இமெயில் ஐடி கூட திருடப்படும் வஸ்தா என்றால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஐடியை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் என்பது திருடும் ஆளையும், திருட்டுக் கொடுத்த ஆளையும் பொறுத்து இருக்கிறது. ஒருவேளை ஃபேஸ்புக் பிரபலம் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியின் ஐடியை ஆட்டையை போடுகிறோம் என வையுங்கள்- அதில் ‘செம’ சாட் மெசேஜ்கள் இருக்கம் அல்லவா? அதுவே சுப்பிரமணியசுவாமியின் ஐடியை அடித்தால் அரசியல் கருமாந்திரம்தானே இருக்கும்!
இமெயில் ஐடி திருடுவது என்பது இரண்டு வகையில் நடக்கலாம். முதல் வகையில் நமது கடவுச்சொல்லை மட்டும் திருடிக் கொண்டு நாம் வழக்கம்போலவே மின்னஞ்சலை இயக்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் கொடுத்திருப்பார்கள். மின்னஞ்சல் களவாடப்பட்டிருப்பதே தெரியாமல் நாம் மின்னஞ்சலை உபயோகப்படுத்திக் கொண்டிருக்க, மூன்றாவது கண் நமது சமாச்சாரங்கள் அத்தனையையும் உளவு பார்த்துக் கொண்டிருக்கும்.
இரண்டாவது வகை திருட்டில் களவாடப்பட்ட மின்னஞ்சலை அதன் சொந்தக்காரர் திரும்ப உபயோகப்படுத்தவே முடியாது.போனது போனதுதான்.
இரண்டு வகைகளில் முதல் வகையான திருட்டுதான் செம டேஞ்சர். அதனால் இவ்வகையான திருட்டை தடுக்க கிட்டத்தட்ட அனைத்து மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களும்(யாஹூ,ஜிமெயில், ஹாட்மெயில் போன்ற)நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.
அது எப்படி?
மின்னஞ்சல் கணக்கை நாம் துவங்கும் போது, ரகசியக் கேள்வி ஒன்று கேட்கப்படும் அல்லவா?. 'உங்கள் செல்லப்பிராணியின் பெயர் என்ன?' 'உங்கள் முதல் ஆசிரியரின் பெயர் என்ன்?' என்ற ரீதியில் இருக்கும் கேள்விகளுக்கு நாம் பதிலைச் சொல்லி வைத்திருப்போம். ஒருவேளை நமது கடவுச்சொல்லை மறந்துவிட்டால், இந்த ரகசியக் கேள்வியை நாம் கணக்கு வைத்திருக்கும் இணையத்தளம் கேட்கும். நாம் சரியான பதிலைச் சொன்னால், புதியக் கடவுச் சொல் ஒன்றை அவர் கணக்குத் துவங்கும் போது கொடுத்திருந்த இன்னொரு மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் அல்லது அதே பக்கத்தில் புது கடவுச் சொல் காண்பிக்கப்படும்.
இதற்காகவே மின்னஞ்சல் கணக்குத் துவங்கும் போது இரண்டாவது மின்னஞ்சலை(Secondary Email ID) கொடுத்து வைக்க வேண்டும். சில இணையத்தளங்கள் இந்த இரண்டாவது மின்னஞ்சல் ஐடியை, கடவுச் சொல்லைத் தேடும் போது தேடுபவருக்கு உரிய தகவல்களை அனுப்பி வைப்பதற்காக உபயோகப்படுத்திக் கொள்கின்றன. ரகசியக் கேள்விகளும் பிறரால் யூகிக்க முடியாத அளவிலான கேள்வியாக இருப்பது உசிதம்.
இப்படியாக தனது ரகசியக் கேள்விக்கு பதில் சொல்லி, இணையதளத்திடம் இருந்து கடவுச் சொல்லை பெற்றுக் கொள்ளும் போது பழைய கடவுச் சொல் அழிக்கப்பட்டு, புதிதாக கடவுச் சொல் வ்ழங்கப்படும். திருடுபவருக்கோ அல்லது மெயி ஐடியின் சொந்தக்காரருக்கோ என யாராவது ஒருவருக்குத்தான் கடவுச் சொல் கிடைக்கும் என்பதால் இரண்டு ஆட்கள் ஒரே மின்னஞ்சலை இயக்குவது அவ்வளவு சுலபமில்லை.இத்தகைய நடவடிக்கையின் மூலம் முதல் வகையான திருட்டு தடுக்கப்பட்டுவிடுகிறது.
