மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. அந்தக் காலத்தில் கொங்குப் பகுதியில் இருந்த வீடுகளில் சின்ன ஊடு பெரிய ஊடு என்று இரண்டு பிரிவு இருக்கும். வெயிட்டீஸ். தறிகெட்டு ஓடும் கற்பனைக் குதிரையை இழுத்துப் பிடியுங்கள். இது அந்த சமாச்சாரம் இல்லை. உண்மையிலேயே வெறும் வீட்டுச் சமாச்சாரம் மட்டும்தான். அந்தக் காலம் என்றால் முப்பது வருடங்களுக்கு முன்பாகக் கூட அப்படித்தான் இருந்தது.
ஒவ்வொரு வீட்டையும் இரண்டாக பிரித்து வைத்திருப்பார்கள். பெரிய ஊட்டில் காசு, பணம் வைத்திருப்பார்கள். சில வீடுகளில் கட்டில் மெத்தையும் இருக்கும். மொடாவில் நெல்லும் அரியும் இருக்கும். சின்ன ஊடு என்பது பெரும்பாலும் சோறாக்கும் வீடு- சமையல்கட்டு. பெரிய ஊட்டுக்கும் சின்ன ஊட்டுக்கும் அநேகமாக இடைவெளி இருக்கும். இரண்டும் தனித்தனி கட்டடங்கள். மழை கீது வந்துவிட்டால் பெரிய ஊட்டில் இருந்தால் சின்ன ஊட்டுக்கும் சின்ன ஊட்டில் இருந்தால் பெரிய ஊட்டுக்கும் சாக்கு அல்லது துண்டை தலையில் போட்டுக் கொண்டுதான் ஓட வேண்டும்.
என்ன கான்செப்டில் இப்படி படுக்கை அறையையும், சமையலறையையும் பிரித்துக் கட்டியிருந்தார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது எதற்கு இந்தக் கதை என்றால்- தாத்தா காலத்தில் எங்கள் வீடும் இப்படித்தான் இருந்திருக்கிறது. ஏதோ ஒரு நாள் ராத்திரி நேரத்தில் வந்த குடுகுடுப்பைக்காரன் ‘சின்ன ஊட்டில் ஏழு மொடா நெறைய தங்கம் இருக்குது. இடிச்சுப் பாருங்க’ என்று சொல்லிவிட்டு போய்விட்டான். அவன் சொன்னதும் சொன்னான், ஆயாவுக்கு முழிப்பு வந்துவிட்டது. ஆயாவுக்கு மட்டும் இல்லை அப்பா, சித்தப்பா என்று வீட்டில் இருந்த எல்லோருக்கும்தான்.
அவன் சொன்னது போலவே சின்ன ஊட்டில் தங்கம் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ராத்திரியோடு ராத்திரியாக முடிவு செய்துவிட்டார்கள். அதற்கு காரணமிருக்கிறது. அந்தச் சின்ன ஊடு இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாம். அந்தக் காலத்தில் உள்ளே ஏதாச்சும் ஒளித்து வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கைதான். தாத்தாவுக்கு மட்டும் இதில் முழுமையான நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. ஆனால் மற்றவர்களின் விருப்பத்தில் தலையிடவில்லை.
அந்தக் காலத்து சுவர்களைப் பற்றித்தான் தெரியுமே? கிட்டத்தட்ட இரண்டடி அகலம் இருக்கும். மண் சுவர்தான் என்றாலும் இடிப்பது அத்தனை சுலபமில்லை. அப்படியே இடித்தாலும் மண்ணை அள்ளிக் கொட்டுவது அதைவிடச் சிரமம். ஆனாலும் இது நிதி சம்பந்தப்பட்டது அல்லவா? சிதம்பர ரகசியம். வெளியாட்களை விட்டால் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று அடுத்த நாள் இரவில் அப்பாவும் சித்தப்பாவுமே இடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மூச்சு வாங்குகிறது என்று வாயில் துணியைத் திணித்துக் கொண்டு ‘கண்ணு மண்ணு’ தெரியாமல் என்று இடித்தார்களாம்.
இந்தக் கதையை எப்பொழுதோ ஆயா சொல்லியிருக்கிறார். ஆனால் இப்பொழுது ஒரு கன்னடச் சிறுகதைதான் இதை ஞாபக்கபடுத்தியது. அஸ்வத் நாராயண ராவ் என்ற எழுத்தாளரின் கதை அது. அவர் ‘அசுவத்த’ என்ற பெயரில்தான் எழுதுகிறார். கதையின் தலைப்பு ‘விபச்சாரம்’.
