Mar 29, 2013

பொம்பள சிரிச்சா போச்சு...


“பொம்பள சிரிச்சா போச்சு...புகையிலை விரிச்சா போச்சு” என்று ஒரு பாடல். எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் என்று வாங்கிய சி.டி. ஒன்றில் இந்த பாட்டு இருக்கிறது. சில நாட்களாக இந்த பாடலை ஓட விடும்போதெல்லாம் அம்மா டென்ஷனாகிவிடுகிறார். அம்மா என்றால் புரட்சித் தலைவி அம்மா இல்லை, எனது அம்மாதான். இந்தப்பாடல் பெண்களை அவமானப்படுத்துகிறது என்கிறார். நல்லவேளையாக அம்மாவுக்கு கம்யூட்டர் ஃபேஸ்புக் பற்றியெல்லாம் தெரியாது. இல்லையென்றால் அவரும் ஒரு போராளி ஆகியிருப்பார் போலிருக்கிறது.

எனக்கு என்னவோ இந்தப்பாடல் அவமானப்படுத்துவதாக இல்லை. பெண்களின் புன்னகையில் ஆண்கள் காலியாகிவிடுகிறார்கள் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

பெண்களைப் பற்றி ஏதாவது சொல்வதானால் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும் ஏறி மிதித்துவிடுவார்கள். ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணியவாதி  சினிமாவில் பெண்களை கவர்ச்சியாக ஆடை அணியச் செய்கிறார்கள் என்கிற ரீதியில் பற்றி ஏதோ ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.  ‘கவர்ச்சியாகவே ஆடை அணியக் கூடாது என்கிறீர்களா?’ என்று அங்கு கேள்வி கேட்க போக “உனக்கெல்லாம் க்ளாஸ் எடுக்க முடியாது” என்று எகிறினார். அதோடு சரி. போட்டிருந்த கமெண்ட்டை அழித்துவிட்டு கமுக்கமாகிவிட்டேன். நமக்கு வரும் பிரச்சினைகளுக்காக சண்டை போடவே திராணி இருப்பதில்லை இதில் இந்த விவகாரங்களுக்கெல்லாம் சண்டை போட்டு இரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொள்ள முடியாது. 

ஏதோ ஒரு சினிமா போஸ்டரில் 'Boys are fraud' என்று நாயகி பேனரை பிடித்துக் கொண்டிருக்கிறாள்; ‘Girls are Cute' என்று நாயகன் பேனரைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அதுதான் உண்மையும் கூட. இது ஜெனிட்டிக்கலான விஷயம். பெண்களை உடல் ரீதியாகவே பார்ப்பது என்பது ஆண்களின் மனநிலை. ஆண்களை ஏமாற்றுக்காரர்களாகவும், அடிமைப்படுத்துபவர்களாகவும் பார்ப்பது என்பது பெண்களின் மனம். இதில் பெண்களை கவர்ச்சியாக பார்க்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயம் என்றுதான் நினைக்கிறேன். 

பெண்களை மட்டம் தட்டுவது நம் சமூகத்திடம் நீண்டகாலமாகவே இருக்கும் பழக்கம்தான். சினிமாவில் பெண்களை மட்டம் தட்டி வரும் டயலாக்குகளுக்கு தியேட்டரில் விசில் பறப்பதை கவனிக்கலாம். அறிந்தோ அறியாமலோ அதைத்தான் பெருவாரியான ஆண்களின் மனம் விரும்புகிறது. பெண்களை அவ்வப்போது மட்டம் தட்டும் நாயகர்களான எம்.ஜி.ஆரும், ரஜினியும்தான் சூப்பர் ஸ்டார்களாக இருந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் படங்களைப் பற்றி அவ்வளவாக தெரியாது ஆனால் ரஜினியின் படையப்பா வரைக்கும் பெண்களை மட்டம் தட்டும் காட்சிகள் சர்வசாதாரணமாக இருக்கும். விஜய்யும், சிம்புவும் கூட இதே வகையறாதானே? 

