Jun 28, 2013

கறை நல்லது பாஸ்!

இரண்டு நாட்கள் சென்னை வாசம். சென்னைக்கும் பெங்களூருக்கும் எனக்குத் தெரிந்து ஒரேயொரு வித்தியாசம்தான். பெங்களூரில் போர்த்தாமல் தூங்க முடிவதில்லை; சென்னையில்  துணியோடு தூங்க முடிவதில்லை. சென்னையில் செய்த உருப்படியான ஒரு விஷயம்- டிஸ்கவரி புக் பேலஸில் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டதுதான். வேடியப்பனிடமிருந்து புத்தகங்களை வாங்கினால் மட்டும் அடுக்கி வைக்காமல் ஒழுங்காக படித்து விட முடிகிறது என நம்புகிறேன். மூட நம்பிக்கை போலத்தான் தெரிகிறது. ஆனால் “கறை நல்லது” மாதிரி இத்தகைய “மூட நம்பிக்கைகளும் நல்லதுதான்”.

சென்னை பற்றிய விஷயங்களைத் தனியாக பேச வேண்டும். அதுவரைக்கும் மண்டைக்குள் ஊறிக் கிடக்கட்டும். இப்பொழுது ‘தனிமனித அரசியல்’ பற்றி கொஞ்சம் பேசலாம் என்று தோன்றுகிறது. அரசியல் செய்யாத ஆட்கள் என்று யாராவது இருக்கிறார்களா? எல்லோருக்குமே இங்கு ஒரு அரசியல் உண்டு. எல்லோருமே ஏதாவதொரு விதத்தில் முன்னேறிவிட என்றுதான் நினைக்கிறோம். “நாசகமாகப் போக விரும்புகிறேன்” என்று சொல்லும் ஆளை பார்த்தால் சொல்லுங்கள். காலில் விழுந்து கும்பிட வேண்டும். 

சில அரசியலைத் தெரிந்தே செய்கிறோம், சில அரசியல் நம்மையும் மீறி அதுவாக நடந்துவிடுகிறது. வீட்டில் மனைவியிடம் பொய் சொல்வதில் ஆரம்பித்து, சொந்தக்காரனிடம் வழிவது வரைக்கும் தனி மனித அரசியல் இல்லாத ஒரு இடத்தை காட்ட முடியுமா என்ன? ரொம்பச் சிரமம். சுட்டி டிவி வேண்டும் என்பதற்காகவோ அல்லது வீடியோ கேம் வேண்டும் என்பதற்காகவோ அப்பாவிடம் மூன்று வயதுக் குழந்தை கூட அரசியலை ஆரம்பித்துவிடுகிறது. சோறு  ஊட்டுவதில் ஆரம்பித்து, குளிக்க வைப்பது வரை நாம் அதனிடம் ஏகப்பட்ட அரசியல் பேரங்களை நடத்துகிறோம். ஆனால் நாம் இதையெல்லாம் அரசியல் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. நம்  subconscious மனதில் இவற்றையெல்லாம் தினப்படி நிகழ்வாக நினைத்துக் கொள்கிறோம்.

ஆனால் வெளியுலகில் அப்படியில்லை. நமது எல்லாக்காரியங்களிலிருந்தும் அரசியலை பிரித்தெடுப்பதற்கு ஆட்கள் உண்டு. ஒரு ஆளைப் பாராட்டினால் “அவன் ஜால்ரா” என்பார்கள்.  ஒரு ஆளைக் கலாய்த்தால் “இவனுக்கு பொறாமை” என்பார்கள், மற்றவர்களிடமிருந்து விலகியிருந்தால் “அவனுக்கு தலைக்கணம்” என்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லாமல்  இருந்தால் “என்கிட்ட பயப்படுகிறான்” என்பார்கள். 

இதெற்கெல்லாம் என்ன ரியாக்ட் செய்வது?

இதையெல்லாம் நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இங்கு ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதன் பற்றிய Image வைத்திருப்பான். ‘அவன் வெட்டி’, ‘அவன்  பிஸ்தா’ ‘இவன் நல்லவன்’ ‘அவன் ஆகாவழி’,‘இவனால் காரியம் ஆகும் அதனால் பகைத்துக் கொள்ளக் கூடாது’ ‘இவனை அடித்து காலி செய்துவிட வேண்டும்’ எக்ஸெட்ரா;  எக்ஸெட்ரா. நம்மைப் பற்றிய மற்றவர்களின் இந்த பிம்பங்கள் இருந்துவிட்டு போகட்டுமே! ஏன் சிதைக்க வேண்டும்? இதையெல்லாம் நாம் சிதைக்க வேண்டியதில்லை.

நம்மைப் பற்றிய பிம்பத்தை இன்னொருவன் மேலும் மேலும் மெருகூட்ட முயல்கிறான். ஆதாரங்களைத் தேடுகிறான். உதாரணமாக, ‘இவன் ஒரு பொறுக்கி’ என்று நம்மை நினைத்திருப்பவன் அதற்கான ஸ்க்ரீன்ஷாட்களைத் தேடுகிறான். ஆதாரங்களைத் தேடுவதோடு மட்டும் நில்லாமல் ‘இவன் இப்படித்தான்’ என நம்மைப் பற்றி வெளியுலகத்திற்கு அவன் நிரூபிக்க முயல்கிறான். 