கன்னடத்தில் நல்ல சிறுகதைகள் இருக்காது என்ற திமிரில் இருந்தவனுக்கு பொடனி அடி இந்தக் கதை. இப்படியே அடுத்த மொழிக்காரனை மட்டம் தட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். கன்னடக்காரர்கள் இதுவரை எட்டு ஞானப்பீட விருது வாங்கியிருக்கிறார்கள். நாமும்தான் இருக்கிறோமே- இரண்டே இரண்டு. ஒன்று அகிலனுக்கு; இன்னொன்று ஜெயகாந்தனுக்கு.
கதைக்கு வருவோம்.
கன்னடத்தில் நல்ல சிறுகதைகள் இருக்காது என்ற திமிரில் இருந்தவனுக்கு பொடனி அடி இந்தக் கதை. இப்படியே அடுத்த மொழிக்காரனை மட்டம் தட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். கன்னடக்காரர்கள் இதுவரை எட்டு ஞானப்பீட விருது வாங்கியிருக்கிறார்கள். நாமும்தான் இருக்கிறோமே- இரண்டே இரண்டு. ஒன்று அகிலனுக்கு; இன்னொன்று ஜெயகாந்தனுக்கு.
கதைக்கு வருவோம்.
கதையில் ஒரு சேட்டு பிழைப்பு தேடி பம்பாய் வருகிறார். இது அரைலிட்டர் பவுண்ட் மண்ணெண்ணெய் பத்தணாவுக்கு விற்ற பிரிட்டிஷ்காரன் காலம். நாட்டில் பஞ்சம் நிலவுகிறது. அப்பொழுது விலைக்கட்டுப்பாடும் அமலில் இருந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக கடைகளில் தாறுமாறான விலைக்கு விற்க முடியாது. ஆனால் பிலானி சேட் இதில் எல்லாம் கில்லாடி. பதுக்கி வைத்து விற்கிறார். இப்படி விற்று விற்றே பெரும்பணக்காரர் ஆகிவிடுகிறார். கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருபத்தைந்து சேர்ந்துவிடுகிறது. அந்தக் காலத்தில் இருபத்தைந்தாயிரம் ரூபாய். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
சேட்டுக்கு கெட்ட நேரம்- பணக்காரர்களும், வரி ஏய்ப்பவர்களும் ஆயிரம் ரூபாயில்தான் நிறைய சேட்டை செய்கிறார்கள் என்று அரசாங்கம் ‘இனிமேல் ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது’ என்று அறிவித்துவிடுகிறது. பிலானி சேட்டுக்கு குடியே முழுகிப் போனாற் போல ஆகிவிடுகிறது. ஆனால் கெட்டநேரத்திலும் ஒரு நல்ல நேரமாக குறிப்பிட்ட அவகாசம் கொடுத்து அதற்குள் ஆயிரம் ரூபாயை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவிக்கிறது. ஆனால் அதிலும் ஒரு ஆப்பு இருக்கிறது. சரியான கணக்கு கொடுத்தால் மட்டுமே மாற்ற முடியும். இல்லையென்றால் அவ்வளவுதான். பிலானியிடம் கணக்கும் இல்லை வழக்கும் இல்லை. கண்டபடி யோசித்து கடைசியில் ஒரு வக்கீலைப் பிடிக்கிறார். ஒரு டுபாக்கூர் வக்கீல்.
அந்த வக்கீல் ஒரு திட்டமிடுகிறார். ஆனால் அதற்குள் டாக்ஸி பிடி, அதைப் பிடி என்று ஏகப்பட்ட செலவு வைக்கிறார். கஞ்சப்பயலான பிலானி மூக்கால் அழுது கொண்டே செலவு செய்கிறார்.ஒரு வழியாக மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு ‘ஃப்ராஸ் ரோட்டுக்கு’ செல்கிறார்கள். அது பம்பாயின் ரெட் லைட் ஏரியா. தான் வழக்கமாகச் செல்லும் வீட்டிற்குச் சென்று ஒரு புத்திசாலிப் பெண் வேண்டும் என்கிறார் வக்கீல். வக்கீலின் செய்கை பிலானிக்கு புரியவில்லை. இதுவரை வக்கீலுக்காக செய்திருந்த செலவுப் பணத்தை வரியாகக் கட்டியிருந்தால் கூட போதும். அத்தனை பணமும் தப்பித்திருக்கும். ஆனால் அப்பொழுது ஏமாற்றிவிட்டு இப்பொழுது முழிக்கிறார்.