பெண்களை ஒதுக்குங்கள், பெண்களை தோற்கடிப்பேன் என்று பாடுவது எம்.ஜி.ஆர், ரஜினி காலத்தில் என்று இல்லை- சித்தர்களே ஏகப்பட்ட பாடல்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.  பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், பட்டினத்தார் என்று யாருடைய பாடலை எடுத்தாலும் பெண்களையும் அவர்களது உடலையும் கேவலப்படுத்தி பாடியிருக்கிறார்கள்.

பாம்பாட்டியார் பாடல் ஒன்றில் “மலஞ்சொரி கண்ணை வடி வாளுக்கொப்பாக வருணித்துச் சொல்வார் மதி இன்மை இல்லாதார்” என்று ஒரு வரி வருகிறது. மலத்தை போன்ற பீளை ஒழுகும் கண்ணை வாள், வேல் என்றெல்லாம் சொல்கிறவர்கள் அறிவுகெட்டவர்கள் என்கிறார். மற்ற நக்கல்களை ஒப்பிட்டால் இது ரொம்ப டீசெண்டான வரி என்றுதான் நினைக்கிறேன். “கெட்ட நாற்றமுள்ள யோனிக் கேணியில் வீழ்ந்தார் கெடுவார்” என்றெல்லாம் பாடல்கள் முழுவதும் பெண்களை வாரிக் கொண்டேயிருக்கிறார். 

இந்த சித்தர்களுக்கு காமத்தின் மீதும், பெண்களின் அங்கங்கள் மீதும், கலவி மீதும் என்ன கடுப்போ தெரியவில்லை. நாயைவிடவும் கேவலமாக இவற்றையெல்லாம் பார்த்திருக்கிறார்கள். பாட்டிலேயே இப்படியெல்லாம் கலாய்ப்பவர்கள் அந்தக்காலத்தில் எதிர்படுபவர்களை எப்படியெல்லாம் கலாய்த்திருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். மற்ற சித்தர்கள் எப்படியோ தெரியவில்லை ஆனால் பட்டினத்தாருக்கு லொள்ளு ஜாஸ்தி போலிருக்கிறது. ஒரு திருமணவீட்டில் மணமக்களை வாழ்த்த அழைத்தார்களாம். போனவர் சும்மா வந்திருக்கலாம் ஆனால் ஒரு பாடலை பாடி சாபம் விட்டுவிட்டு வந்திருக்கிறார். 

நாப்பிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலன்ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போல
புலபுலனெனக் கலகலெனனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்குதனைப் போல
அகப்பட்டீர்; கிடந்துழல அகப்பட்டீரே

பொய் சொல்லி சொத்து சேர்த்து, புற்றீசல் போல குட்டிகளை பெற்று அவர்களை காக்கவும் தெரியாமல் கைவிடவும் முடியாமல் மரத்துளைக்குள் வாலை நுழைத்து ஆப்பை அசைத்த கொண்ட குரங்கு  போல மாட்டிகினீங்கோ என்று பட்டினத்தார் பாடிய போது மாப்பிள்ளை எவ்வளவு கடுப்பாகியிருப்பான் என யோசித்தால் சிரிப்பு வருகிறது.

திருமண வீட்டிலேயே இந்த லோலாயம் செய்த பட்டினத்தார் பெண்களை மட்டும் விட்டுவைத்திருப்பாரா? 

“பெண்ணாகி வந்த மாயப் பிசாசும் பிடித்திட்டு என்னை
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்து
புண்ணாங்குழியிடைத்தள்ளி” என்று புலம்புகிறார். 

பாருங்கள், கண்ணைக் காட்டி, மார்பை காட்டி, ஏதோ ஒரு ‘குழி’க்குள் தள்ளினாளாம். 

பெண்கள் வேண்டாம், பெண்களை கவர்ச்சியாக பார்க்க வேண்டாம் என்றெல்லாம் அட்டகாசம் செய்கிறார்கள். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இருபது கிலோமீட்டர் தூரம். நல்ல போஸ்டர் நான்கு பார்த்துவிட்டு வந்தால்தான் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. நல்லவேளையாக இந்தக் காலத்தில் சித்தர்கள் யாரும் இல்லை. அனுஷ்காவும், தமன்னாவும் இன்னபிற ‘ஆ’ வும் தப்பித்தார்கள். 

(‘ஆ’ என்றால் பசுமாடு என்றறிக)