இதையெல்லாம் நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நம்மைப் பற்றிய எதிர்மறை பிம்பங்களை(Negative images) சிதைக்க முயல்கிறோம். இதுதான் பெரும்பாலான பிரச்சினைகளின் அடிநாதம். உண்மையில் நமது Image பற்றி அதிக அளவில் கவலைப்படுகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் நம்மை ‘நல்லவன், வல்லவன், நாலும் தெரிஞ்சவன்’ என்று நினைக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் இது practically சாத்தியமே இல்லை. என்னதான் குட்டிக் கரணம் அடித்தாலும் ஒவ்வொரு மனிதனையும் அசிங்கப்படுத்துவதற்கு இங்கு ஆட்கள் உண்டு. 

 குறுக்கே வந்து ‘சட்டையைப் பிடித்து’ கேள்வி கேட்பார்கள். ‘நீ அம்மணமாக ஓடுகிறாய்’ என்பார்கள். சொல்லிவிட்டு போகட்டும்- ஒவ்வொருவரிடமும் நம் ஆடையை நிரூபிக்க  வேண்டியதில்லை. ஒரே ஒரு புன்னகையோடு கடந்து போய்விட்டால் பிரச்சினை இல்லை. ஒரு முறை சொல்வார்கள் அல்லது இரண்டு முறை சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் நாம்  சிரித்துக் கொண்டேயிருந்தால்? கேள்வி கேட்பவர்களில் சிலர் புரிந்து கொண்டு நம் பாதையிலிருந்து விலகிக் கொள்வார்கள். ஆனால் சிலர் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்.  கேட்டுவிட்டு போகட்டுமே. நாம் சிரித்துக் கொண்டு நகர்ந்த படியே இருக்க வேண்டும். அவ்வளவுதான். இதனால் நமக்கு துளி கூட நஷ்டம் கிடையாது.

இவர்களை தவறானவர்கள் என்று சொல்லவில்லை. இதுதான் உலக இயல்பு. ரியாலிட்டி. நானும் நீங்களும் மட்டும் யோக்கியமா என்ன? நாமும்தான் தெரிந்தோ தெரியாமலோ எவனை தொலைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு செகண்ட் யோசித்துப் பார்த்தால் குறைந்தது நாம் கெடுதல் செய்த நான்கைந்து பேரின் முகம் வந்து போகும்.

நம்மை நோக்கிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என முடிவு செய்தால் பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மிடம்  பதில் இருக்காது. அந்தக் கேள்விகளை இதுவரை யோசித்து கூட இருக்க மாட்டோம். ஆனால் பதில் சொல்லியாக வேண்டும் என நம் Ego விரும்பும். பதில்களுக்காக மெனக்கெட வேண்டும். நாம் பதில் சொன்னால் மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? நிச்சயமாக நடக்காது. நமது விளக்கங்களுக்கு எதிராக இன்னும் சில கேள்விகள் வரும் அதற்கு இன்னும் சில பதில்கள் தேவைப்படும். விக்ரமாதித்யன் - வேதாளம் கதைதான்.

நமது அரசியலைக் கேள்வி கேட்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அரசியல் இருக்கும். சண்டை பிடிப்பது என்று முடிவானால் அதை நாமும் கேட்கலாம். ஆனால் இதனால் என்ன பயன்  வந்துவிடப் போகிறது? வெட்டிச் சண்டையும், வீண் பகையும் தவிர ஒன்றும் மிஞ்சாது. இந்த சண்டைக்கான தயாரிப்புகளிலும், சண்டையிலும் செலவிடும் நேரத்தில் வேறு ஏதேனும்  உருப்படியாகச் செய்துவிட முடியும் என திடமாக நம்புகிறேன்.

யுவகிருஷ்ணா ஃபேஸ்புக்கில் சில கதைகளை தமிழ்ப்படுத்தி எழுதுகிறார். சமீபத்தில் அப்படியொரு கதையை எழுதியிருந்தார். பாரீஸில் இருக்கும் ஈஃபிள் டவரில் வசித்த பல்லிகள் ஒரு  பந்தயம் நடத்துகின்றன. உச்சியை தொட வேண்டும் என்பதுதான் டார்கெட். ஆர்வ மிகுதியில் ஏகப்பட்ட பல்லிகள் போட்டியில் கலந்து கொள்கின்றன. போட்டி ஆரம்பம் ஆகிறது. கொஞ்சம் தூரம் ஏறியவுடன் பயந்த பல்லிகள் ‘இது ரிஸ்க்’ என்று விலகிக் கொள்கின்றன. சில பல்லிகள் மட்டும் ஏறிக் கொண்டிருக்கின்றன. பாதி ஏறிய பிறகு மேல் மற்ற பல்லிகளும் ஒதுங்கிக் கொள்கின்றன. இப்பொழுது ஒரே ஒரு பல்லி மட்டும் ஏறியபடியே இருந்தது. மற்ற பல்லிகள் ‘நீ முடிஞ்சடா’ என்று மிரட்டுகின்றன. ‘நீதான் வின்னர். ஏறியவரைக்கும் போதும். கீழே வந்துவிடு’ என்று கத்துகின்றன. ஆனால் அந்தப் பல்லி அசரவில்லை. முரட்டுவாக்கில் முயற்சித்து வெற்றிகரமாக உச்சியை அடைகிறது. ‘இது எப்படி சாத்தியம்?’ என மற்ற பல்லிகள் ஆச்சரியமடைந்த போது இன்னொரு பல்லி ரகசியத்தைச் சொன்னதாம். “அந்தப் பயலுக்கு காது கேட்காது” என்று. இதுதான் வெற்றியின் சிம்பிளான மந்திரம். டார்கெட்டை முடிவு செய்துவிட்டால் செவிடனாகிவிடுவதுதான் ஜெயிப்பதற்கான ஒரே வழி.

Let us Run!