விபச்சார விடுதியின் உரிமைக்காரப் பெண்மணி ஒரு அழகான பெண்ணை அவர்களோடு அனுப்பி வைக்கிறார். கிடைக்கிற சந்தில் அவளுக்கு வக்கீல் ஒரு முத்தம் கொடுத்துக் கொள்கிறார். பிலானி-ம்ஹூம். ஏக பத்தினி விரதன். மூன்று பேருமாகச் சேர்ந்து ரிசர்வ் வங்கிக்கு செல்கிறார்கள். அந்தப் பெண் படுபாந்தமாக மேக்கப் செய்திருக்கிறாள். வங்கியில் அத்தனை பேரும் அவளையே பார்க்கிறார்கள். வங்கியாளரிடம் சென்று ‘எல்லாம் எனது தொழிலில் சம்பாதித்த பணம்’ என்கிறாள். ‘எங்கள் தொழிலில் கணக்கெல்லாம் கிடையாதுன்னு உங்களுக்கே தெரியுமே’ என்கிறாள். வங்கியாளர் சிரித்துக் கொண்டே ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு அனுமதிக்கிறார். அவளுக்கு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது. எல்லா தாள்களையும் நூறு ரூபாய் நோட்டுக்களாக அவள் மாற்றிக் கொண்டிருக்கும்தான் போது பிலானி சேட்டுக்கு உயிரே வருகிறது.
இப்பொழுது வீடு இடித்த கதைக்குச் சென்றுவிடலாம்-
தாத்தா மூன்று மணிக்கு எழுந்து வந்து பார்த்திருக்கிறார். முக்கால்வாசியை இடித்தாகிவிட்டது. பானையும் கிடைக்கவில்லை. பூனையும் கிடைக்கவில்லை.
‘அடப் பசங்களா, பானை கிடைக்காட்டியும் போச்சாதுடா. சின்ன ஊட்டை இடிச்சுப் போட்டீங்க இனி எங்க வெச்சு சோறாக்குறது?’ என்று கேட்டாராம்.
‘போய் தூங்குப்பா நாங்க பூராத்தையும் இடிச்சுப் பாத்துடுறோம்’ என்றிருக்கிறார்கள்.
‘அடப் பசங்களா, பானை கிடைக்காட்டியும் போச்சாதுடா. சின்ன ஊட்டை இடிச்சுப் போட்டீங்க இனி எங்க வெச்சு சோறாக்குறது?’ என்று கேட்டாராம்.
‘போய் தூங்குப்பா நாங்க பூராத்தையும் இடிச்சுப் பாத்துடுறோம்’ என்றிருக்கிறார்கள்.
‘சொம்பும் போச்சுடா கோயிந்தாங்கப் போறீங்க’ என்று முனகிக் கொண்டே போய்விட்டாராம்.
இவர்கள் விடியும் வரை இடித்திருக்கிறார்கள். அடுத்த ஓரிரு மணி நேரங்களில் வாசல் தெளிப்பதற்கு ஆயா எழுந்து வந்திருக்கிறார்.
‘என்னடா பசங்களா?’ என்றாராம்.
கடுப்பில் இருந்தவர்கள் ‘சொம்பும் போச்சுடா கோயிந்தா’தான் என்றிருக்கிறார்கள். ஆயாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இடித்தது இடித்ததுதான். கடைசி வரைக்கும் ஒன்றும் கிடைக்கவில்லை.
இப்பவும் அப்பாவிடம் ரிஸ்க்கான சமாச்சாரம் பற்றி ஏதாவது பேசினால் முதல் வாக்கியம் இதுவாகத்தான் இருக்கும். ‘பார்த்து செய்யி. சொம்பும் போச்சுடா கோயிந்தான்னு ஆகிடப் போவுது’ என்பார்.
இப்பவும் அப்பாவிடம் ரிஸ்க்கான சமாச்சாரம் பற்றி ஏதாவது பேசினால் முதல் வாக்கியம் இதுவாகத்தான் இருக்கும். ‘பார்த்து செய்யி. சொம்பும் போச்சுடா கோயிந்தான்னு ஆகிடப் போவுது’ என்பார்.
பிலானி கதையும் அப்படித்தான். பணத்தை நூறு ரூபாயாக மாற்றிக் கொண்டவள் தனது பைக்குள் செருகிக் கொண்டு கம்பி நீட்ட பார்க்கிறாள். பிலானி ஓடிப் போய் அவளின் கையைப் பிடிக்கிறான். ‘அவை அத்தனையும் தனது பணம்’ என்று கத்திவிட்டு அங்கிருந்த போலீஸிடம் நைஸாக நூறு ரூபாயை நீட்டுகிறாள். போலீஸ்காரன் பிலானி சேட்டை பிடித்துக் கொள்கிறான். இந்த விவகாரத்தில் வக்கீல் மூக்கை நுழைத்து போலீஸைச் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்கும் போது அந்தப் பெண் அங்கிருந்து கிளம்பி நேராக ரயில்வே நிலையம் சென்று ரயில் ஏறிவிடுகிறாள். இனி அவள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவாள். வக்கீலும் பிலானி சேட்டும் விபச்சார விடுதி உரிமையாளரும் மாறி மாறி சண்டைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
சொம்பும் போச்சுடா கோயிந்தா மாதிரி.