ஒருவரின் மெயில் ஐடியை மற்றவர் திருடிவிடும் போது, களவு கொடுத்தவர் தனது மெயில் ஐடியை உபயோகப் படுத்த முடிவதில்லை. இதனால் இந்த மெயில் ஐடியின் மூலமாக புதிதாக எந்த தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள மாட்டார். மெயில் ஐடியை திருடியவர், அந்த மின்னஞ்சலில் சேமித்து வைத்திருக்கும் பழைய தகவலகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ள முடியும்.
(2)
என் நண்பர் ஒருவரின் இமெயில் ஐடி களவாடப்பட்டது. பல தகவல்களையும் கம்ப்யூட்டரிலேயே வைத்துக் கொள்ளும் தலைமுறையயைச் சார்ந்தவர் என்றாலும் முதலில் அவர் அதன் பாதிப்பை உணரவில்லை.
நண்பர் வேறொரு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு மற்றொரு சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தவர். பழைய நிறுவனத்தோடு இவருக்கு என்னமோ லடாய். அதனால் Relieving letter எல்லாம் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நண்பரும் புது நிறுவனத்தின் மேலாளருக்கு இந்த விஷயங்களை விலாவாரியாக மின்னஞ்சலில் அனுப்பி இந்தச் சான்றிதழ்களில்லாமல் தன்னை பணிக்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால் தாம் இணைவதாக தெரிவித்திருக்கிறார். மேலாளரும் சம்மதம் தெரிவித்து மின்னஞ்சலில் பதில் அனுப்பி இருக்கிறார்.
பணிக்கு சேர்ந்த பிறகு, மூன்று மாதம் கழித்து புது நிறுவனத்தில் ஏதோ தணிக்கை இருப்பதாகவும் இவரின் அனுபவச் சான்றிதழ் தேவைப்படுவதாகவும் கேட்டிருக்கிறார்கள். தான் ஏற்கனவே மேலாளரிடம் அனுபவச் சான்றிதழ்களை கொடுக்க முடியாது என்று மின்னஞ்சல் அனுப்பியதையும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து தனக்கு பதில் அனுப்பியதையும் விளக்கியிருக்கிறார். இவரின் கெட்ட நேரம் அந்த மேலாளர் வேறு நிறுவனத்திற்கு மாறி போய்விட்டார். புது மேலாளரோ, பழைய மேலாளரிடமிருந்து வந்த மின்னஞ்சலின் பிரதியைக் கொடுத்தால் தான் சமாளித்துக் கொள்வதாக சொல்கிறார். மின்னஞ்சலை சேமித்து வைத்திருந்த மெயில் ஐடியை யாரோ திருடிவிட்டார்கள் என்று "சிறுபிள்ளைத்தன"மாகவும் சொல்ல முடியாது.
கணிணியில் இருக்கும் தகவல்களை மென்பிரதி(Soft Copy) என்றும் அச்சுப் பிரதியில் இருப்பனவற்றை வன்பிரதி(Hard Copy) என்றும் சொல்கிறார்கள். நண்பரும் சாப்ட்காப்பியை மட்டுமே வைத்துக் கொள்ளும் பழக்கமுடைய வகையறா என்பதால் இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களை தன் யாகூ ஐடியில் சேகரித்திருக்கிறார். அதுதான் தற்பொழுது திருடப்பட்ட ஐடி. என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் வாழ்நாளின் மிக அதிகபட்ச குழப்ப நிலைக்குச் சென்றிருந்தார்.
