Dec 27, 2013

இதை போட்டி என்றெல்லாம் சொல்ல முடியாது.

சரவணபாபு அபுதாபியில் இருக்கிறார். நேரில் பார்த்தது இல்லை. அவ்வப்போது தொடர்பு கொண்டு ‘இன்னைக்கு எழுதியிருந்தது நல்லா இருந்துச்சு’ என்பார். பிறகு காணாமல் போய்விடுவார். அப்புறம் மீண்டும் எப்பொழுது வருவார் என்று தெரியாது. வெகுநாள் கழித்து இன்று திடீரென்று பிரஸன்னமானவர் ‘பத்து புஸ்தகத்துக்கு நான் ஆர்டர் செய்யறேன். ஆனால் நீங்க யாருக்கு வேணும்ன்னா கொடுத்துக்குங்க’ என்றார். அவர் ‘ஆர்டர் செய்கிறேன்’ என்று சொன்ன புத்தகம் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் தான். கடந்த ஓரிரண்டு தினங்களாக இப்படி திடீர் திடீரென்று ‘சொக்கா சொக்கா’ என்று என்னை உற்சாகமடைய வைத்துவிடுகிறார்கள். உற்சாகம் இருக்கட்டும். பத்துப் பேரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

‘போட்டி, அது, இது’ என்றால் டூ மச்சாகத் தெரியும். நாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லையென்பதால் அதற்கு அவசியமும் இல்லை. அதனால் போட்டி எல்லாம் எதுவும் இல்லை. ஏதாவதொரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுதி அனுப்பச் சொல்லலாம் என்று தோன்றியது. அந்த விமர்சனம் எந்தப் புத்தகம் குறித்து வேண்டுமானாலும் இருக்கலாம். விமர்சனம் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த நிபந்தனையும் கிடையாது. புதியதாக இருக்க வேண்டும். அது மட்டும்தான் நிபந்தனை. முதலில் வரும் பத்து விமர்சனங்களுக்கு இந்தப் பிரதிகளை தலா ஒன்றாக அனுப்பிவிடலாம். 

சிம்பிள். 

பத்துக்கு மேலான விமர்சனங்கள் வந்தால்? தெரியவில்லை. லிண்ட்சே லோஹனுக்கும் மாரியப்பனுக்கும்தான் வெளிச்சம்.

எதற்கு இந்த விமர்சனம் எல்லாம்? வெறும் அட்ரஸை அனுப்பச் சொல்லி முதலில் வரும் பத்து இமெயில்காரர்களுக்கு அனுப்பிவிட வேண்டியதுதானே என்று கூடத் தோன்றியது. ஆனால் அது புத்தகத்துக்கும் மரியாதை இல்லை; வாங்குபவர்களுக்கும் மரியாதை இல்லை. புத்தகத்தோடு ஏதோவிதத்தில் சம்பந்தமுடையவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் சரி. அதனால்தான் மண்டைக்குள் இந்த ஐடியா பல்பாக எரிந்தது. 

பத்துப் பிரதிகளுக்கான பணத்தை டிஸ்கவரி புக் பேலஸுக்கு சரவணபாபு இன்னும் ஓரிரு நாளில் மாற்றிவிடுவார். பத்து முகவரிகளை நான் டிஸ்கவரிக்கு அனுப்பி வைத்தவுடன் அவர்கள் புத்தகங்களை அனுப்பி வைத்துவிடுவார்கள். 

‘வெளிநாட்டு முகவரிகளாக இருந்தாலும் பரவாயில்லையா?’ என்று கேட்டால் டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பன் கதறுகிறார். 

‘அதுக்கு செலவு எக்கச்சக்கமாக ஆகும்ங்க’ என்பது அவரது கதறலுக்குக் காரணம். அவரது எரிச்சலும் சாபமும் மிகுந்த வீரியம் மிக்கது- என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் இந்தியாவுக்குள்ளான முகவரிகளை மட்டும்தான் அவரிடம் கொடுக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உள்ளூர் முகவரியைக் கொடுங்கள். ப்ளீஸ்.

‘இவ்வளவு ரிஸ்க் எடுத்து எல்லாம் உன் புஸ்தகத்தை படிக்க முடியாது’ என்று டென்ஷனாக வேண்டாம். உங்களுக்கு ஆகாத நண்பர்கள் யாராவது ஒருவரின் முகவரியைக் கொடுத்துவிடுங்கள். அனுப்பி வைத்துவிடலாம். தண்டனை கொடுத்த மாதிரி இருக்கட்டும்.

எதனால் ‘உங்களுக்கு பத்து புக் ஐடியா வந்தது?’ என்று சரவணபாபுவிடம் கேட்டேன்.

அவர் சொன்ன பதிலை வெளியே சொல்லி அசிங்கப்பட முடியாது என்பதால் சென்சார் செய்தாகிவிட்டது.

ஆனால் ஒன்று, ஜெகதீசன், சரவணபாபு போன்றவர்கள் ஏதோ ஒருவிதத்தில் உற்சாகமூட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த எனர்ஜியிலேயே இன்னும் பல வருடங்களுக்கு எழுதலாம். இந்த ஜெகதீசன்தான் முதல் பிரதிக்கு ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பி வைத்து என்னை ரெளடி என்று ஃபார்முக்கு வரச் செய்தவர். இப்பொழுது சரவணபாபு கையில் ஒரு சோடாபாட்டிலையும் கொடுத்திருக்கிறார். இனி சுழற்றிக் கொண்டே கொஞ்ச நாட்களுக்குத் திரிய வேண்டியதுதான். யாராவது சாணத்தை எடுத்து வீசுவார்கள். அப்பொழுது யாரும் பார்க்கவில்லை என்றால் துடைத்துக் கொண்டு சவுண்ட் விடலாம். யாராவது பார்த்துவிட்டால் அமைதியாகிவிடலாம். இப்போதைக்கு இந்த திட்டத்தோடுதான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

மின்னஞ்சல்: vaamanikandan@gmail.com