேற்றியிருப்பார்கள்.

இந்த விவகாரத்தில் ஏன் குறைந்தபட்சக் கண்டனக் குரல்கள் கூட எழுப்பப்படவில்லை என்பது சந்தேகமாக இருக்கிறது. 

அவன் புலிகளின் ஆதரவாளன், இலங்கை அரசின் எதிரி, குருட்டுவாக்கில் சிக்கிக் கொண்டான் என்று அவர் மீதான நமது விமர்சனங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். 

‘சின்னப்பையன், துடிப்பானவன், நல்ல பத்திரிக்கையாளன்’- இந்த மூன்று காரணங்கள் போதும் என நினைக்கிறேன், அவனுக்காக குரல் கொடுப்பதற்கு. ஊடகங்களும், அரசும், அரசியல்வாதிகளும் அவர்கள் போக்கில் போகட்டும். நம்மால் சிறு துரும்பைக் கிள்ளிப் போட முடியும் என நம்புகிறேன்.

சார்மியிடம் சிம்பு வெட்கப்படுகிறார்; சன்னி லியோன் ஷாருக்கானுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டாள் என்ற இரண்டு செய்திகளை படிக்கும் நேரத்தில் வெளியுறவுத்துறைக்கு என்னால் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட முடிந்தது. நீங்கள் ஏதாவது இரண்டு செய்திகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வையுங்கள். நடப்பது நடக்கட்டும்.

‘தேவயானியைக் காப்பாற்றாமல் பாராளுமன்றத்துக்கே வரமாட்டேன்’ என்று சொன்ன மத்திய அமைச்சர்கள் பெருமக்களில் யாராவது ஒருவராவது ‘அப்படியா பார்க்கிறேன்’ என்றாவது சொல்வார்கள் என நம்புவோம்.

கீழே இருக்கும் செய்தியை காப்பி செய்து பின்வரும் மின்னஞ்சல்களுக்கு அனுப்பிவிடுங்கள். நம்மால் அதிகபட்சம் செய்ய முடிந்த உதவி இதுவாகத்தான் இருக்கும்.

eam@mea.gov.in, dirfs@mea.gov.in, psfs@mea.gov.in,

The Foreign Secretary,
Ministry of External Affairs,
South Block,
New Delhi

Dear Sir,

Mr.Ma ka.Tamil Prabakaran was a student reporter in Vikatan group of publications in the year 2011-2012. He was selected as the best student reporter in his batch. After completing his training in Vikatan group of publications, he has been working as a free lancer for Vikatan group of magazines and various other news portals.

Mr.Ma ka Tamil Prabakaran had visited Sri Lanka in the year 2012 and wrote a series about the plight of the Lankan Tamils in the Tamil bi-weekly Junior Vikatan, which was subsequently published as a book. Mr.Maha Tamil Prabakaran went to Sri Lankan on a tourist visa and he was taken around the area of Tamils at Kilinochi by Mr.Sridharan, Member of Parliament and Mr.Pasupathi Pillai, an elected member of Northern Provincial Council. 

At a time when they were visiting Valaipedu Village in Kilinochi District, they were intercepted by the Sri Lankan Army and all of them were taken into custody. While Sridharan and Pasupathi Pillai were released by the army, Mr.Maha Tamil Prabakaran has been detained by the army and according to media reports, he is being interrogated at the Sri Lankan Terrorist Crime Prevention Center at Colombo.

I request you to kindly intervene in this matter through diplomatic sources and ensure the release of Mr.Ma.ka Tamil Prabakaran safely.

Sincerely
--------------

(கடிதத்தின் டெம்ப்ளேட் கார்டூனிஸ்ட் பாலாவின் ஃபேஸ்புக்கில் இருந்து எடுத்துக் கொண்டேன்)