கடைசியாக தனது பழைய நிறுவனத்தில் நெட்வொர்க் துறையில் பணிபுரியும் நண்பர் ஒருவரை தாஜா பிடித்து மேலாளரின் மின்னஞ்சலில் இருந்து அந்த பழைய மெயிலை எடுத்து கொடுத்து தப்பித்துவிட்டார். ஒரு மின்னஞ்சல், ஒரு மனிதனின் வாழ்க்கையில் இத்தனை அவஸ்தைகளை கொண்டுவர முடியுமா என்று தத்துவார்த்தமாக பல நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறார்.
(3)
(3)
இந்த மின்னஞ்சல் திருட்டு கார்பொரேட் நிறுவனங்களின் அளவிலும் நடக்கின்றன. தன் எதிராளி நிறுவனத்தின் பணியாளர்களின் மின்னஞ்சல்களைத் திருடி அந்த மின்னஞ்சலில் இருந்து எதிராளியின் வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அனுப்புவார்கள். இந்தத் தகவல்கள் வைரஸ் கொண்டதாக இருக்கலாம் அல்லது அந்த வாடிக்கையாளரை எரிச்சலூட்டும் வகையில் இருக்கலாம். இந்த வைரஸோ அல்லது தகவலோ வாடிக்கையாளரை பாதிக்கும் போது அதனை அனுப்பியவரை தேடிப்பார்ப்பார். தனக்கு சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்துதான் வைரஸ் வந்திருக்கிறது என்று நம்புவார். இத்தகைய தவறான மின்னஞ்சல் மூலமாக தனக்கும், தன் வாடிக்கையாளருக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் நிலைக்கு செல்லும் போது தன் மின்னஞல்களைத் திருட்டுக் கொடுத்த நிறுவனம் தனது வாடிக்கையாளரை 'தாஜா' செய்யவும், தான் பிரச்சினை உண்டாக்கிய மின்னஞ்சலை அனுப்பவில்லை என்பதனை புரிய வைக்கவும் படாதபாடு பட வேண்டியிருக்கும். வாடிக்கையாளருக்கு ஏற்படும் பாதிப்பு பெரியதாக இருப்பின் அவரை எப்படியும் சமாதானம் செய்ய முடியாமல் போகும்.
அமெரிக்காவில் எத்தி என்பவர் ஒரு சிறிய மென்பொருள் நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார். அதற்காக இனடர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர் (ஐ எஸ் பி) யிடம் தன் நிறுவனத்திற்கென இணையதளமும், மின்னஞ்சலும் பெற்றிருக்கிறார். இதனைத் தெரிந்து கொண்ட அவரின் எதிராளி நிறுவனம், அந்த மின்னஞ்சலை எத்தியிடமிருந்து திருடிவிட்டார்கள். இரவோடு இரவாக அந்த மின்னஞ்சலில் இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு தாறுமாறாக மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறு மொத்தமாக அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு Spam என்று பெயர். இது போன்ற மின்னஞ்சல்கள் நம்மை தொந்தரவு செய்வதாக உணர்ந்தால் அது குறித்து புகார் செய்யலாம். www.spamcomp.com போன்ற இணையதளங்கள் இத்தகைய புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பதற்காகவே செயல்படுகின்றன. இந்த 'ஸ்பாம்காம்ப்' போன்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட ஐஎஸ்பியைத் தொடர்பு கொண்டு ஸ்பேம் மெயில் அனுப்பும் நிறுவனத்தின் மொத்த இணையத்தளத்திற்கும் தடை விதிக்கக் கோருவார்கள். பின்னர் ஐஎஸ்பியால் அந்தத் தளம் முடக்கப்படும்.
நல்ல இணையத்தளங்களை உருவாக்குவதற்கென நிறுவனங்கள் இலட்சக் கணக்கில் செலவு செய்கின்றன. எத்தி ஆரம்பித்த தளமும் மிகப்பெரும் செலவைத் தின்றிருக்கிறது. அவரின் எதிரி நிறுவனம் இவரின் மின்னஞ்சலைத் திருடி மின்னஞ்சல் அனுப்பியதும்மில்லாமல் அதே நிறுவனம் 'ஸ்பாம்காம்ப்'பில் எத்தியின் நிறுவனத்திலிருந்து ஸ்பேம் மின்னஞ்சல்கள் அனுப்பபட்டிருக்கின்றன என்று புகார்களையும் அனுப்பியிருக்கிறது. இந்த விவகாரத்தால் எத்தியின் இணையதளம் முடக்கப்பட்டது. இப்பொழுது எத்தி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். விசாரணை முடிந்து இந்த மின்னஞ்சல்களை தான் அனுப்பவில்லை என்று எத்தியால் நிருப்பிக்க முடிந்தால் அவரது தளம் மீண்டும் வழங்கப்படலாம்.இப்படி நிறுவனங்களிடமிருந்து, தனி மனிதனிடமிருந்தும் திருடப்படும் ஐடிகளைக் கொண்டு அவர்களின் வணிகத்தில் இழப்பினை உண்டாக்குதல், தவறான தகவல்களைப் பரப்பி கெட்ட பெயரினை உருவாக்குதல், ஸ்பாம் மின்னஞ்சல்களை அனுப்புதல் போன்றதான செயல்களின் மூலமாக அவர்களுக்கெதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விட முடியும்.
(4)
(4)
என்னைப் பொறுத்த வரைக்கும் மிகச் சுவாரசியமான மின்னஞ்சல் திருட்டு என் நண்பன் சாதிக் செய்ததுதான். கல்லூரி காலத்தில் தொடர்ந்து ஒரு பெண்ணிடம் சாட் செய்து வந்தான். மின்னஞ்சல் வாழ்த்து அட்டைகள், தொலைபேசி உரையாடல்கள் என இருவரும் மிக நெருக்கமாகி கிட்டத்தட்ட அந்தப் பெண்ணை காதலிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டான். "சாட்டிங் உறவுகளில் எந்த நம்பகமும் இல்லை. அவளுக்கு உன்னைப் போலவே வேறு பல நண்பர்கள் இருக்கிறார்கள்" என்று இன்னொரு நண்பன் சாதிக்கிடம் எச்சரித்திருக்கிறான்.
கொஞ்சம் சந்தேகம் கொண்ட சாதிக் துப்பறிதலில் ஈடுபட்டான். ஒரு பெண் பெயரில் ஐடி உருவாக்கினான். தன் தோழியோடு பழகுபவனை இவனுக்கும் தெரியும் என்பதால் (அவன் பெயரை சங்கர் என்று வைத்துக் கொள்வோம்) சங்கரோடு பெண் பெயரில் பேசியிருக்கிறான். சாதிக்கை பெண் என்று நினைத்து கொண்ட சங்கர் வழிந்து கொண்டே சாதிக்கின் தோழியோடு இருக்கும் தன் அந்தரங்க பேச்சுகளை உளறியதுமில்லாமல் நாமும் அவ்வாறு நெருக்கமாக இருக்கலாம் என்று உருகியிருக்கிறான்.
முழிப்பு வந்த சாதிக் தன் தோழியின் மின்னஞ்சலை உடைத்து விட்டான். உடைத்த மின்னஞ்சலில் நுழைந்தால், அந்தப் பெண் கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்களிடம் மிக அந்தரங்கமாக பேசியிருக்கிறாள்- off the record போடாமல். சாதிக் ஒன்றும் உத்தமனில்லைதான். இவன் வெவ்வேறு நான்கைந்து பெண்களிடம் இப்படி அந்தரங்கமாக பேசியிருக்கிறான். இதே போல்தான் அவள் வேறு நான்கைந்து பையன்களிடம் பேசியிருக்கிறாள்.
"ஒவ்வொரு உறவும் வேறு வேறு தளத்தில் இயங்குகின்றன. இதில் ஒரு உறவு குறித்து மற்ற உறவுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் சாட்டிங் போதை போன்றது. எதையாவது எவளிடமாவது பேசிக் கொண்டேயிருக்க வேண்டும்" என்றெல்லாம் சொல்லித் திரிந்தவன் அவளின் மெயில் ஐடியைத் திருடிய பின் சாட்டிங்கையே விட்டுவிட்டு சவூதியில் அமைதியாக இருக்கிறான். ஒட்டகப்பாலை குடித்துக் கொண்டு.